ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் பல தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.இந்த மாவட்டங்களில் பல நகர அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில் அதனை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். புதன்கிழமை மாலை வவுனியா நகரசபை தேர்தலுக்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.
நாம் நகரசபையை கைப்பற்றினால் மக்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான சகல தேவைகளையும் செய்வோம்.எங்களுடைய கட்சி சின்னத்தில் ஈ.பி.டி.பி.,ஈரோஸ், ரெலோ சிறி அணியினர் இணைந்து போட்டியிடுகின்றனர். அத்துடன் அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸு இணைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
யுத்தம் முடிந்துவிட்டது.அபிவிருத்தியே முக்கிய இலக்காகவுள்ளது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அபிவிருத்தி வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் ரிசாட் பேசுகையில்; வடக்கே மூன்று சமூகங்களையும் சேர்ந்த மக்களை ஒரே அணியில் தேர்தலில் பங்கு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த இந்த அரசாங்கத்திற்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். தேவைகள் இனம்காணப்பட்டு வடக்கின் வசந்தம் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதற்காகவே ஒரு அணியில் போட்டியிடுகிறோம் என்றார்.