சதிக்குப் பயந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் பிரதான பாதுகாப்பு அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கூற்றை இந்தியா முற்றாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் “பொன்சேகாவின் அந்தக் கூற்று எந்தவிதமான அடிப்படையும் அற்றது” என்று கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேகா பதவி விலகுவது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சதி தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியான வதந்தி பரப்பப்படுவது குறித்து நாம் சிறிது வேதனை அடைந்துள்ளோம். இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை என்று அவர் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை என இந்தியா நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.