வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய தமிழ் உத்தியோகத்தர்களை உடனடியாக சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ், சிங்கள, ஆங்கில மொழியில் கரும மாற்றக் கூடிய தேர்ச்சி இவர்களுக்கு இருத்தல் அவசியம் விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றங்களுக்கான இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கில் கல்வி கற்ற, சேவை செய்த, தொழில்வாண்மையாளர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாக இருந்தது. இவ்வாறான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களது ஆலோசனைகளையும் கேட்டமைக்காக தொழில்வாண்மையாளர்கள் பசில் ராஜபக்ஷ எம்.பியை பாராட்டியதுடன் எந்நேரமும் ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் கூறினார்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மருத்துவதுறை சார்ந்த டாக்டர்கள், விவசாயத்துறை நீர்ப்பாசனத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கின் கல்வி அபிவிருத்தி, விவசாய அபிவிரத்தி, நீர்பாசன திட்டங்கள், உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஆரம்பித்தல் குறித்தும் நீண்ட நேரம் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தொழில்வாண்மை யாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.
வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நேரம் கைகூடியுள்ளது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் செல்லும் போது மொழிப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பாரிய பிரச்சினையாக இருக்கிறது என புத்திஜீவிகள், தொழிவாண்மையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்தே பசில் ராஜபக்ஷ தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற தமிழ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வது என முடிவு செய்துள்ளார்.விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள் ளன. சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களின் தகைமைகள் வயது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன.