02
02
இந்திய சுதந்திரப்போராட்டத்தலைவர் மகாத்மாகாந்தியின் 151வது பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் தமிழ் அரசியல்தலைவர்களின் இணைவுடன் இன்று காலை அஞ்சலி செலுத்தும் வைபவம் இடம்பெற்றது.
யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மதத் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா,மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவருரை கௌரவித்து துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
திலீபனை நினைவுகூறும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப்போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று(02.09.2020) காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிராளிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணி சுமந்திரனால் பொலிஸார் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தினை தவறான வழியில் நடாத்தமுற்படுவதாக கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தினார்.
யுத்ததில் திலீபன் இறக்கவில்லையெனவும் பொய்யான வகையிலான குற்றசாட்டுகளை பொலிஸார் முன்வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர்களின் நேரத்தினை வீண்விரயம் செய்துள்ளதாகவும் தனது கண்டனத்தினையும் நீதிமன்றில் தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களை இணைத்து தொடரப்பட்டிருந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்தி நீதிபதி வழக்கில் இருந்து அவர்களை விடுவித்தார்.
பொய்யான குற்றசாட்டுகளை வைத்து வழக்குகளை தயார் செய்யும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு ஆபத்து அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநர் அனுரா ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அனுரா ஜெயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “டெங்கு பரவுவதற்கான நிலைமை ஆபத்தானது அல்ல என்றாலும், வரும் மாதங்களில் மழை நிலைகள் தீவிரமடைந்து வருவதால் டெங்கு ஆபத்து அதிகரிக்கும்.
எனவே மக்கள், தங்களை சுற்றியுள்ள சூழலை சுத்தமாக எந்நேரமும் வைத்திருக்க வேண்டும். மற்றும் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வகையில் காணப்படும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்து அவதானமாக இருக்க வேண்டும்.
தொற்றுநோயியல் பிரிவு புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 27,733 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11,608 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாணத்தில் 8,014 பேர் டெங்கு நோயர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் முறையே 3,947, 2,420 மற்றும் 1,647 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை 30 டெங்கு தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களின் புராதன வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர் மலை ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்களால் நேற்றையதினம் (01.09.2020) சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையில் விகாரை ஒன்று இருந்தது என தெரிவித்து தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தி விகாரை ஒன்றினை அமைக்க பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 2018 ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பினால் அது கைகூடாத நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்று கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தது .
அதாவது இந்த மலையில் உள்ள ஆலயத்தில் கிராம மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ள தடைகள் இல்லை எனவும் இப்பகுதியில் இரண்டு தரப்பினரும் புதிதாக கட்டுமானங்களை செய்யவோ தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தவோ முடியாது எனவும் மன்று பணித்திருந்ததுக்கு அமைவாக கிராம மக்கள் தமது ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் புதிய அரசு மாற்றத்தின் பின்னர் இந்த மலையில் அமைந்திருந்த சூலம் ஒன்று உடைத்து எறியப்பட்டிருந்தது .
அத்தோடு அந்த பகுதியில் காவலரண் ஒன்றினை அமைக்கும் பணியினையும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்கொண்டிருந்தனர். இந்த காவலரண் அமைக்கும் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினரால் நகர்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு புதிய கட்டுமானங்கள் செய்யமுடியாது காவலரண் அமைக்கமுடியும் என மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பூரணை தினமான இன்று ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கிராம மக்களின் ஆலயம் அமைந்துள்ள பகுதி கூகிள் (map)வரைபடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரை என சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“20ஆவது திருத்தச்சட்டம் எமது சிறுவர்கள் பல்கலைக்கழகம் செல்வது தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் ”என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று(01.10.2020) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனிவரும் காலங்களில்தான் இந்த அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்புகள் ஏற்படப்போகின்றன. இங்கிருக்கின்ற சிறுவர்களின் எதிர்காலம்தான் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்படையப்போகின்றது.
1978ல் ஒரு அரசியலமைப்பினை உருவாக்கியிருந்தார்கள். அந்த அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல்வாதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 1990ஆம் ஆண்டுகளில் மரணித்துவிட்டனர். 2020ஆம் ஆண்டில்கூட அன்று உருவாக்கிய அரசியலமைப்பின் விளைவுகளை நாங்கள் எதிர்நோக்கவேண்டியிருக்கின்றது.
எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆளவேண்டியது இன்றைய சிறுவர்களாகிய நீங்கள் என்ற வகையில் உங்களுக்கும் அரசியல் ஆர்வம் வரவேண்டும். எங்களுடைய சகோதர சமூக இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் இருக்கின்றது. அதிகமானவர்கள் அரசியலில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.
புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற அரசியலமைப்பான 20ஆவது திருத்தச்சட்டம் அவசரமான முறையில் ஒருசிலருக்கு விரும்பிய வகையில் இந்த நாட்டில் கொண்டுவருகின்றனர் என்பது நீங்கள் அறிய வேண்டிய விடயமாகும். இது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கின்ற விடயமாகும்.
மிக அவசரமாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்தால் எங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும். சிலவேளைகளில் அந்த அரசியலமைப்பினூடாக நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வது தொடர்பில் சில மாற்றங்கள் வரலாம்.
இந்த நாட்டின் பொதுமக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது, மாற்றுவது இந்த அரசியலமைப்பு என்ற விடயமாகும். நாங்கள் இந்த நாட்டின் தமிழர்கள் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு இந்த அரசியலமைப்பினூடாக எவ்வாறு நல்ல விடயங்கள நாங்கள் பெறலாம் என்பது தொடர்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக படித்துக்கொண்டிருக்கின்றோம். இதுதொடர்பில் எதிர்காலத்தில் விவாதங்கள் வருகின்றபோது நிச்சயமாக நாங்கள் பேசுவோம்.
இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையீடு செய்யும் நிலை காணப்படுகின்றது. நேற்றைய தினம்(30.09.2020) ஒரு பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் நான் உரையாடியிருந்தேன். அந்த பிரதேச செயலாளர் மிகவும் மனவருத்தத்துடன் கதைத்தார். ஏனென்றால் அந்த பிரதேசத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், சிலவேலைத்திட்டங்கள் தொடர்பாக அரசியல்வாதிகளுடைய பெயரைச் சொல்லி அவர்களுடைய சிறுவால்கள் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து தங்களுடைய வேலைத்திட்டங்களை செய்யும் காலம் திரும்பவும் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
ஒரு அரச அதிகாரியை எட்டாம் வகுப்புகூட படித்திராத நபர் சென்று அதிகாரம் செய்வது பிழையான விடயமாகும். இப்படியான விடயங்கள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் சிறுவர்களிடத்தில் இப்போதிருந்தே அரசியல் ஆர்வம் வரவேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பங்காளி கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் கடந்த 70வருடமாக தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுவந்துள்ளனர். வருங்காலத்தில் சிறுவர்களின் நலன் கருதி கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ”என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில்நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.எமது நாட்டில்13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இது ஒரு இறையாண்மை உள்ள ஒரு நாடு என்ற ரீதியில் எங்களை மீது யாரும் அழுத்தங்கள் பிரயோகிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கும் வகையிலான மொனறாகலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது.
மொனறாகலை நகரம், மரகலை மலைத்தொடர், கும்புக்கன் போன்ற பகுதிகளிலும், நமுனுகலை – தன்னகும்புற மற்றும் கந்தசேனை ஆகிய இடங்களிலும், கமேவலை மற்றும் பிபில தோட்டம் ஆகிய 4 பிரதேசங்களில் தமிழ் மக்கள் சிதறிவாழ்கின்றனர்.
அவர்களது காணி உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி ஊடக சந்திப்பு ஒன்று இன்று மொனராகலையில் நடைபெற்றது.
இதன்போது, தாங்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீண்டகாலமாக தீர்வை எதிர்நோக்கி இருப்பதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
“எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்
தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மறைந்த பாடகர் தமிழ் மக்களினுடைய உணர்வுகளோடு பயணித்த ஒருவர் அதற்காக பல பாடல்களை எங்கள் இனம் சார்ந்து எங்கள் தேசம் சார்ந்து பாடி இருக்கின்றார்.
என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சமும் எங்களிடம் இருக்கின்றது
எங்களுடைய பாதுகாப்பையும் எங்களது வாழ்வையும் இருப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எங்களை உங்களிடம் ஒப்படைத்து காத்திருக்கின்றோம்.
எனவே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்க பட்டிருக்கின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் குருகுலராஜா மற்றும் கலைப் படைப்பாளிகள் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கல் செய்தியினையும் துணைத்தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .