07

07

“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர்” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது  என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

எனினும் இவர்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும், இன்னமும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் சபையில் கேள்வி எழுப்பியதற்கே நீதி அமைச்சர் அலி சப்ரி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதே நேரம் , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தாக மாவை.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

ட்ரம்ப் தரப்பின் அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு அடுத்த ஜனாதிபதி நானே என்பதை உறுதிப்படுத்தினார் ஜோ பைடன் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் திகதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறி தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது. எனினும் டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜோ பைடன் வருகிற 20-ந் திகதி பதவி ஏற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது.
இதையடுத்து தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை கடந்த டிசம்பர் 14-ந் திகதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்தனர்.
அந்த வாக்குகள் எண்ணப்படுவதற்காக அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடல் கட்டிடத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணிகளை தடுப்பதற்காக, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
அதன்பின்னர் பாராளுமன்றத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றளித்தார். அதன்பின்னர் அதிகார மாற்றத்திற்கு ஜனாதிபதி டிரம்பும் ஒப்புதல் அளித்தார். இதனால், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்பதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி  வரும் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இடையே சந்திப்பு !

கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோக பூர்வ விஜயமென்றினூடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதி நிதிகளையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுமார் இருபது நிமிடங்களிற்கு மேலாக இடம் பெற்ற இக்கலந்துரையாடலின் போது வட-கிழக்கு தமிழ் மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்தும், கிழக்கு மாகாண மக்களிற்கு இருக்கின்ற விசேடமான பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகள் அதிலும் குறிப்பாக வீட்டுத்திட்டம், குடிநீர் பிரச்சனை மற்றும் மலசல கூடங்கள் உட்பட வாழ்வாதார கட்டமைப்புக்களை ஏற்படுத்துதல், போன்றவை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய துனை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைகளை செவிமடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் தமிழ் மக்களுக்கான பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுப்பதில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

“மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும்” – ஜீவன் தொண்டமானிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி !

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று (07.01.2021) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கேல் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

“இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்” – இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் வேண்டுகோள் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று(07.01.2021) கொழும்பில் சந்தித்துள்ளனர்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. “ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கிறது. ஆகவே இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். இராமேஸ்வரம் – மன்னார், தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவையை ஆரம்பிக்க உங்கள் பக்கத்தில் ஆவன செய்யுங்கள். நோர்வூட் கிளங்கன், நுவரெலியா மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் இயந்திரங்கள் இரண்டு கொடுங்கள். இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்”  போன்ற பல கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 13ஆம் திருத்தம், மாகாண சபைகள் தொடர்பான இந்திய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. புதிய அரசியலமைப்பு வரைபு குழுவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி யோசனைகளை முன் வைத்துள்ளது. எதிரணியில் இருந்தாலும் நாமே, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பெரிய அரசியல் இயக்கம்.

இன்றைய இலங்கை அரசு செல்வாக்கு இழந்து வருகிறது. வெகுவிரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை எமது தேசிய கூட்டணி உருவாக்கும். என தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறியது.

மேலும், இன்றைய நரேந்திர மோடி அரசே, இலங்கையில் வாழும் எமது மக்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை நாம் பிரதமர் மோடிக்காக நோர்வூட்டில் கூட்டினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இச்சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள், கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – கூட்டமைப்பிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி !

“இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

TNA

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒருமித்த நாட்டுக்குள்தான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றார்கள். எனவே, அவர்களின் அபிலாஷைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் நான் எடுத்துரைத்துள்ளேன்.

மாகாண சபை முறைமையில் மாற்றம் வேண்டாம் எனவும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதை இலங்கை அரசின் கவனத்துக்கொண்டு வந்துள்ளேன்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிகார அமைச்சருக்கம் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (06.01.2021) நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடலின் போது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தேசிய நல்லிணக்க்தின் ஊடான உறவுப் பாலத்தினை வலுப்படுத்துவதையும், இந்தியாவுடன் விசேடமாக தமிழ் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடற்றொழில் அமைச்சை தனக்கு வழங்கி இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பற்காக நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டு புதிய மீன்பிடி தொடர்பான சட்டம் இலங்கையில் அமுல்ப்படுத்தப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளவற்றை விற்பனை செய்து,  இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான உதவிகள் தொடரர்பில் இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில்,  குறித்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எல்லை தாண்டி வந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரோலர் முறை எனப்படும் இழுவை வலை படகுத் தொழிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள குறித்த தொழில் முறையினால் இரண்டு நாடுகளின் கடல் வளத்திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்;தினார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், குறித்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமூகமான தீர்வினை காண்பதற்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரபிக் கடலுக்கு செல்லுகின்ற இலங்கையின் ஆழ்கடல் பல நாள் கடற்றொழிலாளர்களுக்கான குறுகிய தூரத்தினைக் கொண்ட மாற்று வழியாக இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான இந்தியக் கடற் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையையும் சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தை திடீர் முற்றுகை – 04 பேர் பலி – ட்ரம்ப் மீது ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20ந் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகளை எண்ணி முறைப்படி வெற்றிச் சான்றை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தொடங்கியது.
அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் - பெரும்  பரபரப்பு | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu  News | தமிழ் நியூஸ் ...
வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மீண்டும் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது.
இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை காவல்துறை உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கிடையே வன்முறையின் மூலம் ஆட்சியை கவிழ்க்க ஜனாதிபதி டிரம்ப் சதி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த போராட்டங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான சவால்கள் ‘ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சி’ என்று செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் ஷுமர் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவை பாராளுமன்றம் தீர்மானிக்கவில்லை, மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மாகாண சபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு” – ஐக்கிய மக்கள் சக்தி

“மாகாண சபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், அதற்கான யாப்பு உருவாக்கப்பட்டு சம்மேளனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுக்கும் ஒன்றாய் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை ஜனநாயக ரீதியாக முன்வைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்ட முற்போக்கான எண்ணப்பாட்டில் கூட்டணிக்கான யாப்பு வரைவுச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஜனநாயகத்தை மதிக்கும் சகலரும் இதில் இணைந்து கொண்டு செயற்பட முடியுமான சூழலை இதன் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பிரவேசம் நிலைத்தல் தன்மை கொண்ட ஏற்பாடாகும்.  கட்சியின் யாப்பு முழுமையாக ஜனநாயக ரீதியான ஏற்பாடுகளை உள்வாங்கிய முற்போக்குத் தன்மை வாய்ந்த யாப்பாகும். தகுதி மற்றும் ஆற்றல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொரும்பான்மையினரின் ஆதரவிலும் ஒப்புதலிலும் தான் பதவிநிலை நியமனங்கள் வழங்கப்படும். நியமனங்களுடன் பதவிகளுக்கான வேலைத் திட்டங்களும் வழங்கப்படும்.வெறும் நாம ரீதியான பதவிகள் நபர்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படமாட்டாது.

உலக நாடுகள் மற்றும் நாட்டில் பரவும் கொரோனா தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து பத்திரிகைகளுக்கும் இந்தக் கொரோனா தொற்று பெரும் சவாலாக காணப்படுகின்றது. பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எவ்வித நிபந்தனை களுமில்லாது நாம் அதற்கு ஆதரவு வழங்குகின்றோம். ஊடகங்களை நிராகரித்துவிட்டு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்ற அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதற்காக நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கத் தயங்க மாட்டோம்.

எமது கட்சி உருவாகி ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில், நாம் ஜனநாயக ரீதியிலான யாப்பொன்றை உருவாக்கியுள்ளோம். 75 பேரடங்கிய மத்திய செயற்குழு அமையவுள்ளது. இந்த மத்திய செயற்குழுவில் தலைவரால் 50 உறுப்பினர்களின் பெயர்களைப் பிரேரிக்க முடியும். ஆனாலும் பிரேரிப்பதைக் கூட செயற்குழுவிடமே விட்டுள்ளேன். ஏனெனில் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு உறுப்பினரின் தகைமைகளையும் பரிசீலிக்க வேண்டும். மத்திய குழுவின் ஒவ்வொரு நிர்வாக உறுப்பினருக்கும் வெவ்வேறு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய இடத்தையளிப்பதே எமது கட்சியின் கொள்கை. எமது கட்சியைப் பொறுத்தவரையில் ஆயுட்காலத் தலைவர் என்று எந்தப் பதவியும் இல்லை. தலைமைத்துவத்தை மாற்ற முடியும்.

எமது கட்சி உறுதியானது. தற்காலிகமான கட்சி அல்ல. நீண்ட தூர பயணத்துக்காகவும் தூர நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். கூட்டமைப்பு அமைக்கும் போது எவர் வந்தாலும் நாம் இணைத்துக்கொள்வோம். அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி வந்தாலும் நாம் அதனையும் இணைத்துக்கொள்வோம்.

இது எமது புதிய அரசியல் பயணம் ஜனநாயகத்தை நோக்கிய பயணம். எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம்.13ஆவது  அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். வெளிநாடுகளுக்குச் சென்று 13 பிளஸ் என்று சொல்லிக்கொண்டு இங்கு அதற்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் நிலையில் நாமில்லை. 13 ஆவது அரசியலமைப்பால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த மாகாணசபை முறைமை இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அதுவும் தற்போதுள்ள நிலையிலேயே மாகாண சபை முறைமைகள் இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. இதேவேளை, மாகாண சபை முறையை பலப்படுத்த வேண்டுமே தவிர, அதனை பலவீனப்படுத்த எத்தனிக்கக் கூடாது. சிலர் மாகாண சபை முறையை வலுப்படுத்தாது பலவீனப்படுத்து கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
நாட்டின் இனப்பிரச்சினைக்கு கடந்த 72 வருட காலமாகவே எவ்வித அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை. அதுவும் ஜே.ஆர். ஜெயவர்தனவே மாகாண சபை முறை மூலம் தீர்வொன்றை வழங்கியிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் அதில் ஓர் உறுப்பினராக இருந்தேன். எனவே மாகாண சபை முறைமையை பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

குடிபோதையில் தந்தையை கொலையை செய்த மகன் !

குடிபோதையில் இருந்த மகன் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் ஒன்று கஹவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

கஹவத்தை-ஹவ்பேவத்த பகுதியை சேர்ந்த 70 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் உயிரிழந்தவரின் மகன் (40 வயது) கஹவத்தை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதாகவும் அதனால் சந்தேக நபர் தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கஹவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.