16

16

தற்கொலை உளவியல் : த ஜெயபாலன்

“தற்கொலை”: ஒரு பொதுச்சுகாதாரப் பிரச்சினை

தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.

உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.

15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.

இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.

தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.

லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.

அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.

இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.

இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல. அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை

உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.

ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.

ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.

உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.

மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.

நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.

இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.

1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.

இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். (கீழுள்ள பட்டியல் தற்கொலை எண்ணிக்கை 100,000 பேருக்கு எத்தினைபேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.) பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது.

இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.

இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.

தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.

இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.

தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.

தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.

தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் (சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.

உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.

(‘அரங்கம்’ இணையத்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)

“என்னை பொறுத்த வரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்”- முத்தையாமுரளிதரன் !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 800 படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன்.

பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு , ஜே வி பி போராட்டத்தில் நடந்த வன்முறை , பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போர் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800.

இது இப்போது பல்வேறு காரணங்களுக்குக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு தான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள் போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது, என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறு நாள் உயிருடன் இருக்க மாட்டார். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படி பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினைத் தெரிவித்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

என்னை பொறுத்த வரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழன் நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?

இவை அனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுடன் பணிகளை என்னுடைய அரசு செய்துவருகிறது” – டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம் !

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுடன் பணிகளை என்னுடைய அரசு செய்துவருகிறது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற  இருக்கின்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதியாக மீண்டும் ஜனாதிபதி  ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் கொரோனாவில் ட்ரம்ப் பாதிக்கப்பட்டு 10 நாட்களாக பிரச்சாரம் ஏதும் செய்யாமல் இருந்தார். தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் தனது பிரச்சாரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.

வடக்கு கரோலினாவில் நேற்று(15.10.2020) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,

மேலும் அவர் பேசுகையில், ”என் மக்களே! நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். உங்களுக்கு அது தெரிந்திருக்கும். உலக அளவில் காற்றுமாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம். காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுகின்றன. ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசு வாயுவைக் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிளாஸ்டிக்குக்குப் பதிலாக காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என்று நினைக்கவில்லை. குளிர்பானம் குடிக்கும் ஸ்ட்ராவுக்குப் பதிலாக காகிதத்தில் குடிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் , அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் டென்னஸி நகரில் ஒரு நிறுவனத்தின் தலைவர் அமெரிக்கப் பணியாளர்களை மாற்றி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தினார். அந்த நிறுவனத்தின் தலைமைக்கு நான்விடுத்த எச்சரிக்கைக்குப் பின், மீண்டும் அமெரிக்க மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்”. எனவும் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் தெரிவித்தார்.

பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறுகிறது என ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென அறிவித்தார். அமெரிக்கா அளிக்கும் கோடிக்கணக்கான டாலர் பணம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கே வழங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விரோதமானது எனக் கூறி வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் 11 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.92 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 15வயது சிறுவன் உட்பட ஐவர் கைது !

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் இன்று (16.10.2020) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சட்டவிரோத நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 21, 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு செம்மண்ஓடை கிராமத்தில் 15 சிறுவன், 26 வயது இளைஞன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து தொல்லாயிரத்தி எண்பது மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகினார் சட்டத்தரணி குருபரன் !

குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான சட்டத்தரணி குருபரன் தன்னுடைய பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக, அவர் பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடைசெய்துள்ளமையை சுட்டிக்காட்டியிருந்தார் .

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பயன் இல்லை என்றும்; தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டிருந்தார் .

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும் , தனது சட்டத் தொழில் மூலம்தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் தனது ஆசிரியப் பணியில் இணைபிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியை தரமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் .

சட்டத் தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவ்வாறாக எடுப்பதாயின் தான் அதனை 2010 ஆம் ஆண்டிலேயே அந்த முடிவை எடுத்திருப்பேன் என்றும், வகுப்பறையில் மட்டும் முடங்கியிருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் . தன் மீது விதிக்கப்பட்ட தடை பல்கலைக்கழகம் சுயாதீனத்தை முழுவதுமாக இழந்துவிட்டதற்கான முக்கியமான சான்று என்றும் தனது நலன்கள் தொடர்பில் சுயமாக முடிவு எடுக்க முடியாத பல்கலைக்கழகம் யாருக்காக செயற்படுகின்றது என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியிருந்தார் .

நல்லாட்சி, சட்டத்தின் ஆளுகை , சுயாதீனம் ஆகியவற்றை தொலைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நல்லாசிரியர்களை ஈர்க்கவும் முடியாமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாமல் நலிவடைந்து கொண்டிருப்பதாக கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இன்று இறுதி நாள். இந்த தசாப்த காலப் பயணத்தில் அன்பும் ஆதரவும் தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி . பயணம் வேறு பாதைகள் வழி தொடரும் ” என அவர் தனது வெளியேற்றம் தொடர்பில் பதிவிட்டுள்ளார் .

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞர் கைது !

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (15.10.2020) மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரிடம் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.  22 வயது மதிக்கத் தக்க கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு  யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரதமர் பணியாளர்சபை பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ நியமனம் !

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீனாவின் உயர்மட்ட தூது குழுவினர் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இரு தரப்பு நட்பு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப்பிரதமர் மகிந்தராஜபக்ஸவின் இன்னுமொரு மகனான நாமல்ராஜபக்ஸ இலங்கையினுடைய விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாது” – 800 படத்திலிருந்து விலகிய நடிகர் டீஜே !

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாசலம் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எனது தாயாரும் ஈழத்தைச் சேர்ந்த தமிழர் தான். இப்படத்தின் அரசியல் காரணமாகத் தான் இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன். இத்தகைய சூழ்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ‘800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

‘அசுரனில்’ நடித்ததற்காக விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டேன், அவர் மீது மிகுந்த மரியாதையும் புகழும் கொண்டிருப்பதால் 800 ஐத் தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

800 முதல்பார்வை (Firs look) கடந்த செவ்வாய்கிழமை வெளியாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், சமூக ஊடகங்களில் மக்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியையும் இப்படத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் விவேக் மற்றும் சேரன் போன்றோரும்  விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் பலரும் ‘800’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ரிஷாத் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக நாம் போராடுவோம்” – சஜித் பிரேமதாஸ

“ரிஷாத் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக நாம் போராடுவோம்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரிஷாத்தைக் கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது. ரிஷாத் கைதுசெய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும். இதேவேளை, நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்.

“அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகப் பழிவாங்குவதற்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடிமறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும்” எனவும் மேலும் அவர் தெரிவித்தார் .