2021

2021

“பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரர்.” – மனோகணேசன் குற்றச்சாட்டு !

“வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரருக்கும் பங்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும்கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.

ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும் எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது. இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?
இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.

இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

பாகம் 21: சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 21 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 21:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம்.சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம். தோழர்கள் ரகுமான் கேசவன் வெளியேறி கொஞ்ச நாட்களிலேயே தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்…

தேசம்: கூட்டத்தை தொடர்ந்து தான் கடத்தப்படுகிறார்?

அசோக்: ஓம். இந்த மத்திய குழு கூட்டத்திற்கு பின் வெளியேறிய தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன் என்னுமொரு தோழர் பெயர் ஞாபகம் இல்லை. அவரும் சேர்ந்து மான மதுரை என நினைக்கிறேன் அங்கு தலைமறைவாக போய் இருந்தாங்க. இதன் பிற்பாடுதான் தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

தேசம்: இதில தெளிவில்லாமல் இருக்கு என்ன என்றால் சந்ததியார் ரெண்டு மூன்று கூட்டங்களுக்கு கலந்துகொள்ளவில்லை. இவர்கள் சந்ததியர் வராமைக்கான காரணத்தை கேட்கிறார்கள். அதை தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் படுகொலைகள் சம்பந்தமாக. ஆனால் அதற்கான ஆதாரங்கள் பெருசாக சொல்லப்படவில்லை. இப்ப இந்த வெளியேற முற்பட்ட உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? இந்த வெளியேற்றம் அவர்களுடன் இணைந்த கூட்டான வெளியேற்றம் இல்லையா?

அசோக்: உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டால் தோழர் சந்ததியார் இந்த மத்திய குழுக் கூட்டம் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார். அவர், டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம் எல்லோரும் வெளியேறி அண்ணாநகரிலேயே இருக்கிறார்கள். தோழர் சந்ததியாருக்கும் டேவிட் அய்யாவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. இது காந்திய அமைப்பு காலத்திலிருந்து தொடர்வது. அண்ணாநகரில் டேவிட் ஐயாவும், சந்ததியாரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி மானாமதுரைக்கு போய்விட்டார்கள்.

உண்மையிலேயே நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இவர்கள் வெளியேறி போனதற்கு பிற்பாடு சந்ததியாருடன் உறவு இருந்ததோ தெரியாது. ஆனால் உறவு இருந்திருந்தால் இவர்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக் கொண்டு போய் இருப்பாங்க. ஏனென்றால் இவங்கள் வெளியேறினது முகுந்தனுக்கு தெரியவர நிச்சயமாக சந்ததியார் மீது சந்தேகம் வரும்.

உண்மையிலேயே அப்படி உறவு இருந்திருந்தால் இவர்கள் கூட்டிக்கொண்டு போய் இருக்க வேண்டும். அல்லது அவரின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இவங்கள் மத்திய குழுக் கூட்டம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நாளைக்குப் பிறகுதான் வெளியேறுறாங்கள். அதற்குப் பிறகுதான் எங்கள் மேல சந்தேகம் வந்து எங்களை தளத்துக்கு அனுப்பாம வைத்திருந்து… அதைப் பற்றி முதலே கதைத்திருக்கிறேன். ஒரு மாதத்துக்கு பிறகுதான் தளத்துக்கு அனுப்பினார்கள். அப்ப சந்ததியார் விடயத்தில் பாதுபாப்பில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

தேசம்: இந்த வெளியேற்றத்தில் கூட சந்ததியார், சரோஜினி, சண்முகலிங்கம் மூன்று பேரும் வெளியேறிட்டினம். ஆனால் அவைக்கு எதிரான எந்த ஒரு துன்புறுத்தலும் இந்தக் கூட்டம் நடக்கும் வரைக்கும் நடக்கேல.

அசோக்: நடக்கேல. ஆனால் அவங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தது.

தேசம்: சந்ததியார் வேறு அமைப்புகளோடு சேரவோ அல்லது தான் புதிய அமைப்பை உருவாக்குவதற்கோ ஏதாவது முயற்சி எடுத்த மாதிரி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: இல்லை இல்லை. அவங்க மிக அமைதியாக தான் அண்ணாநகரில் இருந்தவங்க. டேவிட் ஐயா, சந்ததியார், சரோஜினிதேவி, சண்முகலிங்கம் அவங்க பூரணமாக புளொட்டிலிருந்து ஒதுங்கிட்டார்கள். அவர்களுக்கு புளொட்டில் எந்த அரசியல் ஈடுபாடும் இருக்கவில்லை. புளொட்டிக்கு எதிராக இந்த நடவடிக்கைகளிலும் அவங்க ஈடுபடவில்லை. அவர்கள் ஒதுங்கி அமைதியாகத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்கு பிறகு இவர்கள் வெளியேறுகிறார்கள் ஆனால் சந்ததியாரை அழைத்துக் கொண்டு செல்லேல. இவர்களுக்கும் உறவு இருந்தது தொடர்பாக தெரியாது. அவர்கள் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறார்களா தீப்பொறி அல்லது…

அசோக்: தங்களோட தீப்பொறியில் சந்ததியார் இருந்தது என்று நிறைய இடத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தீப்பொறி தங்களுடைய உறுப்பினராக சந்ததியாரை அடையாளப்படுத்துகிறார்கள்.

தேசம்: ஆனால் அதற்குள் ஒரு முரண்பாடு வருது எல்லோ. சந்ததியார் தீப்பொறி யோடு இருந்திருந்தால் அவர்கள் ஒன்றாக தானே போயிருக்க வேண்டும்.

அசோக்: இதுல தான் பெரிய சிக்கல் என்ன என்று கேட்டால் உண்மையிலேயே இவங்கள் சந்ததியார் தீப்பொறியில் இருந்தார் என்று அடையாளப்படுத்துகிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவங்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு அவங்களுக்கு தெரியும் சந்ததியாருக்கு பிரச்சனை வரும் என்று. ஆனால் இவங்கள் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. சந்ததியர் அங்க சுதந்திரமாக திரியுறார். ஆனால் அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முகுந்தன் தரப்பினாரால் வைக்கப்படுகின்றது. பிறகு நாங்கள் நாட்டுக்கு போனதற்குப் பிறகு தான்…

தேசம்: அந்த விடயத்துக்கு பிறகு வாரேன். இது ஒரு சிக்கலான விடயம். மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளுவோம். டேவிட் ஐயா, சரோஜினி ஒரு இடத்தில் இருக்கிறீனம் என்றால் டேவிட் ஐயாவின் ஒரு நேர்காணலில் அவர் சொல்லுறார் உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு வந்து ஒரு சர்வாதிகார போக்கை கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். தான் அதை உமாமகேஸ்வரனுக்கும் சொன்னதாகவும் இது சம்பந்தமாக மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருந்ததா? சந்ததியார் இருக்கிறார், டேவிட் ஐயா இருக்கிறார் முக்கியமான ஆட்கள் இருக்கினம். தோழர் ரகுமான் ஜான், தோழர் நேசன் நீங்கள் .. எனக்கு இன்னும் அதற்கான… எனக்கும் விளங்கவில்லை ஒரு பலமான முற்போக்கு சக்திகள் இருந்தும் எப்படி ஒரு பலவீனமான உமாமகேஸ்வரன் அந்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்

அசோக்: டேவிட் ஐயா முரண்பட்டுக் கொண்டு போகும்போது அந்த முரண்பாட்டுக்கான காரணங்களை அவர் நிச்சயமாக சந்ததியாருக்கு சொல்லியிருப்பார். பேட்டியிலும் அதைத்தான் சொல்லுறார். நான் சொல்வது என்ன என்று கேட்டால் ஆரம்பத்துல டேவிட் ஐயா வெளியே போகும்போது ஒரு சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். டேவிட் ஐயா வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி பின் தளத்தில் இருந்த முக்கிய தோழர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாதது மிக மிக கவலைக்குரியதுதான். அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு கண்டிருக்கவேண்டும்.

ஆனால் டேவிட் ஐயா முன்வைத்த குற்றச்சாட்டுகளை புளொட் அமைப்பின் பிரச்சனையாக பார்க்காமல் டேவிட் ஐயாவின் பிரச்சனையாக குறுக்கி பார்த்ததின் விளைவுதான் அது என நினைக்கிறேன். இது புளொட்டில் தொடர்ச்சியாக நான் அவதானித்த விடயம்தான். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். தனி நபர் சார்ந்த விடயமாக, அவருடைய பிரச்சனையாக, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிகடந்து சென்றுவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. அது இயக்கத்தை பாதிக்கும் சீர்குழைக்கும் என நாங்க நினைப்பதில்லை. எங்களின் இருப்பும் தனிநபர் சார்ந்த எங்களின் அபிலாசைகளும்தான் இதற்கு காரணம்.

தேசம்: சந்ததியாருக்கு முதலே டேவிட் ஐயா வெளியேறிவிட்டாரா?

அசோக்: ஓம் டேவிட் ஐயா முதலே வெளியேறிவிட்டார்.

தேசம்: எவ்வளவு காலத்துக்கு முதல்?

அசோக்: நீண்டகாலத்துக்கு முதலே முகுந்தனோடு முரண்பட்டு வேலை செய்ய முடியாது என்று டேவிட் ஐயா போயிட்டார்.

தேசம்: டேவிட் ஐயாவின் உடைய குறிப்பின்படி எண்பத்தி மூன்றாம் ஆண்டு தாங்கள் மட்டக்களப்பு சிறை உடைப்பு எல்லாரும் தமிழ்நாட்டுக்கு போன பிறகு அவர் ஒரு ஆறு மாதம் செய்கிறார். அப்ப கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு தொடக்கத்திலேயே அல்லது 83 கடைசியிலேயோ போயிட்டார்.

அசோக்: நான் நினைக்கிறேன் டேவிட் ஐயா 84 கடைசியில்தான் வெளியேறிப் போய் இருப்பார் என. அதுக்குப் பிறகு புளொட்டோட தொடர்பு இருந்தது அவருக்கு. உத்தியோக பூர்வமாக எந்த வேலையும் செய்யவில்லை. காலப்போக்கில் முற்றாக புளொட்டினுடைய தொடர்பை விட்டுவிட்டார்.

தேசம்: உங்களுக்கு அவர் வெளியேறினது தெரியுமா?

அசோக்: டேவிட் ஐயா வெளியேறினது தெரியும்.

தேசம்: அப்போ நீங்கள் தோழர் ரகுமான் ஜான் ஆட்களுடன் அல்லது மற்ற தோழர்களுடன் கதைக்கவில்லையா இதைப்பற்றி…?

அசோக்: பெருசா இதைப்பற்றி கதைக்கவில்லை. உண்மையிலேயே அது பெரிய பிழைதான். இன்னொரு சிக்கல் என்னவென்றால் கம்யூனிகேஷன் பிரச்சினையாக இருந்தது அந்த நேரம். நாங்கள் நாட்டிலிருந்து போற ஆட்கள் தானே. நிறைய விடயங்கள் தளத்தில் இருந்த எங்களுக்கு காலம் கடந்துதான் தெரியவரும். பின்தளம் செல்லும் போதும் இப்பிரச்சனைகள், முரண்பாடுகள் பற்றி யாரும் எங்களோடு கதைப்பதில்லை. இதுபற்றி முன்னரே நிறைய கதைத்துள்ளேன். உண்மையிலேயே நாங்க நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். ஆரம்ப காலத்தில் இந்த தவறுகளை பற்றி நாங்க கவனம் கொள்ள தவறிட்டம்.

தேசம்: அந்த நேரம் இப்போ உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பது உண்மைதான். நீங்கள் அங்கே இருந்து சில மத்தியகுழு கூட்டங்களுக்கு வரேக்க மத்திய குழுக் கூட்டத்துக்கு வெளியிலேயும் சில கருத்தாடல்கள் நடந்திருக்கும் தானே… அதுகளிலும் இது சம்பந்தமாக எதுவும் முக்கியத்துவம் பெற இல்லையா? தோழர் ரகுமான் ஜான் யாரும் இதைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடவில்லையா.

அசோக்: டேவிட் ஐயாவின் வெளியேற்றம் எங்களுக்குப் பெரிய பாதிப்பை தரவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி டேவிட் ஐயாவின் பிரச்சனையை வெளியேற்றத்தை அவரின் தனிப்பட்ட பிரச்சனையான நாங்க பார்த்ததன் விளைவுதான் அது. அத்தோடபுளாட்டின் முக்கிய ஆளாக இல்லை என்ற நினைப்பும் எங்களிடம் இருந்தது. டேவிட் ஐயாவின் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் இயக்கத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையாக நாங்க காணத் தவறிட்டம். இப்ப யோசிக்கும் போது மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் பிரயோசனம் இல்லைப் போல் தெரிகிறது. எங்களிடம் நிறைய பிரச்சனைகள் தவறுகள் இருந்திருக்கு.

தேசம்: காந்தியத்தில் முக்கியமான ஆள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிகப் பயங்கரமானது. அந்த நேரமே அதற்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் இது நிச்சயமாக தடுக்கப்பட்டு இருக்கலாம். டேவிட் ஐயாவை கடத்தினவர்களுக்கு டேவிட் ஐயா சந்ததியார முழு பேரையும் தெரியுமா.

அசோக்: தெரிந்திருக்க வில்லையா அல்லது முகுந்தனின் கட்டளையை தவறாக புரிந்து கொண்டார்களா தெரியல்ல. டேவிட் ஐயா அந்த நேர்காணலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார் தன்னை வாகனத்தில் கடத்திக்கொண்டு போகிறார்கள். போகும்போது இடையில அந்த வாகன சாரதிதான் டேவிட் ஐயாவின் குரலை அடையாளம் காண்கிறார் இவர் டேவிட் ஐயா என்று. ஆனால் இவர்கள் உண்மையாக கடத்த வந்தது சந்ததியாரை. கடத்திக் கொண்டு போன உறுப்பினர்களுக்கு சந்ததியார் யாரென்று தெரியாமல் கடத்தினார்களா அது தெரியல்ல. சங்கிலி கந்தசாமி போகவில்லை. அவரின்ர உளவுப்படைதான் போனது. அந்த ட்ரைவர் இருந்தபடியால் தான் விட்டுட்டு போனவர்கள் இல்லாவிட்டால் அவரையும் மேடர் பண்ணி இருப்பார்கள்.

தேசம்: சந்ததியார் வெளியேறி எவ்வளவு காலத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்படுகிறார்? அவர் கொலை செய்யப்பட்ட விடயம் எப்போது தெரிய வருகிறது?

அசோக்: நான் நினைக்கிறேன் 85 கடைசிப் பகுதியில் கொலை செய்யப்படுகிறார் என்று. மத்திய குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார் என நினைக்கிறேன்.

தேசம்: கடத்தப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்குறார்?

அசோக்: இல்லை. மத்திய குழுக் கூட்டம் நடந்த பிற்பாடு அவர் சுதந்திரமாக அண்ணாநகரில் தான் இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் கடத்தப்படுகிறார்.

தேசம்: மத்திய குழுக் கூட்டத்திற்கு பிறகு தானே கடத்தப்படுகிறார்?

அசோக்: மத்தியகுழு கூட்டத்திற்கும் அவர் கடத்தப்படுவதற்கு இடையில் நான் நினைக்கிறேன் 2, 3 மாதம் இடைவெளி இருக்கும். சரியாக காலத்தை என்னால் நினைவு படுத்தமுடியாமல் உள்ளது. கடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார் என நினைக்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். கடத்தப்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாது. எப்ப கொலை செய்தார்கள் என்ன நடந்தது ஒன்றுமே தெரியாது தானே.

தோழர் சந்ததியார் கடத்தப்பட்ட உடனேயே டேவிட் ஐயா பொலிசில் என்ரி போட்டுட்டார், சந்ததியாரை காணேல என்று . காணேல என்று சொன்னதுமே விளங்கிவிட்டது புளொட் தான் கடத்தி விட்டது என்று சொல்லி. பிறகு அப்படியே போனது தான் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசம்: அந்த நேர்காணலில் டேவிட்டையா சொல்லுகிறார் தன்னைக் கடத்த வந்தவர்கள் தன்னை கடத்தவில்லை உன்னைத்தான் கடத்த வந்தார்கள் ஆகவே நீ பாதுகாப்பாக இரு என்று சந்ததியாரிடம் சொல்லுறார். அப்படி இருந்தும் அந்த எச்சரிக்கையை மீறி இவர் திரிகிறார். அது எப்படி புளொட்டில் படுகொலைகள் நடக்கிறதை நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் டேவிட் ஐயாவை கடத்தி போட்டு விடுவித்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து அவர் கவனம் இல்லாமல் வெளியில் திரிந்து.

அசோக்: டேவிட் ஐயா சந்ததியாரை கவனமாக பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லியுள்ளார். அதுல கொஞ்சம் கவனம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தோழர் சந்ததியாருக்கு வேண்டிய ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தான் சந்ததியாரை வர வைக்கிறார்கள். திட்டமிட்டுத்தான் வர வைக்கிறார்கள். டெலிபோன் பண்ணினதும் நம்பிட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது அப்படித்தான் நம்பிக்கையான ஒரு ஆளை கொண்டு டெலிபோன் பண்ணி வெளியில வரவழைத்து தான் கடத்தினார்கள் என்று சொல்லி.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த தகவல்கள் கூடுதலாக சரோஜினி அக்காவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு.

அசோக்: சரோஜினி அக்காவுக்கு தெரியும். சண்முகலிங்கத்துக்கும் தெரியும் அவர் இறந்து போய் விட்டார். ஒரே ஒரு ஆள் சரோஜினி அக்கா தான். ஏனென்றால் சரோஜினி அக்கா தான் அந்த காலகட்டத்தில் டேவிட் ஐயா, தோழர் சந்ததியார் ஆட்களோடு நெருக்கமாக இருந்தவங்க. ஆனால் தோழர் சந்ததியாரின் கடத்தலோடும், கொலையோடும் சம்பந்தப்பட்ட, இந்த விடயம் தெரிந்த பலர் இப்போதும் உயிருடன் இருக்காங்க. அவங்களின்ற மனச்சாட்சி அவங்களை உறுத்தாது என நினைக்கிறன். அவங்க வாய் திறக்க மாட்டாங்க.

தேசம்: தீப்பொறி உடனான தொடர்புகளையும் அவா தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மத்திய குழுக் கூட்டம் நடந்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள் தீப்பொறி சார்ந்த நபர்கள். அப்ப தீப்பொறி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்களுக்கு பிறகு நீங்கள் தாயகத்திற்கு திரும்புகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தாயகத்தில் இருந்து இங்கு வந்த உடனேயே உங்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?

அசோக்: எங்களுக்கு படகு ஒழுங்கு செய்து தரப்படவில்லை.

தேசம்: அது திரும்பிப் போவதற்கு. மத்திய குழுக் கூட்டத்துக்கு பின் தளத்துக்கு வரும்போது நீங்கள் கண்காணிக்கப்பட்டீர்களா?

அசோக்: அதுல எந்த கண்காணிப்பும் இருக்கவில்லை. நோர்மலா தான் இருந்தது. அதற்குப் பிற்பாடு நடந்த விடயங்க ள்தானே எல்லாம். மத்தியகுழு கூட்டம் பிரச்சனை வெளியேற்றம் இவை எல்லாம்.. அதன்பின்தான் எங்களுக்கு நெருக்கடி தொடங்குகிறது.

தேசம்: அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் ஏற்பாடு செய்து தரேல.

அசோக்: ஒன்றரை மாதங்கள் இருக்காது என நினைக்கிறேன் ஒரு மாதம் இருக்கும். கரையில் நிற்கும் போதுதான் கண்காணிப்பு போடப்பட்டது. பிறகு அவர்கள் ஒழுங்கு பண்ணிக் தந்துதான் நாட் டிக்கு தளத்திற்கு போன நாங்கள். இது பற்றி முன்னர் கதைத்துள்ளோம்.

தேசம்: அப்போ உங்களுக்கு அச்ச உணர்வு வரேல்லையா. கடலுக்குள்ளே ஏதாவது? உங்களை அனுப்பி போட்டு இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருந்தால்…

அசோக்: அப்படி எங்களுக்கு அச்சம் இருக்கல. எங்களோடு வந்த ஓட்டி மிக நம்பிக்கையான ஆள். ஓட்டி மாதகலைச் சேர்ந்தவர். . குமரனுக்கு மிக நெருக்கமான ஒரு ஆள்.

தேசம்: யார் யாரெல்லாம் போனது.

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, குமரன்.

தேசம்: இப்ப வந்து எண்பத்தி ஆறு முற்பகுதி இலங்கைக்கு போகிறீர்கள். 85 கடைசிப் பகுதியில் தான் போறோம்.

இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் – லிற்றில் எய்ட் ஒளிவிழாவில் வண பிதா எஸ் கே டானியல் சிறப்புரை

தமிழ் இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பில் நத்தார் தினத்தையொட்டி நடந்த ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வண பிதா எஸ் கே டானியல் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் பணத்துக்கு அடிமையாகி கூலி அடிமைகளாக மாறும் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்த வண பிதா டானியல் எல்லா சமயங்களும் அன்பையே போதிக்கின்றன, யேசுபிரான் அன்பின் அவதாரமாகவே பிறந்து இந்த உலகத்தை காக்கின்றார் என்றும் அன்பையும் காருண்யத்தையும் உடையவர்கள் யேசுவின் சகோதரர்கள் ஆவீர்கள் என்றும் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் மாணவிகளாலும் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். லண்டனில் இருந்து தாயகம் செய்னிறருந்த லிற்றில் எய்ட் அமைப்பின் உறுப்பினர் டொக்டர் பொன் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து மாணவ மாணவியருக்கு பரிஸில்களை வழங்கினார்.

மேலும் லிற்றில் எய்ட் கிளிநொச்சி உறுப்பினர் குகனும் லிற்றில் எய்ட் ஆசிரியை அனுஷியாவும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர். லிற்றில் எய்ட் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி, கணணி தொழில்நுட்ப ஆசிரியர்கள் பவதாரனி, கோபி ஆகியோர் நிகழ்வை மேற்பார்வை செய்து மாணவ மாணவிகளுக்கு அணுசரனையாகச் செயற்பட்டனர்.

மாணவிகளின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் செல்வி அ அன்பரசி வருகைதந்தோரை வரவேற்றுக்கொள்ள வண பிதா போல் அனக்கிளிற் ஆசியுரை வழங்கினார். மாணவன் ச தர்சன் தலைமையுரை நிகழ்த்தி விழாவை ஆரம்பித்து வைக்க மாணவர்கள் கி ஐதுஷிஹன், அ கடல்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வு முற்றிலும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டமையும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி விருத்தியுடன் மட்டும் நின்று விடாமல் அவர்களின் ஆளுமை விருத்தியையும் மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றது. காலம்சென்ற வயித்தீஸ்வரன் சிவஜோதி லிற்றில் எய்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் கிளிநொச்சியின் சமூக மையத்தளமாக லிற்றில் எய்ட் வளர்க்கப்பட வேண்டும் என்ற கனவுக்கு அவர் உரமளித்திருந்தார்.

மாணவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வண பிதா போல் அனக்கிளிற் நாங்கள் அனைவரும் அன்பினால் இணைக்கப்பட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பையும் விதந்துரைத்தார்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக காட்டமாக தனது கருத்துக்களை முன்வைத்த வண பிதா டானியல் அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரத்தில் வாள்வெட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையைச் சுட்டிக்காட்டி இவ்வாறான வழிகளில் இளைஞர்கள் செல்வதை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியானவர்களாக நடக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். வ சிவஜோதியின் வழிகாட்டலில் வளர்ந்த இந்த மாணவர்கள் அப்படிச் செல்லமாட்டார்கள் என்றும் அவ்வாறு சென்றால் அது சிவஜோதியின் கனவுகளை மிதிக்கின்ற அவருடைய ஆத்மாவை அவமதிக்கின்ற செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதில் வழிநடத்துவதில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பு மிகக் காத்திரமானது எனத் தெரிவித்த வண பிதா டானியல், இவர்களின் இந்த சேவை இந்தப் பகுதிக்கு மிக அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் லிற்றில் எய்ட் இணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களோடு உரையாடிய லண்டனில் இருந்து வந்திருந்த லிற்றில் எய்ட் உறுப்பினர் டொக்டர் பொன் சிவகுமார் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டியும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தனது சேவைகளை கிளிநொச்சி மண்ணில் வழங்கி வரும் லிற்றில் எய்ட் கணணிக் கற்கை நெறிகளோடு சுயதொழில் வேலை வாய்ப்பிற்கான தையல் மற்றும் வடிவமைப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஆங்கில மொழிக் கல்வி லிற்றில் எய்ட் இல் வழங்கப்படுவதுடன் கிளி விவேகானத்தா பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழி வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும் கல்வியூட்டலுக்கு அப்பால் மாணவர்களின் ஏனைய துறைகளை வளர்ப்பதற்காக விளையாட்டு – செஸ் கிளப் நடத்தப்படுகின்றது. லண்டனில் இருந்து சேனன் இதனை நடத்துகின்றார். மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கான சிரமதானம், கலைநிகழ்வுகள், விழ்ப்புணர்வு நிகழ்வுகள் என்பனவற்றையும் மாணவர்கள் தம் பொறுப்பில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இலங்கை மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றல் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மீனவர்கள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

A9 வீதியை மறித்து மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதால், போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அரசுடைமையாக்கி, மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் இதன்போது கூறினார்.

கடற்றொழில் அமைச்சரின் உறுதிமொழியினையடுத்து, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களையும் அவர்தம் 10 படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்தாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாம்பன் மீனவர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்வதுடன், தங்கச்சிமடம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

“எண்ணெய்க்கு பதில் தேயிலை.” – ஈரானுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில், சுரங்கம் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் ஈரான் இஸ்லாமியக் குடியரசும் கடந்த 21 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கைச்சாத்திட்டன.

இலங்கை பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில், சுரங்க, வர்த்தக பிரதி அமைச்சர் அலிரேசா பேமன்பக் ஆகியோர் அந்தந்த அரசாங்கங்களின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பொருளாதார உறவுகள் துறையில் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, எண்ணெய்க் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு சிலோன் தேயிலையின் விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நிறுவனத் தோட்ட சீர்திருத்தங்கள், தேயிலை மற்றும் இறப்பர் தொடர்பான பயிர் அறுவடை மற்றும் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை / இறப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யூ.டபிள்யூ.டி. சுமித் விஜேசிங்க, இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிறிவர்தன, இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தொழில், சுரங்க, வர்த்தக பிரதி அமைச்சர் அலிரேசா பேமன்பாக் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக மரியாதை நிமித்தம் சந்தித்து, பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர்.

வைத்தியர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 500 வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் தங்களது சங்கத்தின் ஆலோசனை பெறப்படவில்லை என்பது உள்ளிட்ட ஒரு சில விடயங்களை தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (20) முதல் மன்னார், நுவரெலியா, திருகோணமலை, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமான இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை (21) முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குறித்த போராட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்கு சென்றார் மகிந்த

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பிரதமர் உள்ளிட்டோருக்காக திருப்பதி ஆலயத்தில் இன்று விசேட ஆசீர்வாத பூஜையும் இடம்பெற்றது.

இத்தனிப்பட்ட விஜயத்திற்காக பிரதமர் அரச நிதி எதனையும் பயன்படுத்தவில்லை என்றும் சகல செலவுகளையும் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? – பொன்சேகாவிடம் சிவாஜிலிங்கம் கேள்வி !

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள். பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்களல்ல. ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும்

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார். அவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு தோற்றவில்லை. அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளை படித்திருக்கவில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை கொண்டு வழிநடத்தியவர். குறிப்பாக ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனையே சேரும். எனவே அவ்வாறான திறமைகளை புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும். அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினை கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கூறவில்லை. அவர் ஒரு நடிகர். இரட்டை வேடம் போடும் நபர் எனவேதான் அவர் தற்போது தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சில கதைகளை கூறி வருகின்றார். நாங்கள் இன்று மகிழ்கின்றோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு வரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது ஜப்னா கிங்ஸ் !

2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.

இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணித் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது..

ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 63 ஓட்டங்களையும், டொம் கொஹ்லர்-காட்மோர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

கோல் கிளாடியேட்டர்ஸ் சார்பில் மொஹமட் அமீர், நுவன் துஷார மற்றும் சமித் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் குணதிலக 54 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சத்துரங்க மற்றும் ஹரசங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

“அலிசப்ரி பதவியிலிருக்கும் வரை சஹ்ரானின் குற்றங்களுக்கு நியாயம் கிடைக்காது.” – ஞானசார தேர

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செய லணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலை மைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக் கத்தின் போதும், அதில் என்னைத் தலைவராக நியமித் துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால், இவற்றை நாம் கருத்தில்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.