சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வருடங்களில் ஏற்படாதளவு பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்த மில்லியன் கணக்கான யாத்திரிகர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சவூதி உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கா நகரில் இடம்பெறும் முஸ்லிம்களின் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்பாரிய மழை வீழ்ச்சி இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பத்திரிகை முகவர் அமைப்பின் தகவலின்படி ஜித்தா ராபி மற்றும் மக்கா ஆகிய நகரங்களிலேயே வெள்ளத்தால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உயிரிழப்புகள் வெள்ளத்தினாலும் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையாலும் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் வெள்ளப் பெருக்கினால் பெருந்தொகையான மக்கள் கார்கள் மற்றும் பஸ்களினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சவூதி மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் குடியிருப்புப் பகுதி என்பவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவின் பொதுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அப்துல்லா அல்அம்ரீ தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் நகரைச் சூழவுள்ள குடிசைப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் 3 மில்லியன் மக்கள் மக்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தமது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற இறைவனை வழிபட மலையேறும் போது சனநெரிசல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், மழை காலம் என்பதனால் யாத்திரிகர்களை கவனமாக செயற்படுமாறு சவூதி அரசு எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் யாத்திரையின் போது ஏற்படும் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஹஜ் யாத்திரைக் காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை வழமைக்கு மாறாக கடும் மழை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவையின் நிருபர் தெரிவித்துள்ளார்.
kunam
சவுதி அரேபியாவில் மழை வராது என்றும் அல்லது மிகவும் குறைந்த மழையே இருக்கும் என நம்பினேன் இது வழமைக்கு மாறான விடயமா அல்லது சாதாரணமாகவே மழை இருக்குமா? இந்த காலநிலை சவுதியில் மழை வீழ்ச்சி அளவுகள் கால மாற்றங்கள் பற்றி யாரும் தெரிந்தால் சொல்லுங்கள்