பெருந் தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்னும் இவை தமக்கு வழங்கப்படாமை குறித்து தபால் சேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது, தமது சொந்த சைக்கிள்களையே கடமையின்போது பயன்படுத்திவரும் இவர்களுக்குச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, தோட்டப்பகுதிகளில் கடிதங்களைச் சேகரிக்க ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் தபால் பெட்டிகளைப் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் இன்னும் அவை பொருத்தப்படவில்லை.
மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் நான்கு பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதினாறு பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஏழு பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.
எனவே, தபால் திணைக்களம் இவர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பனவற்றை வழங்க முன்வருவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இரண்டாம் கட்டத்திலான தபால் சேவகர்களையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், தபால் சேவகர்களைச் சேர்த்துக்கொள்ளும் முகமாக வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் உரியமுறையில் தோட்ட இளைஞர்களிடையே போய்ச் சேரவில்லையெனவும் இதனால், தகுதியும் திறமையும் இருந்தும் பலர் நியமனம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.