2021

2021

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தயாராகும் இலங்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண !

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதது என அதன்  வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து அவர்களுக்கான பைசர்  தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் தற்போது பாடசாலை திறப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்றும் இது குறித்து ஆராயும்படியும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் சினோபாம் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் அதிகரிக்கும் இராணுவ ஆட்சியின் வன்முறைகள் – மொத்த உயிர்பலி 1,058 !

மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளது. இந்த குழுக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டங்கள், கிளர்ச்சியாளர்கள் குழுக்களை இராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மியான்மரை விட்டு வெளியே அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மர் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென துபாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தங்களால் செயல்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு அரசை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என மியான்மார் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“தேவைப்படுவோருக்கு உள்ளாடைகள் வழங்க நான் தயார். சதொசாவில் குறைந்த விலையில் பெறுங்கள்.” – அமைச்சர் பந்துல !

அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்படுவதாக அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.  சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விசிறிகள், தொலைகாட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் புகைப்பட கருவிகள் உள்ளிட்ட வீட்டு சாதனங்கள், ஆடைகள் முக்கியமாக  உள்ளாடைகள் போன்ற இறக்குமதிகளுக்கு எதிராக 100 சதவீத காசு எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பெரிய பேசுபொருளாகியிருந்தது. உள்ளாடைகள் தொடர்பிலாக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கையில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தியாளர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார். உள்ளாடைகள் அதிகம் கையிருப்பில் உள்ளன. இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இதுவரை உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.

எதிர்காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு அதனை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடன் பிரச்சினையை தீர்க்க மேலும் 250 கோடி அமெரிக்க டொலர்களை கடன் வாங்கும் அரசு !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

எரிசக்தி அமைச்சு இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கன்செப்ட் குளோபல் என்கின்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதோடு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது. 03 சதவீத வருட வட்டி இதற்காக விதிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

“எங்களது குடும்பம் மகனின் உழைப்பில் தான் வாழ்கிறது. அவரை விடுதலை செய்யுங்கள்.” – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரின் தாய் !

2020ஆம் ஆண்டிலிருந்து சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. முக்கியமாக தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோரும் – விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் – அமைப்பின் சின்னங்களை பகிர்ந்தோர் என பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய விடுதலை தொடர்பில் சாணக்கியன் உள்ளிட்ட கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் வலியுறுத்தியும் இன்னமும் அரசு தரப்பிலிருந்து முடிவு கிடைக்கவில்லை.

அண்மையில் இது தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் ஒரு விசாரணைக்குழு நிறுவப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள்  ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கூறியுள்ளதாவது, “கடந்த வருடம் 27.11.2020 திகதியன்று, எனது மகனான பாலகிருஷ்ணன் ரதிகரன் (28 வயது)  முகநூலில் கவிதை ஒன்றினை பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சுமார் ஒரு வருடமாக எனது மகனை இழந்து, எங்களது குடும்பம்  துன்பத்தில் உள்ளது. எனவே, ஜனாதிபதி எமது நிலைமையை உணர்ந்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சண்முகராஜா கலைச்செல்வி தெரிவித்துள்ளதாவது,  “கடந்த 02.07.2021 திகதியன்று  எனது மகன் விதுலக்ஸ்சன் (24 வயது) கைது செய்யப்பட்டார்.

மேலும், எங்களது குடும்பம் அவரது உழைப்பில்தான் வாழ்கின்றது. ஆகவே எனது மகனை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிறிஸ்டி வினோத் லிஷாலினி தெரிவித்துள்ளதாவது, “எனது கணவர் கிறிஸ்டி வினோத் (36 வயது) கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட எனது குடும்பம் தற்சமயம் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றது.

ஆகவே, அவரை விடுதலை செய்து எங்களது துயரை போக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு – பத்து ஆண்டுகளுக்குப் பின்பு முதல் மருத்துவத்துறை மாணவி !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மகன் எங்கே.. – விடை தெரியாமலேயே இறந்து போன தந்தை !

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை ஒருவர், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா- மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு, நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு:1948.12.04), தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே  நேற்று முன்தினம்  (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின்போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து, இராணுவத்தினர் இவரது மகனான இராசதுரை விஜி (பிறப்பு: 1987.05.07) என்பவரை கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்துச் சென்றிருந்த நிலையில், கடந்த 12 வருடங்களாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் ஆயிரத்து 668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் ‘காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில்’ தனது முதுமைக் காலத்திலும் செபமாலை இராசதுரை அவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, இதுவரைக் காலமும் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

“சம்பந்தன் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று சொல்லி தமிழ்மக்களை நம்பவைப்பார்.”- ஐ.நாவுக்கான கடிதம் தொடர்பில் சிறிதரன் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில்  அதிலுள்ள  விடயங்கள் தொடர்பில்  நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

அதாவது இலங்கையில் ஒரு போர்க்குற்றம் நடைபெற்றது  இன அழிப்பு நடைபெற்றது என்பது தெட்டத் தெளிவான உண்மை. அதாவது இன்று காணாமல் போனோர் பற்றியோ அல்லது நில ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் இன்று எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்றும் தமிழர்கள் அடக்கி ஆளப்படுகின்ற ஒரு நிலையே  இங்கு காணப்படுகின்றது.

ஐ.நா வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது ,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான  தமிழீழ விடுதலை இயக்க அமைப்பினூடாக தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தாங்கள் எந்த கையொப்பமும்  இடவில்லை.  அதேபோல சுமந்திரன் அவர்கள்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பி  வைக்கப்பட்ட கடிதத்தில்  இருதரப்பும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும் என்றும் காரணம் இது ஒரு தரப்பு களத்தில் இல்லை மற்றைய தரப்பான  அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது

குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது . ஒரு இன அழிப்பு இன அழிப்புப் போர்க்குற்றம் புரிந்திருந்தால் அதில் ஒரு தரப்பு இல்லாவிடின் அதனை எவ்வாறு விசாரிப்பது கண்முன்னே நடந்த இனப்படுகொலைக்கு அதில் குறிப்பிட்ட விடயம் எங்களுக்கு ஒத்து வரக் கூடியதாக இருக்கவில்லை. அது பற்றி ஆராயலாம் என கடந்த திங்கட்கிழமை ஆராயலாம் என தீர்மானித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான ஒரு கலந்துரையாடலின்போது சம்பந்தன் ஐயா குறித்த கடிதத்தை தான் ஒரு தனிமனிதனாக அனுப்பிவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அதனை  அனுப்பியிருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது காரணம் அவர் சிங்கக் கொடியை பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார்.மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். அவர் நாடாளுமன்றத்தில் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை.  மனித உரிமை மீறல்களை புரிந்தார்கள் அதனால் அவர்கள் அழிந்தார்கள் என்று பேசுவார்.  அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு  உள்ளது.

ஆனால்  கடிதத்தை அனுப்பி விட்டு இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும். என்றால் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக  கருத முடியாது.  அவர் அனுப்பி இருக்கின்ற கடிதம் தொடர்பில் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை. நாங்கள் இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி இருக்கின்றோம். பேசி இருக்கிறோம். ஆனால் கடந்த 19ஆம் திகதி அனுப்ப வேண்டிய கடிதத்தை நாங்கள் அனுப்ப தவறி இருக்கிறோம் இது எங்களிடம் இருக்கின்ற பெரும் தவறு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும்!!!

இன்று செப்ரம்பர் 11 இன்றைய உலகின் அரசியல் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட நாள். ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் 2977 பொதுமக்களும் 17 தற்கொலையாளிகளுமாக 2996 பேர் கொல்லப்பட்டனர் 6000 பேருக்கு மேல் காயப்பட்டனர். விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதமாகப் பார்க்கப்பட வைக்கப்பட்ட நாள். எமது மண்ணில் நடந்தது விடுதலைப் போராட்டமா இல்லையா என்று எதிரும் புதிருமான கருத்துநிலைக்கு இன்னும் விடையில்லை. விடை கிடைக்கப்போவதும் இல்லை. அவரவர் தம் தம் கருத்துநிலைகளில் உறைந்துபோயுள்ளனர்.

ஆனால் எமது மண்ணில் நடந்த யுத்த வேள்வியில் வகைதொகையின்றி நல்ல மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முரண்பாடுகள் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என விதிவிலக்கில்லாமல் பல நூற்றுக்கணக்கான பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டது. மனிதவளம் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் மனித உயிர்களை துவசம் செய்து ‘விடுதலை’ காணலாம் என்று எண்ணிய காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் 2001 செப்ரம்பர் 11 க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்களுக்கு பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தில் வழமைபோல் குண்டு வெடிப்பும் உயிரிழப்பும் நடந்தது. எம்என்எம் அனஸின் ‘பிணம் செய்யும் தேசம்’ ஆக இருந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர்சபை மேயர் பொன் சிவபாலன், யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

மேயர் பொன் சிவபாலன் என் நண்பன் பொன் சிவகுமாரனின் சகோதரன். எங்கள் இரு குடும்பங்களும் ஒரு பிள்ளையை சகோதரணை இழந்தது. இன்று இவர்களைப் பற்றி விமர்சிப்பவர்கள் தொடர் எழுதுபவர்கள் பலர் இந்த ‘விடுதலை போராட்டம்’ என்ற பெயரில் தங்களை வளர்த்து அந்த வரலாற்றை தங்களுக்கு ஏற்ப புனைந்து அதில் குளிர்காய்கின்றனர். நேற்று நண்பன் சிவகுமாரனுடன் பேசிய போது தன்னுடைய அண்ணனை காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் முடியவில்லை என்று அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை மீட்டுக்கொண்டான். இன்று வரலாற்றுத் தொடர்கள் எழுதி வரலாற்றைப் புனைபவர்களும் அவற்றைக் கொண்டாடுபவர்களும் குண்டுச் சத்தத்தை காதால் கூட கேட்டறியாதவர்கள். தங்கள் முன் நடத்தப்பட்ட அத்தனை படுகொலைகளுக்கும் துணை போனவர்கள். இழப்பின் வலியை அறியாமல் அதனை கொண்டாடியவர்கள்.

பொன் சிவபாலன் ஒரு சிறந்த பேச்சாளர். அவருடைய கவிநயம் கொண்ட பேச்சால் பலரையும் வசீகரித்தவர். இன்று கட்சிக்குள் தலைமைப் போட்டிக்கு ‘ஐயா எப்ப போவார், கதிரை எப்ப காலியாகும்’ என்ற நிலை அன்றில்லை. பொன் சிவபாலன் கட்சியால் – தமிழர் விடுதலைக் கூட்டணியால் எவ்விதத்திலும் பயனடையவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அவரால் பயன் கிடைத்தது. பொன் சிவபாலனின் பேச்சுத் திறமை அவருடைய நேர்மையால் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருந்தது. அவருக்குப் பின் கட்சி காலாவதியாகிப் போய்விட்டது. கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றுப் போய்விட்டது.

பொன் சிவபாலன் போன்ற நேர்மைகொண்ட பலரை இந்த சமூகம் இன்று இழந்துவிட்டது. என் அண்ணனைப் போல் விடுதலைக்குப் போன பல ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் – இந்த மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டது. இன்று சுயநலம் மிக்க கயமைகொண்ட பலர் வரலாற்றை சூறையாடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. அவை தட்டி எழுப்பப்படும். அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும். கலீலியோ கலீலியை வரலாறு விடுவித்தது. திருச்சபையை வரலாறு அம்பலப்படுத்தியது. அதுபோல் உளவாளிகளையும் முகவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வரலாற்றைப் புனைபவர்களையும் வரலாறு அம்பலப்படுத்திவிடும். அவர்கள் இப்போதும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. சுடுகாட்டிலும் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது ஜிம்மி சவேல் மற்றும் எட்வேர்ட் கொல்ஸ்ரன் போல்.

அமெரிக்க மக்களை ஏமாற்றி உலக நாட்டு மக்களை ஏமாற்றி முஸ்லீம் பயங்கரவாதத்தை உருவாக்கி பின்லாடனை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலும் அம்மணமாகும்.

பொன்.சிவபாலன் 23 ஆவது நினைவு தினம் இன்று யாழ் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு !

யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலன் அவர்களது 23 ஆவது நினைவு தினம் இன்று யாழ் சித்தன்கேணியில் அனுஷ்டிக்கப்பட்டது.

பொன் சிவபாலன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் மாநகரசபையின் முதல்வராக பணியாற்றியதுடன் பிரபல சட்டத்தரணியுமாக விளங்கினார்.  யாழ் சித்தன்கேணியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. நடனேந்திரன் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்களான தங்க. முகுந்தன், எஸ் .அரவிந்தன் உட்பட குடும்ப உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்  பதினோராம் திகதி யாழ் மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவருடன் கூடவே யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.