29

29

“மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும் ” – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி!

“மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும் ” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியாக  தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபால அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று நேற்றுமுன்தினம் (27)  வெளியிடப்பட்டது. அதற்கமைவாக தலவாக்கலை லிந்துலை நகர சபையில் உபதலைவராக பதவி வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் லெட்சுமன் பாரதிதாஸன் இன்றைய தினம் நகர சபைத் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. முதல் இரண்டு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பாக சில வேலைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வரவு – செலவு திட்டத்தில் பல்கலைக்கழகத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நான் நம்புகிறேன்.  இந்திய அரசாங்கமும் உதவி செய்வதாகவும் கூறியிருக்கின்றது. மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாகவே இதன் பேச்சுவார்த்தைகளில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பாக எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன். நேற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். அவரும் சிறந்த முடிவை பெற்று தருவதாக என்னிடம் கூறினார். நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் எல்லோரையும் ஒரு இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாகவே சம்பள பேச்சுவார்த்தையிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

“இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்”- பிரான்சுக்கு எதிராக ஈரானில் மாணவர்கள் போராட்டம் !

இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பிரான்ஸுக்கு எதிராக ஈரானில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்தில் இந்தப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். 

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மெக்ரோன், இதனை  “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்த நிலையில் மெக்ரோன் மற்றும் பிரான்ஸ்  அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ரெசா அலாவி கூறும்போது, “அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருந்தோம். ஆனால், இதுதான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்குச் சரியான நேரம். இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க இன்றைய தினம் பிரான்ஸின் நைஸ் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதவெறித்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

துமிந்த சில்வா விடுதலை மனுவில் இட்ட கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார் மனோகணேசன் !

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்ட மனோ கணேசன் துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார். ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த மனுவில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்ட மனோகணேசன் இப்பொழுது இதனை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

பிரான்ஸில் தொடரும் பயங்கரவாத மதவெறித்தாக்குதல்கள் – தேவாலயத்தில் பெண் ஒருவர் தலைவெட்டப்பட்டு கொலை !

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மதம் தொடர்பான குழப்பமான ஒரு சூழல் பிரான்ஸில் நீடித்து வந்தது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த நபர் கத்தியால் கொடூரமாக தாக்கினான்.   இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தேவாலயத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரான்ஸ் போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தனர்.
பிரான்ஸ்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி ||  Three dead as woman beheaded in knife attack at French church
பயங்கரவாதி நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒரு பெண்ணை தலைத்துண்டித்து கொலை செய்துள்ளான். மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க , கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார். அப்போது பேசிய இம்மானுவேல்,“கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை”என தெரிவித்தார். ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதையடுத்து, பிரான்சுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. குறிப்பாக துருக்கி இந்த விவகாரத்தில் பிரான்சை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
துருக்கி ஜனாதிபதி எர்டோகனை விமர்சித்து சார்லி ஹேப்டோ சமீபத்தில் கேலிக்கை சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலடியாக ஈரானை சேர்ந்த பத்திரிக்கை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேலை அரக்கனாக சித்தரித்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளமையானது நாடுகளுக்கிடையான ஒரு முறுகளான நிலையை இந்த நம்பவம் ஏற்படுத்தியுள்ளமையை காணலாம்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் !

உலகின் சுமார் 200க்கும் மேற்பட்ட ககுதிகளில் இந்த வருட ஆரம்பம் முதல் பரவி உலக நாடுகளை அச்சுறுத்திவரும்  அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

20ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் – இன்று முதல் அமுலுக்கு வருகிறது 20 !

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் 20 ஆவது திருத்த சட்டம் அமுல்படுத்தப்படும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 21, 22 ஆகிய தினங்களில் இடம்பெற்றதையடுத்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, திருத்த சட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அதனை அடுத்து, குழு நிலையில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்து மீது எதிர்க்கட்சியினரால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதுவும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இங்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.

குழு நிலையின்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உட்பட 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான மூன்றாவது வாசிப்பும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.  இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த 09 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்கியது ஐ.ம.சக்தி !

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.

டயனா கமகே, அருணாசலம் அரவிந்த குமார்,இஷாக் ரஹ்மான்,பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ், M.S.தௌபீக், நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர்.

இந்த உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார்.

“அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைக்கிறார்” – தவராசா கலையரசன் குற்றச்சாட்டு !

“அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைக்கிறார்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞசாட்டியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை அவர் முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தம் என்பது நிறைவேற்று அதிகார நடைமுறையை பெற்றுக் கொடுக்கிறது. இதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்து செல்கின்றது. 19ஆவது சீர்திருத்தத்தில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவான நியாயமான பல செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான ஒரு காரணியாக இருந்தது.

20 ஆவது சீர்திருத்த நடைமுறையில் எமது தமிழ்தேசிய தலைமைகள் நிதானமாக செயல்பட்டு இருக்கிறார்கள். 20வது சீர்திருத்தத்தை எமது தலைவர்கள் யாரையும் துன்புறுத்தி செயற்பட வைக்கவில்லை. இதனை இதற்கு முதலும் செய்ததில்லை இனி வரும் காலத்திலும் செய்யப் போவதுமில்லை. சீர்திருத்தத்தில் உள்ள பாதக சாதக தன்மைகளை எடுத்துரைக்கும் சக்தியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் இருந்துள்ளது.

20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும் எதிர்த்த நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது மன வேதனைக்குரிய விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களுடன் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்ததும் அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைத்து பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அவர் திருந்த வேண்டும். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18வது சீர்திருத்தத்தை எதிர்த்தது, 19 ஐ ஆதரித்தது , 20 ஐ எதிர்க்கின்றது இதனை நன்கு ஆராய்ந்த பிறகு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடரில் ஐ.பி.எல் தொடரில் பிரகாசித்த அதிக இளம்வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு !

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் அநேகருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளமை சிறப்பாகும்.
ஆஸ்திரேலியா தொடர் டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. மயங்க் அகர்வால், 4. கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), 5. மணிஷ் பாண்டே, 6. சஞ்சு சாம்சன், 7. ஜடேஜா, 8.  வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ், 12. நவ்தீப் சைனி,  13. தீபக் சாஹர், 14. வருண் சக்ரவர்த்தி, 15. ஹர்திக் பாண்ட்யா, 16. ஷ்ரேயாஸ் அய்யர்,
ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), 5. ஷ்ரோயஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா,  13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.
டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. மயங்க் அகர்வால், 3. பிரித்வி ஷா, 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. ரகானே,  7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் ஹில், 9. சகா, 10. ரிஷப் பண்ட், 11. பும்ரா, 12. முகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.
கூடுதலாக நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி.நடராஜன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத்தொடரின் அட்டவணை..!
 போட்டி அட்டவணை

சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் – ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!

ஐ.பி.எல் தொடரின் 48-வது ஆட்டம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடியது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 9 ஓட்டங்களிலும் , டி வில்லியர்ஸ் 15 ஓட்டங்களிலும், ஷிவம் டுபே 2 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ஓட்டங்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 பந்துப்பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 164 எடுத்தது. குர்கீரத் சிங் மான் 14 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ஓட்டங்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி
மும்பை அணி சார்பில் பும்ரா 4 பந்துப்பரிமாற்றங்களில் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை சாய்த்தார்.
இதையடுத்து, 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
19 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிகாக்கும், 19 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சவ்ரவ் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார்.  ஆனால், திவாரி 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த குர்னால் பாண்டியா 10 ஓட்டங்களிலும் ஹர்திக் பாண்டியா 17 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால், ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்த மோதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஓட்டத்தை வேகமாக உயர்த்தினார்.
இறுதியில் மும்பை அணி 19.1பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை மட்டுமே இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 79 ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ் மற்றும் சாஹல் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.