August

August

பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் ! – பாராளுமன்றில் மனுசநாணயக்கார.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், தமிழர்களின் இருப்புத் தொடர்பிலும் விளக்கமாக உரையாற்றியிருந்தார். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது நாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கையில் காரசாரமான விவாதங்கள் எழும்பின. இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின மனுசநாணயக்கார விக்னேஸ்வரனின் உரையை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய போது, மனுசநாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று நாடாளுமன்றம் கூடியவேளை விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என கோரிய மனுசநாணயக்கார பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் என தெரிவித்தார்.

எனினும் இதனை நிராகரித்த சபாநாயகர் விக்னேஸ்வரனின் உரை குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார். எனினும் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த நாணயக்கார விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதேவேளை இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து சுதந்திரத்தினை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று, அவர் சபாநாயகரின் நிலைப்பாட்டை வரவேற்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கிழக்கு தொல்லியல் செயலணியில் ஒரு தமிழரை கூட உள்வாங்காதது குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் கேள்வி!

தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா..? தமிழர்கள் இல்லாத கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இடம்பெற்று வரும் விவாதத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செயலணியொன்ற ஸ்தாபிக்கப்பட்டது. 12 பேர் அங்கம் வகிக்கும் அந்த செயலணியில் தமிழர் ஒருவர்கூட உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, அதற்கு தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், குறித்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், அந்த செயலணியின் உறுப்பினர்களாக மேலும் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களிலும் தமிழர்கள் ஒருவர்கூட உள்வாங்கப்படவில்லை. கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் ஒருவர்கூட ஏன் நியமிக்கப்பவில்லை என நான் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தின் மரபுரிமைகளை பாதுகாக்க பௌத்த மதகுருமார் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டது, தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா..? என கேட்க விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 க்குப் பின்னரான இரண்டு மாதங்களில் இலங்கையில் கொவிட் -19 தொற்று எதுவும் பதிவாகவில்லை !

தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 30 க்குப் பின்னரான இரண்டு மாதங்களில் இலங்கையில் கொவிட் -19 தொற்று எதுவும் பதிவாகவில்லை. இன்றைய நிலவரப்படி, 65 தனிமைப்படுத்தல் மையங்களில் 7058 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர், மேலும் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு பின்னர் மொத்தம் 32,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இன்றுடன் 26,000 க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டவர்கள் இன்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆயினும் கூட, நாம் சமூகத்தில் வைரஸ் தொற்றை வெகு விரைவில் ஒழிப்பது கடினம். மேலும் நாம் இன்னும் நமது சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டும், இருப்பினும் சில பிரிவுகள் அதன் நோய் தொற்று பரவுவதை புறக்கணிப்பதாக தெரிகிறது. அது நமக்கு ஏற்படும் பொறுப்பு. எங்கள் பங்கில் ஏதேனும் சிறிய குறைபாடு ஏற்பட்டால், இந்த வைரஸ் நோய் பரவக்கூடும், ´எனவே நேற்று (26) பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த சந்திப்பானது சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி ஆராச்சி மற்றும் கொவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன் மருத்துவ நிபுணர் மற்றும் சுகாதார சேவை பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் சில நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த சந்திப்பில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு தொடர்பான புதுப்பிப்புகள் சாத்தியமான புதிய கருத்துக்கள் மற்றும் நாட்டில் நோய் தொற்று பரவலை தடுப்பு தொடர்பாக பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நொப்கோ பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளை வரவேற்றதோடு, குறித்த சந்திப்பின் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ´தற்போது 26,000 மற்றும் அதற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை வந்துள்ளதுடன், மேலும் 55,000 பேர் பிற மூலோபாய தேவைகள் ஏற்ப திருப்பி அனுப்பப்பட உள்ளனர். நடைமுறையில், மேலும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் அனைத்து தனிமைபடுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு, ஒவ்வொரு தனிமைபடுத்தல் நிலையங்களில் இராணுவம் ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்கின்றது,, ´என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த கொரோனா நோய் தொற்றின் தேசிய பணியின் செயல்திறனில் இராணுவம் பெற்ற மகத்தான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைப் பாராட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தொற்றுநோயியல் நிபுணர்கள், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தளபதிகள், மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அனைத்து முதன்மை மற்றும் தரை பங்குதாரர்கள். ´அந்த உறுதியான தொலைநோக்குத் தலைமை ஏற்படவில்லை என்றால், இது இராணுவத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்ததால் எங்களுக்கு ஒரு கடினமான நேரம் கிடைத்திருக்கும்,´ என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் நிலவரங்களை விரிவாகக் கூறி, தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றியமைத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பணிக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். ´கொடிய வைரஸ் பரவுவதை திறம்பட தணித்த ஒரு தேசமாக இலங்கை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்,´ என்று அவர் குறிப்பிட்டார். அரசுத் துறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் குறித்து, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் விளக்கினார். அரசுத் துறை இதை ஒரு நாளைக்கு 2000 ஆகவும், தனியார் துறை ஒரு நாளைக்கு 1000 சோதனைகளாகவும் அதிகரித்தது. இதற்கிடையில், சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூகத்தில் எழுமாற்று சோதனைகளும் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 2019ல் மட்டும் சுமார் 2,195 பேர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்! – Human Rights Watch அறிக்கையில் தெரிவிப்பு.

அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கானவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரேசிலில் இயங்கும் Human Rights Watch என்ற தன்னார்வ அமைப்பு 50 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 2,195 பேர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்தவர்கள். 2020-ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.

காடழிப்பை பிரேசில் திறம்படக் கட்டுப்படுத்தும் வரை, ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இது அமேசானின் அழிவை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக லட்சக்கணக்கான பிரேசில் மக்கள் சுவாசிக்கும் காற்று விஷமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி  ஜெய்ர் போல்சனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஜெய்ர் போல்சனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இதனை பிரேசில் அதிபர் நிராகரித்துவிட்டார். மேலும் அமேசான் காடுகள் எரிகிறது என்பது பொய் என்று அவர் தெரிவித்தார்.

பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் உள்ளன. 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.

அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன ! – ஹர்ஷ டி சில்வா

 

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயமே தற்போது இலங்கை அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.  இந்நிலையில் அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், 19ஆவது அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய முன்னெடுக்கப்படும் முயற்சியில் 13ஆவது திருத்தம் உள்ளிட்ட மேலும் சில அரசியல் அமைப்புக்களையும் திருத்தம் செய்வதன் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் மொழி அடிப்படையிலான பிரச்சினைகள் அதிகம் எழுந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நிர்வாகம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனைவிடுத்து தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்மொழி பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிங்கள பத்திரிகையொன்றில் காணப்பட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நேர்காணல் இனவாதத்தை தூண்டும் விதத்தில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வடக்கில் எவ்வாறு தமிழ் மொழியில் வழக்கு விசாரணை செய்ய முடியும்? வடக்கில் சிங்கள் மொழியிலேயே வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதோடு, 16ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது முன்னெடுக்கப்படும் திருத்தமானது, 19ஆவது திருத்தத்தில் மட்டுமல்லாது மாறாக 13, 14, 16, 17 மற்றும் 19 ஆகிய அனைத்து திருத்தங்களிலும் திருத்தங்களை முன்னெடுக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியே அரங்கேற்றப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த இனமானாலும் , திருமணம் முடிப்பதற்கான வயதெல்லை 18 ! – பாராளுமன்றத்தில் முதலாவது தனிநபர் பிரேரணை .

9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது தனிநபர் பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் சமர்பித்துள்ளார்.

இந்த பிரேரணையை நேற்று (26.08.2020) பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசாநாயக்கவிடம் கையளித்தாக பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிப்பதற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிப்பது இந்த பிரேரணையின் நோக்கம் என அவர் கூறினார்.

எந்த இனமானாலும் எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்ற வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்கான அவசியம் தேவையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 மார்ச்சில் நியூஸிலாந்தில் 51 முஸ்லிம்களை கொலை செய்த தீவிரவாதிக்கு ஆயுள்தண்டனை !

2019 மார்ச்சில் நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் புகுந்து வெள்ளை நிறவெறி தீவிரவாதி தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 51 முஸ்லிம்கள் பலியானார்கள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  பிரென்ட்டன் டேரண்ட் என்பவருக்கு பரோலே இல்லாத ஆயுள்தண்டனை விதித்து நியூஸிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியரான 29 வயது தீவிரவாதி பிரென்ட்டன் தன் மீது சுமத்தப்பட்ட 51 கொலை, 40 கொலை முயற்சிக் குற்றச்சாட்டு, பயங்கரவாதச் செயலுக்கான ஒரேயொரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக் கொண்டதையடுத்து 2 மசூதிகள் மீதான கொடூரத் தாக்குதல் வழக்கில் பிரென்ட்டனுக்கு ஆயுள்தண்டனைவிதிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கேமரூன் மேண்டர், குற்றவாளி டேரண்ட்டின் குற்றங்கள் மிகவும் கொடூரமானது, ஆயுள் முழுதும் சிறை என்பது கூட அந்த கொலை பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது, மிகவும் கறைபடிந்த ஒரு பாவ கருத்தியலிலிருந்து இந்த கொலை பாதகம் நடந்துள்ளது என்று தெரிவித்தார். ‘உன்னுடைய செயல் மனிதவிரோதமானது, தன் தந்தையின் முழங்காலைக் கட்டிக் கொண்ட 3வயது குழந்தையைக் கொலை செய்திருக்கிறாய்’ என்று நீதிபதி மேண்டர் காட்டமாக தெரிவித்தார்.

2019 மார்ச்சில் உலகையே உலுக்கிய அந்த பயங்கரவாதத் தாக்குதலில் அல் நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த பிரென்ட்டன் ஈவு இரக்கமில்லாமல் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தினான். இதனை முகநூலில் நேரலையாக வேறு ஒளிபரப்பியதும் நியூஸிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுதுமே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

தண்டனைக்கான 4 நாட்கள் விசாரணையில் தாக்குதலில் உயிர் பிழைத்த 90 பேரின் குடும்பத்தினரும் அன்றைய தினத்தின் பீதியிலிருந்து இன்னமும் மீள முடியாத நிலையில் நடந்ததை வேதனையுடனும், பீதியுடனும் நினைவுகூர்ந்தனர்.

கோர்ட் வளாகத்தில் குற்றவாளி பிரென்ட்டன் மீது மக்கள் வசைமாரி பொழிந்தனர், கோழை, அரக்கன் என்ற வார்த்தைகளினால் அவனை சாடினர். முன்னதாக குற்றவாளி பிரென்ட்டன் டேரண்ட் தன் வழக்கறிஞர்களை நீக்கியதோடு விசாரணையில் தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதே போல் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையையும் எதிர்க்கவில்லை.

தாக்குதலுக்கு முன்பாக மசூதியைப் ட்ரோன் மூலம் படம்பிடித்து மிகவும் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 6 துப்பாக்கிகளுடன் மசூதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளான்.

நியூஸிலாந்தின் வரலாற்றிலேயே கறைபடிந்த ஒரு சம்பவமாகவும் நியூஸிலாந்தின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும் இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

தொடரும் சீன – அமெரிக்க விரிசல் ! – 24 சீன நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலம் முதலே சீனாவுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பகைமை பாராட்டி வருகின்ற நிலையில் அதன் இன்னுமொரு பகுதியாக தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்குவதில் பங்கெடுத்ததற்காக 24 சீன நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதிளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா , சீனாவின் செயல்களை ஆரம்பம் முதலே கண்டித்து வருகிறது.

இந்நிலையில் தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்குவதில் 24 சீன நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. அந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட 24 அரசு நிறுவனங்களில் கட்டுமான நிறுவனமான சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கோ நிறுவனத்தின் துணை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் சீனா கப்பல் கட்டும் குழுவின் ஒரு பிரிவு ஆகியவையும் அடங்கும்.

பல நாடுகள் உரிமை கோரும் தென் சீனக் கடலின் பகுதிகளில் சீன இராணுவம் செயற்கை தீவை உருவாக்குவதற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளது. தடை விதிக்கப்பட்ட 24 நிறுவனங்களும் “தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ராணுவ முகாம்களை உருவாக்கவும் இராணுவமயமாக்கவும் சீனாவுக்கு உதவியது” என்று அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது

“13வது மற்றும் 19வது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும் ” – அமெரிக்க தூதுவரிடம் இரா.சம்பந்தன்.

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina Teplitz) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று (26.08.2020) திருகோணமலையில் சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவருக்குமிடையில் நிகழ்கால இலங்கை அரசியல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது 13 மற்றும் 19ஆவது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “13வது மற்றும் 19வது திருத்தங்களில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் என்னவென்பது எங்களுக்கு தெரியாது. இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும்.

நீண்ட கால தேசியப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகள் காணப்படவில்லை. முன்னைய அரசாங்கம்கூட தனக்குள் ஏற்பட்ட பிளவினால் தீர்வை முன்வைக்க தவறிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, நோர்வே, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது.

அரசாங்கம் அவர்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. இதனை  அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடினேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் அடைந்த பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பாக நாம் அவர்களுக்கு விளக்கங்களை அளித்தோம்.

தமிழ் கட்சிகள், தேசிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக நடந்துகொண்ட அல்லது மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட உதவிகள்,பண உதவிகள் ஏனைய நடவடிக்கைகள், அத்துடன் விருப்பு வாக்குகள் என்று சொல்லப்படுகின்ற வேட்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்ததன் காரணமாக அதிக வாக்குகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் கட்சி கடந்த காலங்களைப்போல போதிய ஆசனங்களைப் பெற முடியவில்லை.

கட்சிக்குள் இருக்கின்ற ஒரு சில முரண்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியிலும் பாரிய பின்னடைவுக்கு காரணமாக இருந்த காரணத்தினால்தான் நாங்கள் கடந்த காலத்தைப்போல பாரிய வெற்றியை அடைய முடியாமல் போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.

அதேபோல இது தொடர்பாக எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகவீனம் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அக் கூட்டம் கூட்டப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகவீனம்  காரணமாகவே கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மற்றும் கொறடா தொடர்பான நிலைப்பாடுகள்  தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பின் பேச்சாளராக என்னை நியமிப்பதாக பங்காளி கட்சித் தலைமைகளின் கூட்டத்தின் போதே முடிவு எடுக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றக் குழு கூட்டத்தின் போதே அது உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட வேண்டும்.  அது இன்னும் கூடவில்லை. அதன்போதே தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உத்தியோகபூர்வமான பேச்சாளர் என்று நான் இப்போது கூறமுடியாது. இந்தவாரம்  பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடுவதாக இருந்தது. எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் அது தாமதமாகியுள்ளது. எனவே கூட்டம் இடம்பெறும் போது அந்த தெரிவுகள் இடம்பெறும். அதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை என்றார்.