குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி ஒரு நபர் ஷூவை வீச முயன்றார். ஆனால் போலீஸார் பாய்ந்து சென்று அந்த ஷூவை மடக்கிப் பிடித்து விட்டனர். அந்த நபரும் கைது செய்யப்பட்டார். அகமதாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ஷூவை எடுத்து அவரை நோக்கி வீச முயன்றார்.
ஆனால் இதைப் பார்த்து விட்ட போலீஸார் பாய்ந்து சென்று அந்த நபரை மடக்கினர். இதனால் ஷூ பாதியிலேயே விழுந்து விட்டது. பின்னர் அந்த நபரை குண்டுக்கட்டாக அங்கிருந்து கொண்டு சென்றனர். ஷூ வீசிய நபருக்கு 25 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர், என்ன பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்துத் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்த மாதத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஷூ வீசினார். இதுதான் இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த முதல் பரபரப்பு ஷூ வீச்சு சம்பவம். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டால், அன்வர் உசேன் ஆகியோர் மீதும், அத்வானி மீது செருப்பும் வீசப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை நோக்கி ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.