பிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும், அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1996 இல் கொண்டுவந்த சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி இந்த நீதிமன்றங்கள் செயற்படுகின்றன.
ஒரு பிரச்சினை தொடர்பில் தீர்வுகாண விளையும் இரு தரப்பினரும் விரும்பும் பட்சத்தில், அவர்களுடைய பிரச்சினையில் முடிவு சொல்ல தீர்ப்பாயங்களை அந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சில முஸ்லிம் விசாரணை மன்றங்கள் அதற்கும் மேலாக அதிக தூரம் போய்விடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம் பள்ளிவாசல்களில் இயங்கும் இத்தகைய ஷரியா நீதிமன்றங்கள், பிரிட்டிஷ் நீதி முறைமைகளுக்கு முரணாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கைக்குள்ளும் தமது அதிகாரத்தை செலுத்த விளைவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பலதார மணம், மனைவியிடம் பலவந்தமாக பாலியல் உறவு கோருவதற்கான கணவனின் உரிமை மற்றும் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்யக் கூடாது என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தும், பிரிட்டிஷ் சட்டங்களுக்கு பொருந்தாத தீர்ப்புக்களை இந்த நீதிமன்றங்கள் வழங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.