10

10

“வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்”- நாளைய கர்த்தாலுக்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகம் முழுமையான ஆதரவு !

“வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்” என யாழ் முஸ்லிம் இளைஞர் கழக தலைவர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் ​மேலும் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய ஒன்றாகும். இச் செயற்பாட்டிற்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகமாக நாம் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதர உறவுகளின் மனங்களில் எவ்வளவு கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் அறிவோம். அவ் உறவுகளின் துயரத்தில் ‘மக்கள்’ என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் இணைந்து வாழ வேண்டும் என்பது நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் விடயமாகும். இவ் விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு தூரம் எமது முன்னகர்வுகளை எடுத்துவைத்திருக்கின்றோம் என்பது பற்றி நாம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபான்மை (தமிழ் முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றினைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளைய தினம் (11.01.2021) இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

‘வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நினைவு கூர்வது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” – அமைச்சர் சரத் வீரசேகர ட்வீட் !

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் பிரத்யேக சொத்து அல்ல. இது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் முயற்சி !

முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை சந்தித்தன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நினைவுத் தூபி அகற்றப்பட்ட விடயம் சம்பந்தமாக உண்மையில் தனக்கு மிகப்பெரும் அழுத்தம் இருந்ததாகவும், அதற்கான நிரூபம் தன்னிடம் இருப்பதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.

ஆகவே நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுப்பதாகவும், அதற்கு எங்களுடைய மற்றவர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும், இது தொடர்பில் மாணவர்களிடமும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவர் மிகவும் தெளிவான நிலையிலேயே இருக்கின்றார். அத்தோடு தான் அதனை தானாக ஆரம்பிப்பதாகவும் கூறியிருந்தார்” என தெரிவித்திருந்தார்.

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன்” – முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு தொடர்பாக அங்கஜன் இராமநாதன் கண்டனம் !

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக ால்வேறுபட்ட தரப்பினரும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே அங்கஜன் இராமநாதன் குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய  அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து கூறியிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் சமூகத்தின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் அவ் மக்கள் மனங்களில் உள்ள வடுக்களை அழித்துவிட முடியாது.

ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத் தூபியை உடைப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறிவிட்டது. எந்தவொரு செயற்பாட்டிற்கும் அனுமதி முக்கியம். கடந்த கால அரசியல் தலைமைகள் அன்றே நினைவுத் தூபிக்கான உரிய அனுமதியைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். அன்று விட்ட தவறு மற்றும் அசண்டையீனம் தான் இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நினைவுச் சின்னம் தனி ஒரு மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சொந்தமானது அல்ல. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்கள், போர் வீரர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றே இந்த நினைவுத் தூபி. இந்த உண்மையை சிங்கள மாணவர்களுக்கு எடுத்துரைத்திருந்தால் அவர்கள் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத் தூபியை அழிக்க வேண்டும் என சில தரப்புக்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தூபியை இடித்த பின்னரே எம்மால் அறிய முடிகிறது. இது தொடர்பில் எமக்கு முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நாம் இவ்வாறான விபரீதம் ஏற்பட முன்னதாகவே உரிய தரப்புக்களுடன் பேசி அதனை சுமூகமாக தீர்த்து வைத்திருக்க முடியும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இனங்களுக்கிடையே குரோதங்களைத் தோற்றுவிக்கும் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஓர் விடயம் இன்று வன்முறை வரை வளர்ந்துவிட்டது. என மேலும் அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பிரித்தானிய மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் கண்டனம் !

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரும் அதற்கான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரித்தானிய மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் மோதலில் துன்பகரமான விதத்தில் பலியானவர்களை நாங்கள் அனைவரும் நினைவில்வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது கடந்தகாலத்தின் காயங்களை ஆற்றுவதுடன் நல்லிணக்கத்திற்கு உதவும் எனவும் அமைச்சர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறியை தூண்டும் வகையில் கிண்டல் செய்த அவுஸ்ரேலிய ரசிகர்கள் – மைதானத்தில் பதற்றம் !

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, களத்தடுப்பு செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரைப் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இனவெறியை தூண்டும் வகையில் அவர்கள் பேசியதால் இந்த விவகாரம் குறித்து நடுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டத்தின்போதும் இந்திய வீரர்களை குறிவைத்து பார்வையாளர்கள் சிலர் பேசியதை சிராஜ் கவனித்துள்ளார். இதனால் அவர் பந்துவீச்சை நிறுத்தினார். பின்னர் நடுவர் மற்றும் சக வீரர்களிடம் இந்த தகவலை கூறினார். இந்திய வீரர்களை கிண்டல் செய்த 6 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 10 நிமிடத்திற்கு பிறகு போட்டி தொடங்கியது.
இனவெறியை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

“கொரோனா தோற்றம் பற்றி ஆய்வுசெய்யும் சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார்” – சீனா

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது.
இதற்கிடையே, சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுவை வுகான் நகருக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள சீனா, ஆய்வுக் குழுவினர் எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. ” – இரா.சம்பந்தன் காட்டம் !

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. ” என முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோரின் நினைவாகவே யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. இதன் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், இந்தத் தூபியை இரவோடிரவாக இடித்தழித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே நினைவுத்தூபியை இடித்தோம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். ஆனால், நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது பல்கலைக்கழக துணைவேந்தர்தான் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதேவேளை,  நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அப்படியெனில் இந்த நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?

ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும். உரிய தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்.

இந்தச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தற்போதைய நிலைமையில் தேவையற்ற செயல். ஒரு குழப்பத்தை – ஒரு புதிய பிரச்சினையைத் திட்டமிட்டு உருவாக்குகின்ற செயல்.

தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது” – அமைச்சர் சரத்வீரசேகர

“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை  நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது.இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது”  எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்தியா எங்கள் நட்பு நாடு என்பது உண்மை . இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம் ஆனால் அவர்கள் எங்களை அதனை செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது என சரத்வீரசேகர  குறிப்பிடடுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 13வது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது . அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம் ஆனால் நாங்களே தீர்மானிப்போம் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை. அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளது. புதிய அமைப்பு தேர்தல் முறைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும். இதன் காரணமாக மாகாணசபை முறை மாற்றப்படவேண்டும்” எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

“யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது” – ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தைத் தமிழ்க் கட்சியினர் தமது சுயலாப அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் எவரும் துணைபோகக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

பல்கலைக்கழகம் ஒரு கல்விக்கூடம். சகல இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒற்றுமையாகக் கற்கும் இடம். அங்கு அரசியலுக்கு இடமில்லை.போர்க்காலச் சின்னங்கள் பல்கலைக்கழகத்தில் எதற்காக நிறுவப்பட வேண்டும். யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த அரசின் காலத்திலும் அந்த எண்ணத்தில் சில மாணவர்கள் அங்கு செயற்பட்டார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துப் விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்தினார்கள்.

அந்தக் காலம் மாதிரி இப்போதைய காலத்தை மாணவர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் எடைபோடுவது தவறானதாகும்.பல்கலைக்கழத்தில் எது இருக்கவேண்டும்? எது இருக்கக்கூடாது? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு உண்டு. இதை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அந்தவகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த போர்க்காலச் சின்னமான நினைவுத்தூபியை துணைவேந்தர் அகற்றியுள்ளார்”  என குறிப்பிட்டார்