August

August

தனியார் மருத்துவ பீடங்களை வடக்கில் உருவாக்க வேண்டும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் வடக்கில் காணப்படுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வடபகுதியில் வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அண்மைக்காலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே நடாத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் அங்கு கடமைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.  ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள். குழந்தை மருத்துவம் உட்பட சிறு குழந்தைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்கள், இதய சிகிச்சைக்குரிய மருத்துவர்கள், சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள் தற்போது மருத்துவத்துறை நன்கு விருத்தியடைந்துள்ளது

ஒவ்வொரு மருத்துவ நிபுணருக்கும் குறைந்தது மூன்று மருத்துவர்கள் பணியாற்றினால் மாத்திரமே அந்த பிரிவினை சிறப்பாக செயற்படுத்த முடியும் யாழ் போதனா வைத்தியசாலையானது மிகவும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போதுள்ள பணிப்பாளரின் அயராத முயற்சியின் காரணமாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து
வருகின்றது .

இதனால், மருத்துவ படிப்பு மட்டுமல்ல மருத்துவபடிப்பின் பின் பட்டப்படிப்பு அதேபோல தாதிய பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் யாழ் போதனா வைத்தியசாலை விருத்தியடைந்து வருகின்றது. யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும் போது சில சேவைகள் இடைநிறுத்த படக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமேயானால் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் தனியார் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை நீக்கலாம்.

ஏனென்றால், இன்று மருத்துவம் உலகளாவிய ரீதியில் அதிகளவில் விருத்தியடைந்து காணப்படுகின்றது ஒவ்வொரு துறையிலும் பல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்களின் கீழ் பணி புரிவதற்கும் பல மருத்துவர்கள் தேவை. அதே போல் மருத்துவ நிபுணர்கள் இளைப்பாறும் போது புதிய மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு புதிதாக மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும் அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லாத படியினால் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே இந்த காலகட்டத்தில் தேவையாக உள்ளது என்றார்.

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக் கொறடாக்களாக ஐவர்

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதி கொறடாகவாக பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆளும் கட்சியின் உதவி கொறடாக்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்மகுமார, மொஹமட் முஸ்ஸமில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் ஆளும் கட்சியின் பிரதம கொறாடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கொரோனா முடிவுக்கு வர இரு ஆண்டுகள் எடுக்கும் உலக சுகாதார அமைப்பு தகவல்

இரு ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகமயமாதல், நெருக்கம், தொடர்பில் இருத்தல் என்பன தடங்களாக உள்ளன. ஆனால் நம்துடைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது. ஆகையால், இந்த கொரோனாத் தொற்றை நாம் 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். தற்போது இருக்கும் உத்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். கூடுதலாக கொரோனாவுக்குத் தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த வைரசை 1918 ஆம் ஆண்டு உருவான ஸ்பானிஷ் புளூ முடிவடைந்த காலகட்டத்திற்கு முன்னரே இதை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்றார். 1918 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் புளூ என்ற வைரஸால் உலகம் பாரிய பாதிப்பை எதிர்கொண்டது. இந்த ஸ்பானிஷ் புளூவுக்கு உலகம் முழுவதும் 5 கோடி முதல் கோடி பேர் வரை உயிரிழந்தனர். இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நீடித்தது. அதன் பின்னர் தான் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மெல்ல உலகம் பழைய நிலைக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ஒரு வேலைக்கு 1000 பேர் விண்ணப்பம்! அரசியல், பொருளாதார, கல்விக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்!!!

பிரித்தானியாவின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மார்ச் 2020இல் கொரோனா பன்டமிக் ஆரம்பித்த வேளையில் பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியன்களாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதகாலத்தில் யூனில் வேலையில்லாமல் அரசு உதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 2.7 மில்லியன் பேர் வேலை இழந்தவர்களுக்கான அல்லது வருமான போதாமைக்கான உதவிகளைப் பெற்று வந்தனர். மார்ச் முதல் யூலை வரையான காலத்தில் மட்டும் 730000 பேர் சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு லண்டனில் உள்ள எனது நண்பரின் முடிதிருத்தும் நிலையத்துக்கு எப்போது சென்றாலும் காத்திருந்து முடிதிருத்த வேண்டும். அல்லது முன்னரே அவரிடம் நேரத்தை பதிவு செய்து செல்வது வழமை. மூன்று பணியாளர்கள் இருந்தாலும் 2 தொடக்கம் 5 பேர்வரை காத்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கார் MOT எடுக்கச் சென்றபோது சலூனில் மூன்று பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். MOT எடுத்துவிட்டு அண்ணளவாக ஒரு மணிநேரத்திற்குப் பின் மீண்டும் முடி திருத்தச் சென்றேன். பணியாளர்களைத் தவிர யாரும் இல்லை. மார்ச் மாதமளவில் பொறுப்பாய் இருந்த நண்பரோடு உரையாடிய போது தானும் ஒரு சலூன் திறக்கப்போவதாகச் சொல்லி இருந்தார். புதிய சலூன் திறப்பது பற்றிக் கேட்டேன். ‘பயமாக இருக்குது அண்ணா’ ஆட்கள் வரவே பயப்படுகிறார்கள். எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது என்று சலிப்போடு கூறினார்.

அத்தியவசிய தேவைகளில் ஒன்றான முடிதிருத்தும் நிலையத்தின் நிலையே இப்படி என்றால் மற்றைய வேலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் எத்தினை பேரை வேலையால் நிறுத்துகின்றனர் என்ற விபரம் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீடுகளில் மிக அறியப்பட்ட நிறுவனங்களான பிபி – BP, பிரிடிஸ் ஏயர்வெய்ஸ், M&S – எம் அன் எஸ், ஜோன் லூயிஸ், பிஸா கட், தி கார்டியன், ஈவினிங் ஸ்ராண்டட் பத்திரிகைகள் என்று இந்தப் பட்டியல் மிகநீளமானது. ‘வைட் கொலர் ஜொப்’ என்று பிரித்தானியர்கள் பெருமைப்படுகின்ற பல தொழில்கள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்தும் வேலையில் பணியாளர்களை வைத்திருப்பதற்காக வழங்கும் பேர்லோ திட்டம் ஒக்ரோபரில் முடிவுக்கு வரும் போது, வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலை நீக்கம் என்பது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்டது மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்னரேயே பிரித்தானிய வேலைமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் திட்டமிட்டு தகுந்த நேரத்திற்காக காத்திருந்தன. கொரோனா வின் தாக்கம் இந்த மாற்றத்தை சடுதியாக துரிதப்படுத்தி உள்ளது.

பிரித்தானிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்துவருவதால் கூடுதல் லாபத்தை காண முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்படத் தொடங்கிவிட்டன. மனித வலுவுக்காக ரொபேட்களை கணணிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மனிதர்கள் செய்யும் பணிகளை கணணிகளும் ரோபேட்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ரீற்றெயில் செக்ரரை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வருமானம் அதிகரித்தே உள்ளது. ஆனால் அவர்கள் ஒன்லைன் மூலமாக வருமானமீட்டுவது மிகையாக அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் தங்களுடைய கல்லும் சீமேந்தும் கொண்டு கட்டப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் எமது ஹைஸரீற்றில் இருந்து காணாமல் போய்விடும். அடுத்த ஆண்டு முதல் பிரித்தானியா ஓட்டிகள் இல்லாத வாகனங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு அனுமதிக்க உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரக்ஸிகளும் ஊபர் ட்ரைவர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படலாம். தற்போது நாங்கள் செய்கின்ற பல நடைமுறை வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு ஆகிவிடும்.

தற்போதைய பொருளாதாரமானது மிக வேகமாக அறிவியல் பொருளாதாரமாக மாறி வருகின்றமையால் வேலைவாய்ப்பிற்கான சந்தையில் தங்களை விற்க விரும்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் கூட வெறும் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலைழயப் பெற்றுவிட முடியாது. அவர்கள் கடுமையான போட்டியயை சந்திக்க வேண்டி நேரிடும். சான்றிதள்கள் மட்டுமே அறிவாகி விடாது. ஏனைய திறன்களும் பரீட்சிக்கப்படும்.

பழையன கழிவதும் புதியன புகுவதும் இயல்பானாலும், இழக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம் புதிய வேலைகளை உருவாக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே மனித வலுவைக் குறைத்து அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தைக் குறைத்து அதீத லாபம் மீட்டுவது மட்டுமே.

அதனால் அரசு புதிய தொழில்சார் சட்டங்களை இயற்றி வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்தி, அரச உதவித் திட்டங்களை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வாரத்திற்கு 40 மணிநேர வேலைக் கணக்கு தற்போது தொழில்நுட்பம் அதன் உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானது. அதன் பலனை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

மக்கள் தனிமனிதர்களாக மட்டும் சிந்திக்காமல் சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் வாழ்கின்றோம். மக்கள் கூட்டத்தை தனிமனிதர்களாக்கி தனிமனிதர்களிடையே போட்டியயை உருவாக்கி சமூக அக்கறையை இல்லாமல் செய்து வெறும் போட்டியயையும் பொறாமையயையும் உருவாக்கும் தற்போதைய அரசியல் பொருளாதார கல்விக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தங்களுடைய பட்டப் படிப்பிற்காக £50000 வரையான கடன் சுமையைப் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களதும் யுவதிகளதும் எதிர்காலம் அரசின் கொள்கைவகுப்பிலேயே தங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் லாபமீட்டுவதற்காக தங்களைத் தயார்படுத்தும் இந்த இளைஞர் யுவதிகளின் கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும்.

‘தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!’ – தமிழ்ச் சூழல்; ‘தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!’ – சர்வதேசச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய ‘குதிரை’ கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு வெளியேயும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழன் இவ்வாறுதான் சிந்திக்கின்றான். போராட்டகாலங்களில் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்: வே பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றவர்கள் கூட எங்கே தங்களிலும் பார்க்க திறமையானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கூட ஒரு நேர்மையான, ஆளுமைமிக்க ஒருவர் துணைவேந்தராக வரக்கூடாது என்பதில் யாழ் பல்கலைக்கழக சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்தவர்களைக் கூட இன்றும் பேராசிரியர்களாக வைத்துள்ளனர். துணைவேந்தர்களாக வருவதற்கு சிபாரிசு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக சர்வதேசம் இயங்குகின்றது. அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பின்புலம் கொண்ட ஒருவர் போட்டியிடுவதாக கொண்டாடும் நாம் அதன் பின்னணியைச் சற்று நோக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் துணைவேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர். இவர் ஜோ பைடனுக்கு எதிராக பலத்த சவாலை விடுத்ததுடன் ஒரு விவாதத்தின் போது ஜோ பைடனை நிலைகுலைய வைத்தார். ஜோ பைடனுக்கு அந்நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அவரது ஆதரவை சற்று தடுமாற வைத்தவர்.

இருந்தாலும் ஜோ பைடனின் மகன் உப ஜனாதிபதித் தெரிவில் கமலா ஹாரிஸை தெரிவு செய்தார். அவருடைய திறமைக்காகவும் அவருடைய அரசியல் கொள்கைகள் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக இருப்பதாலும் ஜோ பைடன் கமலா ஹாரிஸை தனது உபஅதிபராகத் தேர்வு செய்துகொண்டார். ஜோ பைடன் (77 வயது) யைக் காட்டிலும் மிக இளமையான கமலா ஹாரிஸ் (வயது 55) தனக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஏற்ற வகையிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. மேலும் ஜோபைடன் ஜனாதிபதி ஆனாலும் கமலா ஹாரிஸே கூடுதல் ஆதிக்கம் செலுத்தவார் என்றும் நம்பப்படுகின்றது. 2024இல் தவறினால் 2028இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடலாம் என்று நியுயோர் ரைம்ஸ் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்மின் முதலாவது எதிரியாக கமலா ஹாரிஸே இருக்கப் போகின்றார். அவர் ஒரு குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பொது மருத்துவச் சேவைக்கு ஆதரவானவராகவும் இருப்பதால் டொனால் ட்ரம்மின் முதல் தாக்குதல் இலக்கு கமலா ஹாரிஸாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் சமூகம் இந்த சர்வதேச அரசியலில் இருந்து ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலேயே ஆழ்ந்து உறங்கிய உறுப்பினர்கள் !

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்த முதலாவது அமர்விலேயே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். இதனை இணையதளவாசிகள் பலரும் நகைப்பாகவும் இவர்களை தான் நாம் தெரிவுசெய்துள்ளோம் என வேதனையாகவும் சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து வருகின்றனர்.

வடக்கு கலிபோர்னியாவில் மின்னல் தாக்குதல்களால் பயங்கரமான காட்டுத்தீ !

கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பை சந்துத்துள்ள அமெரிக்க மாகாணங்களில் கலிப்போர்னியாவும் ஒன்று. இந்த நிலையில் தற்போது கடுமையான காட்டுத் தீயை கலிப்போர்னியா எதிர்க் கொண்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ வடக்கு கலிபோர்னியாவில் மின்னல் தாக்குதல்களால் வனப் பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 11,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர். கலிபோர்னியா மட்டும் அல்லது சான் பிரான்ஸிகோவிலும் காட்டுத் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீக்கு இதுவரை 20,234 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் சேதமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கலிபோர்னியா கடந்த சில வருடங்களாகவே காட்டுத் தீயினால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மிக மோசமான அளவில் காட்டுத்தீ  ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியாகினர்.

மேலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் தெற்காசிய பெண்மணியாக துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நிற்க தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை நினைவுகூர்ந்தார்.

சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்பதை ஜனநாயகக் கட்சி மீண்டும் வலியுறுத்தி செயல்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும். ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர் இன்னும் எத்தனையோ பேர்களைக் குறிப்பிட வேண்டும் நம் குழந்தைகள், நாம் அனைவருமே, சம நீதி என்பதற்காகப் போராட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெறாமல் முழு விடுதலை சாத்தியமல்ல.

பெண் உரிமைக்காக போராடிய தலைவர்கள் மேரி சர்ச் டெரெல், மேரி மெக்லியாட் பெத்யூன், ஃபானி லூ ஹேமர், டயான் நேஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி மற்றும் ஷிர்லி கிரிஷோம் ஆகியோரது சிவில் விடுதலைக்கான போராட்டங்கள், கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கர்களாக அவர்கள் தோள்களில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு பிரபல்யத்துக்கும் இடம்கொடுக்காமல் அவர்கள் போராடினர், ஊர்வலம் நடத்தினர், இவர்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானித்தவர்கள். இவர்கள்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோரது ஒளிமிகுந்த தலைமைக்கு முன்னோடிகளாவார்கள்.

அடுத்தவர்களுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் அர்த்தம் என்று என் தாயார் ஷியாமளா கோபாலன் எனக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய இரவில் அவர் இங்கு இருக்க வேண்டும் என்று என் மனம் கருதுகிறது. மேலேயிலிருந்து என்னை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

என்னை என் அம்மா பெற்ற போது நான் உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் நின்று பேசுவேன் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு என்னை நிற்கவைத்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார் கமலா ஹாரிஸ்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் அரசியல் பயணம் !

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்துக்கொண்டார்.

சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்மொழிந்ததுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை வழிமொழிந்தார்.

புதிய சபாநாயகரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் அக்கிராசனத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தில் பிறந்த மஹிந்த யாப்பா அபேவர்தன 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் அனுபவம் மிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்து வருகிறார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாகப் பாராளுமன்றத்துக்குச் சென்ற இவர் 23 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார்.

2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனையை பிரதிநிதித்துவப்படுத்தி மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 80,895 விருப்பு வாக்குகளுடன் இவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்

1993,94 ஆண்டில் தென்மாகாண சபையின் முதல்வராக இருந்ததுடன், 1994-2001 ஆண்டு காலப் பகுதியில் மீண்டும் அப்பதவியை வகித்திருந்தார்.

இவர் சுகாதாரம், கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரியம், நீர்ப்பாசனம் மற்றும் ஊடக வளர்ச்சி, தொழில் மற்றும்வர்த்தகம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் இவர் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டில் கோப் குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியிருந்தார்

மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற அமைதிக்கான ஆசிய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 50 வது சீ.பி.ஏ மாநாட்டிலும், 2005ஆம் ஆண்டு பீஜிங் நகரில் இடம்பெற்ற மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்

மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது 75 ஆவது வயதில் இலங்கையின் 21 ஆவது பாராளுமன்ற சபாநாகராக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தெரிவானார்.