வடக்கில் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறும் அதேசமயம் அதற்கு சமாந்தரமாக கொக்காவில் பகுதியில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் பொருட்டு 170 அடி உயரமுடைய புதிய ஒளிபரப்புக் கோபுரமொன்று அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கோபுரம் இருந்த இடத்திலேயே புதிய கோபுரமும் அமைக்கப்படவிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போது பழைய கோபுரம் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கண்ணிவெடி அகற்றல் மற்றும் நிர்மாணப் பணிகளுக்கு ஏற்புடைய வகையில் நிலத்தை மட்டமாக்குதல் போன்ற அடிப்படை முன்னேற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் விசேட படையணி3 இனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிலையம் வடக்கு முழுவதும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.