09

09

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பாக அடுத்தவாரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் விரிவான பேச்சு ” – மாவை சேனாதிராஜா

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பில் அடுத்த வாரம் விரிவான சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:-

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியூடாக என்னைத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேரில் பேசுவோம் என்று கூறினார். அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நான், பேச்சை உடன் ஒழுங்கு செய்யுங்கள் என்று அமைச்சரிடம் தெரிவித்தேன்.

இந்தத் தகவலை நான் உடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் தெரிவித்திருந்தேன். நாடாளுமன்றத்தில் அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பில் உரையாட வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அதற்கமைய அவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.

சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பிணையில் விடுவிப்பது தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது எனவும், அது பற்றி ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் கூறினார்.

அதற்கான முன்னேற்பாடாக அடுத்த வாரம் தனது அமைச்சில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவான பேச்சுக்கு ஒழுங்கு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை என்னைத் தொலைபேசியில் மீண்டும் தொடர்புகொண்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சில நிமிடங்கள் பேசினார். இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் தனது அமைச்சில் விரிவான பேச்சுக்கு ஒழுங்கு செய்யப்படும் என்றும், அதற்கான திகதியை அறிவிப்பேன் என்றும் அவர் என்னிடமும் கூறினார்.

அரசின் நடவடிக்கைக்கமைய தமிழ் அரசியல் கைதிகள் பிணையிலாவது விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும். இதை அமைச்சர் தினேஷிடம் நேற்று நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தேன் – என்றார்.

இது ஒருபுறமிருக்க “அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது  என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் அண்மயில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படவேண்டிய ஒன்று” – யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜா

“யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படவேண்டிய ஒன்று” என யாழ்ப்பாணப்பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் இது குறித்து பேசிய அவர்,

சட்டபூர்வமற்று எது கட்டப்பட்டாலும் அது அகற்றப்பட வேண்டும் என எழுத்து மூலமாக எமக்கு அனுப்பப்பட்டது. அகற்றப்பட்ட பின் இதனை அறிவிக்க வேண்டும். இது கட்டப்பட்டது தொடர்பில் தமக்கு புலனாய்வு மூலம் தகவல் கிடைத்ததாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் இந்த விடயத்தை பராமரிப்பு தரப்பினருக்கு அனுப்பியிருந்தேன். இதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அகற்றப்படவேண்டிய விடயம்.

சின்ன அத்திவாரக்கல்லு வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என்று உள்ளது. சிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர். ஆர்வக்கோளாறில் வந்துள்ளார்கள்,

அவர்கள் தாங்களாக போகாது விடின் மிரட்டல்களை கையாளுவோம்”  எனவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களைப்‌ ‌படுகொலை‌ ‌செய்பவர்களுக்கே‌ ‌பதவி‌ ‌உயர்வுகளும்,‌ ‌பதக்கங்களும்,‌ ‌மன்னிப்புக்களும்‌ ‌ வழங்கி‌ ‌ஊக்கிவிக்கப்படுகின்றனர்” – ‌சி.வி.விக்னேஸ்வரன்

“தமிழர்களைப்‌ ‌படுகொலை‌ ‌செய்பவர்களுக்கே‌ ‌பதவி‌ ‌உயர்வுகளும்,‌ ‌பதக்கங்களும்,‌ ‌மன்னிப்புக்களும்‌ ‌
வழங்கி‌ ‌ஊக்கிவிக்கப்படுகின்றனர்” என நாடாளுமன்ற‌ ‌உறுப்பினர் நீதியரசர்‌ ‌சி.வி.விக்னேஸ்வரன்‌ ‌தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில்‌ ‌ ‌நாட்டின்‌ ‌தற்போதைய‌ ‌நிலை‌ ‌சம்பந்தமான‌ ‌விவாதத்தின் போது கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் பாராளுமன்றத்தில்‌ ‌ ‌மேலும் போசிய போது ,

‌மாண்புமிகு‌ ‌சபாநாயகர்‌ ‌அவர்களே!‌ ‌

இந்த‌ ‌அரசாங்கம்‌ ‌எல்லா‌ ‌இலங்கை‌ ‌மக்களுக்குமான‌ ‌அரசாங்கம்‌ ‌அல்ல‌ ‌என்பதை‌ ‌சொல்லிலும்‌ ‌
செயலிலும்‌ ‌நிரூபித்து‌ ‌வருகின்றது.‌ ‌தங்களுக்கு‌ ‌வாக்களித்த‌ ‌பௌத்த‌ ‌சிங்கள‌ ‌மக்களின்‌ ‌விருப்பங்களுக்கு ‌ ‌அமைவாகவே‌ ‌செயற்படமுடியும்‌ ‌என்று‌ ‌ஜனாதிபதி‌ ‌மற்றும்‌ ‌அரசாங்க‌ ‌
உறுப்பினர்கள்‌ ‌வெளிப்படையாகவே‌ ‌கூறிவருகின்றனர்.‌ ‌ ‌

யாழ்ப்பாணம்‌ ‌மிருசுவில்‌ ‌பிரதேசத்தில்‌ ‌மூன்று‌ ‌சிறுவர்கள்‌ ‌உட்பட‌ ‌எட்டு‌ ‌தமிழர்களை‌ ‌படுகொலை‌ ‌
செய்தமைக்காக‌ ‌மரண‌ ‌தண்டனை‌ ‌விதிக்கப்பட்ட‌ ‌முன்னாள்‌ ‌இராணுவ‌ ‌அதிகாரி‌ ‌சுனில்‌ ‌ரத்னாயக்கவுக்கு‌ ‌
ஜனாதிபதி‌ ‌கோட்டாபய‌ ‌ராஜபக்ஸ‌ ‌மன்னிப்பு‌ ‌அளித்து‌ ‌கடந்த‌ ‌வருடம்‌ ‌மார்ச்‌ ‌26ந்‌ ‌திகதி‌ ‌அன்று‌ ‌விடுதலை‌ ‌செய்துள்ளார்.‌ ‌அதுவும்‌ ‌எந்தவித‌ ‌யுத்தமும்‌ ‌இடம்‌ ‌பெறாத‌ ‌இடத்தில்‌ ‌அவர்‌ ‌இந்தப்‌ ‌படுகொலையைச்‌ ‌செய்திருந்தார்.‌ ‌

குறிப்பாக‌ ‌சட்டம்,‌ ‌ஒழுங்கு,‌ ‌பாதுகாப்பு‌ ‌துறைகளில்‌ ‌வேலை‌ ‌செய்பவர்கள்‌ ‌தவறிழைத்தால்‌ ‌அவர்களுக்கான‌ ‌தண்டனையைக்‌ ‌கடுமையாக‌ ‌நடைமுறைப்‌ ‌படுத்துவதே‌ ‌வழமையான‌ ‌நடைமுறையாகும்.‌ ‌ஆனால்‌ ‌இங்கு‌ ‌தமிழர்களைப்‌ ‌படுகொலை‌ ‌செய்பவர்களுக்கே‌ ‌பதவி‌ ‌உயர்வுகளும்,‌ ‌பதக்கங்களும்,‌ ‌மன்னிப்புக்களும்‌ ‌
வழங்கி‌ ‌ஊக்கிவிக்கப்படுகின்றனர்.‌ ‌இத்தகைய‌ ‌காரணங்களினால்‌ ‌தான்‌ ‌கடந்த‌ ‌காலங்களில்‌ ‌எமது‌ ‌இளைஞர்கள்‌ ‌ஆயுதம்‌ ‌ஏந்த‌ ‌ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.‌ ‌ஒரே‌ ‌நாடு,‌ ‌ஒரே‌ ‌சட்டம்‌ ‌என‌ ‌அரசாங்கத்தின்‌ ‌எல்லா‌ ‌உறுப்பினர்களும்‌ ‌கூறிவருகின்றனர்.‌ ‌ஆனால்,‌ ‌நடைமுறையில்‌ ‌எமக்கென‌ ‌வேறு‌ ‌சட்டம்‌ ‌நீதிக்கு‌ ‌ முரணான‌ ‌வகையில்‌ ‌பின்பற்றப்படுகின்றது.‌ ‌இதுதான்‌ ‌யதார்த்தம்.‌ ‌உங்களைப்‌ ‌பொறுத்தவரையில்‌ ‌ நாம்‌ ‌வேறு‌ ‌நாட்டைச்‌ ‌சேர்ந்தவர்கள்.‌ ‌ஆகவே,‌ ‌எமக்கான‌ ‌நீதியை‌ ‌நாம்‌ ‌தான்‌ ‌சர்வதேச‌ ‌சட்டங்களுக்கு‌ ‌அமைவாக‌ ‌பெற்றுக்‌ ‌கொள்ளவேண்டும்.‌ ‌ ‌

எமது‌ ‌இளைஞர்களின்‌ ‌ஆயுதப்‌ ‌போராட்டம்‌ ‌நியாயமானது‌ ‌என்பதை‌ ‌இன்று‌ ‌சர்வதேச‌ ‌ரீதியாக‌ ‌அரசாங்கத்தின்‌ ‌செயற்பாடுகளே‌ ‌நிரூபிக்கும்‌ ‌வகையில்‌ ‌அமைந்துள்ளன.‌ ‌ நாம்‌ ‌இலங்கையர்களாக‌ ‌முன்னோக்கி‌ ‌செல்லப்‌ ‌போகின்றோமா‌?‌அல்லது‌ ‌தொடர்ந்தும்‌ ‌குறுகிய‌ ‌ அரசியல்‌ ‌இலாபங்களுக்காக‌ ‌இனங்களாகப்‌ ‌பிரிந்து‌ ‌பின்னோக்கிச்‌ ‌செல்லப்‌ ‌போகின்றோமா?‌ ‌என்பதை‌ ‌ஆட்சியாளர்களே‌ ‌தீர்மானிக்க‌ ‌வேண்டும்.‌ ‌

இந்தச்‌ ‌சந்தர்ப்பத்தில்‌ ‌தமிழ்‌ ‌மக்களும்‌ ‌இந்த‌ ‌நாட்டில்‌ ‌உரிய‌ ‌அதிகாரப்‌ ‌பகிர்வைப்‌ ‌பெற்று‌ ‌சமத்துவத்துடன்‌ ‌வாழ‌ ‌வேண்டும்‌ ‌என்று‌ ‌துணிச்சலுடன்‌ ‌குரல்‌ ‌கொடுக்கும்‌ ‌சிங்கள‌ ‌சகோதர‌ ‌சகோதரிமார்,‌ ‌சிங்கள‌ ‌புத்திஜீவிகள்,‌ ‌பௌத்த‌ ‌மதகுருமார்‌ ‌மற்றும்‌ ‌ஊடகவியலாளர்களுக்கு‌ ‌எனது‌ ‌நன்றிகளை‌ ‌நான்‌ ‌இங்கு‌ ‌கூறி‌ ‌வைக்கின்றேன்.‌ ‌ ‌

தமிழ்‌ ‌அரசியல்‌ ‌கைதிகள்‌ ‌மன்னிப்பு‌ ‌அளிக்கப்பட்டு‌ ‌விடுதலை‌ ‌செய்யப்பட‌ ‌வேண்டும்‌ ‌என்பதற்கு‌ ‌
பல‌ ‌காரணங்கள்‌ ‌உண்டு‌ ‌-‌ ‌ ‌

1.ஏற்கனவே‌ ‌நாட்டின்‌ ‌அரசாங்கத்தை‌ ‌மாற்றப்‌ ‌போர்‌ ‌புரிந்த‌ ‌ஜே.வீ.பீ‌ ‌யினர்‌ ‌ அனைவருக்கும்‌ ‌மன்னிப்பு‌ வழங்கியாகிவிட்டது.‌  ‌எமது‌ ‌இளைஞர்கள்‌ ‌தமது‌ ‌உரிமைகளுக்காகவே‌ ‌ போரிட்டவர்கள்.‌ ‌அரசாங்கத்தை‌ ‌மாற்ற‌ ‌அல்ல.‌ ‌ஆகவே‌ ‌அவர்களை‌ ‌விடுவிக்க‌ ‌வேண்டும்.‌ ‌

2.போரில்‌ ‌தலைமைத்துவம்‌ ‌வகித்த,‌ ‌ஆணைகள்‌ ‌இட்ட‌ ‌தமிழ்‌ ‌இயக்க‌ ‌முக்கியஸ்தர்கள்‌ ‌பலர்‌ ‌அரசாங்கத்தால்‌ ‌மிக்க‌ ‌நெருக்கத்துடன்‌ ‌அணைத்துக்‌ ‌கொள்ளப்பட்டுள்ளனர்.‌ ‌ஆனால்‌ ‌சாதாரண‌ ‌இயக்க‌ ‌அங்கத்தவர்கள்‌ ‌மிகக்‌ ‌கொடூரமாக‌ ‌நடத்தப்பட்டு‌ ‌பல‌ ‌காலமாக‌ ‌சிறையில்‌ ‌
அடைக்கப்பட்டுள்ளனர்.‌ ‌ஏன்‌ ‌என்ற‌ ‌கேள்விக்குப்‌ ‌பதில்‌ ‌இல்லை.‌ ‌

3.கொரோனா‌ ‌தொற்றினால்‌ ‌அவஸ்தைப்படும்‌ ‌தமிழ்‌ ‌சிறைக்‌ ‌கைதிகளைத்‌ ‌தொடர்ந்து‌ ‌தென்னாட்டுச்‌ ‌சிறைகளில்‌ ‌வைத்திருப்பது‌ ‌அவர்களுக்கு‌ ‌பல‌ ‌பிரச்சனைகளைத்‌ ‌தந்து‌ ‌வருகின்றது.‌ ‌அவர்களை‌ ‌விசேடமாக‌ ‌வட‌ ‌கிழக்கு‌ ‌மாகாணங்களில்‌ ‌வைத்துத்‌ ‌தனிமைப்படுத்தினால்‌ ‌தாங்கள்‌ ‌
பாதுகாப்பான‌ ‌இடங்களில்‌ ‌இருப்பதாகவாவது‌ ‌அவர்கள்‌ ‌உணர்வார்கள்.‌ ‌பல‌ ‌தடவைகள்‌ ‌தமிழ்ச்‌ ‌
சிறைக்‌ ‌கைதிகளை‌ ‌எங்கள்‌ ‌தென்னகச்சிறைகளில்‌ ‌கொடூரமாகத்‌ ‌தாக்கப்பட்டு‌ ‌கொல்லப்பட்டமை‌ ‌
உங்கள்‌ ‌எல்லோருக்கும்‌ ‌நினைவிருக்கும்.‌ ‌

4.போர்‌ ‌முடிவிற்கு‌ ‌வர‌ ‌முன்னர்‌ ‌கைது‌ ‌செய்யப்பட்டு‌ ‌சிறைப்பட்டவர்களை‌ ‌போர்‌ ‌முடிந்து‌ ‌பத்து‌ ‌வருடங்களுக்கு‌ ‌மேல்‌ ‌ஆன‌ ‌படியால்‌ ‌அவர்களுக்கு‌ ‌பொது‌ ‌மன்னிப்பு‌ ‌வழங்குவதில்‌ ‌என்ன‌ ‌பிழை‌ ‌இருக்கின்றது?‌ ‌

5.இந்தத்‌ ‌தமிழ்‌ ‌அரசியல்‌ ‌கைதிகள்‌ ‌அனைவரும்‌ ‌பயங்கரவாத‌ ‌தடைச்‌ ‌சட்டத்தின்‌ ‌கீழ்‌ ‌கைது‌ ‌செய்யப்பட்டவர்கள்.‌ ‌பயங்கரவாதத்‌ ‌தடைச்சட்டம்‌ ‌பொதுவான‌ ‌எமது‌ ‌சட்டக்‌ ‌கொள்கைகளுக்கு‌ ‌முரணான‌ ‌சட்டம்.‌ ‌குற்ற ஏற்பு‌ ‌வாக்குமூலத்தின்‌ ‌அடிப்படையில்‌ ‌சான்றுகள்,‌ ‌சாட்சிகள்‌ ‌
ஏதுமின்றியே‌ ‌தண்டனை‌ ‌வழங்கப்பட்டவர்கள்‌ ‌அவர்கள்.‌ ‌உச்ச‌ ‌நீதிமன்றத்தில்‌ ‌நான்‌ ‌அளித்த‌ ‌நாகமணி‌ ‌வழக்கின்‌ ‌சாராம்சத்தை‌ ‌விளங்கிக்‌ ‌கொண்டு‌ ‌குற்ற‌ ‌ஏற்பு‌ ‌வாக்கு‌ ‌
மூலத்துக்கு‌ ‌மேலதிகமாக‌ ‌சொல்லப்பட்ட‌ ‌குற்றம்‌ ‌உண்மையில்‌ ‌நடந்தது‌ ‌என்பதை‌ ‌உறுதிப்படுத்த‌ ‌ சாட்சியங்கள்‌ ‌பெறப்பட்டிருந்தால்‌ ‌பல‌ ‌வழக்குகள்‌ ‌தள்ளுபடி‌ ‌செய்யப்பட்டிருப்பன.‌ ‌ குற்றம்‌ ‌உண்மையில்‌ ‌புரியபட்டதா‌ ? ‌என்று‌ ‌அறியாமல்‌ ‌குற்ற‌ ‌ஒப்புதல்‌ ‌வாக்கு‌ ‌மூலத்தை‌ ‌
மட்டும்‌ ‌வைத்து‌ ‌தண்டனை‌ ‌வழங்குவது‌ ‌எவ்வாறு‌ ‌நியாயமாகும்‌ ‌என்பதை‌ ‌எமது‌ ‌ஜனாதிபதியும்‌ ‌
அரசாங்க‌ ‌மேல்‌ ‌மட்டமும்‌ ‌பரிசீலித்துப்‌ ‌பார்க்க‌ ‌வேண்டும்.‌ ‌

6.பௌத்த‌ ‌நாடு‌ ‌என்று‌ ‌தம்பட்டம்‌ ‌அளிக்கும்‌ ‌இந்‌ ‌நாடு‌ ‌பயங்கரவாதத்‌ ‌தடைச்‌ ‌சட்டம்‌ ‌போன்ற‌ ‌சட்டக்‌ ‌கொள்கைகளுக்கு‌ ‌எதிரான‌ ‌சட்டத்தின்‌ ‌அடிப்படையில்‌ ‌அரசியல்‌ ‌காரணங்களுக்காக‌ ‌சிறைக்கைதிகளை‌ ‌தொடர்ந்து‌ ‌சிறையில்‌ ‌அடைத்து‌ ‌வைத்திருப்பதை‌ ‌சரியா‌ ‌பிழையா,‌ ‌நீதியா‌ ‌அநீதியா‌ ‌என்று‌ ‌பரிசீலித்துப்‌ ‌பார்க்க‌ ‌வேண்டும்.‌ ‌பயங்கரவாதத்‌ ‌தடைச்‌ ‌சட்டம்‌ ‌அல்லாது‌ ‌ நாட்டின்‌ ‌வழமையான‌ ‌சட்டத்தின்‌ ‌கீழ்‌ ‌தமிழ்ச்‌ ‌சிறைக்‌ ‌கைதிகளுக்கு‌ ‌எதிரான‌ ‌வழக்குகள்‌ ‌ பதியப்பட்டிருந்தால்‌ ‌அத்தனை‌ ‌பேரும்‌ ‌தகுந்த‌ ‌சாட்சியங்கள்‌ ‌இல்லாததால்‌ ‌எப்போதோ‌ ‌
விடுதலை‌ ‌செய்யப்பட்டிருப்பர்.‌ ‌

ஆகவே‌ ‌தமிழ்‌ ‌அரசியற்‌ ‌கைதிகளை‌ ‌உடனே‌ ‌மன்னித்து‌ ‌விடுதலை‌ ‌செய்ய‌ ‌வேண்டும்‌ ‌என்று‌ ‌கேட்டு‌ ‌என்‌ ‌பேச்சை‌ ‌முடித்துக்‌ ‌கொள்கின்றேன்.‌ ‌

“இராணுவமும் பொலிஸாரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத்தமான செயல் அரங்கேறியுள்ளது.” – மாவை சேனாதிராஜா கண்டனம் !

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.”என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

காவல்து​றையினரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத்தமான செயல் அரங்கேறியுள்ளது.

தமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது.இது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.

இந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது” – என்றார்.

இரவோடு இரவாக யாழ்.பல்கலைகழகத்திலிருந்து இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் – குவிக்கப்பட்ட இராணுவம் – தொடரும் பதற்றம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்,  அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்  நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.

Image may contain: tree and outdoor

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய அரசு இடித்தழித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர்.

அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் காவல்துறையினரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

IMG 3664

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. பின்னர் வருகை தந்த காவல்துறையினரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்றிரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழக வாயில் முன் பெரும்பாலானோர் அமர்ந்து இருக்கின்றனர். எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற அச்ச நிலை காணப்படுகிறது.