01

01

ஐபிசி தமிழ் ‘ரீக்கடை’ நடத்தியவர்கள் உட்பட அறுவர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்!!!

சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று ஐபிசி தமிழில் ‘ரீக்கடை’ நடத்தியவர்களையும் பேர்லோ திட்டத்தில் வீட்டில் இருந்தவர்களையும் ஐபிசி தமிழ் வேலை நீக்கம் செய்துள்ளது. ஐபிசி ரீக்கடையயைத் திறந்து சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று அரட்டை அடிக்க அனுமதித்த கோகுலன், முகுந்தன் ஆகிய பாஸ்கரனுக்கு வேண்டப்பட்டவர்களே வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருடன் ராஜ்குமார், சுலோமி, சுரேஸ், தினேஸ் ஆகியோரும் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஐபிசி கலையகம் பிரித்தானியாவில் தனது மனிதவலுவைக் குறைத்துவருவது இது முதற்தடவை அல்ல. நிறுவனங்கள் மனிதவலுவைக் குறைப்பது இன்றுள்ள காலகட்டத்தில் புதிதும் அல்ல. ஆயினும் 2020 இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் ஐபிசி தமிழ் க்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஐபிசி ஒன்றும் இலாபத்தில் இயங்குகின்ற ஊடகமல்ல. அதன் வருமானம் அதன் லண்டன் கலையகத்தை இயக்குவதற்கே போதுமானதாக இல்லை. நிறுவனர் கந்தையா பாஸ்கரன் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய பெரும் செல்வந்தர்களில் ஒருவர். அவர் ஐபிசி யை இயக்குவது நிச்சயமாக லாபநோக்கத்திற்காக அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் தன்னையொரு முக்கிய புள்ளியாக, அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ‘கிங் மேக்கர்’ஆக தன்னை உருவகப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்க முடியும்.

அதன் ஒருகட்ட நகர்வாகவே 2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே பிரிவினையயைத் தூண்டிவிட்டதில் ஐபிசி நிறுவனர் பாஸ்கரன் முன்னணியில் நின்றார். எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிசி நிறுவனர் லட்சங்களை வழங்கியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தேசம்நெற்க்கு தெரிவித்திருந்தன. அவ்வாறான நிதி வழங்கப்பட்டவர்களில் மாவை சேனாதிராஜா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர்ணவாகினி குழுமத்தை வாங்குவதற்கும் ஐபிசி திட்டமிட்டு செயற்பட்டு வந்ததும் தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. சுவர்ணவாகினியயை வாங்குவதற்காக மின்னல் ரங்காவோடு ஐபிசி கூட்டுச் சேர்ந்திருந்தது. அச்சமயம் ரங்கா ராஜபக்ச சகோதரர்களின் பக்கம் நின்றார். ஆனால் அவர் விபத்து ஒன்றில் சிக்கியதையடுத்து அவ்வழக்கை சென்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசு அவருக்கு எதிராகப்பயன்படுத்திக் கொண்டது. ரங்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ராஜபக்ச சகோதரர்களுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஐபிசி இன் சுவர்ணவாகினி கனவும் பலிக்கவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் கந்தையா பாஸ்கரனின் கனவைக் கலைத்துவிட்டது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரன் வெல்வது உறுதி என்பது தேர்தலுக்கு முன்னரேயே தேசம்நெற் போன்ற ஊடகங்களினால் உறுதியாக கூறப்பட்டதுடன், தமிழரசுக் கட்சியினுள் கூடுதல் வாக்குகளை சுமந்திரன் பெறுவார் என்பதையும் ஊகித்து இருந்தோம். ஆனால் ஐபிசி தமிழ் சுமந்திரன் தோற்கடிக்கப்படுவார் என்று விருப்புவாக்குகள் எண்ணப்படும் பொழுதுகூட நம்பி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகவும் ஐபிசி சொல்ல முற்பட்டது. அதற்கேற்ப நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. ஆனால் எம் ஏ சுமந்திரனின் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஒரு போதுமே சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை.

மத்தியில் கோத்தபாயாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதும், சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விருப்புவாக்குகளுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் ஆதரித்த வேட்பாளர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் கந்தையா பாஸ்கரனின் கனவுகள் கலைக்கப்பட காரணமானது. கோத்தபாய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் சுவர்ணவாகினிக்குள் யாரையும் நுழைய அனுமதிப்பதாக அவர்கள் இல்லை.

ஐபிசி தமிழி இன் ‘ரீக் கடை’ நிகழ்ச்சி எம் ஏ சுமந்திரன் மீது சேற்றை வாரியிறைக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் எம் ஏ சுமந்திரனால் முன்மொழியப்பட்ட பெண்கள் மீது மோசமான அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்கள் இது தொடர்பாக தங்கள் விசனத்தை முகநூலில் பதிவு செய்திருந்தனர். ஐபிசி தமிழின் நன் மதிப்பையும் இந்நிகழ்வு மிகவும் பாதித்து இருந்தது.

சட்டத்தரணியான எம் ஏ சுமந்திரன் மக்களின் கணிசமான ஆதரவுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் சட்டச் சிக்கலுக்குள்ளாகலாம் என்ற அச்சமும் காரணமாகவும் ‘ரீக் கடை’ க்குப் பொறுப்பானவர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் ஐபிசி தமிழ் தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்குள்ள பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நட்டத்தில் இயக்க முடியாது என்ற காரணத்தினாலேயே வேலை நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மாகாணசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் மாகாணசபையிலும் ஐபிசி தனது செல்வாக்கை செலுத்த முற்பட்டு வருகின்றது என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர் கட்சியின் தலைவராக இருந்த போதும் உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் தேர்வில் எம் ஏ சுமந்திரனின் கைகள் ஓங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரனின் ஆளாக இருந்த ஆர் நோல்ட்டையும் ஐபிசி சுமந்திரனுக்கு எதிராக திருப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் – ஐபிசி தமிழ் மோதல் மாகாணசபை தேர்தலில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செயற்பட்ட போதும் சுமந்திரனின் வெற்றியயை எவராலும் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவோ என்றே எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. ஐபிசி தமிழ், உதயன், காலைக் கதிர், வலம்புரி அனைத்துமே சுமந்திரனுக்கு எதிரான ஊடகங்களாகவே செயற்படுகின்றன.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மாகாணசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும்! – முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள்

பாசமிகு சகோதர சகோதரிகளே!

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 சதவீதமான மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ச மேன்மைதகு ஜனாதிபதியானார். தொடர்ந்து பாராளுமன்றத்தில் சிறுபான்மையான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மஹிந்த ராஜபக்ச அப்போது ஆண்டு கொண்டிருந்த கட்சியினரின் ஒப்புதலுடன் கௌரவ பிரதமராகி தற்காலிகமாக மத்திய அமைச்சரவையை அமைத்துக் கொண்டார்.

இந்த ஆகஸ்ட 5ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றதோடு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனைக்  கூட்டணி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு மிகவும் உறுதியான ஆட்சியை அமைத்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்து வருகின்ற கொரோனா வைரஸ் இதுவரை இரண்டரை கோடி பேருக்கு மேல் பீடித்து எட்டரை லட்சம் பேரை காவு கொண்டு போய் விட்டது: உலக பொருளாதாரத்தை உலுக்கிப் போட்டுள்ளது: மனித குலம் அரண்டு போய் நிற்கின்றது: கொரோனாவின் தாக்கம் இலங்கையில் குறைவே. என்றாலும் பயமும் பதட்டமும் உலக தரத்திலேயே இங்கும் உள்ளது. இலங்கையின் பல்வேறு பொருளாதாரத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து நாடுகளிலும் தூரத்து நாடுகளிடமிருந்தும் பெருந்தொகையில் கடன் வாங்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

பெரும் நம்பிக்கைகளோடு இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். மைத்திரி – ரணில் கூட்டாட்சி மீது விரக்தியும் ஆத்திரமும் கொண்ட பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சக்களிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்திருக்கிகிறார்கள்  மக்களின் எதிர்பார்ப்புகளில் கணிசமான அளவுக்காவது  ராஜபக்சக்களின் ஆட்சி அரசியல் பொருளாதார சாதனைகளை ஆற்றுவார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும.

மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாக கோத்தபாய ராஜபக்ச தமது பதவியேற்பின் போது வெளிப்படையாகவே கூறினார். அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்களில் 12 சதவீமானவர்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் அடுத்த ஒன்பது மாதத்துக்குள் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ராஜபக்சக்களின் கட்சிக்கும் அவர்களோடு அணிசேர்ந்து நிற்கும் தமிழ் அரசியற் சக்திகளுக்கும் மிகவும் மாறுபட்ட முறையில் வாக்களித்திருத்திருக்கிறார்கள்:

யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினரும்

திருகோணமலை மாவட்ட தமிழர்களில் சுமார் 25 சதவீதமானோரும்

மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களில் 50 சதவீதமானோரும்

அம்பாறை மாவட்ட தமிழர்களில் 55 சதவீதமானோரும்

ராஜபக்சக்களின் கட்சிக்கும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.

இது சரியா பிழையா என்பதற்கப்பால் ஒரு வரலாற்று மாற்றம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த ஆட்சி பற்றி எதிரும் புதிருமாக பல அபிப்பிராயங்கள் ஆரம்பித்துவிட்டன.

இராணுவ சர்வாதிகார ஆட்சி அமைந்து கொண்டிருக்கிறது என சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்க் கட்சிகள் குரலெழுப்புகின்றன:

ஆட்சியில் முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றும் எனவே முஸ்லிம்கள் ஆபத்தான அரசியற் சூழலுக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்படுகிறது என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்களின் தலைவர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்:

பாசிச சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி அமைந்துவிட்டதாக தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மையான அரசியற்காரர்களும் புத்திஜீவிகளும் அளவிடுகிறார்கள்.

19வது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்கி புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என்றும் நாட்டில் புதிய வகையான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தமது புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உரையில் குறிப்பிட்டுள்ளார். 19வது திருத்தத்துக்கு திருத்தம் ஒன்றை ஆக்கப் போகிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அது எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எதிர்க் கட்சியில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு நிலை எடுக்கப் போகின்றன என்பதுவும் தெளிவாக இல்லை.

மாகாண சகைகள் முறையை இல்லாமற் செய்ய வேண்டும் என சிங்கள பௌத்த ஆதிக்க வாதிகள் நீண்டகாலமாகவே கோரி வருகிறார்கள். அரசாங்கத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்பான அமைச்சர் தான் காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதிகாரத்தையோ தரப் போவதில்லை என கறாராக குரலெழுப்புகிறார். ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகின்றது இன்னும் சில மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறப் போகின்றது. அதில் இந்த அரசாங்கம் மிக ஆர்வமாக உள்ளது. ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் எவ்வாறாக அமையப் போகின்றன! எவ்வாறாக செயற்படப் போகின்றன! என்பவை பற்றி இப்போதைக்கு எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவையெல்லாவற்றையும் வைத்துக் கொண்டு “தமிழ்த் தேசிய” சுலோகங்களுடன் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பயக் கெடுதியை கிளப்பி மீண்டும் தமது அரசியல் ஆதரவுத் தளங்களை உறுதி செய்ய முனைவார்கள் என்பது தெளிவு. அதேவேளை அரசாங்கத்தோடு அணைந்து நின்று தங்களால் சாதிக்க முடியும் என்போர் அரசாங்கத்தின் சில பொருளாதார கட்டுமான வேலைத்திட்டங்களுக்கு அப்பால் கருத்துத் தாக்கமுள்ள அரசியல்ரீதியான செயற்பாடுகளைக் கொண்டிருப்பார்களா என்ற கேள்விக்கு இப்போதுவரை பதிலில்லை.

மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தலின் முடிவுகளும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக இருக்குமா அல்லது வேறுபட்டதொரு மாறுபாட்டைக் கொண்டிருக்குமா என உறுதியாகக் கூற முடியாது. வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுபவர்கள் எவ்வாறு செயற்படப் போகிறார்கள்: எவற்றைச் சாதிப்பார்கள் என்பதற்கும் இப்போதைக்கு தெளிவான பதில் இல்லை.

இப்படியான சூழ்நிலைமைகளின் பின்னணியில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எவ்வாறான அரசியல் நடைமுறை நிலைப்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்தித்து –  முடிவுகள் செய்து – செயற்படல் வேண்டும்.

கட்சியின் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி முன்கொண்டு செல்ல வேண்டும். கட்சி உறுப்பினர்களை கருத்தாற்றல் மிக்கவர்களாகவும் செயற் திறன் கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன கட்டமைப்புகளை பரந்துபட்ட மக்கள் தளங்களைக் கொண்டவையாக பரவச் செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் தேர்தல்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாததே. ஏனைய அரசியற் கட்சிகள் மற்றும் அரசியற் குழுக்களுடன் இணைந்தும் அவற்றிலிருந்து தனித்துவமாகவும் செயற்பாடுகளை மேற்கொள்வதுவும் அவசியங்களே!

எமது கட்சியின் சமூக ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான கொள்கைகளும்  கோரிக்கைகளும் எமது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கருத்துக்களாகப் பரிணமிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தார்மீக அரசியல் சமூக இயக்கத்தை முனனெடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கு சுமுகமாக – எல்லோரும் கை தட்டி எப்போதும் பாராட்டும் வகையான நேர்பாதை கிடையாது. நெளிவு சுளிவுகள் தவிர்க்க முடியாதவை

புரட்சிகரமான சமூக முன்னேற்றத்துக்கான பாதையில் பயணிக்க ஒரு புரட்சிகரக் கட்சியின் அவசியத்தை நாம் எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறோம் – வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதில் இதுவரை எதிர்பார்த்த வெற்றிகளைக் காணவில்லையே என்ற விரக்தி சரியானதல்ல. இது ஒரு தொடர் பயணம். திருவிழாவுக்குப் போடப்பட்டுள்ள கடைகளில் இதுவும் ஒரு கடையே என்றால் இந்தக் கட்சி தேவையற்ற ஒன்றாகும். தன்னம்பிக்கையற்ற யானைக்கு தும்பிக்கையும் பயன் தராது.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் இருக்கின்றது! நாம் கடந்த காலத்தில் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத பங்களிப்பை இலங்கைக்கும் தமிழ் மக்கள் சமூகத்துக்கும் ஆற்றியிருக்கின்றோம். இன்றும் இதன் தேவை மக்களுக்கு உண்டு! புரட்சிகரமான சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளுக்கான இடைவெளி நாம் வாழும் சமுதாயத்தில் உள்ளது! எனவே கட்சியின் ஒவ்வொரு தீர்மானமும் செயற்பாடும் கட்சியை பரந்துபட்ட மக்கள் மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தியாக பரிணமிக்கும் நிலையை அடையும் வகையில் செயலாற்றுவோம்.

எமது ஓவ்வொரு செயற்பாடுகளும் எமது கட்சி தலையேற்றிருக்கும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அவற்றின் அடிப்படையிலான கொள்கைகளுக்கும் ஏற்ப ஏன்? எதற்காக? யாருக்காக? எப்படி? எங்கு நோக்கி? ஏன்ற கேள்விகளுக்கு தர்க்கபூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தெளிவான பதில்களைக் கொண்டவையாக அமையட்டும்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த சமூகவலைத் தளம் கட்சியின் கருத்துக்களின் பிரச்சாரத் தளமாகும்: கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான அறிவூட்டல் களமாகும்: கட்சியோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் அறிய முனைவோருக்குமான மையமாகும்: நட்புரீதியான மாற்றுக் கருத்துக்களின் முற்றமாகும். இது ஒரே வேளையில் பல்லாயிரம் பேரைச் சென்றடைய எல்லோருமாக கூட்டாக உழைப்போம்.

இது எமது பல முயற்சிகளில் ஒன்றே! ஆக்கமானதென ஊக்கம் கொள்ளும் எதிலும் விடாமுயற்சியோடு செயலாற்றுவோம்;

உங்கள் அன்பின் சகோதரன் – நண்பன் – தோழன்

அ. வரதராஜ பெருமாள்

01 – 09 – 2020

இன ஒற்றுமையுடன் கூடிய நாட்டில் வாழும் மக்களிடையே விக்னேஸ்வரன் இன முரண்பாட்டை தோற்றுவிக்க முனைகின்றார்! – எஸ்.பீ. திஷாநாயக்க

நாட்டில் ஜாதி மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் பாராளுமன்றில் கன்னி அமர்வின் போது அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பிழையான ஒரு கருத்து எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பீ. திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இன்று (01.09.2020) விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது, மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சி.வி. விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். நாட்டில் முதல் மொழி தமிழ், சிங்களம் என்று கூறுவதற்கு அவர் அனைத்தும் அறிந்தவர் அல்ல. அவர் ஒரு நீதிபதி. நாட்டில் முதல் மொழி எதுவென்று கூற அனைத்தும் அறிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொல்பொருள் அறிஞர்கள் உள்ளார்கள்.

ஆகையால் அவர் முதலில் சிங்கள மொழியை கற்றுகொள்ள வேண்டும். தமிழ் மொழியை முறையாக கற்றுகொள்ள வேண்டும். அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுகொடுக்க வேண்டும். ஆகவே அவர் கூறிய கருத்து தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற மதங்களை சார்ந்த மக்கள் மத்தியில் பிரச்சினையை தோற்றுவிக்க கூடிய ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.

நாட்டில் இன்று அதிகமான போதைபொருள் விற்பனை செய்வோர்களை தொடர்ந்தும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இதன் பின்னால் யாராவது இருக்க கூடும் சிறைச்சாலையிலும் இது இடம் பெற்று இருக்கிறது. சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் கைது செய்யபட்டு இருக்கிறார்கள். எனவே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அதிரடி நடவடிக்கை ஊடாக இது போன்ற சட்டவிரோதமான வியாபாரங்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் காலங்களில் எமது நாடு போதைபொருள் அற்ற ஒரு புனித நாடாக மாற்றம் பெறும்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதனை நான் பயன்படுத்தி எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்.

இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடுகளுக்குத் துரோகம் இழைத்துவிட்டது ! – அயத்துல்லா அலி காமெனி

இதுகுறித்து ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “ஐக்கிய அமீரகத்தின் இந்தத் துரோகம் நீண்ட நாட்கள் நீடிக்காது. ஆனால், இந்தக் களங்கம் எப்போதும் இருக்கும். அவர்கள் இஸ்ரேலை இந்தப் பிராந்தியத்தில் அனுமதித்துவிட்டார்கள். அவர்கள் பாலஸ்தீனத்தை மறுத்துவிட்டார்கள். இதற்காக ஐக்கியஅமீரகம் எப்போதும் இழிவுபடுத்தப்படும். விரைவில் அவர்கள் மீண்டும் இழந்ததை ஈடு செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக பதிவானது. ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979 எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபாய

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி விவசாயிகளை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதால் நகர மத்திய தரப்பினரின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது கிராமிய மக்களை விவசாயத்திற்காக ஊக்கப்படுத்த முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இறக்குமதிக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதன் கஷ்டத்தையும் சுட்டிக்காட்டினார்.

அந்நியச் செலாவணி விகிதங்களை கட்டுப்படுத்துவதற்கும் உயர் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.  இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் கொவிட் நோய்த் தொற்றினால் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானமுடையவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக்கொண்டு செயற்படுத்திய ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். சமூர்த்தி பயனாளிகளின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். வீட்டுத் தோட்டம். முட்டைக்காக கோழிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் போசாக்கு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நகர, மத்திய தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொவிட் நோய்த் தொற்று காலத்தில் விவசாய பொருட்களை மலிவு விலையில் நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வழிமுறையை பின்பற்றி இடைத்தரகர்களின் சுரண்டலை தடுத்து, விவசாயியையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்காக சதொச, கூட்டுறவுத்துறை, விவசாய சேவை மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் விவசாய விளைச்சலை நேரடியாக நுகர்வோருக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பூராவும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வந்து விவசாய விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் வாழ்க்கை செலவு உபகுழு கலந்துரையாடியது.

வாரத்திற்கு ஒரு தடவை சந்தை நிலைமைகள் தொடர்பாக தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக ஒரு நபருக்கு தேவையான உணவின் அளவை இனங்காணல், பிரதேச செயலக தொகுதிவாரியாக வீட்டுத் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கோழி வளர்ப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கௌப்பி, உழுந்து, நிலக்கடலை, எள்ளு, குரக்கன் மற்றும் வெங்காய பயிர்ச் செய்கை வெற்றி கண்டுள்ளதால், எதிர்காலத்தில் அவற்றை இறக்குமதி செய்ய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க பெர்ணான்டோ, ஷசீந்திர ராஜபக்ஷ, லசந்த அலகியவன்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களில் துளியளவும் இனத்துவேசமில்லை ! – சட்டத்தரணி சந்திரகாந்தா.

விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமின்றி, அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேஷம் என்பது ஒரு துளியளவு கூட இருந்திருக்கவில்லை எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய சர்ச்சையின் மையப்பொருளாக, சிங்கள தீவிரவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் உருமாற்றப்பட்டுள்ளன எனவும்  தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என். ஶ்ரீகாந்தா ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

விக்னேஸ்வரனுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள்ளே, ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையான வேறுபாடுகளைக் கடந்து, உக்கிரத்தோடு தொடுக்கப்பட்டிருக்கும் கண்டனக் கணைகள் அனைத்தும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும் அடிப்படை மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும்,முரட்டுத் திமிர்த்தனத்தோடு கூடிய இனவெறிச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமின்றி, அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேஷம் என்பது ஒரு துளியளவு கூட இருந்திருக்கவில்லை.

மாறாக, தன்னைத் தெரிவு செய்த மக்கள் சார்ந்த இனத்தின் வரலாற்றுத் தொன்மையையும், அதன் தாய் மொழியின் பெருமையையும் நாகரீகத்தோடு கூடிய வார்த்தைகளில் அவர் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார். அது அவரது உரிமை. கடமையும் கூட. இருந்தும், ஆளும் கட்சி, எதிர்கட்சி, என்ற வேறுபாடு இன்றி, மிரட்டலும் சண்டித்தனமும் நிறைந்த தொனியில், இந்த இரண்டு தரப்பிலிருந்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஆக்ரோஷப் பேச்சுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கும், அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அரசியல் செய்தியை திட்டவட்டமாக சொல்லிவைக்க முயன்றிருக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. இந்த நாட்டின்’ பெரும்பான்மை மக்கள் சிங்களவர்கள்-எமது சிங்கள மக்களிடம் தான் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது. எனவே, தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் அடக்கி வாசிக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக நாடாளுமன்றம் சந்தித்த மென்மையானதும் குழைவானதுமான சமரசப் பேச்சுக்களுக்கு மாறாக, தமிழர் தரப்பிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது, வரலாற்றைச் சுட்டிக்காட்டி சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேச முயன்றால், அவற்றை சகித்துக் கொள்ள இயலாது.

அப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கமுடியாது. அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தெரிவு செய்த மக்களும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற தோரணையில் ஒர் அரசியல் அராஜகமே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அத்துடன், தனி ஒரு உறுப்பினராக இருந்தாலும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இசைவாக, விக்னேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனத்தைக் கூட பறித்தெடுத்து,அவரை இரண்டாம் வரிசைக்குத் தள்ளி விடுவதற்கான முஸ்தீபுகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந்த நாடாளுமன்றக் களேபரத்தில் முன்னணியில் நிற்கும் நான்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர், முன்னாள் கடற்படை அட்மிரல் சரத் வீரசேகரவின் நடத்தை ஆச்சரியத்திற்கு உரியதல்ல. அவரைப் போன்ற சிங்கள தேசபக்தரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதே நேரத்தில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தான் யார் என்பதை தமிழ் மக்களுக்கு தெட்டத் தெளிவாக ஞாபகப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், வாய் திறந்து பேசாமலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சூத்திரதாரி எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா.

அவரும் சரத் பொன்சேகாவைப் போலவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றிருந்தவர். அதற்கு நன்றிக்கடனாக,அவரின் தலைமைத்துவத்தின் கீழ், அவரின் கட்சி எம் பிக்கள் இருவர் விக்னேஸ்வரனின் பேச்சை கையில் எடுத்திருக்கின்றார்கள். சரத் பொன்சேகா அதற்கு உத்வேகம் கொடுத்து உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்.

2010 இலும் 2019இலும் முறையே இந்த இரண்டு சிங்கள அரசியல் வாதிகளுக்கும்,அவரவர் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் கொடுத்த பேராதரவு வெறும் செல்லாக் காசு என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2010ல் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிராகரித்தும், 2019ல் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்தும்,தமிழ் மக்கள் அளித்த எதிர்மறையான வாக்குகள் தான்,சரத்பொன்சேகாவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் கிடைத்த தோல்விகளில் கூட, ஒர் மரியாதையை இணைத்திருந்தன என்பதை நினைத்துப் பார்க்கக் கூட இந்த இருவரும் இப்பொழுது தயாராக இல்லை.

கிடைக்கும் அடுத்த சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கான இவர்களின் நெடுந்தூரக் கனவில், தமிழர் வாக்குகள் எந்த நிலையிலும் தமக்குத் தான் என்கிற அறிவீனத்தோடு கூடிய மமதை மிளிர்ந்து நிற்கின்றது. எமது தமிழ் மக்கள் இனியாவது ஒரு விடயத்தை தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

தவிர்க்கப்பட முடியாத அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலொழிய, சிங்கள பௌத்த அரசியல் சக்திகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் சம்பந்தப்படுவதால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும், நன்றி உட்பட,கிட்டப்போவதில்லை என்பது தான் அந்த உண்மை.

இஸ்ரேலிலிருந்து முதல் நேரடி வணிக விமானம், ஐக்கிய அரபு தலைநகர் அபுதாபியில் தரையிறக்கம் !

இஸ்ரேலிலிருந்து முதல் நேரடி வணிக விமானம், ஐக்கிய அரபு தலைநகர் அபுதாபியில் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதன் பின்னணியில், நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உயர்மட்ட உதவியாளர்கள் டெல் அவிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நேரடி விமானத்தில் பயணம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் வேண்டுகோளுக்கு ரியாத் ஒப்புக் கொண்டதையடுத்து விமானம் எல்.வை 971 சவுதி அரேபியா வான்பரப்பில் பறந்தது. சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அபுதாபிக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளை ஏற்றிச் செல்லும் விமானத்தில் ஆங்கிலம், ஹீப்ரு மற்றும் அரபு மொழிகளில் ‘அமைதி’ என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.

இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரத்து செய்தது.

இதன் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்ய முடியும். மேலும் இது விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான கதவுகளை திறந்து உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான புதிய கோணத்திலான  அரசியல் நகர்வாக இது பார்க்கப்படுகின்ற அதே நேரம் ஜனாதிபதி டொனால்ட்ரம்ப் அவர்களுடைய தேர்தலை மையப்படுத்திய அரசியல்நகர்வாகவும் இது பார்க்கப்படுகின்றது.

சிங்கள அரசின் ஒரு இனச்சார்பான நகர்வுகளுக்கு எதிராக குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள் ! – சுரேஷ்பிரேமச்சந்திரன்.

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகிய அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதுவரை அது முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதும் அரசாங்கத்தினுடைய பல்வேறு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இன்னமும் தனிச்சிங்களத்திலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. என்பதும் தமிழாசிரியர்கள் உட்பட பல அரச தரப்பினரும் இன்னமும் சிங்கள மொழியிலேயே கடிதங்களையும் சுற்றுநிரூபங்களையும் பெறுகிறார்கள் என்பதும் வெளிப்படையான உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு அல்லது அரச கருமமொழி அமுலாக்கல் அமைச்சு என்பதை இல்லாமல் செய்தது என்பது, தான் விரும்பியவாறு தனிச் சிங்களத்தில் அரச கருமங்களை நடத்துவதற்கான ஓர் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.

அதனைப் போலவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்த அரசாங்கத்தில் பெயரளவிற்காவது தேசிய நல்லிணக்க அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இன்று அதுவும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், இந்து சமய கலாசார அமைச்சோ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் தொடர்பான அமைச்சுக்களோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த அரசாங்கத்தினுடைய சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பௌத்த சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கமானது பத்தொன்பதாவது திருத்தத்தை மாற்றுவது, பதின்மூன்றாவது திருத்தத்தை மாற்றுவது, புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வருவது என்று பல்வேறுபட்ட கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவருகின்ற அதேசமயம், ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்கக்கூடிய வகையிலும் அந்த குடும்ப ஆட்சியினூடாக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்துவரும் ஒவ்வொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்கும் அடிப்படையிலும் அவர்களின் இருப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கும் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களை அடையாளமிடுவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையில் மூழ்கித் திளைக்கின்ற அதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதென்பது குறிப்பிடக்கூடியது.

வடக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் அதேபோன்று படையினர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைப் பலாத்காரமாக பறித்து வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயங்களாகும்.

அத்துடன், காலாதிகாலமாக செய்கை செய்யப்பட்டுவந்த வயல் நிலங்கள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மிகப்பெருமளவில் வனவளப் பாதுகாப்புக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பிற்குமாக தான்தோன்றித்தனமான முறையில் பறிமுதல் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் தமது உயிர்ப்பாதுகாப்புக்கு அச்சப்படுவதற்கும் மேலாக, தமது வாழ்வாதாரங்கள், காணிகள், நிலங்கள் அனைத்தும் அவர்களின் கைகளைவிட்டுப் பறிக்கப்படும் ஒரு அச்சசூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவருமே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பல்வேறுபட்ட கொள்கைகளை வெளியிடுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று பேசுபவர்கள், இந்த நாட்டில் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான மத, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன என்பதுடன், அம்மக்களுக்கான பாரம்பரியம் மிக்க தேசவழமைச் சட்டங்களும் அவர்களது மதவிழுமியங்களைக் காப்பதற்கான சட்டதிட்டங்களும் இருந்து வருகின்றன.

அவை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக பல இலட்சம் மக்களை இழந்து அவர்கள் போராடி வந்துள்ளனர் என்பதை மறந்து, அவ்வாறானவர்களின் கருத்துக்களைத் தூக்கியெறிந்து அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இவர்கள் எதேச்சாதிகாரமாக நடப்பது என்பது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல்களை உருவாக்குவதற்கே உதவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – டக்ளஸ் தேவானந்தா.

சர்வதேச சட்டம் மற்றும் இலங்கை செயல்பாட்டுச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட நபர்க பணிபுரிய அனுமதி இல்லை. ஆகவே 18 வயதுக்குட்பட்ட நபர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர்களை முறையான கல்விக்கு வழிநடத்துவது கட்டாயமாகும் என்றார்.

நீங்கள் ஒரு மீனவராக இருந்தால், சிறுவர்களை உதவியாளராகவோ அல்லது வேலைவாய்ப்பாகவோ எடுத்துக் கொள்வதால், அவர்களின் கல்வி சீர்குலைவு மற்றும் அவர்கள் மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற பல சமூக பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் நீங்களும் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றார்.

ஒவ்வொரு மீன்பிடி பயணத்திலும் உங்கள் உதவியாளரின் சேவைகளைப் பெறும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது மீன்வள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கூறப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாத நிலையில், மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒரு கடிதத்தை தயாரிப்பது கட்டாயமாகும்.

அந்த நபரின் அடையாளத்தை அவரது வசிப்பிடத்தின் கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டும். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை ;இராணுவமே அவர்களை கொலை செய்தது – சி.வி.விக்கினேஸ்வரன்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலின் சுருக்கமான கேள்விகளும் பதில்களினதும் தொகுப்பு.

 

கேள்வி :- விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?

பதில்:- விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது . தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டனர்.

கேள்வி :- உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் :- அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

கேள்வி :- இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா.?

பதில் :- 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள். பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும் இராணுவமே அவர்களை கொலை செய்தது.

கேள்வி :-முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டீர்கள் என  கேள்வி எழுப்பப்பட்டது.

பதில் :- அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே நான் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

கேள்வி :- தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா..?

பதில் :- இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.