சிறுமி உட்பட 3 பெண்களின் சடலங்கள் நுவரெலியா பகுதி வீடொன்றிலிருந்து மீட்பு – 3 வயதுச் சிறுவனைக் காணவில்லை

நுவரெலியா, அம்பேவல பட்டிப்பொல பகுதியில் வீடொன்றிலிருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மூவரது சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் உட்பட 3 பெண்களது சடலங்களே மீட்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். பட்டிப்பொல ஜனப்பதிய என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; சந்திரதிலக என்பவர் மகியங்கனை தெகியத்தகண்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி, பிள்ளைகள் ஜனப்பதிய கிராமத்தில் வசித்து வந்தனர்.

சந்திரதிலக ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்துள்ளார். எனினும் வீடு பூட்டியிருக்கவே அந்தக் கிராமத்தில் உள்ள மைத்துனரின் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு நேற்றுக் காலை அங்கு வந்தபோதும் வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, மனைவியும் அவரது தாயும் மகளும் இறந்துகிடந்தனர். இது குறித்து அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு தெரிவிக்கவே பொலிஸார் அங்கு வந்து சேர்ந்தனர்.

இறந்துகிடந்த மூவரும் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதேநேரம், வீட்டிலிருந்த 3 வயது மகன் காணாமல் போயுள்ளார். பிரேமவதி (80 வயது) அவரது மகளும் சந்திரதிலகவின் மனைவியுமான மல்லிகா (35 வயது) மற்றும் அவரது 10 வயது மகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கான காரணம் குறித்து நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைக்காக 3 சடலங்களும் நானுஓயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டன. காணாமல் போன சிறுவனை பொலிஸார் தேடி வருவதுடன், கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *