2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

CNN_Hero_Narayanan_Kirishnanஎந்திரன் முகத்திரை கிழிகிறது என்ற பதிவில் நான் எழுதியது. திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • palli
    palli

    பாராட்ட முடியவில்லை; அதனால் வணங்குகிறேன்;
    வாழ்த்த முடியவில்லை அதனால் கடவுளாய் பார்க்கிறேன்;
    தகவலுக்கு நன்றி;

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இப்படியான உள்ளங்களை காணும் போது உலகம் இன்னமும் இயங்கும் என சொல்லத் தோன்றுகிறது.
    மனிதனும் தெய்வமாகலாம். அந்த வாக்கியம் இவருக்கு உண்மையாகவே பொருந்தும்.
    வாழ்க

    Reply
  • BC
    BC

    இந்த சாதனையாளர் பற்றிய தகவல் சில தினங்களுக்கு முன்பு இமெயிலில் கிடைத்தது.உண்மையான ஹீரோ இவர் தான்.

    Reply
  • chandran .raja
    chandran .raja

    சினிமா நடிகர் “கட்டவுட்கள்” களுக்கு கிடா வெட்டி பால்லாமேஷகம் செய்கிற நாம இவரை சும்மா விட்டிடுவமா?.அரசியல்வாதியாக மாறிடுங்க! இல்லை.ஈழத்தமிழரைச் சொல்லி வைக்கோ நெடுமாறன் பின்னாலே கட்சி கட்டுங்க!. அது சரி உங்க முகத்தோற்றம்.செழிப்பாக இருக்கிறதே! இந்த பிரச்சாரத்தில் ஏதாவது பின்ணனியிருக்குமோ!
    அரசியலே அவனவன் வயிற்றும் கூரைக்குமான போராட்டம் தானே!. இனிநாம எல்லாத்தையும் புதைச்சுவிடனுமா? மார்க்ஸியம் படிச்ச கோளாறு இப்படி எல்லாம் கேள்வி கேட்கத் தோணுது.ஒவ்வொருவனும் தன்வயித்தை கழுவுகிறதிற்கும் உயிரை பாதுகாக்கிறத்திற்கும் ஆலாப் பறந்தடிக்கிறான்.நீங்கள் ஒரு கோடிபேருக்கு உணவு அளித்தீர்கள் என்றால் உங்களிடம் அட்சஷயபாத்திரம் தான் இருக்க வேண்டும். இன்னும் பல கருத்துக்கள் தொடர்ந்து வரும். அதன் பின் தொடருவோம்.

    Reply
  • palli
    palli

    //அது சரி உங்க முகத்தோற்றம்.செழிப்பாக இருக்கிறதே! //chandren raja
    அவரது மனது செழிப்பாக இருப்பதால் அவரது முகமும் செழிப்பாக இருப்பதாய் நான் உணர்கிறேன், அன்னை திரேசா முகத்தில் என்றாவது சோகத்தை பார்த்தீர்களா?? டயானாகூட ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்; தான் உல்லாசமாக இருக்கும் போது கிடைக்கும் மகிழ்வை விட ஏழைகளுடன் அவர்கள் ஏழ்மையை குறைக்க முயலும் போது கிடைக்கும் மகிழ்வே அதிகமாக உள்ளதென;

    Reply
  • BC
    BC

    //பல்லி – அவரது மனது செழிப்பாக இருப்பதால் அவரது முகமும் செழிப்பாக இருப்பதாய் நான் உணர்கிறேன், //
    இந்த உணர்வு மதிக்க தக்கது.
    அன்னை திரேசா, ஹீரோ நாராயணன் கிருஷ்ணன் போன்றவர்களோடு டயானாவை ஒப்பிடுவது பொருத்தமே இல்லை.
    //சந்திரன் ராஜா – உங்க முகத்தோற்றம்.செழிப்பாக இருக்கிறதே! //
    முகம் வரட்சியாக உள்ள தனக்கே போதுமான உணவு கிடைக்காத ஒருவரால் மற்றவர்களை தேடிபிடித்து உணவு வழங்குவது நடக்க முடியாத காரியம்.
    //ஈழத்தமிழரைச் சொல்லி வைக்கோ நெடுமாறன் பின்னாலே கட்சி கட்டுங்க! //
    வைகோ, நெடுமாறனோடு இப்போ இந்த வியாபார போட்டியில் முன்னணியில் நிற்க்கும் மகஇக வை மறந்துவிட்டீர்கள்.

    Reply
  • palli
    palli

    அன்னை திரேசா, ஹீரோ நாராயணன் கிருஷ்ணன் போன்றவர்களோடு டயானாவை ஒப்பிடுவது பொருத்தமே இல்லை.//
    நானும் அப்படி சொல்லவில்லை;கவனிக்கவும்
    இது பல்லி:::::
    /டயானாகூட ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்; தான் உல்லாசமாக இருக்கும் போது கிடைக்கும் மகிழ்வை விட ஏழைகளுடன் அவர்கள் ஏழ்மையை குறைக்க முயலும் போது கிடைக்கும் மகிழ்வே அதிகமாக உள்ளதென;/
    மனம் இறங்கி உதவும் போது
    முகம் செழிப்பாய் காட்சி தரும்;
    என்பதே என் கருத்தும் உவமையும்;

    Reply
  • BC
    BC

    பல்லி, கவனித்தேன்.

    Reply