November

November

மரணச் சான்றிதழ்களை வழங்கும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில்

Certificate_of_Deathயுத்தத்தி னாலும் ஏனைய பயங்கரவாத சம்பவங்களாலும் உயிரழிந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான மரணப் பதிவுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரணத்தைப் பதிவு செய்யும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின்படி யுத்தத்தினால் அல்லது, பயங்கரவாத நடவடிக்கைகளினால் உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒருவர் காணாமல் போய் ஒரு வருடம் கடந்த பின்னர் அவருக்கான மரணச் சான்றிதழுக்கு உறவினர் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன், கொல்லபட்ட, காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் உறவினர்களும் மரணச் சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன இச்சட்ட மூலத்தை நாளை செவ்வாய் கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இச்சட்டமூலம் நிறைவற்றப்பட்ட பின்னர் யுத்தம் மற்றும் காணமாமல் போன அரசாங்க ஊழியர்களின் பெற்றோர் உறவினர்கள் இழப்பீடுகள் மற்றும், அரசின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான கூட்டம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.

Students_Under_Treeமகிந்த சிந்தனையின் அடிப்படையில் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டமொன்று நாளை செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இக்கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும் நடைபெறும் எனவும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை வவுனியா இறம்பைக்குளம், திருக்குடும்பக் கன்னியர்மட மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

Killinoche_Schoolநாளை மறுதினம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை அகலிப்பினால் சாவகச்சேரியில் பல கட்டடங்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Chavakacheriஏ-9 பிரதான வீதி அகலிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரியிலுள்ள பல கட்டங்களுக்கு ஆபத்து எற்பட்டுள்ளது. பாதை அகலிப்புக்காக சுமார் 50 வரையிலான கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வீதி அகலிப்புக்கென எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளதன்படி வீதியின் மேற்கிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ பகுதியாகவோ உடைக்கப்பட வேண்டிய நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மூன்று வங்ககிக் கட்டங்களும் அமைந்துள்ளன. அத்துடன் பல குடிமனைகளும் அரச கட்டங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாழைச்சேனையில் மோட்டார் குண்டுகள் மீட்பு.

கிழக்கில் வாழைச்சேனை வட்டவான் பிரதேசத்தில் மோட்டார் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் மீடக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி அப்பகுதி வெற்றுக் காணியொன்றில் புதைக்கபபட்டிருந்த இக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குண்டுகள் முன்னர் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வேறு இடங்களில் இவ்வாறான குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளனவா எனவும் ஆராயப்பட்டு வருகின்றன.

கடந்த இரு தினங்களாக முல்லைத்தீவு கரையோர மக்கள் சுனாமி அச்சத்தினால் குழப்பம்.

Mullaittivu_Beachமுல்லைத் தீவு கரையோரப் பகுதிகளிலுள்ள மக்கள் கடந்த இரு தினங்களாக சுனாமி அச்சத்தினால் கண்விழித்திருக்கும் நிலை எற்பட்டது. ‘ஜல்’ புயல் தொடர்பான எச்சரிக்கை வளிமண்டல திணைக்களத்தால் விடுக்கபட்டுக் கொண்டிருந்த வேளை, கடும் காற்று, மழை ஏற்படும் என அம்மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழாமல் மந்தமான காலநிலையே காணப்பட்டது.

அது 2004ஆம்ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு முன்பாக இருந்த காலநிலையை இம்மக்களுக்கு நினைவூட்டியது. அதனால் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு கரையோர மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர். இரவில் நித்திரை கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் பொழுதைக் கழித்தனர்.

தமிழ் நாட்டில் தொங்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் : விமல் குழந்தைவேல்

Vimal_Kulanthaivelஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் தனது நாவல்கள் மூலம் அறியப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். இவர் 2002 யூனில் தேசம் சஞ்சிகையின் இதழ் 8ல் எழுதிய இக்கட்டுரையை மீள்பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை மீள்பிரசுரம் செய்கிறோம். கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக தமிழக எழுத்துலகின் இலக்கியத் தசைகளாகத் தொங்கும்  புலம்பெயர் எழுத்தாளர்களின் கையெழுத்துப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பொருத்தம் கருதி இக்கட்டுரை மீள்பதிவிடப்படுகிறது.

._._._._._.

Vimal_Kulanthaivelமருத்துவர்களாகவும் பொறியியலாளராகவும் இன்னும் பல துறை படிப்பாளிகளாகவும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுள் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூறியவர் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

ஈழத்திலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எப்படிப்பட்ட திறமையான எழுத்தாளனையும் அங்கீகரிக்கவோ முன்மொழியவோ தமிழ்நாட்டு இலக்கிய வாதிகளையே அன்றிலிருந்து இன்றுவரை நம்பி இருக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே ஈழத்து இலக்கியம் இருக்கின்றது. எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நம் இலக்கியச் சிங்கங்களிடம் இன்னும் இல்லாததே இதற்குக் காரணம்.

டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்றோர் கூடத்தங்களை அங்கீகரித்துக் கொள்ள தமிழ் நாட்டைத் தான் நாடியிருக்கின்றார்கள். அந்த நாடல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி, பாலுமகேந்திரா, சுந்தரராமசாமி, அனுராதா ரமணன், வைரமுத்து, மேத்தா ரகுமான், சிவசங்கரி இன்னும் இவர்களைப் போன்ற தமிழ் நாட்டில் பிரபல்யம் ஆனவர்களின் முன்னுரைகளைப் பெற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இன்று வரை அறியப்படாமலும் அறிமுகப்படுத்தப்படாமலும் அங்கீகாரம் பெறாமலும் இருக்கும் புலம் பெயர் எழுத்தாளர்களை தமிழ்நாட்டு இலக்கியம் அறியத் தேவை இல்லை. தாய் நாட்டுச் சகோதரர்களாவது கண்டு கொள்ளலாமே.

தமிழ் நாட்டில் அரசியலும், இலக்கியமும், சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிக் கொள்ளாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல. எழுத்தாளனாகப் பெயர் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு தானும் ஆதரவாளனென்று ஆட்டுமந்தை பின்னால் ஓடும் குட்டி ஆடு போல ஓட வேண்டி இருக்கின்றது. வேற்று மொழி எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களை இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு வதை கண்டு ரசிக்க வேண்டி இருக்கின்றது. ஈழத்து இலக்கியத்தைக் கட்டிக்காக்க வந்த இந்த இலக்கி யக் காவலர்களை எத்தனை நாளைக்குத் தான்  ஒத்தூதிச் செல்ல முடியும்.

இலக்கியவாதிகள் போகட்டும் புலம்பெயர் சஞ்சிகைகள் மட்டுமென்ன. அவர்களுக்கும் இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தான் தேவைப்படுகின்றன. அல்லது மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் தான் தேவைப்படுகின்றன. இல்லையெனில் தங்களுக்குப் போட்டியான இன்னொரு சஞ்சிகையினரின் வாழ்க்கை அந்தரங்கங்களை கொஞ்சக் காலத்துக்கு விமர்சனம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம்  செய்து அவர்களை சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதை கொழும்புப் பத்திரி கைகள் (தமிழ்) விரும்புவதில்லையாம் என்பதே தனிச்சோகமான செய்தி. என்ன செய்வது அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அப்படி. தமிழ்நாட்டு சினிமா பற்றிய கவலையைத் தவிர அந்த வாசகனுக்கு வேறென்ன கவலை?

சரி இவைகள் தான் இப்படியென்றால் புலம்பெயர் எழுத்தாளனின் இன்னொரு புலம்பல் தன்னை சக புலம்பெயர் எழுத்தாளனே கண்டு கொள்வதில்லை என்பது தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுள் மூத்த எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கம் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கென்றொரு வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார்கள். தாங்கள் எழுதுவதையும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதுவதையும் தவிர இவர்கள் வேறு எதுவுமே வாசிப்பதில்லை. ஜனரஞ்சக பத்திரிகைகள் வாசிப்பதில்லை என்பார்கள். தங்கள் வீட்டுமேசையில் எப்போதும் அந்தப் பத்திரிகைகள் இருக்கும். குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தங்களின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கும். கேட்டால் தாங்கள் அனுப்பவேயில்லை எப்படியோ வந்திருக்கின்றது என்பார்கள். இந்தப் பின்கதவு கௌரவ இலக்கியவாதிகள் புதிய எழுத்தாளர்களிடம் நெருங்கிப் பழகுவதை கௌரவக் குறைவாக எண்ணுகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் புதிய எழுத்தாளனின் ஆக்கத்தை இன்னொரு புதிய புலம்பெயர் எழுத்தாளன் கண்டும் காணவில்லை என்று கூறினால் இதை யாரிடம் சொல்லி அழுவது.

 ‘உன்னுடைய கதையொன்று பத்திரிகையில் வந்திருக்கே தெரியுமோ?’
 ‘ஆ……அப்பிடியே எப்பிடிக் கதை’
 ‘நேரமில்லை நான் வாசிக்கவில்லை’
 இது தான் புலம்பெயர் எழுத்தாளனுக்குரிய பண்பு.

இவைகள் எதுவும் தேவையில்லை. ஒரு எழுத்தாளன் அறியப்பட நல்ல விமர்சனம் ஒன்றே போதுமானது. அதற்குக் கூட ஆளில்லை. விமர்சனம் என்று அழைத்தால் மேடைச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவும் முகஸ்துதிக்காகவும் எழுத்தாளனை புகழ்ந்து தள்ளிவிட்டு மேடையில் இருந்து இறங்கி கூட்டம் சேர்த்து குறைசொல்வதற்கு என்றே நமது விமர்சகர்கள் பலர் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் பயம்.

குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்தால் விளம்பரமாகி சல்மான் ரூஷ்டியாகி விடுவானோ என்ற காழ்ப்புணர்ச்சிப் பயம். இந்த விதிகளைத் தாண்டியும் துணிந்து விமர்சனம் செய்பவர்கள் என்றால் லண்டனில் ஜமுனா ராஜேந்திரனையும், மு.நித்தியானந்தனையும் மட்டுமே குறிப்பிட வேண்டும். ராஜேந்திரனைப் பொறுத்தவரை சத்தியஜித்ரேயையும், பத்மா சுப்பிரமணியத்தையும் தவிர வேறு யாரையும் படைப்பாளிகள் என்றே சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஆனாலும் அவரின் விமர்சனம் காத்திரமானதும், தேவையானதும் என்பது உண்மை. மு.நித்தியானந்தன் அப்படியல்ல. நல்ல படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களிடத்தில் உள்ள குறைகளை நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் சுட்டிக்காட்டிவிட்டே செல்வார். என்ன பயமோ பயமுறுத்தலோ தெரியாது. எந்தக் குளிரிலும் முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட உணர்ச்சிவசப்பட்டு இவர் குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதே ஒரு தனி அழகு தான்.

ஒரு விமர்சனம் படைப்பாளியை வெளிக்கொணரும் விளம்பரம் என்பது உண்மையே. அதற்காக அது புகழ்ச்சி விமர்சனமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. புகழ்ச்சியை விட படைப்பாளியின் படைப்பில் உள்ள குறைகளைக் குற்றம் கூறியும் கருத்துக் கட்டுடைப்புச் செய்தும் செய்யும் விமர்சனத்துக்கு வலு அதிகம். அந்த சம்பிரதாயங்கள் கூட ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தில் மிகமிகக் குறைவு.

அரவிந்தனின் கவிதைத் தொகுதி வெளியீட்டுக் கூட்டத்தில் அரவிந்தன் கழுத்தில் விழுந்து கொண்டிருந்த புகழ்ச்சி மாலையை தடுத்தாட்கொணரவும் கவிதைத் தொகுதியின் கருத்தைக் கட்டுடைப்புச் செய்யவும் சபையிலிருந்து எழுந்த சேனன் அருகிலிருந்தவர்களால் தடுத்தாட் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் விமர்சனச் சுதந்திரம் இல்லை. சபைப்பேச்சுச் சுதந்திரம் இல்லை. தப்பித்தவறி சேனன் போன்றவர்கள் எழுந்தால் சபைகுழப்பி, தறுதலை என்ற பெயர்களுடன் தான் உட்காருகிறார்கள். தமிழ் இலக்கியம் என்ற வகையில் தமிழ் நாட்டைத்தான் நாம் உதாரணத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கு இலக்கிய விமர்சனச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது. எழுத்தாளனின் படைப்பை எரிக்கவும் எதிர்க்கவும் அவனை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் கூட விமர்சனம் என்ற வழிமுறை உதவுகின்றது. புலம்பெயர் இலக்கியத்தில் அப்படியல்ல. இருந்தும் விதிவிலக்காக பிரான்ஸில் மட்டும் வருடத்துக்கு ஒரு தடவை நான்கு பெண்களாவது சந்தித்து குய்யோ முய்யோ என்று விமர்சனக் கத்தல் செய்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோசம்.

ஈழத்திலிருந்து அடிக்கடி எழுத்தாளர்களென்றும் இலக்கியவாதிகளென்றும் பலர் வருகின்றார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களை அவர்கள் அறிந்தவர்களும் இல்லை. அவர்களை புலம்பெயர் எழுத்தாளர் பலர் அறிந்திருப்பதும் இல்லை. அவர்கள் கூட வந்ததும் வராததுமாக

நீங்கள் எல்லாம் ஏன் இந்தியாவுக்குப் போய் எங்கள் இலக்கியத்தை விற்கின்றீர்கள் என்கிறார்கள். சரி உங்களிடமே வருகிறோம் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்டு எங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அவர்களிடத்தில் அறியப்படவில்லை. அறியப்படாததற்கு காரணம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் காழ்ப்புணர்ச்சி.

விமர்சனம் எழுத்தையும் எழுத்தாளனையும் வெளிப்படுத்தும், தெரியப்படுத்தும். அதற்குரிய ஆட்கள் தான் நம்மிடத்தில் இல்லை. விமர்சனமும் ஓர் இலக்கியம் தான். அந்த இலக்கியம் ஈழத்தில் குறைவு. தன்னை அங்கீகரிக்காத ஒருவரை மேடையேறி பூதம் என்று சொல்லி அவரின் உருவ அமைப்பை கேலி செய்யும் விமர்சனப்பாணியை கைவிட்டுவிட்டு நல்ல விமர்சனம் மூலம் புதிய புலம்பெயர் எழுத்தாளர்களை வெளிப்படுத்தும் பரந்த மனம் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் நாட்டின் பிரபல்யமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டு தான் அலைய வேண்டும்.

”தமிழ் மக்கள் மீதான பாரபட்சங்கள் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு நோக்குவதையே காட்டுகிறது.” புளொட் தலைவர்

sitharthan.jpgஅரச தொழில்துறைகளில் தமிழ்பேசும் மக்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதிகள், பாரபட்சத் தன்மைகள் என்பன விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே அரசாங்கம் நோக்குகிறது என்பதையே காட்டுகின்றன. இதனை அரசாங்கமே உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகக் கூடாது என்ற நோக்கில்தான் அரசு செயற்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த செயற்பாடுகள் எழுப்புகின்றன. அரசாங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யுத்தத்தை வெற்றி கொண்ட மனோபாவத்தில் மமதையில்தான் அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயற்படுவதாகத் தமிழ்மக்கள் இன்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்மக்கள் தாம் இந்நாட்டின் ஒரு பிரிவினர் அல்லர் என்பதனை அரசாங்கமே அந்த மக்களுக்கு இன்று உணர்த்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், சிறைக்கைதிகளின் விடுதலை மற்றும், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், இச்நதிப்பின் பொது ஜனாதிபதியிடம் சமாப்பிக்கப்படவிருக்கும் மகஜரைத் தயாரிக்க முவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அந்தக்குழு தயாரிக்கும் மகஜருக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கம் கூடவுள்ளதாகவும் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கான திட்டமொன்று டிசெம்பர் இறுதியில் தயாரிக்கப்படும் எனவும், அது தயாரிக்கும் போது தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுவிடும் என தான் நம்புவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்பு மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதால் அதன் காலஎல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதாக கோரியிருப்பதால் அதன் அமர்வுகளை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிக்கும்படி ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி சில்வா ஜனாதிபதி செயலகத்திடம் கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மெனிக்பாம் அகதிமுகாம் மக்கள் வேறு முகாமிற்கு மாற்றப்படுகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் நேற்று சனிக்கிழமை வேறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். ‘வலயம்-4’ முகாமில் தங்கியிருந்த மக்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு இடமாற்றப்பட்டவுள்ளனர். இவ்வாறு தாங்கள் இடமாற்றப்படுவதை அங்கிருந்த மக்கள் விரும்பவில்லை எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நேற்று அம்முகாமிற்குச் சென்ற வவுனியா அரசாங்கஅதிபர், படைத்தளபதி, அதிகாரிகள் ஆகியோர் குறித்த முகாம் மக்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி உடனடியாக அவர்களை கதிர்காமர் முகாமிற்கு செல்லுமாறு கூறினர். அத்துடமன் பஸ்களில் அவர்களை ஏற்றி கதிர்காமர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

வலயம்-4 முகாமிலுள்ள 35 நிலையங்களில் முவாயிரம் மக்கள் தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நேற்று இடமாற்றப்பட்டனர். மீதமுள்ள மக்களை இடமாற்றும் நடவடிக்கை இன்றும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் இன்னொரு முகாமிற்கு மாற்றப்படுதை அம்மக்கள் விரும்பவில்லை எனவும் தாங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அழைத்துச் செல்லப்படுவதையே விரும்பாவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மெனிக்பாம் முகாமிலுள்ள மக்கள் அவர்களைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் கதிர்காமர் முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.