இலங்கைத் தமிழர்களது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

Ravi Sundaralingamபாகம் 3
பழசுகள் புதியவை தாரா

முன்குறிப்பு: மேற்படி தலைப்புடன் இங்கு தரப்பட்டுள்ள கட்டுரை புலிகள் எனும்போது எவற்றைக் குறிக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, இயக்க-சாயல்கள் அற்ற கருத்துகள் சிலவற்றை முன்வைக்கின்றன. இவற்றை, (1) பழைய புதுசுகள், (2) புலிகள் என்றால் யார், என்ன? (3) தமிழீழச் சாதிகள், (4) புலிகளானவர் எம்மவரே என்ற உப-தலையங்கங்களுடன் தந்துள்ளோம். இறுதியில், கட்டுரை தமிழீக் கோரிக்கைகான வாதங்கள் தொடர முடியாதவை என்ற முடிவுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளமை தர்க்க ரீதியில் தவிர்க்க முடியாதது.

பூரண பொறுப்புணர்வுடன் சமூக, சமுதாய சிந்தை கொண்டு, மக்களது சகல சமுதாயத் தட்டுகளது எதிர்பார்ப்புகள்-அபிலாசைகள் என்பவற்றை தம்முள்ளேயும், மக்கள் மத்தியிலும் ஒழுங்குபடுத்திக் கொள்பவர்கள் முன்னோடிகள். “நாமே எல்லாம்”; என்ற தன்னுணர்வில் ஒரு சமூகத்தட்டின் சமூகப் பார்வையுடன், ‘சமூக-சேவை’ செய்ய முற்படுபவர்கள் முன்னுக்கு-ஓடுபவர்கள். என இவை கடந்தபாகத்தில் முன்வைத்த வரைவுகளும் ஒப்பீடுகளும். இவர்களைவிட ”எம்மைப் பார்..” என எல்லாத் திக்குகளிலும் முன்னுக்கு- ஓடுபவர்களின் பின்னால் பறந்து திரியும் கிலுகிலுப்பைக்காரரும் பலர் உள்ளனர்.

பொறுப்பான வாசகர்கள் இவற்றையும் கிரகித்து, வரிகளிடையே இருக்கக்கூடிய விளக்கங்களை தாமே தமக்குத் தந்து, அல்லது அனாவசியமானவை என விலக்கி, தமது கருமம் பற்றி வினவ முன்னரே, கிலுகிலுப்பைக்கார்கள் + முன்னுக்கு ஓடுபவர்கள் தமது கூட்டு முயற்சியால், எம்மால் என்றுமே தீர்க்க-முடியாத இன்னுமொரு மர்மத்தை எம்முன் வைத்துள்ளனர்.

“எமது மண்ணை மீட்டெடுப்பதற்கான போராட்டம்” என தொடுக்கப்பட்டது புலிகளது போர். பல மாவீரர் தினங்களையும், தலைவரது வருடாந்தப் பொழிப்புரையையும் கடந்து சென்ற போர், ஈழப்போர்கள் 1 முதல் 4 வரை எட்டியது அந்தப் போர். இன்றோ அது, மூன்று வேளைச் சாப்பாட்டுடன் ஏதாவது எழுத வேண்டும் என வெளி நாடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவனில்லாப்- புத்திமதிப் பண்டிதர்களுக்ககுக் கூட “போர்” அடிக்கும் துப்பறியும்- நாவலாக மாறிக் கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் எமது மக்களது அன்றாட- வாழ்வின் விடிவுக்காக, தமது பிரத்தியேக வாழ்க்கையின் அபிலாசைகளில் பாரிய தடங்கல்களையும் பலத்த பொருளாதார பின்னடைவையும் சந்தித்த போதும், இன்றும் தமது குறிக்கோள் பற்றிய சிந்தனையுடன் உள்ளவர்கள் பலர். இவர்கள் எல்லோரும் முன்அடி எடுத்து தமது கருத்துக்களை “இந்தா பிடி” என முன்வைப்பதோ, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதோ, பதவிகள் ஸ்தானங்கள் தேடிக் கொள்வதோ கிடையாது. இவர்கள் தமது மன வருத்தங்களை, மக்கள் பற்றிய ஏக்கங்களை வெளிக்காட்ட எம்மைப்போல சந்தர்ப்பங்கள் இல்லாதவர்கள், அவற்றைத் தேடாதவர்கள்.

தவறான வழிகளில் போயிருந்தாலும், எமது மக்களுக்காக தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தவர்கள், இன்று சூழ்ச்சிகள் சுத்துமாத்துகள் மர்ம-ஜாலைகளில் ஈடுபடுவதை, அல்லது ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு படும் வருத்தம், போராட்டமும் மக்களும் உள்ள நிலை கண்டு படும் கவலைகளிலும் பாரக்க பல மடங்கானது.

பழைய புதுசுகள்
இத் தொடரில் இடம் பெறுவதுதான், K.P என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளது புதிய தலைவர் பத்மநாதனது கைதும், அதனைத் தொடர்ந்த எவ்வளவோ கதைகளும், கட்டுரைகளும். இவைபற்றி என்னதான் எம்மால் சொல்ல முடியும்? அவற்றிகான தகவல்கள் எவ்விடமிருந்து வெளிவருகின்றன? இவ்றை அங்கும் இங்கும் இரகசியமாக வெளிவிடுபவர்களது நோக்கங்கள் என்ன? இவற்றிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாத நிலையில், விசனம் கொண்ட விலகலே பொறுப்பான பதில் அதற்கு.

பிரபாகரன் இறந்துவிட்டாரா? கொல்லப்பட்டாரா? சரண் அடைந்தாரா? பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் உள்ளாரா, அரசின் கைகளில் உள்ளாரா? என்ற மர்மங்கள் சூழ்ச்சிகள் போர்த்த துப்பறியும் கைங்காரியங்கள் முற்றுப்பெறும் முன்னரே மேலும் இந்தப் புதிய பரபரப்புகள்.

K.P எவ்வாறு யாருடைய துரோகத்தால் கைது செய்யப்பட்டார்? எந்தக் கிலுகிலுப்பைக்காரர்கள் அவரை அங்கும் இங்கும் இரகசியமாகச் சந்திக்கச் சென்றார்கள்? புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்று வெளிக்காட்டியபடி அவர்களுக்கு எதிராக கருமம் செய்பவர் யார்? புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கூறி அவர்களுக்காக அலுவல் செய்பவர்கள் யார்? புலிகள் என்றால் யார், K.P எனபவர் தலைமையிலான Transnational Government in Exile என்பதா அல்லது மாற்றாரது Global Tamil Forum என்பதா? என்றெல்லாம் எமது அறிவை பெருப்பிக்கும் பல தகவல்கள் இருப்பதாக பலர் சொல்லி நாமும்தான் கேள்விப்படுகிறோம்.

இப்படியான எமது பேரறிவு பற்றி புழுதி சேறு சகதிகளுள் தடுப்புக் காவலிலுள்ள எமது மக்கள் சரி, கைதிகளாகிவிட்ட தமிழ்ப் போராளிகள் சரி, என்னதான் சொல்வார்கள்? அல்லது இவைபற்றி ஏதாவது கரிசனம் அவர்களிடம் இருக்க முடியுமா?

ஒருவேளை, இவை அவசியமற்ற கேள்விகள். ஆனால், இப்பேரறிவு பற்றிய நாட்டமோ இருக்க முடியாது என்பதில் மட்டும் மிகுந்த அக்கறை எமக்கு. ஏன்?. போராட்டம் என்பது மக்களது உடமைகள் அவைபற்றிய உரிமைகள் பற்றிய சர்ச்சையே என்பதே எம்மை உழைக்கும் மக்களது வாழ்வுடன் ஈடுபடுத்தியது.

அதன் பின், இலக்கை விட்டகர்ந்து, கூர்-நோக்கை இழந்து, பாதையிலிருந்து இறங்கி மக்களையும், அவர்களது சர்ச்சைகள் பிரச்சனைகளையும் மறந்துவிட முடியாது. கிசுகிசுக்கள் குழப்பங்களுள் எம்மையும் ஆழ்த்திக் கொள்ளக் கூடாது. நாம், கூர்-நோக்குடன், அதாவது focus ஆக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைவிட வேறு முக்கிய சரித்திர அவதானிப்புகளும் இந் நிலைப்பாட்டிற்கு காரணமாகின்றன. அவை புலிகள் தமிழீழம் என்பவை பற்றி நாம் கொண்டுள்ள விளக்கங்களும் முடிவுகளுமாகும்.

சரித்திரம் என்பது வெறும் சம்பவங்களின் கோர்வை அல்ல. சரித்திரம் சொல்பவர்களது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள், மனோவியல் பாங்குகள், அக் காலகட்டத்தின் இலட்சிய, யதார்த்த சூழல், என்பவையும் சரித்திரத்தினுள் அடங்கிய சரித்திரமே. ஆகவேதான் சரித்திரத்தை ஆய்வு செய்யும் சரித்திரமும் உண்டு என்பதையும் அதனையே சரித்திரத்துவம் ((historiographyh) எனும் துறை விஞ்ஞானத்தின் உதவியுடன் உருவாகி உள்ளது. அதேவேளை, வர்க்க ரீதியில், சமூக-பொரளாதார அரசியல் நிலைப்பாடுகள் சொல்வதையே நாம் இலட்சியச்-சரித்திரம் (objective history) என்றழைப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.

புலிகள் என்றால் யார், என்ன?
புலிகள்பற்றி கருத்துச் சொல்பவர்கள் இன்று பலர். ஒருவர் சொல்வதை மற்றவராக முடிவில் Chinese whisper போல வேறேதோ ஒன்றாக விளைந்து வரும் வடிவங்களையே நாம் காண்கிறோம். புலிவெறுப்பை தளமாகக் கொண்டவர்களில் புலிகளது முடிவுக்கான காரியம் ஆற்றியவர்கள் காலம் கடந்த கதைகளை, புலிகள் செய்தது போலவே, சரித்திரமாக மாற்றிடும் முயற்சியில் உள்ளார்கள். இந்நிலையுள் சரித்திரம் பற்றிய பூரண குறிக்கோளுடன் தேடல்செய்வது இன்றும் வியாக்கியானங்கள் கொண்ட வினையாகவே உள்ளது. இதனால், ஆக்க பூர்வமானவர்கள் பின்தங்கி நிற்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

புலிகள் யார், புலிகள் எனும்போது எவற்றைக் குறித்து நிற்கின்றன? என்பவை சரித்திரம் எழுத முனைவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய கேள்விகள். புலிகள் எனும்போது ஒரு அரசியல்-இராணுவ அமைப்பை மட்டுமின்றி, தமிழர்களது, தமிழ் பேசும் சமுதாயங்களது நவீன-கால சரித்திரத்தைப் பற்றியும் வினவுகிறோம் என்ற அறிவின் உணர்வும், அதற்கான பொறுப்புணர்வும் அவசியம். ஆகவே, இக் கேள்விகளை அணுக வேண்டிய வழிமுறைகளோ பலவகைகளில் அமைய வேண்டும் என்பதும் அவசியம். எமக்கோ இன்று புலிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் சில ஆலோசனைகளை முன்வைப்பதால் அவை தொடர்பான கேள்விகளுடன் அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வகையில், “புலிகளது இராணுவத்தை தமிழீழக் கோரிக்கை தோற்கடித்ததா? அல்லது தமிழீழக் கோரிக்கைக்கு புலிகளது இராணுவம் காரணி ஆகிற்றா?” என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இவை இரண்டும் பாம்பின் வாயுள் அகப்பட்ட அதனது வால்போல ஒன்றுபடுத்தப்பட்ட கேள்விகள். ஆனால், விசுவாசங்களைத் தாண்டி தேடல் செய்பவர்களுக்கு அவை வேறுபட்ட விடயங்கள் என்பது புரியும்.

தமிழீழக் கோரிக்கையை புலிகள் கண்டு பிடிக்கவில்லை, மக்களிடம் கொண்டு சென்று வாக்குக் கேட்கவில்லை என்பது சமுதாய அறிவு.

வாசல் படியேறி வியாபாரம் செய்பவன் தோல்விகண்டால் வியாபாரியையா, வியாபாரப் பொருளையா பிழை சொல்வது என்பது அர்த்தமான கேள்வி.

இக் கேள்விகளுக்கு நேர்மையான சரித்திர பூர்வமான பதில் சொல்ல விளைபவர்கள் யாழ்குடாவில் நிலவும் சாதிப் பிரச்சனையை மூடிமறைத்துவிட முடியாது. எனவே, “புலிகள்” என்பதற்கு இவ்விடத்தில் இவ்வழியில் சில கருத்துகளை ஆய்வுகளுக்கு முன்வைக்க வேண்டி உள்ளது. ஆனால், நாம் முன்கூறியபடி ஒரு பாரிய பொருளினை ஒரு கோணப் பிம்பத்தை, சிறு துவாரத்தினூடாகத் தரும் முயற்சியே இது.

தமிழீழச் சாதிகள்
சாதிகள் எவ்வாறு உருவாகின, எவ்வாறு சமுதாயங்களுள் ஒழுங்குபடுத்தப்பட்டன என்பவை மிகவும் சிக்கலான சரித்திரப் பிரச்சனை தருபவை. இவைபற்றிய பதில்களை எம்மால் இங்கு தர முடியாது.

இடதுசாரி நிலைகொண்டு அவதானிப்புகளைச் செய்பவர்கள் சிலர், சாதிகளை வர்க்கங்களுடன் நிகர்படுத்திப் பேசுவதை கண்டுள்ளோம். ஆனால், ஆசிய உற்பத்தி முறைகள் ஐரோப்பிய மாதிரிகளிலிருந்து வேறுபட்டவை என்பதையும், வர்க்கங்கள் என்பதன் வரைவுகள் சாதிகளை இலகுவில் உள்ளடக்க மாட்டா என்பதையும் அறிவோம். மேலும், சாதிகளிடையே இடம்பெறும் சுரண்டல், சாதியினுள்ளே இடம்பெறும் சுரண்டலுடன் தோற்றத்தில் வேறுபட்டதாயினும் நடைமுறையில் ஒன்றுதான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, சாதிகளின் அடிப்படையில் வெள்ளாளர் வெள்ளாரையோ, கரையார் கரையாரையோ சுரண்டுவதில் வேறுபாடுகள் இல்லை என்பதே எமது கருத்து.

ஆயினும், கொத்தடிமைத்தனத்துள் ஒருசில மனிதர்களை, தலைமுறையை மட்டுமின்றி, அவர் பரம்பரைகளையும் நிரந்தரமாக உட்படுத்தி, அவர்களது உழைப்பினை மூலதனமாக்கிடும் சமுதாயக் கட்டமைப்பு இது என்பதில் மட்டும் கவனமிழக்க முடியாது.

சிங்கள அரசிடம் இருந்து விடுதலை பேசும் மனிதர்கள், தம்மிடையே உள்ள சாதியப் பிரச்சனையை நடைமுறையில் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்வதும், அரசியலில் சாதகமாகப் பாவித்துக் கொள்வதும், நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள். அதனைவிட, ஜனநாயகம் பேசுவோர் தம்மிடையே உள்ள சாதியப்-பழுவைப் போல மனிதாபிமானத்துக்கு குந்தகம் செய்யும் நடத்தைகள் எங்குமே இல்லை என்பதை உணராமல் பேசுவதையும், தாக்காட்டுக் காரணங்கள் சொல்வதையும் காண்கிறோம்.

சாதி பார்த்து குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்பவர்கள் சாதியின் பெயர் சொல்லிப் பேச மட்டும் தயங்குகிறார்கள், மறுக்கிறார்கள், சிலர் பிழையெனக் கூடச் சொல்கிறார்கள். இது ஒரு நாகரீகத்தன்மை என்பது சிலர் கொண்ட விளக்கமாக இருக்கலாம்.

ஆனால், உயர்சாதி நாகரீகத் தன்மைகளுக்கு சாதியமும் உயர்-மதித் (superiority complex) தனமுமே அடித்தளம் என்பதை மறந்துவிடலாகாது. உண்மையில் “பேசாதிருந்தால் கீழேயே வைத்துக் கொள்ளலாம்” என்ற தன்-சமுதாய உணர்வின்பால் எழும் விளக்கங்கள் இவை என்பதை மனோவியல் புரிந்தவர்கள் இலகுவாகக் கண்டுகொள்வர்.

இந்தியாவில் உயர்-சாதியினரும் கீழ்-சாதியினரும் தம்மை சாதியினால் அடையாளம் காட்டத் தயங்குவதில்லை எம்மில் பார்க்க சாதியப் பிரச்சனைகள் கொண்ட பிரதேசம் இந்தியா ஆக, அது எப்படி?

முதலாவதாக, இந்தியாவின் அரசியல் சாசனத்தின் 19வது சரத்துக்கள் மக்களது பொருளாதார நிலைப்படி, சாதியங்களது சமூக-பொருளாதார நிலைகளின்படி, தொழில் கல்வி என்ற துறைகளில் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறகிறது. இச் சட்டத்திற்கு தனியார் ஸ்தாபனங்களும் விதிவிலக்கல்ல என்பது கவனிக்க வேண்டியது. எனவே, சாதியத்தை முன் இழுப்பது தன் சமுதாயத்திலாவது சமுதாய-நகர்வைத் தரும், தனிமனிதரால் இயலுமாகின், அச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைக் குறித்து நிற்கும் விடயமாகிறது. ஆகவேதான், உயர்சாதி எனக் கருதப்படும் பிராமணச் சமுதாயம் தம்மை தாழ்த்தப்பட்டவர்களாகக் காட்டிட முற்படும் விசித்திரத்தையும் அங்கு நாம் காண்கிறோம். இரண்டாவதாக, இந்தியா பரப்பளவிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், நகர்புற வாழ்க்கையிலும் பாரிய அளவினைக் கொண்டமைவதால் சமுதாய-முன்நகரவு (social mobility) என்பது ஓரளவு சாதியங்களைத் தாண்டிப் போகக் கூடிய சாத்தியங்களைக் கொண்டதாக உள்ளது. மூன்றாவதாக, சாதியங்களைத் தளமாக்கி நேரடியான அரசியலில் பங்குபற்றக் கூடியதாக உள்ளமையும், மற்றைய வேளைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், ஆதிவாசிகள், என்ற கூட்டுப் போராட்டங்கள் சாத்தியம் ஆனவையாகத் தென்படுவதும் காரணமாகிறது. இவற்றில் மேலாக பல காரணிகளும் காரணங்களும் ஆழ்ந்த ஆய்வாளர்களால் கூற முடியும்.

ஆனால் எமக்கு, சாதிகளை இழுத்துப் பேசுவது நாகரீகமல்ல என்ற போலிவாதத்தை நிராகரிப்பதற்கு, இந்தியாவில் சாதியம் சமூக-அரசியலில் எவ்வாறு உள்ளாக்கப்படுகிறது என நாம் காட்டிய சான்றே போதும்.எனவே, பொருளாதார முன்னேற்றங்கள், சமுதாய-முன்நகர்வுகள், சமுதாயமாற்றங்கள் இடம்பெறாத தேக்கமான சமுதாயங்களிலே சாதிஎன்பது தனது பூரண காரியத்தை செய்யக் கூடியதாக உள்ளது. அங்கேதான் அவைபற்றிப் பேசுவது, உயர் சாதிகளைப் பொறுத்தவரை நாகரீகமற்றதாகவும், கீழ்சாதிகளைப் பொறுத்தவரை தமது சமுதாய ஸ்தானங்களை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்வதற்கான சூழ்சியாகவும் காணப்படக் கூடும். எனவே, இவ்வகையான தேங்கிய-சமுதாயங்களிடையே மேற்-சமுதாயங்களது உயர்-மதித் தன்மை தரும் குழப்பங்களுக்குப் பதிலாக கீழ்-சமுதாயங்கள் தம்மகத்தே உருவாக்கிடும் தாழ்வு-மதித் (inferiority complex) தன்மைகளின் விளைவுகள் எவ்வகைப்படும் என்பது சில்லறையான கேள்வியல்ல. மேலும், தமிழ்-சிங்கள வெறுப்பு-வாதங்களையும் குரோத-வெறிகளையும் இவற்றுடன் ஒப்பீடு செய்வதில் தவறுமல்ல.

இன்றுகூட இலண்டனில் புரட்சி பேசும் ‘உயர்-சாதி’ மனிதர்கள், வெள்ளையர் மத்தியிலே பிறந்து வளர்ந்த தமது பிள்ளைகளுக்கு “பேசிக் கல்யாணம்” செய்து வைப்பதையும், அப் பேச்சு வார்த்தைகள் தமது உயர்சாதிக் குடும்பங்களிடையே இடம்பெறும் விடயம் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், தம் பிள்ளைகள் யாராவது வெள்ளையரைக் கல்யாணம் செய்யும்போது மட்டும் வெள்ளையரது-சாதி வினவுவது கிடையாது.

வெள்ளையர்க்கு எம்மவர் தரும் மரியாதை, கைகுழைந்து வாய் குமைந்து மண்டியிடும் பக்குவம், அவர்களை ஏன் சாதியவாதிகளாக நிலை கொள்ளச் செய்கிறது, தமது மண்ணிற உடன் பிறப்புகளான இந்தியரை சிங்கள இஸ்லாமியரை, ஏன் கிறிஸ்தவரையும் குறைத்து மதிப்பிடவும், அவர்களுக்கு எதிரான மனோபாவத்தையும் தூண்டுகிறது என்பதற்கு ஓரளவு விளக்கங்கள் தரும். இந்நிலமையே இன்றும் உள்ளபோது, எமது போராடத்திற்கு எதிராக வேறெந்த விமர்சனங்களை யார் ஏன் தர வேண்டும்?

வெள்ளையரின் வருகை ஏற்கனவே உருவாகிவந்த வெள்ளாள-கரையார் போட்டிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது.
பாரம்பரிய வேளான்மையில் ஈடுபட்டிருந்த வெள்ளாளக் குடும்பங்களுள் பலர் கல்வி பெற்றதையும், அதற்காக மதமாற்றம் கூடச் செய்தமையும் நாம் அறிவோம். இவர்கள் பொதுவாக வெள்ளாராக மட்டுமின்றி, ஏற்கனவே இருந்த அதிகாரக்-குடும்பங்களைச் சேர்ந்தவராகையால் வெள்ளையரது அரச நிர்வாகத்தில் இலகுவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவருமானார்கள். இதனால், வெள்ளாளர் மத்தியில் புதியதொரு சமுதாயத் தட்டு உருவாகி வந்தது. அதே தருணம், வெள்ளையரது அரசாங்கம் கிழக்கு-இந்தியா வர்த்தக ஸ்தாபனத்தை அடிகொண்டு உருவாகியமையால் கரைகடந்த வாணிபம் முன்னரிலும் முன்னேற்றம் காணத் தொடங்கியது. இவ்வகையில் கரையோரச் சமுதாயங்கள், குறிப்பாக வல்வெட்டித்துறை மக்களில் பலர் வர்த்தகர்களாக மாறியதும், அவர்களது அடுத்த தலைமுறைகள் கல்வியில் ஈடுபடத் தொடங்கியமையும் நாம் அறிந்தவை.

இவ்வாறு மேலதிக- மூலதனத்தை (surplus-capital) சேகரிக்கத் தொடங்கிய கரையோரச் சமுதாயங்கள் அவற்றை முதலீடாகப் பாவிக்கும் வசதிகளை பெற்றிருக்கவில்லை. குடியான சமூகங்கள் நிலையான- முதலீடுகளிலேயே (fixed capital) தமது மேலதிக-மூலதனத்தை செய்யக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். அவ்வகையில், நிலம் என்பதே யாழ்குடாவில் முக்கிய வாய்பாக இருந்தது.

பயிரிடும் குடும்பக்காணிகளாக, வெள்ளாளச் சமுதாயத்தின் வரைவுதரும் பொருளாக இருக்கும் செம்பாட்டு மண்ணை கரையார் சமுதாயத்திற்கு விற்றிட அவர்கள் முன்வருவாரா என்ன? வெள்ளாளச் சமுதாயம் குடும்பம் என்ற கட்டுள் வரைவு செய்யப்பட்டது, ஊர்கள் என்ற சமுதாய ஒழுங்கில் அமைந்து கொண்டது. கரையார் சமுதாயங்களும் இதுபோல அமைந்தாலும், நிலம் என்ற விடயத்தில் பிறிதுபட்டவர்கள். இவற்றினால் உருவான சர்ச்சைகள் பலவாகினும், வெள்ளாளர் வெள்ளையருடன் சேர்ந்து பெற்ற அதிகாரப்பலம் அவர்களது ஸ்தானத்தை தொடரக் கூடியதாக உதவியது. 80 களில் கூட, கரையோரத் தீவுகளில் வாழ்ந்த வெள்ளாளர்கள் குடாநாட்டின் நடுப்பகுதிகளான நல்லூர் திருநெல்வேலி போன்ற ஊர்களுள் குடியேறிய போதும், கரையோரச் சமுதாயங்கள் அவ்வாறு ஊடுருவவில்லை என்பதும் அவதானிக்க வேண்டியவை.

பணமிருந்தும் நிலத்திற்கு வரமுடியாத நிலையைச் சந்தித்த கரையோரச் சமுதாயங்கள் வெள்ளாளரது அரசியல் ஓட்டங்களில் ஐயப் பார்வை கொள்வதும், தருணங்கள் கிட்டும்போது முகங்கொள்ள (challenge) முனைவதும் தவிர்க்க முடியாத சமுதாய நியதிகள். எனவே, தமிழர் கூட்டணியினர் வெற்று வாய்ப் பேச்சாளர்கள் என்று அம்பலமான பிற்பாடு, தரப்படுத்தலின் மத்தியில் வெள்ளாள இளம்சமுதாயம் போராட்டம் பேசிய போதிலும், ‘போராட்த்திற்கு’ தயாராக இருந்தவர்களில் கரையோரச் சமுதாயத்தினர் முன்னணிக்கு வந்தமை வியப்பதற்கில்லை.

எனவேதான், புலிகள் யார் என்ற கேள்விக்கு சாதிகளைச் சுற்றிவளைத்துப் பதில் சொல்ல முடியாது என்கிறோம்.
இவ்வாறு இருசாதிகளிடையேயான உரசல்கள் (antogonism) ஒருபுறமாக, ஏற்கனவே வர்த்தகத் தொடர்பிலிருந்த தமிழ்நாட்டுக் கரையோரங்கள் இயற்கையான பின்புலமாக, போராட்டத்திற்கு தயாராக இருந்த கரையோரச் சமுதாயம், குறிப்பாக வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள், தமது கைகளிலே அதிகாரத்தைப் பெற விளைந்ததும், பெற்றுக் கொண்டதும் எதிர்பார்க்க வேண்டியதே.

இனிமேல் நம்பிக்கை, விசுவாசம் என ஊர்தந்த சாதியங்களால் எலும்பூட்டப்பட்ட மனப்பாங்குகளும் இயக்கங்களின் அமைப்பு- வடிவங்களைத் தரவேண்டியதும் கட்டாயமாகி விடுகிறது. இதற்கு புலிகள் சிறந்த வெற்றிகண்ட அமைப்பு என்று கூறுவதில் தவறில்லை. அதேதருணம், அவற்றிக்கு நேர்மாறான சந்தேகம், துரோகம் என்பவையும் கூடவே அமைப்புகளின் மனோவியற் பாங்குகளில் பங்குகளாகும் என்பதும் எதிர்பார்த்திருக்க வேண்டியதே.

எனவே, புலிகள் கரையோரச் சமுதாயத்தினரின் ஆதிக்கத்தில் உருவான அமைப்பு என்பதில் ஒரு ஐயமும் இருக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் மையமாக இருந்த யாழ்ப்பாணத்தில், அவர்களின் அன்றைய பிரதிகளாக இன்றும் இருக்கும் வெளிநாடுகளில், மற்றெல்லா அமைப்புகளையும் அழிக்கும்வரை, புலிகளுக்கு பேராதரவு இருந்தது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

புலிகளது தளம் அமைப்பு ரீதியில் சாதியமயமானதாக அமைந்தபோது, அவர்கள் எப்படி மத்தியவர்க்க வெள்ளார்களது தமிழீழத் திட்டத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள நேரிட்டது? அதிலும், தமிழீழக் கோரிகையை கூட்டணியினரிடமிருந்து கையேற்ற PLOTE மற்றும் EROS, EPRLF போன்ற யாழ்ப்பாணத் தலைமைகள் கொண்ட அமைப்புகள் புரட்சி, சிங்கள உழைக்கும் மக்களுடன் கூட்டு என்று வேறுகதைகள் பேசும் காலத்தில் புலிகளும் இன்னொரு வகையில் வேறொரு குறைந்த-சாதிய மையல்களுடன் TELOவும் தழிழீழக் கோரிக்கையை கட்டிக் கொண்டதேன்? அவற்றிடையே மூரக்கமான போர் எழுந்தமைக்கு, இந்தியாயின் ஊடுருவல் என்ற காரணிகளைவிட சமுதாயக் காரணிகளும் ஊக்கு சக்தியாக அமைந்ததா? இவை எமது வெற்று அவதானிப்புகள்தானா? அல்லது இவற்றின் கீழும் அர்த்தமான காரணிகள் உள்ளனவா?

கரையோரச் சமுதாயங்கள் அரசுகளுடன், அதிகார அமைப்புகளுடன் கடல் சம்பந்தமான சர்ச்சைகளில் உலகில் எங்கும்தான் ஈடுபடுகின்றன. இவ்வகையில் வல்வை மக்களுக்கும் கொழும்பு அரசாங்கக் கெடுபிடியாளர்களுக்கும் இடையே பல பூசல்கள் இருந்தன. ஆனால், வெள்ளாளரது “மண்ணை மீட்கும்;” வாதம் இங்கே எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது?

புலிகளது தலைமையோ இப்படியாக அமைய, தமிழீழக் கோரிக்கையோ வேறுபட்ட நிலையில் இருந்தது. அதற்கு ஆரம்ப, இடை, இறுதிக் காலங்களில் சகலமக்களும் ஆதரவு தந்தார்களா? அல்லது ஆதரவு இருப்பதாக தவறாகக் கணிக்கப்பட்டதா? புலிகள்சரி, யாராயினும் தமிழீழம் பெற்றுத் தந்தால் போதும் என்ற உணர்வில் மக்கள் இருந்தார்களா? அதாவது, வியாபாரி யாரெனப் பார்க்காது பொருளின் பெறுமதியின் உணர்வால் மட்டும் விற்பனை ஆகிற்றா?

தமிழீழக் கோரிக்கைக்கு வடகிழக்கு இளம் சமுதாயத்திடம் ஆதரவு இல்லாவிடில் எந்த அமைப்பும் முன்னணிக்கு வந்திருக்க முடியாது. ஆனால், “பெடியளது போராட்டம்” என்ற பதத்தின் பொழிப்புள் சாதிய வியாக்கியானங்களும் மறைந்து கிடந்தன என்பதை மறுக்க முடியுமா?

வடகிழக்கு-மலையகம் உட்பட்ட சகல தமிழ் பேசும் மக்களது, அரசியல் வரையறுப்பான, பிரிவினை வாதங்களுக்கு அப்பாற்பட்ட, “ஈழவர்-ஈழம்” என்ற ஈரோஸின் கோட்பாடு இம் மூன்று முக்கிய பிரிவினர் மத்தியிலும் பாரிய அரசியற் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது எனக் கூறவும் முடியாதபோது, அதிலிருந்து பிரிந்து உருவான EPRLF, EPDP போன்ற அமைப்புகள் உட்பட சகல அரசியல் அமைப்புகளும் வடகிழக்கு தமிழ்த் தேசியவாத்தை ஏற்றுக் கொண்டபோது, இளைஞர் சமுதாயம் தழிழீழக் கோரிக்கையை ஏதொவகையில் ஏற்றுக் கொண்டன எனபதையும் மறுக்க முடியாது.
ஆனால், அவ்வாறான இராணுவ-அரசியற் நிலைப்பாடு புறச் சூழலின் நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்பட்டவா? அல்லது மக்களது ஆதரவின் பேரில், அகச்சூழலின் நிரப்பந்தங்களால் ஏற்பட்டவையா?

எம்மைப் பொறுத்தவரை, தமிழீழக் கோரிக்கு இளைஞர்களிடம் இருந்த ஆதரவு மக்களிடம் இருக்கவில்லை, இந்தியாவினது தலையீடு தமிழிழீத்திற்கான ஆதரவை பல தொகுதிகளிலும் ஊக்குவித்தது என்பன எமது அவதானிப்புகள்.

அப்படியாயின், தமிழீழக் கோரிக்கைக்கான ஆதரவு என்றோ அற்றுப்போகத் தொடங்கியதா? எப்போ தொடங்கியது? இவைபற்றிய பதில்கள் மக்களது வாழ்வின் மறுகட்டத்திற்கு அவசியமானவை.

ஆனால் இன்று தமிழீழத்திற்கான ஆதரவின் நிலை என்ன?
எம்மைப் பொறுத்தவரை, தமிழீழத்திற்கான வாதத்தை சித்தாந்த ரீதியில் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளவர்களே அதனை முன்கொண்டு செல்ல விளைகிறார்கள். இந்நிலையில் இல்லாதவர்கள் யதார்த்தவாதத்தால் அல்லது பின்நோக்கிய ஞானத்தால் எழும் காரணங்களால் நிராகரிக்கிறார்கள். வடகிழக்கில் வாழ்பவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தமிழீழக் கோரிக்கை தவறுதலானது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். தமிழீழக் கோரிக்கைக்கு வடகிழக்கிற்கு அப்பால் வாழும் சில புகலிகளிடமே இன்று பூரண ஆதரவு இருக்கிறது என்ற கணிப்புகளையே இன்று கொள்ள வேண்டி உள்ளோம்.

இன்றும் என்றும், புலிகள் மட்டுமே தமிழீழக் கோரிக்கையை வென்று தரக்கூடிய ஒரேஒரு சாதனைக் கருவி எனக் தமிழீழவாதிகள் கருதினால், புலிகளின் தோல்வியுடன் அதுவும் தோல்வி அடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருவது நியாயம். இல்லாவிடில் புலிகள் தமது முப்படை கொண்ட “இராணுவப் போரில்தான்” சிறீலங்கா இராணுவத்திடம் தோல்வி கண்டனர் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும்.

இவ்விடத்தில், உலக அரசுகளின் அனுசரணை, இந்தியா + சீனா இணைந்து தந்த பூரண இராணுவ பொருளாதார ஆதரவுகள் இல்லாது இவ்வெற்றியை சிறீலங்கா அடைந்திருக்க முடியாது என்ற அவதானிப்பும் முக்கியமாகிறது.

எனவே, இன்றைய அகச்-சூழலை, மக்கள்-ஆதரவை, கூடவே புறச்-சூழலையும் சேர்த்தே பார்த்து, தமிழீழத் தேசியவாதம் தோல்வி கண்டுவிட்டது என்ற கணிப்பிற்கு வருவோமாயின், அது புலிகளது இராணுவத் தோல்வியுடன் ஏற்பட்டதல்ல என்கிறோம். அதேசமயம், தமிழீழ தேசியவாதத்தின் தோல்வியை ஊக்குவித்த சக்தி புலிகள் என கூறுவதில் தயக்கம் இருக்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறோம்.

ஆனால், தமிழீழப் போராட்டம் தோல்வி கண்டமைக்கு அதன் உள்முரண்பாடுகளே பிரதான காரணம் என்பது சரித்திரத்துவம் சொல்லும் முடிவு என்கிறோம்.

தமிழீழக் கோரிக்கையில் புலிகள் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதையும் அதற்காக தம்மையும் தம்மைச் சார்ந்த மக்களையுமே பணயம் வைத்துப் போர் நடத்தினார்கள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. புலிகளை வெறும் இராணுவ அமைப்பாக மட்டும் கணிப்போமாகின், அதனது தோல்விக்கு, அவர்களது தவறான இராணுவக் கணிப்பீடுகள் எவ்வளவு காரணம் என்பது ஒரு கேள்வி. இதனை இராணுவ நிபுணர்களது கணிப்புகளுக்கு விட்டுவிடுவோம்.

அந்த இராணுவத்தின் சமூக-அரசியற் பிரவேசத்தால் இடம்பெற்ற தவறுகள் இன்னுமொரு கேள்வி. இதுபற்றிய விடயங்கள் பொது அறிவாகி வரும் வேளையிது, எனவே வியாபிப்போ அவசியமற்றது.
ஆனால்,
புலிகளது இராணுவத் தோல்விக்கு தமிழீழக் கோரிக்கையே பிரதான காரணம் என்பது எமதுவாதம்.
புலிகள் இராணுவத்தின் கழுத்தில் தூங்கிய சயனைற்-குப்பிகளிலும் பார்க்க, கூட்டணியினர் போலியாக முன்னெடுத்த தமிழீழக் கோரிக்கையே பாறைக் கல்லானது என்பது எமது கணிப்பு.

தமிழீழக் கோரிக்கை தம்மால் அடைய முடியாத இலட்சியம் என்பதை புரிந்து கொண்டமையாலேயே புலிகள் “நோர்வே” முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றி “ஒஸ்லோ” உடன்பாட்டுக்கும் வந்தார்கள். ஆனால், தாம் கொடுத்த வாக்குறுதியிலும் சிக்கிக் கொண்டார்கள்.

புலிகளானவர்கள் எம்மவரே
தமிழீழக் கோரிக்கை போலியானது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதற்கு முதுகெலும்பு கொடுப்பதற்கான போலி-வெற்று அரசியல் நடவடிக்கை. ஏன்?

தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த கூட்டணியினர், பின்புறத்தில் அதனை ஒரு “பேச்சுவார்த்தைக்கான தந்திரோபாயம், பகடைக்காய்” என்று கூறவில்லையா? முன்புறத்தில், தேர்தலுக்குச் சென்றதைவிட வேறெந்த செயற்திட்டத்தை வைத்திருந்தார்கள்? வட்டுக்கோட்டைத் தீர்மானம் தேர்தலை அடைந்த போது, மலையகத்தவரும் இஸ்லாமியரும் விலகிவிட்ட, தொடர்ந்த வேலைத்திட்டங்கள் எதுவுமற்ற நிலையே இருந்தது. இந்நிலையில் அதனை போலி அல்லது வெற்றானது என்பதில் என்ன தவறு?

சரி சமுதாய சிந்தனை இருந்திருப்பின், வழமையான சாத்வீகப் போராட்டத்தையாவது பிரேரித்தார்களா? இல்லை.
தமது மடியிலே வளருபவர்கள், “துரோகிகள்” என்றவாறு தமது சீவனத்திற்காக காவற்படையில் அல்லது அரசாங்கத்தில் தொழில் செய்த சாதாரண மக்களை படுகொலை செய்யத் தொடங்கிய போதாவது, குறைந்தபட்சம், ஏதாவது செயற் திட்டம்பற்றிய ஆலோசனையாவது நடத்தினார்களா? இல்லை.

கூட்டணியினரது போலி நாடகத்தில் அகப்பட்டவர்கள் யார்?
முதற்கட்டத்தில், முன்நின்றவர்கள் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர்கள். ஆனால், அச்சந்ததியில் எவ்வளவு விகிதத்தினர் தம்மை போராட்ட அமைப்புகளில் இணைத்துக் கொண்டனர்? தமது வாழ்வை பாழாக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற விடயம் தெரிந்து வெளியேறிக் கொண்டனர்?

83 கலவரங்களுடன் வடகிழக்குக்குத் திரும்பியவர்களுடன் ஆண்டு 85 ஆகிய போது எவ்வளவில் கொழும்பு திரும்பினர்? இயக்கப் பூசல்களுடன் எவ்வளவில் வெள்ளையர் தேசங்களில் புகலிகளாயினர்? இக்கேள்விகளால் வெளியேறியவர்களையும், அமைப்புகளில் சேராதவர்களையும் எவ்விதத்திலும் குறைகூறும் நோக்கு எமக்கில்லை. ஆனால், போராட்டம் போர் என்பவற்றின் அணிவகுப்புகளில் பலிக்கடாக்களாக தம்மை முன்நிறுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுவோர் யார்? என்பதற்கான பதிலைக் காண்பதே நோக்கம்.

இவை அனைத்தையும் சிந்தையில் கொண்டு நாம் கொள்ளும் முடிவு என்ன?
தமிழீழப் பேராட்டம் என்பது எவ்வளவு தூரம் மத்தியதர வர்க்கத்தினரை உள்வாங்கி உள்ளது, அவற்றுள் மனத்-திடம் கொண்ட எத்தனை மனிதரை முன்னணியில் நிறுத்தியது? என்ற புள்ளிவிபரங்கள் அல்ல. அது இறுதியில், தாம் மத்திய வர்க்கம் என்ற நினைப்பில் இருந்தபோதும் வசதி அற்றவர்களினதும், அவர்களின் கீழ் வாழும் சமுதாயத் தட்டுகளினதும் தலையில் விழும் கட்டாய பொறுப்பாக மாறிவிடும் என்ற உண்மையே, நிலத்தில் உழைப்பதால் உயிர்வாழ்வோர் திரும்பத் திரும்ப கற்கும் படிப்பினையும் அதுவே என்ற முடிவுகள்தான்.

எனவே, மத்திய வர்க்கங்களது வெளியேற்றங்களின் பின்னர், புலிகளது இராணுவத்தில் சேர்ந்தவர் உட்பட, எஞ்சியவர் யாவரும் எமது அரசியற் தொகுதியைச் சார்ந்தவர்கள் எனபதில் எமக்கு அசைவிலா நம்பிக்கை.

அன்று யாரோ வெளியார், ஐரோப்பிய சீன மக்களது விடுதலை அல்லது புரட்சிப் போராட்டங்கள் பற்றி எழுதிய சித்தாந்தங்களை, வாக்குமூலங்களை, உள்வாங்க முன்னரே, மனிதாபிமானம் தந்த உணர்வுகளால், அத்தொகுதியினரையே எமது மக்கள் என்று சித்தம் பூராகமட்டுமின்றி மனத்திலும் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் புலிகளது போராளிகள், ஆதரவாளர்கள், கருணா பிள்ளையானுடன் போனவர்கள் என்ற வேறுபாடுகளோ வெறுப்புகளோ எம்வசம் இருக்க முடியாது. மற்ற அமைப்புகளில் இருந்து எமக்கு எதிராகவும் இயங்கியவர்கள் என்ற கருத்துள் தாண்டு மாண்டுபோகவும் முடியாது. கூட்டணியின் கையாட்களும் வால்களும் என வர்ணிக்கப்பட்டவர்களே எதிர்காலத்தில் புலிகளதும் மற்ற அமைப்புகளதும் வீரப் போராளிகளைப் பெற்றுத் தந்தார்கள்.

தமது வாழ்க்கைக்காக போராடும் அந்த மக்கள் தமது கசப்பான அனுபவங்கள் தரும் படிப்பினைகளுடன், அவற்றின் உள்ளேகூட ஆக்கபூர்வமான விடயங்களை அடையாளம் காணும் மனிதர்களை பெற்றுக் கொள்வார்கள் என்பதில் அசைவிலா நம்பிக்கை எமக்கு. அந்த மனிதரே முன்னேற்றத்தைக் குறித்து நிற்கும் சக்தி என்ற நம்பிக்கை இல்லாவிடில், மனித சமுதாயம் தனது சுபீட்சத்திற்கு தடையானவற்றை கையாளும் பாங்கினை வளர்த்துக்கொள்ளும் பிராணி என்ற சரித்திர பூர்வமான அறிவு இல்லாவிடில், எமது வாழ்வுகளின் பலனை சிந்திக்க வேண்டியவராக நாம் ஆகிவிடுவோம். இந்த அறிவுகள் பெறமுதல், எமது தொகுதி என ஏற்றவர்களை என்றும் கைவிட முடியாதென எம்முள்ளே எப்போதோ செய்து கொண்ட வாக்குறுதியே இன்றும் எம்மை வழிநடத்தும் புவி-ஈர்ப்பு போன்ற சக்தியாக இருப்பதானால் புலிகளானவர்கள் எம்மவரே என்கிறோம்.

எம்மவர் எனும்போது நீவிர் யார்? மாற்று அமைப்பா, இன்னுமொரு இயக்கமா? என்ற கேள்விகள் நியாயமானவைதான்.
நாம் எப்போதோ புலிகளால் தடை செய்யப்பட்டபோது அமைப்பு ரீதியான இயக்கம் இழந்த பல்லாயிரக் கணக்கான இளம் சந்ததியினரைச் சேர்ந்தவர்தான். இராணுவத் தோல்வியால் இன்று அமைப்பை இழந்துள்ள வீரம் செழிந்த, நேர்மையை தன்உணர்வில்லாது தன்னையே தரும் வள்ளத்துவம் கொண்ட, தமிழீழ போராட்டத்தில் பலியானவர்களுடன், அரசியற்-பொருளாதாரத் தொகுதியில் ஒருமைப் படுபவர்களும்தான். மேலும் சிறீலங்கா- அரசமைப்பு மாற்றம் காணும்வரை சிறுபான்மை மக்களுக்கோ, இலங்கைவாழ் உழைக்கும் மக்களுக்கோ விடிவு என்பதே கற்பனை வாதம் என்ற விளக்கத்தை இன்றும் கொண்டவர்கள்தான். இவ்வறிவு கொண்ட இப்பெரும் தொகுதிக்கு அமைப்பென ஒன்று இல்லாததால் “நாம் யார்” என்ற தன்ணுணர்வு இருக்க முடியாது என்பது தவறான விளக்கம்.

இவ்வகையில் நாம்யார் என்ற பொது அறிவுடன், பழையதையே புதிதெனக் கற்பிற்பதையும், பழசுகளுள்ளே தோண்டித் தோண்டி பதில்கள் தேடும் வாழ்க்கையில் விரையம் செய்வதையும், கைவிட வேண்டும் என்கிறோம். எனவே, தமிழீழம் என்பது எமது தொகுதிகளின் மக்களுக்கு, அவர்களில் புலிகளானவர்களுக்கு மட்டுமல்ல, தமிழரருக்கும், அதனிலும் முக்கியமாக சகல தமிழ் பேசும் சமுதாயங்களுக்கும் உடன்படாத இலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனை நோக்கிய காரியங்களிலும் பார்க்க, தமிழ் பேசும் சமுதாயங்களது கூட்டுறவுபற்றிய முயற்சிகளே அவசியமானவை என்பதையும், அவ்வாறான திட்டங்கள் செயற்பாடுகளையே மக்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் நாம் எற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary – ASATiC

16 ஆவணி 2009

இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :

பாகம் 1
வன்னியன் பிரபாகரன்– புலிகளின் ஆட்சிக் காலம்

பாகம் 2:
நேற்றைய போராட்டம்– நாளைய போராட்டம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Comments

  • haran
    haran

    ரவி என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிவது மிகவும் கடினமானது உங்களுடைய எழுத்துக்களை சாதாரணமாக மிகவும் இலகுவாக புரியும்படி எழுதினால் நன்று. எமக்கு விளங்கும் நாமும் கருத்தாடல் செய்ய முடியும்.

    கடைசியாக எழுதிய “அதனை நோக்கிய காரியங்களிலும் பார்க்க, தமிழ் பேசும் சமுதாயங்களது கூட்டுறவுபற்றிய முயற்சிகளே அவசியமானவை என்பதையும், அவ்வாறான திட்டங்கள் செயற்பாடுகளையே மக்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் நாம் எற்றுக்கொள்ள வேண்டும்” இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

    Reply
  • senthil
    senthil

    K.P எவ்வாறு யாருடைய துரோகத்தால் கைது செய்யப்பட்டார்? எந்தக் கிலுகிலுப்பைக்காரர்கள் அவரை அங்கும் இங்கும் இரகசியமாகச் சந்திக்கச் சென்றார்கள்?,,– //
    ரவி அவர்களே தங்களின் அணியை சேர்ந்த குகன் என்பவர் தான் கேபியை சந்திக்க சென்றவர் என்றும், குகன் இந்திய உளவுநிறுவனத்தின் தொடர்பாளராக சென்று கேபியின் இருப்பிடத்தை காட்டிக்கொடுத்ததாக ஓர் இணையத்தில் வாசிக்க கிடைத்தது.(இந்தியாவின் உளவுப் படையான ரோவின் செயற்பாட்டளர்களின் வலையில் சிக்கிய கேபியும் அவர் வழி பின் தொடர்பவர்களும், இந்தியா பற்றிய தமது பார்வையை மீள சுய விமரிசனம் செய்ய வேண்டும்.கேபி இந்தியாவே எமக்கான தீர்வைப் பெற உதவும் என்று அறிக்கை விடுகிறார். இந்த அறிக்கை விட்டு ஒரு கிழமையில் ரோவுடன் நேரடியாகத் தொடர்பை வைத்திருக்கும், திரு,குகனேந்திரன் அல்லது ஹொங்கொங் குகன் ,ரோவின் செய்தியுடன் லண்டனில் இருந்து மலேசியா செல்கிறார்.ரோ இவரைப் பின் தொடரும்படி ஆள்காட்டி விடுகிறது.அவரைப் பின் தொடர்ந்து மலேசிய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புக்கள் கேபியை கோலாலம்பூரில் வைத்துக் கடத்துகின்றன.இது தான் இந்தியாவின் கேடு கெட்ட பயங்கரவாத அரசியல்.இதனை நம்பியே எமது போராட்டம் காலம் காலமாக புதைக்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்தே புதினம் ‘ நாம் நம்பிக் கெட்டோம், இனி எமக்கு இருக்கும் வழி வன்முறைதான? என்று துயில் எழும்பிக் கட்டுரை எழுதுகிறது.)—

    திரு.ரவி அவர்களிடம் இரு கேள்விகள்,
    1.இந்த சம்பவம் உண்மையா? இதில் இந்திய தரப்புக்க்கு சம்பந்தம் இருக்கிறதா?
    2.குகன் இந்த மேற்சொன்ன சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளாரா? மலேசியாவுக்கு சென்று கேபியை சந்தித்தவரா? அல்லது கேபி உங்கள் தரப்பினருடன் தொடர்பில் இருந்தாரா? தயவு செய்து இந்தப் பகுதியிலேயே பதில் தரவும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //சிங்கள அரசிடம் இருந்து விடுதலை பேசும் மனிதர்கள், தம்மிடையே உள்ள சாதியப் பிரச்சனையை நடைமுறையில் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்வதும், அரசியலில் சாதகமாகப் பாவித்துக் கொள்வதும், நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள். அதனைவிட, ஜனநாயகம் பேசுவோர் தம்மிடையே உள்ள சாதியப்-பழுவைப் போல மனிதாபிமானத்துக்கு குந்தகம் செய்யும் நடத்தைகள் எங்குமே இல்லை என்பதை உணராமல் பேசுவதையும், தாக்காட்டுக் காரணங்கள் சொல்வதையும் காண்கிறோம்.//

    போராட்டம் ஒட்டு மொத்த தமிழருக்கா அல்லது தமிழருக்குள் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கா?

    சாதிப் பிரச்சனையை ஒழிக்க புலிகள் போராடினார்களா? அனைத்து தமிழருக்குமான தமிழீழத்துக்காக புலிகள் போராடினார்களா? ரவியின் கட்டுரை, புலிகள் , தமிழருக்குள் ஒற்றுமை என்பதை விட தமிழருக்குள் இன்னொரு பிரச்சனையை வைத்துக் கொண்டு மெழுகி காய் நகர்த்தியுள்ளார்கள் என்பதையே உணர்த்துகிறது. பலவீனங்களை புலிகள் தமக்கு பலமாக கையாண்டுள்ளார்கள்? புலிகள் தமிழீழம் பெற்றிருந்தாலும் இன்னொரு பிரச்சனையை உருவாக்கி தமிழருக்குள் ஒரு கொலைத் தாண்டவத்தை உருவாக்கியே இருப்பார்கள்?

    Reply
  • மாயா
    மாயா

    வன்னி மக்களுக்கு அரும் பெரும் சேவைகளை செய்த வைத்தியர்களான சண்முகராஜா , இளஞ்செழியன் , வல்லவன் மற்றும் வரதராஜா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் வவுனியா போலீஸில் சமூகம் அளிக்க வேண்டும் என நீதிவான் பணித்துள்ளார்.

    வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான செய்திகளை சொன்னார்கள் என்ற குற்றச் சாட்டில் இவர்கள் கைதாகி இருந்தார்கள்.

    Reply
  • kumar
    kumar

    கட்டுரையாளர் ரவி அவர்கள் “தமிழீழம்”என்னும் தனிநாட்டுத்தீர்வுக்கு எதிராக தன் கருத்துக்களை தைரியமாக உறுதியாக முன்வைத்தமை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே. இந்தக்கருத்து ஏகோபித்த வரவேற்பைப் பெறாது என்பது நன்கு தெரிந்திருந்தும் வெறுமனே பொறுப்பற்ற முறையில் ஊரோடு ஒத்தோடும் விளையாட்டை மேற்கொள்ளாமல் எந்த விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை அதனை தமிழ் மக்களின் நலனுக்காக எதிர் கொள்வது என்ற முடிவோடு சரியான நிலைப்பாட்டை உறுதியாக முன்வைத்துள்ளார் கட்டுரையாளர். ஆனால் எமது தமிழ் மக்களின் துரதிருஸ்டம் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்து இத்தனை நாட்கள் கழிந்து விட்டபோதும் ஒருவர் கூட ஆக்கபூர்வமான விமர்சனத்தை இதுவரை முன்வைக்காதது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

    தமிழீழம் தோல்விஅடைந்த தீர்வு என்பதால் வேண்டாம் என்கிறாரா? அல்லது அது சிறந்த தீர்வு அல்ல என்பதால் வேண்டாம் என்கிறாரா? என்பதை கட்டுரையாளர் தெளிவு படுத்த தவறிவிட்டதாக தோன்றுகிறது. ஏனெனில் தமிழீழம் சிறந்ததீர்வாக இருந்து அது தோல்வி அடைந்திருக்குமாயின் அதனை நாம் கைவிட வேண்டியதில்லை. மாறாக அது வெற்றி பெறுவதற்கான சிறந்த வழியை நாம் தேடிக்கண்டுபிடித்து அவ் வழியில் போராடலாம். அல்லாமல் அது சிறந்த தீர்வு அல்ல என்பதை உணர்ந்தால் அதனைக் கைவிடுவதே முறையாகும். மேலும் சிலர் இந்த தீர்வு “இந்தியாவுக்கு பிடிக்காது “எனவே அது தேவையில்லை என்று கூறுகின்றனர். கட்டுரையாளரும் அவ்வழியில் கூறுவாரேயாயின் அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனெனில் எமக்கு சிறந்த தீர்வை இந்தியாவுக்காக நாம் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை.

    தமிழ்மக்கள் தனியான தேசிய இனம்.ஆனால் அவர்கள் சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து போகவேண்டிய அவசியமில்லை என்று சில மார்க்சியவாதிகள் கூறுகின்றனர். ஆனால் தன்னைத்தானே மாக்சியவாதி என்று கூறிக்கொள்ளும் கட்டுரையாளர் தமிழ்மக்களை தேசிய இனம் என்று வரையறுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார். இதை என்ன அடிப்படையில் முன்வைக்கிறீர்கள் என்று அவரிடம் பல தடவை கேட்டுவிட்டேன்.ஆனால் அவர் அதற்கு பதில் தருவதை தவிர்த்து தொடர்ந்தும் இதேபோல் எழுதி வருகிறார். தமிழ்மக்கள் தேசிய இனம் இல்லை என்றும் அவர்களுடைய தமிழீழம் தோல்வி அடைந்த தீர்வு என்றும் அது தேவையில்லை என்றும் கருத்துக்களை கட்டுரையாளர் ரவி அவர்கள் முன்வைத்துள்ளார். கே.பி தலைமையில் தமிழீழம் காண குரல் கொடுத்த தேசபக்தன் அவர்கள் மற்றும் புலிகளின் ஆயுதப்போராட்டம்தான் தவறு ஆனால் அமிர்தலிங்கம் முன்னெடுத்த தமிழீழம் தவறானது அல்ல என்று பக்கம் பக்கமாக வாதாடிய கட்டுரையாளர் குலன் அவர்கள் கூட இதுவரை இதுகுறித்து தமது கருத்துக்களை பதில் கொடுக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.

    இறுதியாக இங்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவெனில் கட்டுரையாளர் ரவி அர்களுடன் பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் கூட தமிழீழம் தொடர்பாக அவர் தைரியமாக முன்வைத்தமைக்காக அவரைப்பாராட்டுவதுடன் அது தொடர்பாக அனைவரும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  • sivam
    sivam

    சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் தேசம் சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் புலி ராகவன் அவர்கள் யாழ்வெள்ளாள மேலாதிக்கம் பற்றி குறிப்பிட்டபோது அதனை நிராகரித்து பேசிய கட்டுரையாளர் தற்போது புலிகள் பற்றி எழுதும்போது அதே “யாழ்மேலாதிக்கம் “என்பதனை துணைக்கு அழைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    Reply
  • sami
    sami

    இப்பொழுது எமக்கு தேவை மக்களுக்கு எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை மிக்க சொற்றொடர்களே.புலிகள் ஒழிந்ததும் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும் என்றனர்.பாலும் தேனாறும் ஓடும் என்றனர். புலிகள் அழிந்து மாதங்கள் மூன்று கழிந்து விட்டது. இப்போது தீர்வு உரிமை பற்றி பேச்சே இல்லை.மாறாக தமிழீழத்திற்கு போராடியவர்கள் இப்போது தமிழீழம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை- முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்தாலே போதும் என்று ககேட்டு போராடும் நிலைக்கு கீழிறங்கியுள்ளனர்.ஏன் இந்த நிலை? எதற்காக மக்களை இப்படி ஏமாற்றுகின்றனர்?

    இலங்கை மக்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உடையவர்கள். அவர்கள் எப்போதும் அடிமைத்தனத்திற்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடி வந்துள்ளனர். ஆனால் தலைமைகளின் துரோகத்தினால் அவர்களின் போராட்டம் வெற்றிபெறவில்லை என்றாலும் இழப்புகளைக்கண்டு துவண்டுவிடமாட்டார்கள். இறுதி வெற்றி அடையும்வரை தொடரும் அவர்கள் போராட்டம்.
    நாம் உடமையை இழந்தோம்.!
    நாம் உரிமையை இழந்தோம்.!
    நாம் உயிர்களை இழந்தோம்.ஆனால்
    நாம் உணர்வை இழக்கவில்லை.!
    நாம் கொள்கை மாறவில்லை.!!
    எத்தனை யுத்தம் தோன்றினாலும் எவ்வளவு ரத்தம் சிந்த நேரிட்டாலும் வெற்றி கிட்டும்வரை துவண்டுவிடமாட்டோம்.!!

    எம்மை கொன்று முள்ளிவாயக்காலில் புதைத்தாலும் நாம் மீண்டும் முளைத்து வருவோம்.ஏனெனில் நாம் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுபவர்கள். எம்மை துண்டு துண்டாக வெட்டி முல்லைக்கடலில் வீசி எறிந்தாலும் நாம் மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து எழுந்து வருவோம் முல்லைக்கடல் அலைகள் போல்.!!

    புரட்சி செய்வோம். புதிய வரலாறு படைப்போம். வாருங்கள் தோழர்களே!

    Reply
  • பல்லி
    பல்லி

    // ஆனால் எமது தமிழ் மக்களின் துரதிருஸ்டம் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்து இத்தனை நாட்கள் கழிந்து விட்டபோதும் ஒருவர் கூட ஆக்கபூர்வமான விமர்சனத்தை இதுவரை முன்வைக்காதது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது//
    அழகாக இருக்கிறது அதனால் பயமாக இருக்கு;

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // புரட்சி செய்வோம். புதிய வரலாறு படைப்போம். வாருங்கள் தோழர்களே!
    – sami//

    உலகெங்கும் புரட்சிகள் பயங்கரவாதம் ஆகிவிட்டன. நம் போராட்டங்கள் வரலாறு படைத்தாகி விட்டது. இனி வாழ வழி சொல்லுங்கள். எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே. இன்னமும் பப்பாவில் ஏற்றி , சூடாக்கி எம்மை பலியாக்கி புலத்தில் சொகுசாக வாழ வழி தேடாதீர்கள். நீங்கள் எந்த நாட்டில் இருந்து கோஸம் இடுகிறீர்கள் என்று சொல்வீர்களா?

    எப்படி இருந்த நாங்க, இப்படி ஆகிட்டோமே? ( பாருங்க நிலமையை)
    http://img38.imageshack.us/img38/5120/2182009protest009.jpg

    Reply
  • sami
    sami

    நண்பன்
    /உலகெங்கும் புரட்சிகள் பயங்கரவாதம் ஆகிவிட்டன/
    ஏகாதிபத்தியங்கள்தான் புரட்சிகளை ஏற்றுக்கொள்வதில்லை.பயங்கரவாதம் தீவிரவாதம் ஜனநாயகவிரோதம் என்றெல்லாம் கூறும்.ஆனால் வரலாறு அதனை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை வியட்நாம் எமக்கு நிருபிக்கவில்லையா?

    /நம் போராட்டங்கள் வரலாறு படைத்தாகி விட்டது/
    ஆம் வரலாறு படைத்திருக்கவேண்டிய எமது மக்களின் போராட்டங்கள் தலைமைகளின் துரோகத்தனத்தால் வெற்றிபெற தவறிவிட்டன.குறிப்பாக இலங்கைமக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறு மற்ற நாட்டு வுPர போராட்ட வரலாற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதை நாம் நிச்சயம் பெருமையுடன் கூறமுடியும்.

    /இனி வாழ வழி சொல்லுங்கள்/
    போராட்டத்தின் மூலமே நாம் நிம்மதியான வாழ்வைப்பெறமுடியும்.எனவேதான் புரட்சி செய்ய வாருங்கள் தோழர்களே என அழைத்தேன்.

    /இன்னமும் பப்பாவில் ஏற்றி இ சூடாக்கி எம்மை பலியாக்கி புலத்தில் சொகுசாக வாழ வழி தேடாதீர்கள்/
    தமிழீழம் மலரும்.இந்தியா வரும்.அமெரிக்கா வரும் என்று சொன்னவர்களதான் புலத்தில் சொகுசாக வாழ்கிறார்கள்.புரட்சி செய்வோம் என்று சொல்லி புலத்தில் எப்படி சொகுசாக வாழமுடியும் ?இது எப்படி என்பதை நண்பர்தான் விளக்கவேண்டும்!

    /நீங்கள் எந்த நாட்டில் இருந்து கோஸம் இடுகிறீர்கள் என்று சொல்வீர்களா/
    நான் எந்த நாட்டில் இருந்து என்பதை மட்டுமல்ல இதைக்கூற எனக்கு என்ன தகுதி உண்டு என்பதையும் என்னால் கூறமுடியும்.மேலும் இதனை இன்று மட்டுமல்ல 1981ம் ஆண்டில் இருந்து கூறிவருகிறேன்.

    நண்பரே ! புரட்சி செய்வதன் மூலமே நாம் நிம்மதியாக வாழமுடியும் என்று நான் நம்புகிறேன். அதனை தரக்கரீதியாகவும் உலக வரலாற்று ஆதாரங்கள் மூலமும் எமது மார்க்சிய ஆசான்கள் எமக்கு போதித்துள்ளனர். இதனை நீங்கள் மறுப்பீர்களாயின் இது எந்த விதத்தில் தவறு என்பதை விளக்குவதுடன் இனி என்ன வழியில் அதற்காக செல்ல வேண்டும் என்பதையும் தெளிவாக முன்வைப்பீர்களாயின் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புரட்சி செய்வதற்கு சிந்தனைசெய்வதற்கு தமிழ்மக்களுக்கு சாமி! நீங்கள் இன்னும் முப்பது வருடமாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் கடந்த உள்நாட்டு யுத்தத்தால் நலிவடைந்து ஊட்டசத்து குறைந்து வலுகுன்றிப்போய் உள்ளார்கள். இடத்தங்கல் முகாமில் உள்ளவர்களை சொல்லத் தேவையில்லை. உருவம் தான் மனிதரைப்போல் இருக்கிறதே ஒழிய வெறும் “கொட்டு” தான். இங்கு நிலமை தலைகீழ்ளாக. அளவுக்கு மீறி போசித்து சீனிவருத்தத்துக்கு உள்ளாகி செமிபாட்டுக் குணத்திற்கு அவஸ்தைப்பட்டு யார்யார் இன்னும் ஏமாந்திருக்கிறான் எப்படி அமுக்கலாம்என்று அங்கலாத்துக் கொண்டிருகிறான் .இவர்களின் அடுத்த தலைமுறை இவர்களைப் போல் சுயநலமாக சிந்திக்கப் போவதில்லை. எப்படி பார்தாலும் நல்லபுத்திவர அல்லது போய்சேர இவர்களுக்கும் நீங்கள் முப்பது வருடம் கொடுக்கத்தான் வேணும். ஆகவே முப்பதில்லிருந்து முப்பதை கழித்தால் வருவது எதுவோ அதுதான் தமிழ்மக்களுக்கு தேவையானது. அதாவது அமைதிகாப்பது.

    Reply
  • sami
    sami

    சந்திரன்ராஜா புரட்சி ஒன்றும் வேண்டாம். அமைதியாக இருங்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முப்பது வருடங்கள் அமைதியாக இருங்கள் என்கிறார்………..

    தமிழ்மக்கள் போராடக்கூடாது என்று மகிந்த ராஜபக்ச கூறினால் மகிந்தாவுக்கு இலாபம் உண்டு. தமிழ்மக்களின் போராட்டத்தை இந்தியா ஏன் நசுக்கிறது?தமிழ்மக்கள் போராடவில்லை என்றால் இந்தியாவுக்கு இலாபம் உண்டு.. அமெரிக்கா நோர்வே எல்லாம் சேர்ந்து ஏன் எம்மை அடக்கி ஒடுக்கின என்றால் ஏகாதிபத்தியங்களுக்கு இலாபம் உண்டு ………

    தமிழ்மக்கள் போராட வேண்டாம் என்றால் சந்திரன்ராஜா மக்கள்நலன் சார்ந்து இக்கருத்தை அவர் முன்வைப்பதாக உணரமுடியவில்லை………..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சாமி நீங்கள் தப்பாக என்னை எடைபோடக்கூடாது. நானும் வாழ்வில் பெரும் பகுதியை புரட்சிகர எண்ணத்தில் கழித்தவன் தான். புரட்சியென்பது மக்களுக்காக செய்யப்படுவதே ஒழிய தனியொருவனுக்காகவோ ஒரு இயக்கத்திற்காகவோ இருக்கக்கூடாது. இருந்தால் அது அஜரகவாதம். புலிகள் மக்களுக்கு வாங்கிக்கொடுத்த அடியில் என்னை இப்படியெல்லாம் பேச எழுதவைக்கிறது. அதைவிட மகிந்தா ராஜபச்சா ஆட்சியில் மக்கள் வாழ்ந்துவிட்டு மடிந்து போவது தேவலை போல்தான் தெரிகிறது.

    சிங்களமக்களே மலையகமக்களோ புரட்சியைப்பற்றி பேசுபவர்களாக இருந்தால் நான் அமைதியாக இருப்பேன். ஆமோதிப்பேன். தமிழ்மக்கள் அதுவும் யாழ்பாண தமிழ்மக்கள் தமதுவர்கநிலை தெரியாது தடுமாறுகிறார்கள். அங்கிருந்த அற்பசொற்ப தொழில்சாலைகளும் தொழில்சங்கள்களும் புலிப்புண்ணியத்தால் அழிக்கப்பட்டு விட்டன. விவசாயக்கழகங்களும் அதேமாதிரி தான் நான்கில் ஒரு தமிழ்மகன் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டான். இவர்கள் புரட்சியை விற்று பணம்பண்வே முன்நிற்பார்கள். தமிழ் பயல்களை நம்பி ஒன்றும் செய்யமுடியாது. மிகுதியை ஜமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் உள்ள பின்னோட்டத்தை கவனியுங்கள். தொடர்ந்து சின்னளவில் என்றாலும் விவாதிப்போம். நானும் உங்களைப்போல் மனம்படைத்தவன் தான். மனத்தை வேதனைப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

    Reply
  • மாயா
    மாயா

    சாமி, நேற்று வரைப் போராடிய மக்கள் இன்று முகாம்களில் தமது உயிருக்காக என்பதை விட , ஒரு வேளைச் சோற்றுக்காக வரும் சாப்பாட்டு வாகனத்துக்காக காவல் காத்து நிற்கிறார்கள். அந்த ஒரு வேளை சோறு கிடைத்தால்தான் நிமிர்ந்தே நிற்க முடியும். ஒரு வேளை சோற்றை பறிப்பதற்காக போராடுகிறார்கள். காரணம் 300 பேர் முகாமிலிருந்தால் 240 சாப்பாடுதான் வருகிறது. அதையும் குறைத்து கொடுத்து பணம் பார்க்கிறது ஒரு கூட்டம். ஒரு பார்சல் சாப்பாட்டை ஒரு குடும்பமே பகிர்ந்தும் உண்ணும் நிலை. படுக்க பாய்தான் இல்லை. அட நிலத்திலாவது தூங்க முடியுமா என்றால் சேற்றுக்குள்தான் தூங்க வேண்டும். இனி போராடினால் மரண தேவன்தான். இத்தனைக்கும் காரணம் யார்?

    அட செத்து தொலைத்த புலிகள் , தமது இடங்களில் வாழ்ந்த மக்களை அப்படியே விட்டு விட்டுச் சென்றிருந்தால் , இந்த அளவு உயிர் , உடமை இழப்புகள் நடந்தே இருக்காது. அதற்கு மேல் இந்த முட் கம்பி வேலிச் சிறை வாழ்வையாவது தவிர்த்திருக்கலாம். மக்களைக் காப்பாற்றுவதாக , மக்களை சாகடிக்க சதி செய்த புலிகளால் இன்று வாயே திறந்து பேச முடியாத நிலை.
    அன்று தமிழ் புலிக்கு மக்கள் பயந்தார்கள். இன்று சிங்கள புலிக்கு மக்கள் பயப்படுகிறார்கள். புலிகளோடு இணைந்ததோடு எதிர்த்து பேசும் சக்தியையே தமிழ் மக்கள் இல்லாமல் ஆக்கிக் கொண்டனர். அவர்களிடம் எங்கே ஐயா புரட்சி வரும்?

    உலக அரங்கில் புரட்சியை தோற்றுவித்த , ரஸ்யாவும் , சீனாவும் புரட்சியாளருக்கு எதிராக செயல்படும் போது, யார் புரட்சியாளனை ஆதரிப்பது? மாக்ஸ் , எங்கெல்ஸ் , லெனின் , மாவோ , இவர்கள் உருவாக்கிய தேசங்கள் என்ன செய்கின்றன? காகிதத்திலும் மேடையிலும் புரட்சி பேசலாம். நடைமுறையில் இனி சாத்தியமே இல்லாதது புரட்சி ஒன்றுதான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சாமி நீங்க சன்னதம் ஆடுங்க அதை நாம் தடுக்கவில்லை; ஆனால் ஆள்நடமாட்டம் இல்லாத கச்சதீவு தனிஸ்கோடி என்னும் பலதீவுகள் கேப்பார்
    அற்று கிடக்குது; அதில் ஒன்றை குலுக்கல் முறையில் தெரிவுசெய்து ஆடுங்கோ பாடுங்கோ, ஆனால் மக்களை மீண்டும் மீண்டும் அகதியாக்கி வேடிக்கை பாராதையுங்கோ; புரட்ச்சியாம் புண்ணாக்கு புரட்ச்சி. மக்களின் பணத்தில் வாங்கிய கப்பல் முதல் கொண்டு கட்டி இழுத்து சென்று கொழும்பில் விசாரிக்கும் சூழ்நிலையிலும் 24ம் புலிக்கேசி படம் எடுக்க நினைப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை;
    தொடரும் பல்லி;

    Reply
  • BC
    BC

    சந்திரன்ராஜா, புலிகள் மக்களுக்கு வாங்கிக்கொடுத்த அடியில் அழிவில் ஏற்கெனவே மக்களுக்கு இருந்த உரிமைகளை கூட பறித்து தங்கள் அடிமைகளாக புலிகள் ஆக்கியதால், உங்களை மட்டுமல்ல எல்லோரையும் அப்படி தான் பேச வைக்கும். போராட்டம் என்பது சுலபமாக அதிக பணம் பண்ணும் வழியாகிவிட்டது.

    Reply
  • jalpani
    jalpani

    புரட்ச்சியாம் புண்ணாக்கு புரட்ச்சி.”

    இதைத்தான் அன்று பண்டிதர் சொன்னார். ஆனாலும் போராடியே ஆக வேண்டும் என பேரினவாதிகள் சொல்கிறார்களே. என்னதான் செய்வது?

    Reply
  • Kusumbo
    Kusumbo

    ரவி! தங்களிடன் ஒரு பணிவான வேண்டுகோள். நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள்; உங்களுடைய வாசகர்கள் யார்? நீங்கள் எழுதிய கட்டுரையை நீங்களே திருப்பி வாசித்துப்பாருங்கள் வசனங்களில் சமச்சீரற்ற நிலை இருப்பதைக் காண்பீர்கள். இதற்கு சிலவேளை நீங்கள் வேறு ஒரு மொழியில் யோசித்துத் தமிழில் எழுதுவது போன்று அமைகிறது. காரணம் கூடுதலாக உங்கள் வசனங்கள் செயப்படுபொருளிலேயே முடிகிறது. இது இன்டோ ஐரோப்பியன் வடிவமாகும். உங்களின் ஒரு நெடிய வசனத்தில் உயர் எழுத்து வளக்கும்; கொச்சைவளக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் நீங்கள் சொல்லவரும் நல்ல கருத்துக்கள் அடிபட்டுப்போய் வாசகர்களுக்கு ஒரு ஜீரணமற்ற நிலையை உருவாக்குகிறது. உங்கள் கருத்துக்கள் வாசகர்களிடையே முழுமையாகச் சேரவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதற்காக நான் தமிழ்பண்டிதன் அல்ல.

    நண்பா! உங்களது கேள்வி:- புலிகள் யாருக்காகப்போராடினார்கள்? மண்ணுக்கா? மக்களுக்கா? சாதிக்கா? சமூகத்திற்கா? யாருக்குமே அல்ல. அவர்கள் போராடியது தமக்கு மட்டும்தான். தன்வினை தன்னைச்சுடும் என்பதுபோல் ஆகும் என்று யார் அறிவார். மக்களுக்காகப்போராடியிருந்தால் மக்கள் நலன் பேச்சுவார்த்தை மேசைகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏ9 பாதை திறப்பதற்கே ஒருபேச்சுவார்த்தை: ஒரு போராட்டம் தேவைதான். சாதியென்றால் அது என்ன வெள்ளாளிச்சியிலை மட்டும் அதுவும் தூக்கிக் கொண்டுபோய்அண்ணருக்குக் காதல் வந்தது.சிலவேளை தூக்கியதால் வந்ததோ? தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருப்படிவான பெண்பிள்ளைகள் இல்லையா? நான் பார்த்திருக்கிறேன் பூசி மெழுகாமல் வியர்த்து வழிகையிலும் அழகாக இருந்த பெண்களை. புலிகள் மாவியாக்கள் போராடியது தமக்குமட்டும் தான்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    /இவ்வகையில் “புலிகளது இராணுவத்தை தமிழீழக் கோரிக்கை தோற்கடித்ததா? அல்லது தமிழீழக் கோரிக்கைக்கு புலிகளது இராணுவம் காரணி ஆகிற்றா?” என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இவை இரண்டும் பாம்பின் வாயுள் அகப்பட்ட அதனது வால்போல ஒன்றுபடுத்தப்பட்ட கேள்விகள்/
    இது முற்றிலும் பிழையானது. இரண்டு கேள்விகளும் பாம்பின் வாயில் அகப்பட்ட அதன்வால் அல்ல. தமிழீழக் கோரிக்கை என்று கூறி தம்மைச் சரித்திரநாயகர்களாக்கும் முயற்சியில் கதாநாயகராக நடித்து கடசியில் வேடம் கலைந்தது என்பதே உண்மை. தமிழீழக் கோரிக்கை என்பது ஒரு அரசியில் பிரஸ்தாபம். ஆனால் புலிகளின் இராணுவத்திடமும்; அவர்களின் அரசியல் தலைமையிடமும் என்ன அரசியல் இருந்தது? தொலை நோக்கு? மக்கள் நேயம்? சரியான அரசியல் இராஜதந்திரத் தொடர்புகள்? தந்திரோபாயம்? சரியாக எது இருந்தது? புலிகளைப்பற்றி நாம் என்றென்றும் பேசவேண்டியுள்ளது காரணம் நாமும் எம்மக்களும் ஆண்டாண்டு காலமாக அடிமை: பக்தி உணர்வுகளில் செய்த பிழைகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காக.

    Reply
  • kumar
    kumar

    மாயா சந்திரன்ராஜா மற்றும் சாமி ஆகியோருக்கு!
    தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள். புரட்சி பற்றி பேசி தயவு செய்து கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்பவேண்டாம். கட்டுரை தமிழீழம் பற்றி பேசுகிறது. எனவே நீங்களும் அது பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது தேசம் வாசகர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என நம்புகிறேன். தேவையானால் பின்னர் புரட்சி பற்றி விவாதிக்கலாம்.

    புலிகளின் தோல்வியை ஏற்றுக்கொள்பவர்கள் கூட பலர் தமிழீழம் குறித்து பேச தயங்கும் நிலையே காணப்படுகிறது. பரந்துபட்ட ஜக்கியம் பற்றி குறிப்பிடுவோரும் இந்த தமிழீழம் குறித்து பேசாமல் தவிர்க்கவே விரும்புகின்றனர். தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த முக்கிய விடயம் குறித்து பலரும் மெளனம் காப்பது கவலைக்குரியதே.

    Reply
  • sami
    sami

    /காகிதத்திலும் மேடையிலும் புரட்சி பேசலாம். நடைமுறையில் இனி சாத்தியமே இல்லாதது புரட்சி ஒன்றுதான்./
    அப்படியாயின் எதற்காக ஏகாதிபத்தியங்கள் கோடி கோடியாக கொட்டி எதிர்ப்பிரச்சாரம் செய்கின்றன? எதற்காக புரட்சியாளர்களை கொன்று குவிக்கின்றன?

    /உலக அரங்கில் புரட்சியை தோற்றுவித்த ரஸ்யாவும் சீனாவும் புரட்சியாளருக்கு எதிராக செயல்படும் போது யார் புரட்சியாளனை ஆதரிப்பது? /
    புரட்சி நடைபெற்ற நாடுகளில் மீண்டும் முதலாளித்துவம் வராது என்று எந்த புரட்சியாளரும் சொல்லவில்லையே! மேலும் இந் நாடுகளில் மீண்டும் முதலாளித்துவம் வருவதைத் தடுக்க பல காலாச்சாரப்புரட்சிகள் செய்ய வேண்டும் என்று மாவோ எச்சரித்தார்

    /மாக்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ இவர்கள் உருவாக்கிய தேசங்கள் என்ன செய்கின்றன? / இரண்டாம் உலக யுத்தத்தின்போது பாசிசத்தின் பிடியில் இருந்து உலகைக் காப்பாற்றியது இவர்கள் உருவாக்கிய நாடுகள்தான்.
    இன்று தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கும் கொஞ்ச உரிமைகளும் இவர்களின் தத்துவத்தால் கிடைத்ததுதானே! இன்று முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் கொஞ்ச ஜனநாயகத்திற்கும் இந்த தத்துவத்தைப் பின்பற்றிய மக்களின் போராட்டங்கள் தான் காரணம்.

    Reply
  • sami
    sami

    /புரட்ச்சியாம் புண்ணாக்கு புரட்ச்சி/
    புண்ணாக்கு புரட்சி அல்ல பல்லி .புதிய ஜனநாயகப்புரட்சி.

    இன ஒடக்குமுறைக்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மூலம்
    புதிய ஜனநாயகப் புரட்சி செய்வோம்.

    இழப்பின்றி புரட்சி இல்லை. புரட்சி இன்றி விடிவு இல்லை. இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. வாருங்கள் தோழர்களே !

    Reply
  • sami
    sami

    தமிழ்மக்கள் முதலில் 50:50 கேட்டார்கள். பின்னர் மாநில சுயாட்சி கேட்டார்கள். இறுதியாக எதுவும் தரப்படாத நிலையில் தமிழீழம் முன்வைத்தனர். தமிழ்மக்கள் முதலில் தமது கோரிக்கைகளை சாத்வீக வழியில் அகிம்சை முறையில் கேட்டார்கள். அதற்கு அரசு துப்பாக்கியால் பதில் கூறியதால் வேறுவழியின்றி மக்களும் துப்பாக்கியை ஏந்தினார்கள்.

    எனவே மக்கள் என்ன கோரிக்கையை வைக்கவேண்டும் என்பதை மட்டுமல்ல அதற்காக அவர்கள் என்ன பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக்கூட அரசுதான் தீர்மானிக்கிறது. எனவே மக்கள் ஆயுதம் தூக்கி போராட்டம் செய்வது தவறு என்றால் அதற்கு காரணமான அரசைத்தான் விமர்சிக்க வேண்டுமேயொழிய மக்களை விமர்சிப்பது எப்படி நியாயமாகும்?

    தங்களை அடக்கி ஒடுக்கும் துப்பாக்கியை பறித்து அதன்மூலம் அரசுக்கு பதில் கொடுக்கின்றனர் மக்கள். இதனையே மாவோ அவர்கள் துப்பாக்கி தோளில் இருந்து தோளுக்கு மாறும் என்றார்.

    Reply
  • kumar
    kumar

    தமிழீழம் தவறான தீர்வு என்றால் இனப்பிரச்சனைக்கு தீர்வாக கட்டுரையாளர் எதனை முன்வைக்க விரும்புகிறார்?

    மாகாண சுயாட்சியா? மாநில சுயாட்சியா? பிரதேச சுயாட்சியா? அல்லது சுயாட்சிகள் எதுவும் அற்ற ஆனால் ஜே.வி.பி குறிப்பிடுகிற சம உரிமையா?

    தமிழீழத்தை முன்வைத்த த.வி.கூட்டனி அதனைக் கைவிடுவதாகவும் அதற்கு பதிலாக சுயாட்சியை முன்வைத்து அது குறித்து இந்தியாவுடன் பேசப்போவதாக அறிவித்துள்ளது.

    தமிழீழத்தை முன்வைத்த த.வி.கூட்டனி அதனை விட்டுவிட்டது. தமிழீழத்தை முன்வைத்த புலிகள் அழிந்து விட்டனர். தமிழீழத்தை முன்வைத்த புளொட் இயக்கம் அதனை விட்டுவிட்டது. தமிழீழத்தை முன்வைத்த ரெலோ இயக்கம் அதனை விட்டுவிட்டது. ஈழம் என்று முன்வைத்த ஈரோஸ் ஈ.பி.ஆர்.ஏல்.எவ் மற்றும் ஈ.பி.டி.பி இயக்கங்களும் அதனை விட்டுவிட்டன. இன்று இதனைக் கைவிட்ட இவ் இயக்கங்கள் 1983ம் ஆண்டே இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால் எத்தனையோ இழப்புகளையும் நாசங்களையும் தவிர்த்திருக்கமுடியும்.

    Reply
  • BC
    BC

    //24ம் புலிக்கேசி படம் எடுக்க நினைப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை.//

    சரியாக கூறினீர்கள் பல்லி.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இழப்பின்றி புரட்சி இல்லை. புரட்சி இன்றி விடிவு இல்லை. இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. வாருங்கள் தோழர்களே !//
    சாமி நீங்கள் சாமி ஆடுவதுக்கு தயார்தான்; காரணம் தாங்கள் ஏதோ ஒரு நாட்டில் குடியுரிமை எடுத்திருப்பீர்கள், ஆகவே உங்களுக்கு அது சுலபம், வன்னிமக்களை புரட்ச்சியை பற்றி கேழுங்கள் ;அதின் அசிங்கம் பற்றி சொல்வார்கள், தயவு செய்து இந்த ரஸ்யா சீனா பாலஸ்தீன படம் காட்டுவதை முதலில் நிறுத்துங்கோ; நீங்கள் சொல்லிய புரட்ச்சி புடுங்கிய நாடுகள் கூட புலியின் புரட்ச்சியை ஒழிக்க நேரடியாகவே அரசுக்கு உதவியதை பார்த்துமா? இப்படி எழுதுகிறீர்கள்;

    புரட்ச்சி யாருக்கு வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கோ; வன்னி மக்களுக்கா. அல்லது புலிபுகழ் பாடிய புலம்பெயர் புண்ணாக்குகளுக்கா? ஜனனாயகம் என்றால் என்ன? விட்டு கொடுப்புதானே, அது எந்த தமிழ் புரட்ச்சியாளரிடம் இருந்தது, ஒரு காலத்தில் உரும்பிராய் சிவகுமாரை தோட்டத்தில் நின்று வேலை செய்ய தொழிலாழர்தான் பிடித்து கொடுத்தது என ஒரு கதை உண்டு, அது அப்போது அந்த மக்கள் செய்த பெரிய தவறு என பேசபட்டது, ஆனால் அந்த தொழிலாளர் அன்று அறியாமல் செய்த காரியத்தை 30 வருடம் கழித்து பலதரபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் செய்யததை(புலி அழிப்பு) எந்த புரட்ச்சியில் எடுப்பது, அன்று மனைவியை வைத்து சில முட்டாளுகள் சூது ஆடினார்களாம்; இன்று மக்களை வைத்து சாமியாட சாமி துடிப்பது வரவுக்காக மட்டுமே ஒழிய விடிவுக்காக அல்ல. புரட்ச்சியாளனுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இன்னுமா சாமிக்கு இடைவெளி தெரியவில்லை? தன்னை அழித்து மக்களை வாழ வைப்பவன் புரட்ச்சியாளன்; தான் வாழ மக்களை அழிப்பவன் பயங்கரவாதி, இதில் எம்மவர் யார் என்பதை தேசம் நண்பர்கள் சொல்லட்டும்;
    தொடரும் பல்லி..

    Reply
  • BC
    BC

    //குமார் – இன்று இதனைக்(தமிழீழத்தை) கைவிட்ட இவ் இயக்கங்கள் 1983ம் ஆண்டே இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால் எத்தனையோ இழப்புகளையும் நாசங்களையும் தவிர்த்திருக்கமுடியும்.//
    முழு உண்மை.

    //இழப்பின்றி புரட்சி இல்லை. புரட்சி இன்றி விடிவு இல்லை.
    தங்களை அடக்கி ஒடுக்கும் துப்பாக்கியை பறித்து அதன்மூலம் அரசுக்கு பதில் கொடுக்கின்றனர் மக்கள்.//
    இது மாதிரியானவை எல்லாம் பல வருடங்களுக்கு முன்பு இலங்கையில் top hits ஆக இருந்தவை. இனியெல்லாம் எடுபடாது. நல்லதும் அல்ல.

    Reply
  • sami
    sami

    பல்லிக்கு!
    நான் ஏதோ ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு புரட்சி பற்றி பேசி சம்பாதிக்க முனைவதாக எண்ணவேண்டாம். நான் இப்போது திடீரென்று புரட்சி பற்றி பேசவில்லை. 1981ம் ஆண்டில் இருந்து பேசி வருகிறேன்.நான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் புரட்சி செய்வேன் என உரத்துக்கூறியவன். அதன் பின் அகதி அந்தஸ்து பெறும்போதும் புரட்சி செய்வேன் எனக்கூறியே பெற்றுக்கொண்டவன். மேலும் புரட்சி என்று கூறியதால் நான் சம்பாதித்தது நீண்ட சிறைவாழ்க்கையும் கொடிய சித்திரவதைகளுமே. எனவே தயவு செய்து எனது நோக்கங்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

    புலிகளின் பொராட்டத்திற்கும் புரட்சிக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் எந்த இடத்திலும் புலிகள் புரட்சி செய்வதாக கூறவில்லையே. அப்படியிருக்க புலிகளின் போராட்டத்தை புரட்சி என்று நினைத்து என்னிடம் விளக்கம் கேட்கவேண்டாம்.

    ரஸசியா சீனா போன்றவை கம்யுனிஸ்ட் நாடுகள் அல்ல என்பதை முதலில் சுறியவர்களே புரட்சியாளர்கள்தான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உண்மை இவ்வாறு இருக்க இப்பொது அந்த நாடுகள் புலிகளுக்கு எதிராக உதவி செய்துவிட்டன என்பதற்காக எம்மிடம் விளக்கம் கேட்டால் என்ன நியாயம்?சீனாவை இப்போதும் கம்யுனிசநாடு என்று கூறித்திரியும் திரிபுவாத கம்யுனிஸ்ட்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை மாறிப்போய் என்னிடம் கேட்டுவிட்டீர்கள்.

    நோயக்குத்தான் மருந்து சாப்பிடவேண்டும்.எங்கு ஒடுக்குமுறை அதிகரிக்கிறதோ அங்குதான் புரட்சியின் அவசியம் உள்ளது.எனவே உங்கள் கருத்துப்படி பார்த்தால் இப்போதுதான் முன்னெப்போதையும்விட அதிகஅளவில் வன்னிமக்கள் பொராடவேண்டிய நிலையில் உள்ளனர். எனவே “புரட்சி செய்வோம் வாருங்கள் தோழர்களே ” என்று நான் அழைத்தது சரிதான் என்பதை உங்கள் கருத்தும் வலியுறத்துகிறது.எனவே எனக்கு ஆதரவாக கருத்து முன்வைத்தமைக்கு துணைபுரிந்தமைக்கு தங்களுக்கு என் நன்றிகள்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நன்றி பல்லி சாமிக்கு சொன்ன பதிலுக்கு. இவர்கள் எப்பவுமே ரஷ்யா சீனா மாவோ தான் எடுப்பார்கள். இவர்கள் சீனாவில் மழைபெய்தால் யாழ்ப்பாணத்தில் குடை பிடிப்பார்கள். இவர்களுக்கு தமது மக்கள் என்று நினைக்கும் போது சீனாவின் கிராமங்களில் வறுமையில் வாடும் மக்களையும் தமது சீனாவிற்கு எதிரிகளால் ஆபத்து என்று பேய்க்காட்டும் சீனாவையும் தான் நினைப்பார்கள். வன்னி மூதூர் மக்கள் சீனா ரஷ்யா புரட்ச்சி பற்றி படிக்காது விட்டால் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்று வாதிடுபவர்கள் புத்தி பேதலித்தவர்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    இன்றைய தேவை அனைத்து மக்கள் மனங்களிலும் ஏற்பட வேண்டிய ஒற்றுமை , புரிந்துணர்வு , இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை.

    இதை வைத்துத்தான் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் நிம்மதியான வாழ்வு கிடைக்கும். புலிகளைத் தவிர்த்து , ஆயுத போராட்டத்தில் இறங்கிய அனைத்து இயக்கங்களும் , ஜேவீபீ உட்பட எப்போதோ ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டன. புலிகள் தமது துப்பாக்கிகளில் தோட்டா இல்லாத போதுதான் ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதாக சொல்லி , ஜனநாயக பாதைக்கு வருவதாக பொய் உரைத்தனர். இப்போது செத்த பிணத்தை நடக்க வைக்க முயல்வது போல நாடு கடந்த தமிழீழத்தை கொண்டு பணம் பறிக்கவும் , தாம் வெளியில் நடமாடவும் படம் காட்டுகின்றனர்.

    இன்று புரட்சி பேசும் அநேகர், புலிகள் காலத்தில் ஓடி வந்தவர்கள் அல்லது புலிகளுக்கு பயந்து மெளனமாக இருந்தவர்கள். புலிகளது பிடிக்குள் இருந்த மக்களை விடுவிக்க இந்த புரட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்றால் எதுவும் இல்லை என்பதை அவர்களது மனம் சொல்லும்.

    இலங்கை தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் என்.எம்.பெரேராவே , அதே தொழிலாளர் போராட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு சிறீமா அரசில் இருந்த போது போராடிய தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தார். இதுதான் இலங்கை தொழிலாளர் போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட முதன்மையானது. சிங்கப்பூரில் அரசியல் பேச்சுரிமை. ரஸ்யாவில் , செச்சீனீயா. சீனாவில் , மாணவர் போராட்டம் மற்றும் தற்போதைய இஸ்லாமிய போராட்டம் இப்படி போராட்டங்கள் அழிவதை பின் சென்று பாருங்கள். கியுபாவில் கூட பிடல் காஸ்ரோவின் தம்பியால்தான் தலைமை ஏற்க முடிந்ததே தவிர இன்னொருவருக்கல்ல. சோஸலிசம் , இனவாதம் மற்றும் புரட்சி பேசுவதற்கு அழகானது. உணர்ச்சிவசப்பட வைப்பது. ஆனால் யதார்த்தத்தில் சாத்தியமேயற்றது. கட்டிய மனைவியை தலைவிதி என நொந்து கொண்டே தொடர்ந்து சேர்ந்து வாழ்வது போன்ற ஒரு நிலை.

    இடதுசாரி கருத்துகளையோ அல்லது புரட்சி குறித்தோ பேசும் எவரும், தம்மிடம் இருக்கும் எதையாவது இன்னொருவருக்கு பகிர்ந்து கொடுத்ததையோ அல்லது எதிர்க் கருத்தாளன் ஒருவரை பேச அனுமதித்ததையோ நான் பார்த்ததில்லை. தமது பொருட்களை காப்பாற்றிக் கொண்டு இன்னொருவனது சொத்தை பறித்துக் கொடுத்து தன்னை நியாயப்படுத்திக் கொண்டதையே பார்த்துள்ளோம். தவிரவும் சோஸலிசம் அல்லது புரட்சி பேசுவோர் நடைமுறையில் சுத்த சோம்பேறிகள். எதுவுமே செய்யாமல் அடுத்தவனைத் தூண்டி விட்டு பேசிக் கொண்டே புத்தகத்தை வைத்து கதையளப்பவர்கள். இவர்களை உற்று நோக்குங்கள் எவருக்கும் உண்மை விளங்கும். அடுத்தவனுக்கு பலன் சொல்லிக் கொண்டு மரத்தின் கீழ் அடுத்த நேர உணவுக்காக பொய் பேசும் சாத்திரக்காரன் அல்லது ஜோசியனுக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    ரவி சுந்தரலிங்கத்தின் கட்டுரை கடந்த எமது போராட்டம், போரட்டம் சம்பந்தமான எமது சமூக நிலைப்பாடுகளையும் அந்தக்காலத்தில் நடைபெற்ற விடயங்களையும் பற்றி பேசுகிறது இது போன்ற பல கட்டுரைகள் பேச்சுக்கள் எழுதப்பட வேண்டும் விவாதிக்கப்பட வேண்டும்

    இனிமேல் எமது தமிழ் பேசும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கடந்த காலம் பற்றி எந்தவித ஆய்வும் இல்லாமல் செய்ய முடியுமா? இந்த ஆய்வுகளை எப்படி தொடங்குவது என்பதற்கு ரவியின் இந்த கட்டுரை பல தொடக்கு புள்ளிகளை வைத்துள்ளது ஆனால் கடந்தகால எமது அனுபங்களின் பிரதிபலிப்பும் குற்றம் மட்டும் சுமத்தும் பண்பும் எம்மை இந்த கட்டுரையை சரியாக ஆய்வுடன் படிக்க முடியாமலும் அல்லது வேறு பல கட்டுரைகளிலும் எழுதுபவர்களையும் அவர்கள் சார்ந்த கடந்தகால இயக்க நிலைப்பாட்டையும் வைத்தே பார்க்கப்படும் தவறுகளும் நிகழ்கிறது.

    பலர் தமது கடந்தகால அரசியலை விமர்சித்து அந்த அரசியலை விட்டு புதிய இன்றய வழிவகைகளை தேடுகின்றனர் என்பதை மறந்து விடுகிறோம்.

    ரவி சுந்தரலிங்கத்தின் இந்த கட்டுரையை ரவி எழுதியதிற்கு என்று யார் சரி வேறுமாதிரி கருத்துக்கள் வைத்தாலும் பேசினாலும் நாம் இனிமேல் எங்கு போக வேண்டும் அல்லது அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பதற்கு அடித்தளமாகவே நான் கருதுதுகிறேன்.

    இயன்றளவு கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் விமர்சனங்களை எழுத முயற்ச்சிப்போம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சாமி உன்மையில் உங்களுக்கு பின்னோட்டம் எழுதிவிட்டு என் நண்பர்களிடம் சொல்லி கவலைபட்டேன், புரட்ச்சி என்னும் வார்த்தையை கூட கேவலமாக பார்க்கவேண்டி உள்ளதே என; ஆனால் நண்பர்களோ பல்லி நீ எழுதியது சரிதான் அப்போதாவது இவர்களுக்கு புரிகிறதா? என பார்க்கலாம் என சொன்னார்கள் (பார்க்க சோதியின் பின்னோட்டத்தை) ஆனாலும் எனக்கு கவலையாகதான் இருந்தது, ஆனால் 30 வருடமாக எம் தமிழ் மக்களை நிர்வாணபடுத்திய பின்னும் அவர்கள் என்னும் கெடுக்கபட வில்லையே என்பதுபோல் மறைப்புக்கு கறுப்பு கமினிஸ்ட்டுக்களையும் உதவிக்கு அழைத்து அதுவும் இந்த 30 வருட காலமும் துயில் உரிவை அருகில் இருந்து பார்த்தும் (புலியில் அல்ல ஏதோ ஒன்றில் என வைத்தாலும்) மீண்டும் மீண்டும் கேனைய்தனமாய் பேச தாங்கள் முற்படுவதால் நான் இப்படி எழுதுவதில் எந்த வருத்தமும் இல்லை,

    //நோயக்குத்தான் மருந்து சாப்பிடவேண்டும். எங்கு ஒடுக்குமுறை அதிகரிக்கிறதோ அங்குதான் புரட்சியின் அவசியம் உள்ளது. எனவே உங்கள் கருத்துப்படி பார்த்தால் இப்போதுதான் முன்னெப்போதையும்விட அதிகளவில் வன்னிமக்கள் போராடவேண்டிய நிலையில் உள்ளனர். எனவே “புரட்சி செய்வோம் வாருங்கள் தோழர்களே //
    சிறையில் இருந்து தமது சொந்த வீட்டுக்கே போகமுடியாத மக்களை புரட்ச்சிக்கு வர அழைப்பது வறுமையை காட்டி விபச்சாரத்துக்கு அழைப்பதுக்கு சமன், 1982ம் ஆண்டு இருந்த நிலைக்கு தமிழர் போக என்னும் பல ஆண்டுகள் தேவை என்பதுகூட புரியாமல்; பல ஆயிரம் குழந்தைகளுக்கு இவர்தான் உன் அப்பா அம்மா என அறிமுகம் செய்ய வேண்டிய சூழலில் விடுதலை வேண்டி பின்னும் ஒரு முறை தறுதலைதனமாய் அடுக்கு மொழியில் வசனம்பேசி புறபட தயாராகும் உங்களை எம்மால் முடிந்த மட்டும் எழுதுவோம்;

    மாயாகூட 30 வருடத்துக்கு முன் விடுதலை நோக்கி புறப்பட்டவர் தான் அவரது வாக்குமூலமே தற்போதைக்கு பசிப்பவனுக்கு ஒருபிடி சாப்பாடு தூக்குவதுக்கு பாம்பு பல்லியில்லாத ஓர் இடம் ஒதுங்குவதற்க்கு சுகாதாரம்; குளிக்க அல்ல குடிக்க தண்ணீர் குழந்தைக்கு பால் வேண்டும் அதுக்காக தாய்க்கு உணவு வேண்டும்; வயதானவர்களை இறந்த பின்னாவது புதைக்கவோ எரிக்கவோ உறவுகள் வேண்டும்; முல்லை வயல்கள் வேண்டும் கிளிநொச்ச தோட்டம் வேண்டும் இவைதான் தற்ப்போது அந்த சிறையில் வாழும் மக்களுக்கு வேண்டுமென பல நண்பர்கள் சொல்லுகிறார்கள்; ஆக தாங்கள் மட்டும்தான் சிறைவாசமும் சிந்தனை வசனங்களும் பேசியவர் என சொல்லுவது தங்களுடைய இன்றய நிலை கேள்வி குறியாக்கி விட்டது; இவை அனைத்தும் அந்த மக்களுக்கு கிடைக்க உங்களுடைய புரட்ச்சி நாடுகள் ஏதும் ஏடு எழுதினால் சொல்லுங்கோ அதைவிட்டு ;ஜ வோண்டுத ரமில் ஈலம்; ஆக குறைந்தது நாடு கடந்த நாசம் (ஈழம் ) என்பது நியாயமாக பல்லிக்கு மட்டுமல்ல மக்கள் மீது அக்கறை உள்ள யாருக்கும் பிடிக்காது; சாமி தயவுசெய்து மக்களை மட்டுமே தற்போதைக்கு சிந்தியுங்களேன்;

    Reply
  • Kusumbo
    Kusumbo

    //தன்னை அழித்து மக்களை வாழ வைப்பவன் புரட்ச்சியாளன்; தான் வாழ மக்களை அழிப்பவன் பயங்கரவாதி இதில் எம்மவர் யார் என்பதை தேசம் நண்பர்கள் சொல்லட்டும்//
    அருமையோ அருமை. பல்லி நீங்கள் எத்தனை தடவை எப்பிடி எழுதினாலும் எழுதினாலும் சரிவராது. நிசமற்ற இசங்களுக்கு சொல்கிறமாதிரிச் சொன்னால்தால் சிவப்புச்சட்டைக்காரருக்கு விளங்கும். தமிழர்களுக்குச் சரியான இசமொன்கைக் கட்டுவிடித்தவர் பிரபாகரன் அதுதான் பிரபாகரனிசம். 30வருட நிசமும் இதுதான்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இன்றுகூட இலண்டனில் புரட்சி பேசும் ‘உயர்-சாதி’ மனிதர்கள், வெள்ளையர் மத்தியிலே பிறந்து வளர்ந்த தமது பிள்ளைகளுக்கு “பேசிக் கல்யாணம்” செய்து வைப்பதையும், அப் பேச்சு வார்த்தைகள் தமது உயர்சாதிக் குடும்பங்களிடையே இடம்பெறும் விடயம் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், தம் பிள்ளைகள் யாராவது வெள்ளையரைக் கல்யாணம் செய்யும்போது மட்டும் வெள்ளையரது-சாதி வினவுவது கிடையாது.வெள்ளையர்க்கு எம்மவர் தரும் மரியாதை, கைகுழைந்து வாய் குமைந்து மண்டியிடும் பக்குவம், அவர்களை ஏன் சாதியவாதிகளாக நிலை கொள்ளச் செய்கிறது, தமது மண்ணிற உடன் பிறப்புகளான இந்தியரை சிங்கள இஸ்லாமியரை, ஏன் கிறிஸ்தவரையும் குறைத்து மதிப்பிடவும், அவர்களுக்கு எதிரான மனோபாவத்தையும் தூண்டுகிறது என்பதற்கு ஓரளவு விளக்கங்கள் தரும். இந்நிலமையே இன்றும் உள்ளபோது, எமது போராடத்திற்கு எதிராக வேறெந்த விமர்சனங்களை யார் ஏன் தர வேண்டும்?

    வெள்ளையரின் வருகை ஏற்கனவே உருவாகிவந்த வெள்ளாள-கரையார் போட்டிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது.
    பாரம்பரிய வேளான்மையில் ஈடுபட்டிருந்த வெள்ளாளக் குடும்பங்களுள் பலர் கல்வி பெற்றதையும், அதற்காக மதமாற்றம் கூடச் செய்தமையும் நாம் அறிவோம்./–அருமையான,முழுமையான கட்டுரை!,பாராட்டுகள் ரவி சுந்தரலிங்கம்!.இந்த குசும்பு பிடித்தவர்களை யாரும்குறை சொல்லவில்லை,ஆனால் இது விடுதலைப்புலிகள் மத்தியில் 1980 களிலேயே விவாதிக்கப்பட்டுவிட்டது.அதனால்தான் “எம்மை நினத்து யாரும் கலங்கக் கூடாது” என்பது போன்ற முட்டாள்தனமான் தற்கொலை மனோ நிலையை முன்வைத்தார்கள்.இது ஒரு “வன்மமான அன்பு நிறந்த உளவியல் புதைக் குழி”,இதற்குள் இயல்பாக “வெள்ளைக் காரர்களிடம் குழைந்தவர்கள்” சிக்கியிருக்க வேண்டும்,ஆனல் இதிலிருந்து “திமிரிக்கொண்டு டேக்கா கொடுத்தது” என்னால் புத்திசாலித்தனம்,சாதுரியம் என்று வறையறுக்க முடியவில்லை!,

    “ஒரு கிரிமினல் குற்றம்(அஃபன்ஸ்)” என்றே வறையறுக்க முடிகிறது!.ஏனென்றால்,இவர்கள் இயல்பாக,சமூக பிரஞ்கையுடன்,குறகளை சுட்டிக்காட்டாமல்,”டெலோ மோதலில் சோடா உடைத்துக் கொடுத்தது,ராஜீவ் காந்தி கொலையில் ஷம்பெய்னா உடைத்தது” போன்ற செயல்களினால், “சுய பிரஞ்கையுடன்(இன்டன்ஷனலி) தவறாக வழி நடத்தியுள்ளனர்,மிக கொடூரமான தோல்வியை வலுக்கட்டாயமாக வரவழைத்து பரிசளித்துள்ளனர்(ஃகனிபால் லெவலுக்கு),இவைகள் இவர்களிடையே உள்ள உள் முரண்பாட்டின் “அடர்த்திக்கு” சான்றாக இருக்கிறது.இவர்களின் போக்கை நியாயப்படுத்துவது உள் முரண்பாட்டை நியாயப் படுத்துவதாகும்!.இதனால் இவர்கள் இலாபமும் மகிழ்ச்சியும்(ஃகுவென்ச்ட்)அடைந்திருந்தால் அதை விஸ்த்தரிப்பதற்கான புறச்சூழல் தற்போது அதிகமாகக் காணப்படுகிறது,அச்சூழலில்,”தமிழ் என்ற சொல்லாடல்” காணாமல்போய்,அங்கு தெற்காசிய சூழலில் பணம்பன்னுவதற்கு தெரிந்த சிலர் “சர்வைவல்” செய்கிறார்கள் என்று கருத இடமுண்டு,ஆனால்,இவர்கள் திமிரிக்கொண்டு தப்பித்த அதே புதைக்குழியில்(ஒட்டு மொத்த தெற்காசிய சமூகம் ஏற்படுத்தும்),மீண்டும் காணாமல்போய் விடுவார்கள்.

    ..அதாவது நான் என்ன கூற வருகிறேன் என்றால்,தெற்காசிய சூழலின் சமூக முரண்பாடுகள் கூர்மையடைந்தால் எப்படியிருக்குமோ அதன் “ஸ்டிமுலேஷன்தான்” தற்போது நடந்தது,அது எவ்வளவு தூரம் “புற நிலையிலிருந்து” கையாளலாம்(திமிறிக்கொண்டு)என்பதற்கு உதாரணமாக அமைகிறது.இதில் நான் தெற்காசிய புதைக்குழி என்று கூறுவது,”போராட்டத்தை? ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்த தவறிய “பிரஞ்கையை கைவிட்ட” கிரிமினல் குற்றத்தையே ஆகும்”.

    Reply