இலங்கையின் வடக்கே யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த பின்னர் தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று திங்களன்று வவுனியாவில் நடைபெற்றது.
ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ”நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்” அனுசரணையோடு, இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இணைந்து இந்த நடமாடும் சேவையை ஒழுங்கு செய்திருந்தது.
குடியுரிமைப் பத்திரம் மட்டுமல்லாமல் ஏனைய அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ”நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்” வடபிராந்திய இணைப்பதிகாரியான ஹனிபா மொகமட் சியால் கூறுகின்றார்.