14

14

“பிரித்தானியாவுக்கு தமிழ் சமூகத்தினர் செய்த பங்களிப்பு அளப்பரியது” – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்வீட் !

“பிரித்தானியாவுக்கு தமிழ் சமூகத்தினர் செய்த பங்களிப்பு அளப்பரியது”என கூறி தமிழ்மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்ரில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் பதிவி்ட்ட வீடியோ வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
“ நம்முடைய அருமையான பிரிட்டன் தமிழ் சமூகத்தினர், உலகம்முழுவதும் பரந்திருக்கும் தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள்.

உங்கள் நண்பர்கள், குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் நாளாக இது அமையட்டும். இன்னும் கொண்டாடவும், எதிர்நோக்கி இருக்கவும் நிறைய இருக்கிறது என நம்புகிறேன்.

தித்திப்பான பொங்கல் வைப்பதோடு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இந்தநாளை கொண்டாடுவீர்கள். பாரம்பரியமாக தைத்திருநாள் அறுவடையை வரவேற்கும் நாளாக, கொண்டாடப்படுகிறது.

தமிழ் சமூகத்தினர் பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்பவர்களாக, பள்ளிகளில் ஆசியர்களாக, மருத்துவத்துறையில் முக்கியப் பொறுப்புகளிலும், நோயாளிகளை கனிவுடன் சிகிச்சையளிக்கும் பிரிவிலும் இருக்கிறாகள். தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது, மிகப்பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த பூமியில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்கும் மிகப் பெரிய இடமாக இந்த தேசத்தை மாற்றுவதற்கான நம் திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

அருமையான தமிழ்சமூகத்துக்கு எனது பெரு நன்றிகளை தெரிவித்து,பொங்கல் பண்டிகையையும் அடுத்து வருகின்ற நாட்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வாழ்த்துகிறேன். பானையில் பொங்கும் இனிப்பான பொங்கலைப் போன்று மகிழ்ச்சியும், செழிப்பும் ஆண்டுமுழுவதும் இருக்கட்டும்”
இவ்வாறு போரீஸ் ஜான்ஸன் தெரிவித்தார்.

“தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, அரசு இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது” – மனோ கணேசன்

“தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, அரசு இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசினுடைய சீனச்சார்பு போக்கு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்புத் துறைமுகம் இலாப வருமானம் பெறுகின்றது.  பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்புத் துறைமுகத்தில் சுமார் 70 குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்குப் போவதும், வருவதும்தான்.

பெரும் கொள்கலன்களைச் சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லாத் துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்குச் சரிபட்டு வராது. இந்தநிலையில், தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகைக்  கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றைப் பின்னர் சிறிய இந்தியக் கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்குச் செல்கின்றன.

இதுதான் பல பத்தாண்டுகளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்புத் துறைமுகமே ஓடுகின்றது. கொழும்புத் துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், அம்பாந்தோட்டை, திருகோணமலை) ஓடுகின்றன. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. இந்தநிலையில், இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஓர் ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால ‘இலவு காத்த கிளி வெளிநாட்டுக் கொள்கை’ இதுவாகும். புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையகத் தமிழரை, இலங்கையைச் சந்தோஷப்படுத்த, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா இணங்கியது. இதனால், இலங்கையில் தமிழரின், மலையகத் தமிழரின் அரசியல் பலம் குன்றியது. அதைத் தொடர்ந்து, கச்சதீவை, தமிழகத்தின் எதிர்ப்பைக் கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்குக் கொடுத்தது.

விடயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.  இப்போதும், இந்தியாவின் ‘இலங்கை கொள்கை’ காரணமாக, ஒரு பிராந்திய களஞ்சிய துறைமுகமாக, இந்தியப் பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்புத் துறைமுகம், இந்தியத் துறைமுகங்களை விட சிறப்பாகச் செயற்படுகின்றது.

இந்தநிலையில், இப்படி பொருளாதாரத்தில் பல மடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், ‘பிராந்திய களஞ்சிய துறைமுகம்’ என்பதைவிட, கொழும்பை ‘உலக களஞ்சிய துறைமுகமாக’ மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்கத் திட்டம் போடுகின்றார்கள். இலங்கையைத் தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிகக் கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகின்றோம்” என்று சொல்லும், கனவு திட்டம் இதுவாகும்.

அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவைப் புறக்கணித்து விட்டு, இந்தக் கனவுத் திட்டத்துக்காக சீனா ஆதரவுடன் கொழும்புத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். இதில் சீனாவின் நோக்கம் என்னவென்பது சீனாவுக்கு மட்டுமே தெரியும்.

இதற்காகத் கொழும்புத் துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான தெற்காசிய நுழைவாயில் முனையம்(South Asian Gateway Termina)l (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்குக் கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்குக் கீழ் கட்டுகின்றார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்குக்  கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம்.

SAGT முனையம் முழுமையாக சீனாவுக்குக் கொடுக்கப்பட்டபோது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51 சதவீதம், ஜப்பான் நிறுவனத்துக்கு 29 சதவீதம், இந்திய நிறுவனத்துக்கு 20 சதவீதம் என்ற ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே, இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்பு தெரியுது.

இந்நிலையில், இன்று நரேந்திர மோடியின் இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கின்றது. இதனை பத்தாண்டுகளாகக் கொழும்புத் துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய கடல் எல்லைக்கு அண்மையில், கொழும்புத் துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவதையும் இந்தியாவால் சகிக்க முடியவில்லை.

தமிழகத்தின் தென்கோடியில் கொளச்சல் என்ற இடத்தில் புதுத் துறைமுகம் ஒன்றைக் கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கின்றது. மேலும், கேரளத்திலும், அந்தமானிலும் புதுத் துறைமுகங்கள் கட்டவும் முனைகின்றது. இவை உருவாகிவிட்டால் இந்திய கொள்கலன்கள் கொழும்பு வரத் தேவையில்லை. இது இலங்கைக்குப் பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்தியத் துறைமுகம் இறக்கி வைத்து, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.

தூரத்து உறவுக்காரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனைக் பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய ‘ரிஸ்க்’ எடுக்கின்றது.

தற்போது இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, இல்லாத வருவாயைத் தேடி ஓடுகிறது. ‘இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதைத் தேடும்’ இந்த ‘ரிஸ்க்’, வெறும் பொருளாதார ‘ரிஸ்க்’ மட்டுமல்ல, அரசியல் ‘ரிஸ்க்’கும்கூட என்பதை உடனடி எதிர்காலம் காட்டலாம்” – என்றுள்ளது.

டொனால்ட் ட்ரம்பினை பதவியில் இருந்து நீக்க பிரிதிநிதிகள் சபையில் பெரும்பான்மை ஆதரவு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்திகதி நடைபெற்றது.
அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌ இதற்காக டொனால்டு டிரம்பை பதவி நீக்க வகைசெய்யும் தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டன. இதற்காக, பிரிதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை ஜனநாயக கட்சிகள் மேற்கொண்டன.

இந்நிலையில், டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 222 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 10 குடியரசு கட்சி உறுப்பினர்களும் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக பதவிநீக்க நடைமுறைகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதிர்கொள்கிறார். தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.
குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி பதவியில்
இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

“தமிழ் மக்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு எந்தக் கருமத்தையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியாது.” – தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் இரா.சம்பந்தன் !

“தமிழ் மக்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு எந்தக் கருமத்தையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியாது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தொடர்பாக இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும். புதிய அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி,  சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.

எமது மக்களைப் பொறுத்தவரை – எம்மைப் பொறுத்தவரை ஒரு நியாயமான – சமத்துவமான – அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கின்ற – நாட்டுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத – சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய – நீடித்து நிலைத்திருக்கக்கூடிய – நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய புதிய அரசமைப்பு உருவாகுவதற்கு நாம் பரிபூரண உதவி வழங்குவோம்.

நிரந்தர அரசியல் தீர்வின் ஊடாகவே நாட்டு மக்களின் எதிர்காலம் வளமடையும் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அந்தத் தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு கிடைக்க இன்றைய நாளில் பிரார்த்தனை செய்வோம்” – என்றார்.