2020

2020

சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை செயற்பாட்டாளருக்கு மேலும் 02 ஆண்டுகள் சிறை !

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்ஹத்லூ. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கிய ஒரு சில வாரங்களுக்கு முன்பு லூஜெய்ன் கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், சவுதி அரேபியாவுக்கு விரோதமான அமைப்புடன் தொடர்பு வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

லூஜெய்ன் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சவுதி அரேபியா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சவுதி அரேபிய அரசு அதனை பொருட்படுத்தாமல் அவரை சிறையில் அடைத்தது.

ரியாத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் லூஜெய்ன் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், பின்னர் அந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கியது. அதன்படி லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறையிலிருந்த 2 ஆண்டுகள் 10 மாதங்களை கழித்து எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக லூஜெய்னின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“ சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ” – ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் !

“சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ” என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த பத்து ஆண்டுகளாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாதிக்கப்பட்ட தரப்பான நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்ட பொறிமுறைகளின் ஊடாக நீதியான விசாரணை நடைபெறும் என்று பெரு நம்பிக்கை கொண்டிருந்தோம்.

உள்நாட்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் உள்ளிட்ட முன்னேற்றகரமான விடயங்கள் நடைமுறைச்சாத்தியமாகும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 30.1 பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதில் முன்மொழியப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் தனது ‘இறைமையை’ காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் எதிர்பார்த்த பொறுப்புக்கூறும் செயன்முறை தேக்க நிலையிலேயே உள்ளது.

வடக்கு கிழக்கினை பூர்வீக தாயகமாக கொண்ட தமிழினம் சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்டது. அத்துடன் தமிழினம் தனித்துவ கலாசார, பண்பாடுகளையும், இறைமையையும் கொண்டதாகும். அத்தகைய மூத்த பூர்வீக இறைமையைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது. “ சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ”

2010இல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதி, இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30.1, 34.1, 40.1 தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் புதிய அரசியல் சாசன உருவாக்கம் மற்றும் இதர சில பொருளாதார விடயங்களை மையப்படுத்தி உள்ளகத்தில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை தேசிய இனங்களை அடிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஏககாலத்தில் சர்வதேசத்திற்கு அவை குறித்து வேறொரு பிம்பத்தை காண்பிப்பதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதை தாங்கள் அறியாதவர் அல்லர்.

இந்நிலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையினால் மட்டுமே முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களினதும் ஏகோபித்த நம்பிக்கை ஆகும். அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பொறுப்புக்கூறலை மறுதலித்து வரும் இலங்கை அரசாங்கம் தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோர் திடமாக தெரிவித்துள்ளனர்.

அந்தக் கூற்றுக்கள் எமக்கு நம்பிக்கை அளிக்கும் அதேசமயம் தாங்கள் இலங்கையின் சமகால நிலைமைகளையும் இனவழிப்பின் நேரடிச் சாட்சியங்களையும் நேரடியாக கண்டிருப்பவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று விநயமாக கேட்டுக் கொள்கின்றேன். அதுமட்டுமன்றி, கடந்த ஐ.நா.தீர்மானங்களின்போது பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழினம் என்பது தெளிவாக குறிப்பிடப்படாத நிலைமையொன்று காணப்படுகின்றது. அவ்விதமான மயக்க நிலைமைகளைத் தவிர்க்கும் வகையில் புதிதாக அமையும் பிரேரணை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் எனது மக்களுக்கும் அதீதமாக உள்ளது.

அந்த விடயம் குறித்து தாங்கள் கரிசனை செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் சாத்தியமான நீதிப் பொறிமுறை ஒன்றினூடாக ஐக்கிய நாடுகள் சபையும், அதன் உறுப்பு நாடுகளும் அதியுச்ச அழுத்தத்தை இலங்கைக்கு கொடுப்பதன் மூலம் மட்டுமே நீதி, நியாயம் உள்ளிட்டவை நிலைநாட்டப்படும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எனது மக்கள் சார்ந்து நான் இத்தால் தங்களிடத்தில் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பாக மிகக்கூடிய கரிசனையை செலுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” – இரா.சாணக்கியன் உறுதி !

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் தாம் தளர்வடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன். பேரினவாத அரசாங்கம் நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகத்திற்குரியதாகும்.

எனவே தமிழ் மக்களின் போராட்டங்களை சர்வதேச பார்வைக்கு கொண்டுவருவது தலையாய கடமையாகும். பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே நீதிகிடைப்பது சாத்தியமாகும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் கவனயீர்ப்பு நடைபயணம் !

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று (28.12.2020) மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமானது.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை! நீதிமன்ற  கட்டளையால் இடையில் நிறுத்தம். - Madawala News Number 1 Tamil website from  Srilanka

கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள் இருந்தும் கல்முனை நகரமண்டபத்துடன் இந்நடை பவனி நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. அவ்விடத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் காவல்துறையினருடன் கலந்துரையாடி தனது வாகனத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு அவர்களை அழைத்து சென்றார்.

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டி மகஜரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். றிக்காசிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.

“இரா.சம்பந்தன் – ஒரு நாட்டை ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவராவார் ” – வீ. ஆனந்தசங்கரி நகைப்பு !

“ஒரு நாட்டை ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவராவார் ” என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தன்னுடைய ஊடக அறிக்கையில் நகைப்பாக தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று (28.12.2020) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சமஷ்டி என்ற வார்த்தையை சிங்களத் தலைமைகள் தான் பேச ஆரம்பித்தனர். அது ஒரு காலம். பின் அவர்களே தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வரும் வரை சமஷ்டி நோக்கித்தான் அனைவரும் செயற்பட்டோம். அதன் பின்னர் இன்று வரை நடக்கும் சம்பவங்களை சம்பந்தன் மறந்துவிட்டாரா?

2015ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு நல்லாட்சியை மக்கள் உருவாக்கி, ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தாங்கள் தான் காரணம் என சம்பந்தன் தம்பட்டம் அடித்தார். அந்த நல்லாட்சி முழுவதும் இரா. சம்பந்தன் எதிர் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாட்டை ஆளும் அரசு வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தவர். “

அன்றைய அரசின் ஜனாதிபதியாக இருந்த கௌரவ மைத்திரிபால சிறிசேன, பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான சகாவாக இருந்து எதிர்கட்சி தலைவர் என்ற கதிரையை அலங்கரித்தவர். அப்போது இந்த சமஷ்டியைப்பற்றி பேசாது அந்த தீர்வை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அவர் கண்களை மறைத்துவிட்டது.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ்டி கொள்கையை வலியுறுத்தி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும், ஒற்றையாட்சியை வலியுறுத்தி கௌரவ மகிந்த ராஜபக்சவும் களத்தில் இறங்கி போட்டியிட்டார்கள். 49 வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் சம்பந்தன் குழுவினர் பிரச்சாரம் செய்ததால் தமிழ் மக்கள் வாக்களிக்காமலே சிங்கள மக்கள் சமஷ்டிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் மக்களை அந்த நேரத்தில் வாக்களிக்க அனுமத்தித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பார். அந்த வராலாற்றுத் துரோகத்தை தமிழ் மக்களுக்கு செய்த சம்பந்தன் இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். இது பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சம்பந்தனின் கபட நாடகம் எப்போதும் புரிவதில்லை. அதனால் தான் அவரும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

தமிழ் மக்களுக்கு அவர் ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், நல்லெண்ணத்துடன் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உருவாக்கும் அணியினருக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். கூடவே இருந்து குழிபறித்து விடுதலைப் புலிகளை அழித்ததிற்கும், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவை தடுத்து நிறுத்தும் சந்தர்ப்பம் இருந்தும், வேடிக்கை பார்த்ததற்காகவும்  பிராயச்சித்தமாக இதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பதவி சுகத்தில் மூழ்கி இதுவரை அனுபவித்த சலுகைகள் போதும் இனியாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவார் என்று எண்ணுகின்றேன். அதுமட்டுமல்லாமல் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு வருடாவருடம் காவடி எடுக்கும் சம்பந்தன் தலைமை இந்த வருடம் எதைக் கொண்டு செல்லப்போகின்றார்கள்? என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணிக்கு தலைவராக எம்.எஸ்.டோனி தேர்வு !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. அந்த அணிக்கு எம்.எஸ்.டோனியை தலைவராக தேர்வு செய்துள்ளது.
ஐசிசி அறிவித்துள்ள டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:
1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. ஆரோன் பிஞ்ச், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. கிளென் மேக்ஸ்வெல், 7. எம்எஸ் டோனி (விக்கட் கீப்பர்& கேப்டன்), 8. பொல்லார்ட், 9. ரஷித் கான், 10, பும்ரா,  11. மலிங்கா.

“ கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர்” – நாரம்பனவே ஆனந்த தேரர்

கொரோனா வைரஸ் தாக்கத்தல் இறந்த முஸ்லீம்களுடைய உடலை தகனம் செய்வது தொடர்பாக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்  “ கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர்”  என அஸ்கிரிய பீடத்தின் பிரதிபதிவாளர் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என்பது தற்போது தீர்வு காணமுடியாத புதிராக மாறிவிட்டது.

தற்போது காணப்படும் நிலவரத்தின் மத்தியில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பிரிவினைகளை உருவாக்காமல் சட்டத்தினை பின்பற்றவேண்டும். எந்தசக்திக்கும் எந்த செல்வாக்கிற்கும் அடிபணியாமல் ஒரேநாடு ஒரே சட்டம் என்பதனை நடைமுறைப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணத்தில் மதபதற்றத்தினை அதிகரிப்பதற்கு இந்த விவகாரம் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம்” – ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீடு விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் !

“சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம்” என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீடு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்றைய இந்த நூல் வெளியீட்டு விழா சற்று வித்தியாசமானது. எத்தனையோ புத்தக வெளியீடுகள், நூல் ஆய்வரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு அவ்வந்த நூல்களின் இலக்கியச்சுவைகள் பற்றியும், தமிழ் மொழி நடை பற்றியும், வட்டார வழக்குகள் பற்றியும், உலக நடப்புக்கள் பற்றியும், மதம், இலக்கியம், வரலாறு, சமூகவியல், சட்டம், அரசியல் பற்றி எல்லாம் பல விதமான உரைகளை உரையாற்றியிருக்கின்றோம். ஆனால் இன்றைய இந்த ஆவணக் கையேட்டை சற்று கனத்த மனதுடன் துக்கம் தொண்டையை அடைக்க வெளியீடு செய்ய வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம்.

IMG 20201227 WA0030

இந்த நூலில் ஆராய்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எந்த மொழி நடையோ இலக்கியச் சுவையோ ஆழமான கருத்துக்களோ இல்லை. மாறாக துன்ப வலிகளைச் சுமந்து கொண்டு நடைப்பிணங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து இறுதியில் மரணத்தைத் தழுவிக் கொண்ட எம்மிடையேயான ஒரு மக்கள் தொகுதியின் நினைவுகளும் புகைப்படங்களுமே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அறவழிக் கண்ணீர் போராட்டங்களின் போது கண்ணை மூடிய கணிசமான எம் மக்களின் நினைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணக் கையேட்டு வெளியீட்டு வைபவம் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியாகவே நடைபெறுகின்றது.

இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளைத் தொடர்ந்து பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி இராணுவப் படைகளாலும் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடி அலைந்த அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் எனப் பலர் தமது இறுதி மூச்சுவரை மகனை அல்லது மகளை அல்லது சகோதர சகோதரிகளை அல்லது உற்றவரை, உறவினரைத் தேடி அலைந்து, அவர்களுக்காக நீதிகோரிய போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு இறுதியில் நோய் வாய்ப்பட்டு இறப்பைத் தழுவிக் கொண்ட 74 பேரின் பதிவுகள் இந்த நூலில் காணப்படுகின்றன. ஏமாறிய நிலையில் இவ்வுலகைவிட்டு ஏகியவர்களின் விபரக்கோவையே இன்று வெளியிடப்படும் நூல்.

IMG 20201227 WA0028

பண்டைய தமிழ் மக்களின் வரலாறுகள், அவர்களின் இருப்புக்கள், பாரம்பரியங்கள் என்பன நூல் வடிவிலோ, ஓலைச் சுவடிகளிலோ அல்லது கற்களில் வடித்தோ முறையாக பேணப்படாமையால் இன்று எமது சரித்திர வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றன. தினம் தினம் மாற்றி எழுதப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை மக்களின் சாசனங்கள் வாயிலாக வரலாறுகள் தமிழர்க்கு எதிராகத் திரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகிய 3000 வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டு கிறீஸ்துவுக்குப் பின் 6ம் 7ம் நூற்றாண்டளவில் வழக்கிற்கு வந்த சிங்கள மொழி பேசுவோரே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ் மக்கள் அதன் பின்னைய காலங்களில் குடியேறிய மக்கள் எனவும் சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இனப்படுகொலையின் ஒரு அம்சமாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தீவை விட சிறிய நாடாகிய சிங்கப்பூரில் பல மொழிகளைப் பேசுகின்ற பல் இன மக்கள் வாழுகின்ற போதும் அந்த நாட்டில் மொழி வேறுபாடு இல்லை. மத வேறுபாடு இல்லை. ஆனால் அங்கு சுபீட்சம் நிலவுகின்றது. நாடும் வளம் பெற்று வளர்ந்து வருகின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆனால் எமது நாட்டில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே தான் பிரச்சனை வலுவடைந்துள்ளது. நிலவுகின்ற இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பது ஒரு காரியமே அல்ல. எனினும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்துவிடக்கூடாது என்ற மனப்பாங்குடன் செயற்படும் சிங்களத் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களே தமிழ் மக்கள் மீது பல விதமான ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடக் காரணமாக இருந்து வந்துள்ளன.

யுத்தம் நிறைவு பெற்ற 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்திடம் தமது கணவரை முறையாக கையளித்த பெண்கள், பிள்ளைகளை கையளித்த தாய்மார்கள், சகோதரங்களைக் கையளித்த சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் போன்றோரை கையளித்தவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் அவ்வாறான கையளிப்புக்கள் எதுவும் நடக்கவில்லை அவ்வாறான எந்தவொரு அரசியல் கைதிகளும் தம்மிடம் இல்லை எனக் கூறி இப்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அது சம்பந்தமான விசாரணையை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுவரினும் அக் கோரிக்கைகளுக்கு இணங்காது தான்தோன்றித்தனமாக இலங்கை அரசாங்கம் நடந்து வருகின்றது. அதுபோலவே இன்றைய கை நூலில் ஆவணப்படுத்தப்படும் வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து எம் கைகளில் கிட்டாமல்ப் போனால் இன்னும் சற்றுக் காலம் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் பொய்யாகப் புனையப்பட்டவை என ஜெனீவாவிலும் உலக அரங்கிலும் கூறத் தொடங்கிவிடுவார்கள். ஆகவேதான் மரணித்தோரின் பதிவுகள் இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருங்கால நிரூபணங்களாக பதியப்பட்டுள்ளன.

எனவே எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கோரக் கொடுமைகளின் பின்பும் தமிழ் மக்கள் அமைதியாக இங்கு இருந்து வருவது பிறநாட்டவர்க்கு வியப்பை அளித்தாலும் ஏதோ ஒரு விடிவு காலம் அண்மையில் வரப் போகின்றது என்ற எண்ணமே எம் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்து எம்மை ஓட்டி வருகின்றது. காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுவதே மனித வாழ்க்கை. தொடர்ந்து கஷ்டத்தையே எம் மக்கள் அனுபவித்து வரவேண்டிய அவசியமில்லை. விடிவு விரைவில் வரும் என நம்புவோம்.

தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மக்களை அடக்கி ஆளவோ அல்லது அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ விரும்பவில்லை. மாறாக தாம் வாழுகின்ற பகுதிகளில் தம் மக்கள் சுபீட்சத்துடன் வாழ தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு ஆட்சி முறைமையையே விரும்புகின்றார்கள். இதை சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கின்றது. ஆனால் பேரினவாதிகளோ இந்த நாடு முற்றுமுழுதாக சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சிங்கள பௌத்த தேசம் எனவும் சிறுபான்மை மக்கள் தாம் போடுகின்ற பொரியை உண்டு விட்டு கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அதன் விளைவே சில காலங்களுக்கு முன்பு அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கான மூலாதாரங்கள்.

எம் மக்கள் ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு மேலாக துன்பச் சுமைகளைச் சுமந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களின் எந்த அழுத்தங்களையோ அல்லது அவர் தரும் துன்பங்களையோ கண்டு எம்மவர் துவண்டுவிடமாட்டார்கள். ஒரு நாள் பேரழிவையே தாங்கமாட்டாத இந்தப் பேரினவாதிகளுக்கு அடி மழை, வெள்ளங்கள் ஏற்பட்ட காலத்தில் முதலாவது உதவி, அக்காலத்தில் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவர்களிடமிருந்தே, எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை. மாத்தறையில் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பௌத்த பிக்குமார்கள் வெளிப்படையாக இயக்கங்களிற்கு நன்றி தெரிவித்தார்கள்.

இன்றும் நாம் அதையே நினைவுகூர விரும்புகின்றோம். சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம். காரணம் ஒற்றையாட்சிக்குக் கீழ் பெரும்பான்மையினரின் ஆதிக்க வெறியாட்டம் இதுவரையில் நாம் அறிந்த உண்மையே. சமஷ்டி என்கின்ற ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே நாக பாம்பை மிதித்துவிட்டவர்கள் போல சிங்கள அரசியல்வாதிகள் துள்ளிக் குதிக்கின்றார்கள். நாட்டைக் கூறு போடப் போகின்றோம் என்று கூச்சலிடுகின்றார்கள், ஓலமிடுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாத சிங்கள மக்களும் அதனை நம்பி தமிழ் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட எத்தனிக்கின்றார்கள்.

சிங்களக் குடிமக்கள் பழகுவதற்கு இனியவர்கள். பண்பானவர்கள். ஆனால் இனம் என்று வருகின்ற போது சுயநலம் மிகுந்த அரசியல் தலைவர்களின் வன்முறை அரசியல் கலாச்சாரத்தின் தூண்டலில் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். உடமைகள் அழிக்கப்படுகின்றன. உயிர்கள் அழிக்கப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறாக இன்னோரன்ன துன்பங்களைத் தமிழ் மக்களுக்குப் புரிவதற்கு அவர்கள் தூண்டிவிடப்படுகின்றார்கள்.

நான் வன்முறைக் கலாசாரத்தை விரும்புவதில்லை. மாறாக நீதியின் வழியில் எமக்கு கிடைக்க வேண்டிய சகல உரித்துக்களும் நேர்மையான அரசியல் முன்னெடுப்புக்கள் வழியாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். ஆனால் தொடர்ச்சியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நில அபகரிப்புக்களும் முப்படைகளின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் பல புரியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்களப் பொது மக்கள் இடையே உண்மையை உணர்த்த வேண்டும். உலக நாடுகளுக்கும் உண்மையை உரக்கக் கூறவேண்டும். சட்டத்தின்பாற்பட்ட சகல நடவடிக்கைகளையும் தவறாது எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

இறையருளால் குற்றம் இழைத்தவர்கள் தமது குற்றங்களை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எது எப்படியோ எமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான எமது நடவடிக்கைகள் தொடர வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களையும் அவர்களின் இருப்புக்களையும் உறுதி செய்யும் வரையிலும் எதுவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்படும் வரையிலும் எமது பணி ஓயாது. மக்கள் நலனுக்காக நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற முன்வருவோமாக! இந்த நூல் வெளியீடு எம் மக்கட் தலைவர்களை ஒன்று சேர்ப்பதாக! நூல் வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு எதிர்காலக் கல்விக்கு 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50000 வரையான நூல்கள் – லிற்றில் எய்ட்!

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சியடைந்த தமிழ் சமூகத்தை மீண்டும் மேன்நிலைப்படுத்த; லிற்றில் எய்ட் பல்வேறு கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் மிகக் கவனம் எடுத்து வருகின்றது. அதன் ஒரு முக்கிய நகர்வாக இன்று அதிகாலை 11,000 கிலோ கிராம் நிறை கொண்ட 50,000 வரையான சிறுவர்களுக்கான ஆங்கில நூல்கள் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சென்றடைந்தது. இந்நூல்களின் இலங்கைச் சந்தைப் பெறுமதி 22 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடபடுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள புக் அப்ரோட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் லிற்றில் எயட், காலத்திற்குக் காலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு சிறுவர்களுக்கானபல்வேறு துறைசார்ந்த ஆங்கில நூல்களை அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சியயை வந்தடைந்த நூல்கள் தமிழ் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

எம் வி ரக்னா என்ற கப்பலில் டிசம்பர் 22இல் இலங்கை வந்தடைந்த நூல்கள் இன்று கிளிநொச்சியில் உள்ள லிற்றில் எய்ட் நிறுவனத்தில் இறக்கப்பட்டது (படங்கள்). 22 ‘பலட்களில்’ கொண்டுவரப்பட்ட நூல்கள் தறகாலிகமாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் துளசிகன் மேற்பார்வையில் இறக்கப்பட்டது, வடக்கில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்துவரும் சிறகுகள் அமைப்பினர் லிற்றில் எய்ட் நிறுவனத்தோடு கரம்கோர்த்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நடுநிசியில் மழையயையும் பொருட்படுத்தாமல் நூல்கள் பத்திரமாக லிற்றில் எய்ட் நிறுவன மண்டபத்தில் இறக்கப்பட்டது.

இப்பணிகளில் லிற்றில் எய்ட் அறங்காவல் சபை உறுப்பினர்கள் குகன், தயாளன் ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர். தமிழ் பகுதிகளில் நூல்களும் நூலகங்களும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஈடுபாடு இல்லாமல் இல்லை. 2012இல் நூலகவியலாளர் என் செல்வராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் இஸ்கொட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அவ்வமைப்பினருடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தோம். அதன் பயனாகவே இவை சாத்தியமாகி வருகின்றது. இந்நூல்களை சேகரித்து கொழும்புத்துறைமுகம் வரை அனுப்பி வைப்பதற்கு ஏற்பட்ட பத்து இலட்சம் ரூபாய்கள் வரையான செலவை புக் அப்ரோட்டே பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற்று லிற்றில் எய்ட் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையான நூல்களைக் கொண்டு சேர்ப்பது லிற்றில் எய்ட் பொறுப்பாக இருந்தது, அதற்கான நிதியயை சேகரிப்பதில் லிற்றில் எய்ட் தலைவர் என் கதிர் செயலாளர் என் சுகேந்திரன் ஆகியோருடைய உழைப்பு குறிப்பிடத்தக்கது.

நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள்!
வாசிப்பதால், மனிதன் பூரணமடைகின்றான்!!
ஆகவே வாசிப்பை நேசிப்போம்!!!

லிற்றில் எய்ட்.

 

கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட மறுக்கும் ட்ரம்ப் – பேரழிவு ஏற்படும் என பைடன் எச்சரிக்கை !

உலக அளவில் கொரோனாவைரஸ்  பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டால் தான் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும். ஆனால், இந்த மசோதாவில் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிப்பதாகவும், வெளிநாடுகளே அதிக பலனடைவதாகவும் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
மேலும், கொரோனா நிவாரணமாக அமெரிக்கர்களுக்கு தலா 600 டாலர் வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2 ஆயிரம்  டாலராக  அதிகரிக்கும்படியும் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதனால், கொரோனா நிவாரண மசோதா சட்டமாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் 1 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீடு பலன்களை இழக்க நேரிடும் எனவும் ”
பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்