பல்கலைக்கழகம் முதல் மருத்துவமனை வரை தொடரும் துஸ்பிரயோகங்கள் : மாணவியின் சாட்சியம் : த ஜெயபாலன்

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என்றும் ”யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அதிகரித்து உள்ளது” என்றும் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அண்மைய நிகழ்வுகளில் சுட்டிக்காட்டி இருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் பின்னணியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நீண்ட காலம் இலங்கையில் நிலவிய யுத்த சூழலை தங்களது துஸ்பிரயோகங்களுக்கான விளைநிலமாகப் பயன்படுத்திய பாதகர்கள் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சூழலில் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுள்ளனர். தேசம்நெற் இல் வெளியான கட்டுரைகளை அடுத்து பாதிக்கப்பட்ட சிலர் வெவ்வேறு வழிகளில் எம்மை மறைமுகமாக அணுகி உள்ளனர். அவர்கள் தங்களை இனம் காட்டமுடியாத நிலையில், அவர்களது வாக்கு மூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் இவற்றைக் கடந்து உறுதியான சாட்சியங்களுடன் மாணவி ஒருவர் முன்வந்துள்ளார். அதிபர் இமெல்டா சுகுமார் வெளிப்படுத்தியது எமது சமூகத்தில் மறைந்து குவிந்து கிடக்கின்ற சீரழிவின் ஒரு பகுதியே என்பதனை அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியானது உறுதிப்படுத்துகிறது.

பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் இளம்பெண்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து விசேடமாகக் கவனிக்கும் மருத்துவர்கள் – மாணவியின் சாட்சியம்

1984ல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டியில் பிறந்த பெண் இவர். இவரின் பெற்றோர் தமிழும் சிங்களமும் என்பதால் சிங்களத்திலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உழைப்பிற்காக கொழும்புக்குச் சென்று வாழ்ந்தனர். கபொத சாதாரண தரத்தில் (O/L) படித்துக் கொண்டிருந்த காலம் அது. இளமையில் வறுமை இருந்த போதும் அம்மாணவியின் அழகில் வறுமை இருக்கவில்லை. துரதிஸ்ட வசமாக மிகுந்த நோய்வாய்ப்பட்டார். அடிக்கடி மயக்கம் ஏற்படும். கடுமையான வலி ஏற்படும். அதனால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அம்மாணவியைப் பரிசோதித்ததில் அவர் இதயம் தொடர்பான நோயுடையவராகவும் அது சிக்கலானதாகவும் விசேட நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் கீழ் பார்க்கப்பட வேண்டியதாகவும் இருந்தது. அதனால் இலங்கையில் மிகவும் பிரபல்யமான மருத்துவ நிபுணரின் கீழ் பதிவு செய்யப்பட்டார்.

இவருடைய இதய நோயக்கு சிகிச்சை அளிக்க வந்தவர் இதயமற்ற ஒரு மருத்துவ நிபுணர் என்பதை அம்மாணவி வெகுவிரைவிலேயே அறிந்துகொண்டார். இந்த மருத்துவ நிபுணர் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியரினதும் பிரபல்யமான கல்லூரியினது அதிபரினதும் புதல்வர். யாழ் வைத்தியசாலையின் தலைமை வைத்தியராக இருந்தவர். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் விரிவுரையாளராக இருந்தவர். தற்போது பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள குறிப்பான நோய்கள் பற்றி கருத்துப் பரிமாற்றத்திற்கு வருபவர்.

மாணவியைப் பரிசோதித்ததில் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாணவிக்கு ஏற்பட்ட இதய நோய்க்கான சிகிச்சை என்பது இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமல்ல. இலங்கை முழுவதிலும் உள்ள இதயநோய் சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டிய நோயாளிகள் அனைவருமே கொழும்பு பொது மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுவர். பணவசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே உடனடியாகச் சிகிச்சையை முடித்துக்கொள்வர். ஆனால் வசதி அற்றவர்கள் பொது மருத்துவமனையில் மாதங்களாக வருடங்களாக காத்திருக்க வேண்டி ஏற்படும்.

காரணம் இவ்வாறான நிபுணர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவ மனைகளிலேயே பணி செய்கின்றனர். தனியார் மருத்துவமனையில், பொது மருத்துவமனையில் ஒரு சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியைவிடப் பல மடங்கு அதிகம் வழங்கப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இவர்கள் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். (இவ்வாறு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல.) இலங்கை முழுவதும் இருந்து இவ்வாறான சிகிச்சைக்கு வரும் பல நூற்றுக் கணக்காண இந்த மாணவியைப் போன்ற ஏழைக் குடும்பப் பின்னணியில் வருவோர் மாதங்களாக வருடங்களாக கொழும்பு மருத்தவமனையில் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறு 1999ம் ஆண்டில் கொழும்புப் பொது மருத்துவமனையில் இம்மாணவி அனுமதிக்கப்பட்டார். நோய் சிக்கலானதாக இருந்தமையால் 2001 முதல் குறிப்பிட்ட மருத்துவ நிபுணரின் கீழ் இந்த மாணவி பதிவுசெய்யப்பட்டார். முதற் சந்திப்பில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவ, மாணவிகளுடன் அந்த மருத்துவ நிபுணர் அந்த மாணவியை முதற் தடவையாகப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்த பார்வையிடல்களின் போது மாணவி மீது தனிப்பட்ட அக்கறை ஆரம்பமானது. நிரையாக அடுக்கப்பட்ட கட்டில்கள் ஒரு திரையினால் மட்டும் மறைக்கப்பட்ட நிலையில் நிபுணர் பிரிசோதணை என்ற பெயரில் தகாத தொடுகைகளில் ஈடுபட்டு உள்ளார். ஒரு வைத்திய நிபுணரின் பரிசோதணையின் எல்லைகளைக் கடந்த இந்தச் செய்கைகளை இளம் மாணவி உணர்ந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கவில்லை. அந்த மருத்துவ நிபுணர் இந்த மாணவியை தன்னுடைய இச்சைகளுக்கு உட்படுத்த ஆரம்பித்தார்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு பத்து வருடங்களுக்கு முன் இந்த மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். பிரேமதாசா அரசாங்கத்துடனும் நெருக்கமாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசாங்கத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இவர் முக்கிய பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்பேச்சுவார்தை முறிவடைந்த போது இம்மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முற்பட்டு இருந்தார். அப்போது வே பிரபாகரன், ”நீங்கள் வைத்தியத்தைப் பாருங்கள். நான் அரசியலைப் பார்க்கிறேன்’ என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதுடன் இந்த மருத்துவ நிபுணரும் கொழும்பு வந்துவிட்டார்.

இவ்வாறு அரசியல் செல்வாக்கும் பண பலமும் தொழிற் திறமையும் உடைய ஒருவர் இவ்வாறான குற்றத்தைப் புரிகின்ற போது பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்கின்ற தடுக்கின்ற ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை என்பதை சரியாகக் கணித்தே அந்தக் குற்றத்தை இழைக்கின்றனர். மலையகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தன்னுடலின் மீது ஒரு மருத்துவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை தன் பெற்றோரிடமே எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் தனக்குள்ளேயே புளுங்கவே முடிந்தது.

நாட்கள் நகர நகர அந்த மாணவியின் உள்ளமும் பாதிப்படைந்தது. 2002ல் அந்த மருத்துவ நிபுணர் மாணவியை மாதத்தில் ஒரு தடவை பார்வையிட நேரம் வழங்கப்பட்டது. மாணவியை பரிசோதணைக்கு முன் குளித்துவிட்டு இருக்குமாறும் அணியும் ஆடைகள் பற்றியும் கட்டளையிட்டுள்ளார் மருத்துவ நிபுணர். மருத்துவ நிபுணரை சந்திக்கும் நாள் நெருங்கும் போதெல்லாம் அந்த மாணவி பயத்தினால் மயங்கி வீழ்ந்தால். தனக்கிருந்த நோயின் வலியிலும் பார்க்க அந்த நோயைக் குணமாக்க வந்த மருத்துவ நிபுணர் அப்பெண்ணின் உடல்மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை அவருக்கு அதிக வலியையும் உளைச்சலையும் கொடுத்தது.

மாணவியின் பெற்றோரோ மருத்துவ நிபுணர் தங்கள் மகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிகிச்சை அளிக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். மனித இயல்புகளையும் நடவடிக்கைகளையும் மிகுந்த நிபுணத்துவத்துடன் அறிந்திருந்த அந்த மருத்துவ நிபுணர், பெற்றோருடன் மிக நட்பான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அந்த மாணவியை அப்பலோ தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவும் முன்வந்தார். தங்களிடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வசதியில்லை என்பதனை அவர்கள் தெரிவித்த போது, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் அங்கு பார்வையிட அழைத்து வருமாறும் அதற்கான செலவை தானே செலுத்தவும் முன்வந்தார். பெற்றோரைப் பொறுத்தவரை அந்த மருத்துவ நிபுணர் கடவுளுக்கே சமமானவர் ஆனார்.

ஆனால் அந்த மாணவியின் வலியோ உச்சத்திற்கு சென்றது. வெறும் திரை மறைவிலேயே தன்னுடல் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட மருத்துவ நிபுணர், தனியார் மருத்துவமனையின் மூடிய அறையில், தன்னை என்ன பாடுபடுத்துவார் என்பதை அம்மாணவி ஊகித்துக் கொள்ள அதிகநேரம் ஆகவில்லை. அம்மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு தனிப்பட்ட முறையில் விசேட கவனிப்பை மருத்துவ நிபுணர் வழங்குகிறார் என்று காத்திருக்க, உள்ளே மருத்துவ நிபுணர் முழுஅளவிலான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இவ்வாறு ஒரிரு தடவைகள் அல்ல பலமுறை அம்மாணவி அவஸ்தைக்கு உள்ளானாள். ஒவ்வொரு தடவையுமே பெற்றோர் அவளுக்கு சிகிச்சை இடம்பெறுகிறது என்று எண்ணி மருத்துவ நிபுணருக்கு தங்கள் வேண்டுதலைச் செய்து கொண்டிருந்தனர்.

பெண்ணுடைய சம்மதம் இன்றி பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவது மட்டும் தான் பாலியல் பலாத்காரம் என்ற முன்னைய வரையறைகள் அடிப்படையில் அந்த மருத்துவ நிபுணர் செய்தது பாலியல் பலாத்காரம் அல்ல. ஆனால் பெண்ணுடைய சம்மதம் இன்றி அவளுடலை ஆக்கிரமிப்பதும் அவளுடலை வன்முறை செய்வதும் பாலியல் பலாத்காரம் என்ற தற்போதைய வரையறைகளை இந்த மருத்துவ நிபுணர் மிகமோசமாக மீறியுள்ளார். அதிலும் ஒரு மருத்துவராக தொழில் நேர்மையுடன் தொழிலுணர்வுடன் செயற்பட வேண்டிய ஒருவர், அம்மாணவியின் கையறுநிலை, ஏழ்மை இவற்றைப் பயன்படுத்தி மிகத் திட்டமிட்டு தன்னுடையை இச்சைக்கான இரையைத் தேர்வுசெய்துள்ளார்.

அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திய அந்த மருத்துவ நிபுணர், அவருடைய மருத்துவ கண்காணிப்பில் இருந்த நான்கு ஆண்டுகளில், அம்மாணவியினுடைய நோய்க்கு குறைந்தபட்ச சிகிச்சையைக் கூட அளிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் அந்த மாணவியைப் பார்வையிட வரும்போதும் தனது காமத்தைத் தீர்த்துக் கொண்டதற்கு அப்பால் அம்மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தன்மீதான வன்முறையை நிறுத்தும்படி அம்மாணவி பலதடவை மன்றாடிய போதும், மருத்துவ நிபுணர் தன் வன்முறையை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த நிபுணர், அந்த மாணவியை தனது இச்சைக்கு பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொண்ட அம்மாணவியைப் பார்வையிடும் சிங்கள மருத்துவரும், அம்மாணவி மீது தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு சம்மதிக்காதபோது அவர் தனது இச்சையை நிறுத்திக் கொண்டார்.

பெற்றோர் அந்த மருத்துவ நிபுணரை கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த மாணவி உண்மையைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள சமூகக் கட்டமைப்பும் சமூகச் சூழலும் இடம்கொடுக்காது. இந்த வன்முறையில் இருந்து தன்னுடலைக் காப்பாற்ற அதனை அழிப்பதே ஒரேவழியென்ற முடிவுக்கு அந்த மாணவி வருகின்றாள். மாதங்களாக, வருடங்களாக தன்னுடல் மீது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறலை தாங்க முடியாத அந்த மாணவி ஒரிரு தடவை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். மரணம் சாத்தியப்படவில்லை.

தன்னைக் காப்பாற்ற இலங்கையை விட்டு வெளியேறுவதே அவருக்கு அடுத்த உபாயமாக இருந்தது. தங்களுக்கு இருந்த சொத்துக்களை விற்று ஒருவகையில் படிப்பதற்கு என்ற போர்வையில் லண்டன் வந்து சேர்ந்தார், அந்த மாணவி. 2001ல் ஆரம்பித்தது 2005ல் லண்டன் வந்ததுடன் அதற்கு முற்றுப்புள்ளி என்றே நினைத்திருந்தார். ஆனால் மருத்துவ நிபுணர் விடவில்லை. பெற்றோரிடம் அந்த மாணவியின் தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட அந்த மருத்துவர் கற்கைகளுக்காக பிரித்தானியா வரும் ஒவ்வொரு தடவையும் இந்த மாணவியை முயற்சித்துள்ளார். ஆனால் மீண்டும் தன்னுடல் மீது இந்த மருத்துவ நிபுணர் வன்முறையில் ஈடுபடாதவாறு அவரை அந்த மாணவி தவிர்த்துள்ளார்.

இலங்கையில் இருந்த போது அந்த மாணவியின் உடல்மீது மேற்கொண்ட பாலியல் வன்முறையை இப்போது வார்த்தைகளில் தவளவிட்டார், அந்த மருத்துவ நிபுணர். அந்த மாணவி தொலைபேசியைத் துண்டிக்கும் பட்சத்தில் அவரின் பெற்றோரிடம் முறையிட்டு மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வார். தொலைபேசியில் மாணவியுடன் கதைத்தபடி சிற்றின்பத்தில் திளைத்தார்.

இந்த மாணவி மருத்துவ நிபுணரைத் துண்டிக்க முயலும் ஒவ்வொரு தடவையும் அவரின் தாயார் அவரை நன்றி மறந்து செயற்படுவதாகவும், எதிர்காலத்தில் அப்படிச் செய்தால், தான் தற்கொலை செய்வேன் என்றும் தனது மகளை மிரட்டியுள்ளார். மிகவும் பலவீனமான உளவியல் தன்மையுடைய இப்பெண் யாரையும் எளிதில் நம்பக் கூடியவர். அவருடைய உளவியலையும் குடும்பத்தின் நிலையையும் ஏழ்மையையும் மிக அவதானமாகக் கைக்கொண்டு தன்இச்சையை அம்மருத்துவ நிபுணர் தொடர்கின்றார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு இருந்த சிறு வேலையும் இல்லாது போக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போது தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத நிலையில் தேசம்நெற் ஆசிரியர் என்றும் அறியாத நிலையிலேயே எமது உதவியை நாடினார். அதிலிருந்தே அந்த மாணவியினுடைய கடந்த காலம் பற்றியதும் தொடர்வதுமான கசப்பான சம்பவம் எமக்குத் தெரியவந்தது.

இச்சம்பவம் தெரிய வந்ததும் ஆதாரத்தைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டோம். இந்தப் பின்னணியை அறியாத அந்த மருத்துவர் அன்றும் ஒருநாள் தொடர்புகொண்டார். அவர் தனது வார்த்தைகளால் பாலியல்வல்லுறவு கொண்டு சிற்றின்பத்தில் திளைத்தது முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப்பதிவில் அவர் பல வருடங்களாக அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டது பற்றிய குறிப்புகளும் பதிவாகியது. இதே போன்று மற்றுமொருநாளும் இவருடைய இந்த காமுகத்தனம் பதிவாக்கப்பட்டு அவர் கடந்த மாதம் (ஒக்ரோபர்) இறுதிப்பகுதியில் எச்சரிக்கப்பட்டார்.

பதிவு செய்யப்பட்ட உரையாடல் முற்றுமுழுதான பாலியல் பிரயோகங்களைக் கொண்டிருப்பதால் அதன் ஒலியையோ எழுத்துருவையோ இங்கு பதிவு செய்வதை தவிர்க்கிறேன்.

இன்றுள்ள சமூகக் கட்டமைப்பில் தனக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை தன் அடையாளத்துடன் அப்பெண் வெளியே கொண்டுவர அஞ்சுகின்றார். அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கொண்ட ஒரு சமூகப் பிரபல்யம் பெற்ற மருத்துவ நிபுணரை கூலி வேலை செய்கின்ற குடும்பத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் சட்டப்படியும் சமூகக் கட்டமைப்பிலும் எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாக இல்லை. அதனால் அந்த மாணவியின் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மாணவிகளின், பெண்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. அதனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் இவ்வாறான மருத்துவர்களும் தொடர்ந்தும் தங்கள் வன்முறைகளை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர். முத்தையா யோகேஸ்வரி என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய விரிவுரையாளர் தங்கராசா கணேசலிங்கம் தற்போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். ஆனால் இதனை வெளிக்கொண்டுவந்த இளம் பெண் முத்தையா யோகேஸ்வரி தற்போது உயிருடன் இல்லை என்றே தெரியவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியையே இடமாற்றுகின்ற அரசியல் பலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு இருந்தது. ஆனால் முத்தையா யோகேஸ்வரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். தங்கராசா கணேசலிங்கம் தவறு செய்திருக்கலாம் அல்லது நிரபராதியாக இருக்கலாம். ஆனால் ஒரு பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பல்கலைக் கவுன்சிலின் எந்தவொரு விசாரணையும் இன்றி எப்படி மீண்டும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்? சிவச்சந்திரன் போன்ற பெண்ணிலை வாதியைக் கொண்டுள்ள பல்கலைக்கழகக் கவுன்சில் எப்படி பெண்கள் மீதான இந்த பாலியல் துஸ்பிரயோகங்களை தொடர்ந்தும் அனுமதிக்கிறது?

பல்கலைக்கழகமும் தமிழ் அரசியல் தலைமைகளும் தவறான முன்னுதாரணங்களை அமைப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறான நபர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பவர்களும் அந்தத் தவறுகளுக்கு பொறுப்பாகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சில தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சாட்சியங்களை தேசம்நெற் இல் எதிர்பார்க்கலாம்.

(குறிப்பு: தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவர விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் அனாமதேயமாகவும் தொடர்பு கொள்ளலாம்.)

அண்மையில் யாழ் பல்கலைக்கழகம் பற்றி அங்கு பட்டப்படிப்பை முடித்த மாணவனுடன் உரையாடிய போது, சில பெண்கள் விரிவுரையாளர்களிடம் தங்களை இழந்து திறமைச் சித்திபெறத் தயாராக இருப்பதாகவும் அதனால் விரிவுரையாளர்களை பேராசிரியர்களைத் தவறு சொல்வதில் அர்த்தமில்லை என்றார். ஒரு விரிவுரையாளருடைய ஒரு பேராசிரியருடைய கடமை தொழில் பொறுப்பு என்பனவற்றை கவனத்திற்கொள்ளாமல் பாதிக்கப்படுகின்ற மாணவிகள் மீதே குற்றம் சுமத்துகின்ற ஒரு போக்கே உள்ளது. இது ஆணாதிக்க சமூக்க கட்டமைப்பின் ஒரு பிரதிபலிப்பே. பட்டப்படிப்பிற்கு செல்கின்ற மாணவிகளுடைய நிலை இப்படி இருக்கும் போது கண்டியில் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற 14 வயதான இளம்பெண், அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கூடிய ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டால் பெற்றோரிடமே சென்று முறையிட்டால் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் எங்கு சென்று முறையிட முடியும்?

Show More
Leave a Reply to kumaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 Comments

  • T Sothilingam
    T Sothilingam

    யாழ் சமூகத்தில் இப்பேர்ப்பட்ட அயோக்கியர்களை சமூகம் இனம் காண வேண்டும். ஆனால் யாழ் பத்திரிகைகள் ஊடகங்கள் இவர்கள் மறைந்த கொள்ளவே வாய்ப்பளிக்கின்றது. இப்படியான விவகாரங்களில் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் உடனடியாக தனது கடமைகளை செய்து கொள்ள வேண்டும் இதற்கான தமது சமூகப்பொறுப்புணர்வை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    Reply
  • Nadchathran Chev-Inthian
    Nadchathran Chev-Inthian

    துணிகரமான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பொருத்தமான உளவள சேவை ஆலோசனைகளும் சட்ட ஆலோசனைகளும் கிடைக்கச்செய்தல் வேண்டும்

    ஜெயபாலன் மருத்துவரின் பேரை வெளியிடுவதுதானே. இன்னும் ஏன் தயக்கம்.
    பெயரைப்பயிரங்கப்படுத்துவதால் இக்கொடும் குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகலாமல்லவா.

    -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    Reply
  • kumaran
    kumaran

    This is call “vasool raja MBBS, MD”

    Reply
  • நந்தா
    நந்தா

    பெயரை வெளியிடுங்கள். அந்த ஆசாமியை ஒரு வழி பண்ணுகிறோம்!

    Reply
  • மாயா
    மாயா

    இப்படியானவர்களது பெயர்கள் வெளியிடப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்றவை தொடரும் ……. இவ்வாறான நிகழ்வுகளின் காலங்களையும் கட்டுரையில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ; புலிகளுக்கு பின் யாழ்பாணத்தில் இப்படியான நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன என சிலர் கதை விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களது முகங்களை மறைத்தாலும்; கயவர்களது முகங்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களது முகங்களும் தேசத்துக்குத் தெரிய வேண்டும்.

    Reply
  • ashroffali
    ashroffali

    ஜெயபாலன் அண்ணா.. மருத்துவரின் பெயரை வெளியிடுங்கள். இலங்கை மருத்துவக் கவுன்சில் நிர்வாகிகள் என் நண்பர்கள் தான். விடயத்தை நான் பார்த்துக் கொள்கின்றேன். வாழ்நாள் முழுக்க இனி அவருக்கு டாக்டர் என்று சொல்லிக் கொள்ளவே முடியாமல் பாடம் படிப்பிக்கிறேன். அவரது பதிவையும் உடனடியாக இரத்துச் செய்தால் அவரது செல்வாக்கு தானாக சரிந்து விடும். அதன் பின் டாக்டர் தொழில் அம்போ தான்…

    Reply
  • BC
    BC

    தேசம்நெற்றின் செயல் பாராட்டதக்கது. தமிழ்படங்களில் வரும் வில்லன், பண்ணையார் எல்லாம் இந்த படுபாதகர்களுடன் பார்க்கும் போது மூலைக்குள் தான்.

    Reply
  • Prof Soman
    Prof Soman

    ஜெயபாலன்

    ஒரு நல்ல ஊடகத்திற்கு மூலதனம் அதன் நம்பகத்தன்மை. இந்த நம்பகத் தன்மையைப்பெற அந்த ஊடகம் செய்திகளை வெளியிடும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்தல் அவசியம்.

    இந்தக் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மருத்துவர் யாரென்பதை ஊகிக்க முடிகிறது. அவரைப்பற்றி நீங்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சரியா பிழையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வேறு இரண்டு விடயங்கள் தவறானவை என்பது எனக்கு நிட்சயமாகத் தெரிவதால் இந்தக் கட்டுரையில் மேற்படி மருத்துவரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்களும் தவறானவையாக இருக்கலாம் என எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

    உதாரணத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியையே மாற்றுகின்ற அரசியல்பலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது தவறு. இங்கு நீங்கள் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி என்று குறிப்பிட்டது சாவகச்சேரி நீதிபதி திரு பிரபாகரன் அவர்களை என்று நினைக்கிறேன். அவர் இடமாற்றப்பட்டதற்கான உண்மையான காரணம் சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் கொலைவழக்கில் விசாரணையில் ஈடுபட்டிருந்த ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றிற்கு வராத காரணத்திற்காக அவரை கைது செய்வதற்கு பிடியாணை விடுத்ததே. கபில்நாத்தின் கொலை வழக்கில் அமைச்சர் தேவானந்தாவின் கட்சியும் அயோக்கியத்தனமான முறையில் ஊடகங்களால் தொடர்புபடுத்தப் பட்டிருந்ததால் அவ் வழக்கை விசாரித்த நீதிபதியின் இடமாற்றமும் அமைச்சரின் தலைமேல் போடப்பட்டது. இதுவே உண்மை.

    இரண்டாவது சரோஜா சிவச்சந்திரனை நீங்கள் ஒரு பெண்ணிலைவாதி என குறிப்பிட்டுள்ளது. ஒரு அபலை வேலக்காரச் சிறுமியை இவர் சித்திரவதைசெய்த கதை பத்திரிகைகளில் வந்தது உங்களுக்குத் தெரியாதா ?

    Reply
  • aras
    aras

    பரிதாபத்திற்குரிய சமூகமே என்ன செய்யப் போகின்றாய்?

    Reply
  • aras
    aras

    செனவிரட்னவும் ஒரு டாக்டரே. அந்த வழக்கு என்ன நிலையில் உள்ளது?
    இத்தகைய பிரச்சனைகள் இல்லாத அல்லது அப்படி ஏதும் வந்தாலும் சரியாக கையாளக் கூடிய அறிவுள்ள ஒரு சமூகத்தை படைத்திருக்க முடியும். யார் மக்கள் மேல் கரிசனையோடு இருந்தார்கள்? கையில் ஆயுதங்களோடு ஆடி முடித்து விட்டு போய் விட்டார்கள். எங்கிருந்து தொடங்குவது ?

    Reply
  • மாயா
    மாயா

    Prof Soman, இங்கே ஒரு பக்க சார்பான கருத்துகள் வர சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்தாலும் உங்களைப் போல் மருத்துவரை அல்லது அந்த பெண்ணிலைவாதி குறித்தும் எழுதலாம். வாசகர்கள் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள்.

    இப்படியான நிகழ்வுகள் குறித்து யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்ததற்கு அங்கு நடக்கும் நிகழ்வுகள்தானே காரணம்? அதை யாழ் மக்கள் இல்லை , அப்படி நடக்கவில்லை என இதுவரை மறுதலிக்கவில்லை. கற்ற சமூகத்தைக் கொண்ட யாழ் பல்கலைக் கழகத்தின் யாரும் அவர் சொல்வது தவறு என மறுக்கவில்லை?

    தங்களைப் போன்ற பலரும் எழுத வேண்டும்.

    Reply
  • V.Shan
    V.Shan

    உண்மையிலேயே இவ்வாறான கஜவர்கள் எம் தேசத்தில் தமது அதிகார பலத்தையும் திறமையினையும் கொண்டு தமது மன்மதலீலைகளை அரங்கேற்றுவது திரைமறைவு நிதர்சனம். இவ்வாறானவர்கள் பெண்களை ஏன்தான் காம யந்திரங்களாக நோக்கிறார்கள் என்பது மனித உணர்வியல் கூற்று என மழுப்பினாலும் தம்மை நம்பிவரும் இந்த மங்கையரை தம்மை நம்பியிருக்கும் மாதா, மனைவி, மகள் என்ற மனமார்ந்த உறவுக்கண்ணோட்டத்துடன் நோக்கலாம்தானே! சம்பந்தப்பட்டவர்களுக்கு தேசம் நெற் வாயிலாக சில சொல்கிறேன் “நீங்கள் செய்வது தெய்வீகமான பணி. அதை அவ்வாறே சமூகமும் எதிர்பார்க்கின்றது மாணவர்களாகிய நாமும் எதிர் பார்க்கிறோம் உமது சிற்றின்ப ஊடாட்டத்துக்காக சிதறடிக்கப்படுவது எம் சந்ததிகளே என்பதை உணருங்கள்! நாளை உங்கள் பிள்ளைகளும்………! இதை ஏற்பீர்களா நீவிர்? யார் பெற்றாலும் பிள்ளைதானே! பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்தம் பெற்றோரும் உணர்வுருகி கலங்கும் கதியை சற்று எண்ணிப்பாருங்கள். மீறியும் உங்கள் கூத்துகள் தொடருமாக இருந்தால் தட்டிக்கேட்க எவனோ ஒருவன் உதயமாவான். இது கடந்தகால பட்டறிவு” –V.Shan, university of jaffna

    Reply
  • prof
    prof

    டாக்குத்தர் …….. என்று நினைக்கிறேன். இவர் சிறிதுகாலம் மாலைதீவிலும் பணிபுரிந்தவர். மாலைதீவிலும் செய்திருந்தால் தலையை கொய்திருப்பார்கள்.

    Reply
  • Prof Soman
    Prof Soman

    ” செனவிரட்னவும் ஒரு டாக்டரே அவரது வழக்கு என்ன நிலையிலுள்ளது ” நல்ல கேள்வி அரஸ்.

    செனவிரட்ன ஒரு நிரபராதி. இந்த வழக்கு தற்போதும் ஊறாத்துறை நீதிமன்றின்முன் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த வழக்கு விசாரணைகள் பற்றிய எந்த செய்திகளும் யாழ் பத்திரிகைகளில் தற்போது வெளிவருவதில்லை.
    இதன் காரணம் தர்சிகாவின் கொலைக்கு டொக்டர் பிரியந்த செனவிரட்ன காரணமில்லை என்பது சகல ஊடகங்களுக்கும் தற்போது தெளவாக தெரியவந்துள்ளது.

    அபலை தர்சிகா சரவணன் தற்கொலை செய்துகொண்டமைக்கு டொக்டர் செனவிரட்ன காரணமல்ல. அதன் காரண கரத்தா ஒரு தமிழ் டிஸ்பென்சர். இந்த வழக்கு தற்போதும் நீதிமன்றின் முன் நிலுவையில் உள்ளதால் நான் இதுபற்றி மேலதிகமாக ஒனறும் தர முடியாது. ஆனால் ஒரு விடயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். அதாவது வெகு விரைவில் தர்சிகாவின் மரண விசாரணைகள் முடிவுக்குவரும்போது உண்மைகளை நாங்கள் வெளிக் கொண்டுவருவோம்.

    தமிழ் தேசிய வெறியர்கள் தமிழ் ஊடகங்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் செய்துவரும் அட்டகாசங்கள் சொல்லில் அடங்க முடியாதவை. இவைக்கு முடிவுகட்டுவதற்கு சகலரும் உதவிசெய்ய வேண்டும் அரஸ் போன்றவர்கள் இந்தப் பிரச்சினைகளை உறங்கவிடப்படாது.

    Reply
  • aras
    aras

    யாழ். மாணவிகள் மூவர் நஞ்சருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதி 16/11/10

    யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் மாணவிகள் மூவர் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பிரஸ்தாப மாணவிகள் மூவரும் பத்தாம் வகுப்பில் கல்வி கற்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

    பாடசாலை அதிபர் ஏசியதன் காரணமாகவே தாம் நஞ்சருந்தியதாக அவர்கள் தெரிவித்த போதிலும், அதிபர் ஏசியதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. அதே நேரம் சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் வினவியபோது அது தொடர்பில் இதுவரை எதுவித முறைப்பாடும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    தமிழ்வின்.

    Reply
  • பேராசிரியர் பெக்கோ
    பேராசிரியர் பெக்கோ

    //நீங்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சரியா பிழையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வேறு இரண்டு விடயங்கள் தவறானவை என்பது எனக்கு நிட்சயமாகத் தெரிவதால் இந்தக் கட்டுரையில் மேற்படி மருத்துவரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்களும் தவறானவையாக இருக்கலாம் என எனக்கு எண்ணத் தோன்றுகிறது.// புரொப் சோமன்

    புரொப் சோமன் நீங்கள் என்ன ஜப்னா கம்பஸிலை எங்கட சடையரிட்டையோ புரொப் பட்டம் எடுத்தனீங்கள். உங்கட ஆர்குயுமன்ற் பிச்சு உதறிறியல். நானும் யாழ்ப்பாணக் கம்பஸ் தான். ஆனா நான் கம்பஸ்க்குள்ள போய் படிக்கேல்ல. வெளியில நிண்டபடி படிச்சிட்டன். அதால தான் எனக்கு பேராசிரியர் பெக்கோ என்று பட்டம் தந்தவை.

    புரொப் சோமன் அந்தப் பிள்ளையைப் பெத்தவையே உந்தக் கதையை நம்ப மாட்டினம் என்று தான் அவ உதை பெத்தவேற்றை சொல்லவில்லை. அப்படி இருக்கேக்க நீங்கள் நம்பாம இருக்கிறது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனா நீங்க நம்ப மறுக்கிறதுக்கு வைக்கிற ஆர்குயுமன்ற் தான் புரியவில்லை.

    இலங்கையின் நீதி அமைச்சரை ஜனாதிபதி மாற்ற முடிந்தால் சாவகச்சேரி நீதிபதி அமைச்சருக்கு யுயுப்பி எல்லோ.

    பேராசிரியர் பெக்கோ

    Reply
  • nanee
    nanee

    நான் நினைக்கின்றேன் இவர் முன்னாள் யாழ் ……அதிபர் …….. மகனென்று.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    புரொபெசர் சோமன்,

    //….தமிழ் தேசிய வெறியர்கள் தமிழ் ஊடகங்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் செய்துவரும் அட்டகாசங்கள் சொல்லில் அடங்க முடியாதவை. இவைக்கு முடிவுகட்டுவதற்கு சகலரும் உதவிசெய்ய வேண்டும் ….//

    அதுதானே அரச ஊடகங்களிலும் விட அதிகமன அக்கறையுடன் நீங்கள் ஆரம்பித்திருக்கிறீர்களே பதிலடி. நீங்கள் வெளியிட்ட யாழ் பொது நூலக சிக்கல் விளக்க அறிக்கை அரச பத்திரிகைகளே வெட்கி் முகம் சிவந்து தலைகுனியும் அளவுக்கு அல்லவா இருந்தது!

    Reply
  • Ajith
    Ajith

    Prof Soman: It is for your attention:
    அபலை தர்சிகா சரவணன் தற்கொலை செய்துகொண்டமைக்கு டொக்டர் செனவிரட்ன காரணமல்ல. அதன் காரண கரத்தா ஒரு தமிழ் டிஸ்பென்சர்.//
    இங்கு நீங்க தற்கொலை என்றே முடிவு பண்ணி தீர்ப்பு வழங்கி பின்பு பாவம் ஒரு டிச்பெனரை கோட்டபாய மாதிரியே குற்றவாளி என்று தீர்ப்பு விடுகிறீர்கள். ஜெயபாலன் டக்லஸ் தனது அதிகாரத்தை பாவித்து நீதிபதியை மாற்றும் வல்லமை கொண்டவர் என்கிறார் நீங்களோ கொடபயவையும் மிஞ்சி விட்டேர்களே?
    செனவிரட்ன ஒரு நிரபராதி என வழக்கு முடிய முன்னமே நீதி வழங்குவது கோட்டபாய ஒருவரால் தான் முடியும். உங்களால் எப்படி முடிகிறது. உங்களுக்கும் கொடபயவுக்கும் என்ன உறவு?

    வடக்கு கிழக்கில் தற்போது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு இராணுவ ஆட்சி நடக்கிறது. கோத்தபாய ராஜபக்ஷ அங்கு அடாவடித் தனங்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பயன்படுத்துகின்றார். யாழ். நகரில் தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்

    Reply
  • Mohan
    Mohan

    நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்ததால் ……. பத்திரிகையின் ஆசிரியராக இருந்த முன்னாள் யாழ்……… அதிபர் …… அவர்களின் மகனை குறிப்பதாகவே தெரிகின்றது. அவர் மீது நீங்கள் குற்றம் சுமத்தவில்லை என்றால் அவர் இல்ல என்பதையாவது உறுதிப்படுத்தவேண்டும்.

    Reply