நினைவுப் பதிவுகளில் இருந்து – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தோற்றம்! : நிலா (முன்னாள் கழகப் போராளி)

Santhadhyar_PLOTEUma_Maheswaran_PLOTEManikkadasan_PLOTEஅண்மைக் காலமாக தேசம்நெற் இணையத்தில் வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றை மிகச் சரியாகவே மீள் பரிசீலனைக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தி உள்ளது. இன்று மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும் அன்றைய தவறுகளில் இருந்து இன்று போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வரலாற்றுப் பதிவுகள் இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாக உள்ளது.

மே 18 2009ல் முடிவுக்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் சரி பிழைகளை நின்று நிதானித்து ஆராயாமல் மீண்டும் எழுந்தமானமான கோசங்களின் அடிப்படையில் அடுத்த நகர்விற்கு தயாராகி உள்ளனர். இன்றைய மோசமான முடிவுக்கு பொறுப்பான அதே அரசியலும் அரசியல் சக்திகளுமே மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டு உள்ளனர். கடந்தகால தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவே வழிவகுத்தது.

போராட்டத்தை முன்னெடுத்த நான் உட்பட தற்போது எமது தாயக மக்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து பாதுகாப்புப் பெற்றுக் கொண்டோம். அன்று எம்மை நம்பிய மக்கள், எம்மால் கைவிடப்பட்டனர். அன்று அந்த மக்களுடன் நின்று போராட்டத்தை சரியாக முன்னெடுக்கத் தவறிய நாம் (அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்) இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்நியப்பட்டு, எமது குற்ற உணர்வின் காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகிறோம் என்றே தோன்றுகிறது.

அன்று பக்கதில் இருக்கும்போதே மக்களைப் புரிந்துகொள்ளத் தவறிய நாம், இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்று இணையத்தை வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்வுகளைப் புரிவோம் என்ற, இணையக் காதலிலும் கீ போட் புரட்சியிலும் என்னால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எமது நடவடிக்கைகளின் விளைவுகளை உணராமல் போராட்டத்தையும் புரட்சியையும் ஏற்றுமதி செய்ய எண்ணும் புதிய பிளாவில் பழைய கள்ளுண்ணும் முன்னாள்களின் சலசலப்புகள், இன்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி எமது மக்கள் நகர்த்தப்படுகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனால் எமது கடந்தகால வரலாற்றை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வரலாற்றை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன். எனது பதிவு ஒரு சிறு முயற்சியே என்பதால் ஏனையவர்களது ஒத்துழைப்பையும் நாடுகிறேன். இப்பதிவினை நான் தேசம்நெற் பின்னூட்ட களத்தில் பதிவிட்ட அதே பெயரிலேயே பதிவிடுகிறேன். தேசம்நெற் ஆசிரியர் குழு என்னை அறியும். தகுந்த நேரம் வரும்போது என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.

முன்னுரை:
தமிழ்பேசும் மக்களின் போராட்டம், அகிம்சைப் போராட்டமாகத் தொடங்கி, ஆயுதப் போராட்டமாக பரிணமித்து, இன்று முள்ளிவாய்க்கால் வரை வந்து மூழ்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் நடத்திய ஒவ்வொரு இயக்கமும் தங்களின் உருவாக்கங்களில் இருந்து அழிந்தது அல்லது அழிக்கப்படும் வரை, இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் நான் சார்ந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (கழகம்) சார்பாக எனது வரலாற்றுக் கடமையை நிலைநிறுத்தி எம் உயிருடன் இருக்கும் சாட்சிகளைக் கொண்டும், தெரிந்த தகவல்களைக் கொண்டும் இப்பதிவினை மேற்கொள்கிறேன்.

எமது போராட்டத்தில் 1972 – 73ற்கு பின் வன்முறையோடு நடந்த ஆயுதக் கலாச்சாரமே இயக்கங்களாக சராசரி மக்களால் ஆரவாரிப்பாக (பெடியங்கள் தமிழீழம் பெற்றுத் தருவார்கள்) பேசப்பட்டது. இவ்வாறான இயக்கங்களில் ஒன்றான கழகம், ஆரம்பத்தில் அடித்தள மக்கள் மத்தியில் நின்று கட்டமைக்கப்பட்டது. காந்தீயம் என்ற அமைப்பின் வட கிழக்கிற்கான நிர்வாக கட்டமைப்பு வேலைத் திட்டங்களின் ஊடாக மக்களை மையப்படுத்திய இந்நகர்வு உள்மட்டத்தில் கழகத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை. கழக உறுப்பினராக இருந்த சிலர் ஆரம்பத்தில் ஆயுதத்தை கையிலெடுத்தாலும் – ஆரம்பகால உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்டு உள்ளனர்.

பல சம்பவங்கள் – நகர்வுகள் – திட்டமிடல்கள் – செயற்பாடுகள் – தீர்வுகள் – முடிவுகள் என வரலாறு ஓடிகொண்டிருக்கும் போது, இதில் சேகரிக்கப்படும் அல்லது பதியப்படும் ஆதாரப்படுத்தப்படக் கூடிய உண்மைகளும் நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டு, சமூகத்தில் பொதுவில் வைக்கப்படும் போதுதான் ஒரு வரலாறு முழுமையடைகின்றது. வரும் சந்ததிக்கும் நாம் கையளிக்கும் ஆவணமாகின்றது.

சமுதாயமானது ஆக்கத்தாலும் – அழிவாலும் வரலாற்றில் நகர்த்தப்படுவது கண்கூடு. மனிதனின் உருவாக்கத்தில் வரலாறு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. எனவே நாம் எமது அனுபவங்களை வரலாறாக்கி எமது அடுத்த சந்ததிக்கு கையளிப்பதுவே ஆரோக்கியமான அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச்செல்லும். எனவே எமது இன்றைய வரலாற்றுப் பதிவுகள் நாளைய தமிழ் மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது.

முளைவிட்ட எமது போராட்டம்:
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமானது 1948 ற்குப் பின்னால் குறுந்தேசியவாத தலைமைகளினால் அகிம்சை வழிகளால் வழிநடத்தப்பட்டமை நாம் அறிந்ததே. இத்தலைமைகள் பாராளுமன்ற ஆசனங்களை குறிக்கோளாக வைத்து வட கிழக்கில் வாக்கு வங்கிகளை நிரப்பி அமோகமான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றின. இவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைவரை தங்கள் பாராளுமன்ற அரசியலை முன்னெடுத்தனர். இந்த பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றுகின்ற விடயமே விடுதலைப் போராட்டம் என்ற வரையறைக்குள்ளேளே தமிழ் குறும்தேசியவாதக் கட்சிகள் தங்களை வளர்த்துக்கொண்டன.

இதனால் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்புகளில் சிலர்- பல மட்டத்திலும், பல மாவட்டத்திலும்- தன்னிச்சையாக செயற்படத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இலங்கை பேரினவாத அரசு இனரீதியான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. பின் அதனைப் பிரதேசரீதியான தரப்படுத்தலாக மாற்றியது. இதனால் யாழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்டாய சிங்கள மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்பு தவிர்க்கப்படுதல், 1948லிருந்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ் பிரதேச விகிதாசாரங்கள் மாற்றப்படல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக பொருளாதார கல்வி நிலைமைகளில் சீர்குலைவுகள் ஏற்படுவது தொடர்ந்தது.

போராட்டம் ஆயுதவடிவம் எடுத்தது:
1970 – 1971 காலகட்டத்தில் இலங்கையில் சிங்கள மாணவ – இடதுசாரிகளின் சேகுவோரா போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. நாட்டில் ஆயுத கிளர்ச்சியாக வெடித்தது. அன்றைய உலகச் சூழலும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் தலைமைகளை நம்பியிருந்த – தமிழரசுக் கட்சி இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக செயற்பட்ட இளைஞர்கள் – தங்கள் தலைமைகளில் மெல்ல மெல்லமாக நம்பிக்கையிழந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்டங்களின் பக்கம் தங்கள் ஈடுபாடுகளை காட்டத் தொடங்கினர்.

இதில் தென்பகுதியின் ஆயுதப் போராட்டங்களின் சில தொடர்புகளின் – நிமித்தம் யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலனும் (தற்போது லண்டனில் வசிக்கின்றார்.) அவரைத் தொடர்ந்து உரும்பிராய் பொன்னுத்துரை சிவகுமாரனும் (இவர்தான் முதல் தற்கொலைப் போராளி. யூன் 05 1974ல் எதிரிப் படைகளிடம் மாட்டிக்கொள்ளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்) உட்பட சில இளைஞர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தனர்.

அரசியல் தலைவர்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பின:
தமிழ் தலைமைகளில் இருந்து நம்பிக்கை இழந்த இளைஞர்கள் புரட்சிக் கருத்துக்களை – செயற்பாடுகளை தத்தமது குணாதிசயங்களுக்கேற்ப உருவகப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் வெவ்வேறு குழுக்களாக செயற்பட்டனர். இத்தீவிர இளைஞர்கள் ஆரம்பத்தில் அரசு சார்பான தமிழ் மந்திரிகள், எம்.பி க்களுக்கு குண்டெறிதல், சிறு ஆயுதங்கள் – காட்டுத் துவக்கு பாவித்து சுடுதல் எனச்செயற்பட்டனர்.

அடுத்து 1973ல் மந்திரி குமாரசூரியர் ஊர்காவற்துறையில் தபால் நிலையம் ஒன்றினைத் திறப்பதற்காகச் சென்று வரும் வழியில், பண்ணைப் பாலத்தைத் தகர்த்து கொலை செய்ய முயற்சித்தனர்.

யூலை 27, 1975ல் அப்போதைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார். இதுவே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாக அமைந்தது.

இளைஞர்கள் கைது:
இவ்வாறான ஆயுத நடவடிக்கைகளின் எதிர்விளைவாக இலங்கை அரசு இளைஞர்களை இச்சம்பவங்களிலோ அன்றி சந்தேகங்களிலோ கைதுசெய்து சிறைக்கும் சித்திரைவதைக்கும் உட்படுத்தினர்.

குமாரசூரியர் கொலை முயற்சி தொடர்பாக ராஜன் (ஞானசேகரன்) மற்றும் கரையூரைச் சேர்ந்த ஆசீர்வாதம் தாசன் ஆகியோர் கைது செயப்பட்டனர். 1973ஆம் ஆண்டு தை 16ம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதில் குறிப்பிடத்தக்கதாக துரையப்பா கொலைக்கு பிரபாகரன் பண உதவியை கேட்க, சந்ததியார் (இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டார்.) தனது சகோதரியின் சங்கிலியை அடைவு வைத்து கொடுத்ததால் பிடிபட்டார். பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன் (தற்போது பிரான்ஸில் இருப்பவர்) பிடிபட்டு சிறையிருந்தனர். கொலையின் முக்கிய நபரான பிரபாகரன் தப்பிவிட்டார்.

இதுபோல் வெவ்வேறிடங்களிலும் சில சம்பவங்கள் – தீவிரவாதங்கள் – சந்தேகங்கள் என்று பரவலாக இளஞைர்கள் கைதாகியிருந்தனர்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை (மே 14, 1976) கூட்டணியினர் அகிம்சை போராட்டமாக முன்னெடுத்த நிலையிலும், அதை முன்னின்று நடத்திய கூட்டணி இளைஞர்களும் பேரவையினரும் கைதாகினார்கள். இதில் உமா மகேஸ்வரனும் (1976) கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் எந்த கைதின் போதும் பிரபாகரன் ஒருபோதும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலை:
1976ல் இலங்கையில் நடைபெறவிருந்த அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை காரணம் காட்டி இதற்கு முன்பே சிறையிலிருக்கும் போராட்டம் சம்பந்தமான அனைத்து தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியால் இலங்கை அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டு பலவழிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் 1976 ஆவணியில் சகல தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் துரையப்பா கொலைவழக்கு மிக கடுமையாகப் பார்க்கப்பட்டு பலதடவை நீதிமன்றத்திற்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்ட வண்ணமே இருந்தது. அதுபோல் குமாரசூரியர் கொலைமுயற்சி 3 வருடம் 8 மாதம் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே கிடப்பில் கிடந்தது. எனவே இந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த விடுதலை கூட ஒரு திருப்பு முனையாக இருந்திருக்கலாம்.

படித்த வாலிபர் திட்டம்:
சிறையிலிருந்து வெளியே வந்த சந்ததியார், ராஜன், சிறிசபாரத்தினம் உட்பட்ட சில இளைஞர்கள் விசுவமடு ‘படித்த வாலிபர் திட்டம்’ அமைக்கப்பட்ட இடத்தில் முகாம் அமைத்து அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் அரசியல் பயிற்சிகள் வழங்கினர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது 17 வயதில் படித்துக் கொண்டிருந்த யாழ் நகரப் பகுதியை சேர்ந்த மாணிக்கம்தாசன் இணைந்து கொண்டார். பின் தாயார் தேடிவந்து கட்டாயப்படுத்தி திருப்பி அழைத்துச் சென்றுவிட்டார். மேலும் இவ் வேலைத்திட்டத்தில் ஒபராய்தேவனும் (பின்நாளில் டெலா இயக்கத் தலைவர்) ஒரு மாதம்வரை பங்காற்றினார். இக்காலப்பகுதியில் இவர்கள் யாரும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்படவில்லை. ஒரு குழுவாகவே செயற்பட்டனர். அதற்கு பெயரோ தலைமைத்துவமோ இருக்கவில்லை.

படித்த வாலிபர் திட்டம், 1966 – 1970ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில், டட்லி சேனநாயக்கா பிரதமராக இருக்கும் போது, அறிமுகப்படுத்திய திட்டம். இலங்கையில் எல்லா மாகாணங்களுக்குமான இளைஞரை மையப்படுத்தி “லாண்ட் ஆமி” தமிழில் “விவசாய படை” என்ற திட்டத்தின் அடிப்படையில் புதுகிராமங்கள் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. அதில் உபஉணவுப் பயிர்களை உருவாக்குவதென்று, காணிவெட்டி களனி அமைக்கப்பட்டது. அதனை செய்வதற்கு ரக்ரர் முதல் கொண்டு எல்லா பொருளாதார வசதிகளும் இளைஞர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞர்களுக்கான சீருடையாக ராணுவ உடையின் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட உடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் மண்வெட்டியுடன் ஒரு கிராமத்து ராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்கள்.

இதன் அடிப்படையில் தமிழ் பிரதேசத்தில் விசுவமடு, முத்தையன்கட்டு, மிருசுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

1970ல் சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பிரதமராக வந்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த திட்டத்தை இலங்கை முழுதும் ரத்து செய்து, அதற்கு பதிலாக இந்த “படித்த வாலிபர் திட்டம்” என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு இளைஞருக்கும் 2 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டு மற்றைய சலுகைகள் சீருடைகள் எல்லாம் நிறுத்தப்பட்டது.

தமிழ் குடியேற்றத்திட்டங்களும் பண்ணைகளும்:
இதே காலகட்டத்தில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள மதுரு ஓயா அருகிலுள்ள புனானை என்ற எல்லைக் கிராமமொன்றில் சிங்களக் குடியேற்றத்தை தடுக்க மரியசிங்கம் இஞ்சினியர் அவர்களால் தமிழ் குடியேற்ற வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பாதியில் கைவிடப்பட்டதும், அதிலும் சந்ததியார், ராஜன், சிறி முதலானோர் இணைந்து கொண்டனர். இங்கு பல இளைஞர்களும் தொண்டராகினர். இதில் சந்திவெளியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார். (மே 18ற்கு முற்பட்ட புலிகளின் கட்டமைப்பில் நீதியரசர் பதவியை வகித்தவர் ஃபாதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரைதான்.)

இந்தத் தமிழ் குடியேற்றத் திட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலரும் இணைந்தனர். இதில் பின்னாளில் கழகத்தின் உறுப்பினரான வாசுதேவாவும் இணைந்து செயற்பட்டார். இக்குடியேற்றத்திற்கு பட்டிருப்பு கணேசலிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர்) செங்கலடி, சம்பந்தமூர்த்தி என்போரும் நிறையவே ஒத்துழைப்புக் கொடுத்தனர். மேலும் குடத்தனையை சேர்ந்த அம்பன் என்ற மோகனசுந்தரம் என்பவரும் தொண்டராக வந்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக பரவலாக குடியேற்றங்களும் விவசாய பண்ணைகளுமாக இளைஞர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1977 இனக்கலவரம் உருவாகியது. இதன்போது கணிசமான மலையகத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனை மையப்படுத்தி வவுனியாவை நோக்கி குடியேற்றங்கள் பரவலாக நடந்தன.

1960ம் ஆண்டு நீதிராஜா என்பவரின் தலைமையில் சில படித்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெரும் வேலைத்திட்டத்தில் இறங்கினர். அதாவது திருகோணமலையில் ஒரு மருத்துவபீட பல்கழைக்கழகமும், வவுனியாவில் விவசாய பீட பல்கலைக்கழகமும் உருவாக்குவதென உற்சாகமாக செயற்பட்டனர். இதன் முதற்கட்டமாக நெடுங்கேணியில் இருந்து 12 மைல் தொலைவில் “வெடிவைத்த கல்” என்ற கிராமத்தில் காணி வாங்கிவிடப்பட்டது. பின் அரசியல் தடைகள் ஏற்பட்டு அந்த முயற்சிகள் தடைப்பட்டது.

எனவே வெற்றிடமான அந்தக் காணியை 1977ல் சந்ததியார், ராஜன், சிறிசபாரட்ணம் ஆகியோர் சேர்ந்து பொறுப்பெடுத்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்கான விவசாய குடியேற்ற திட்டமாக செயற்படுத்தினர். இந்தப் பண்ணை தான் “நாவலர் பண்ணை” எனப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் வெளியே இருந்து வந்த இளைஞர்களுடன் வவுனியா இளைஞர்களும் இணைந்து தொண்டாற்றினர். இதில் வவுனியா கணேஸ் எனப்படும் குகன், உருத்திரபுரம் குஞ்சன், யாழ் ஆரியகுளத்தை சேர்ந்த இளைஞர் லோகநாதன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நவ்வி, பாலமோட்டை, கல்மடு என பரவலான கிராமங்களில் சிறப்பாக இப்பணி தொடர்ந்தது. இவ்வாறு மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்ட இவர்கள் கூட்டுப் பண்ணைத் திட்டம், பாலர் பாடசாலைகள், பல கிராம அபிவிருத்திகள் என சிறப்பாக இயங்கினர்.

தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்:
“தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்” (ரி.ஆர்.ஆர்.ஓ) என்ற அமைப்பு உருவானது. இதற்கு தலைவராக (ரி.ஆர்.ஆர்.ஓ) கே.சி. நித்தியானந்தன் இருந்தார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி. சிங்கள இடதுசாரிகளின் மத்தியில் பிரபலமானவர் என்றபடியால் தனது பெயரை நித்தியானந்தா என பின்நாளில் மாற்றிக் கொண்டார். இவரின் தம்பியின் மகன் தான் டக்லஸ் தேவானந்தா என்ற தேவானந்தன். இவரும் அவ்வழியே தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரி.ஆர்.ஆர்.ஓ செயலாளர் கந்தசாமி. இவர் சிட்டிசென் கொமிட்டி மற்றும் இன்டனெஷனல் அம்னஸ்டி என்பவற்றின் உறுப்பினராக இருந்தவர். சர்வதேசத்தில் இருந்து அகதிகளுக்கான அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதிகளை பெறும் பெறுமதிமிக்க தொடர்பாளர். பின்நாளில் ஈரோஸ் இயக்கத்தால் 1988ற்கு பின் அநியாயமாக கொலை செய்யப்பட்டார்.

மற்றும் மேர்ஜ் எனப்படும் மேர்ஜ் கந்தசாமி 2007வரையில் கூட நாட்டில் சில அரசுசாரா நிறுவனங்கள் ஊடாக சேவையாற்றியவர். பின்னர் ரவீந்திரன், நவம் (இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.) என்பவருமாக இந்த நிறுவனத்தை நடத்தினர். இதில் முழுநேர பணியாளராக பேபி என்ற பரராஜசிங்கம் (கடந்த 30 வருடமாக பிரான்ஸில் இருப்பவர்) செயற்பட்டார். இவரால் நிர்வாகிக்கப்பட்டது தான் கென்ற்பாம், டொலர்பாம்.

1977 இனக்கலவரத்தின் பின்:
பண்ணை குடியேற்றத்திட்டங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 1977 இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து வந்த கணிசமான மலையக மக்களையும் இரு கரம்நீட்டி வரவேற்றனர். இதன்மூலம் மலையக மக்களும் எம் தமிழ்பேசும் மக்களின் அலகுக்குள் உட்பட்டவர்கள்தான் என்பதுவும் நிரூபிக்கப்படுகின்றது. விடுதலைக்காக எல்லைக் கிராமங்களில் தமது இளமையை வாழ்க்கையை துறந்தும், இடம்பெயர்ந்திருந்து வந்தும் பங்காற்றிய இந்த இளைஞர்கள் தான் எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிகள்.

இவர்களெல்லாம் தமிழ் தலைமைகளின் மேடைப் பேச்சுக்களில் மயங்கி புறப்பட்டு அன்றே சிறைக்கும் சித்திரவதைக்கும் தலைமறைவுக்கும் ஆளானவர்களே. ஆயினும் இந்தப் போராளிகளின் ஆரம்பங்கள் தியாகம் நிறைந்ததே. இப்படியாக இந்தப் பணியில் எட்டு மாதம் ஈடுபட்ட பின் சந்ததி, ராஜன் தமது வவுனியா வேலைத் திட்டங்களுக்கு திரும்பினர்.

1977 இனக்கலவரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு கிளை இளைஞர் பேரவையின் செயற்பாட்டாளார்கள் உமாமகேஸ்வரன், மண்டுர் மகேந்திரன், சிங்காரவேலன் உட்பட்ட இளைஞர்களும் மகளிர் பேரவையைச் சேர்ந்த ஊர்மிளா, மகேஸ்வரி வேலாயுதம் மற்றும் சில பெண்களுமாக கொழும்பிலிருந்து வந்து, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினருடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டனர். (மகேஸ்வரி வேலாயுதம் மூன்று வருடத்திற்கு முன் புலிகளால் கொலை செய்யப்பட்டவர். 1990 ற்குப் பின் ஈ.பி.டி.பின் முக்கியஸ்தராக இருந்தவர்.)

1977 இனக்கலவரத்திற்கு சில மாதங்களின் பின் உமாமகேஸ்வரன், ஊர்மிளா, மண்டுர் மகேந்திரன் போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்புகள் ஏற்பட்டது. இவர்கள் ராணுவ விடயங்களில் தீவிரம் காட்டியதால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

இந்நிலையில் 1978 மட்டில் கே.சி நித்தியானந்தா அவர்களால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரிடம் அது ஒப்படைக்கப்பட்டது. இதில் கென்பாம் இல் இருந்த 25 குடும்பங்களுடன் டொலர்பாம் வேலைத் திட்டங்களும் இவர்களிடம் கைமாறியது. இங்கு பணியாற்றிய பேபி அவர்கள் அருகேயுள்ள கன்னியாஸ்திரிகள் பொறுப்பில் இருந்த ஒரு பண்ணைக்கு தொண்டராக செயற்படச் சென்றார்.

இந்நேரத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் 7ம் வாய்க்கால் பகுதியில் அப்பு என்ற (குடுமிவைத்த வயதானவர்) காந்தீயக் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒருவர் “குருகுலம்” என்ற அமைப்பை உருவாக்கி பொதுப் பணியாற்றினார். இவர் ஆதரவற்ற பிள்ளைகள், பெண்களை மையப்படுத்தி ஒரு ஆச்சிரமத்தை உருவாக்கி நடாத்தி வந்தார். இவருடன் டொக்டர் ராஜசுந்தரம் உம், டேவிட் ஐயா வும் சில வெளிநாட்டு உதவிகளைப் பெறக்கூடியவிதமாகத் தொடர்புகளை வைத்திருந்தனர். இதேநேரம் வவுனியா கே சி நித்தியானந்தன் உடனும் சில தொடர்புகளுடன் ரி.ஆர்.ஆர்.ஓ இன் செயற்பாட்டாளராக இருந்தார்.

1978 சூறாவளி அனர்த்தமும் தமிழ் இளைஞர்களின் நிவாரணப் பணியும்:
1978 சூறாவளி அனர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதி. மட்டக்களப்புக்கு சூறாவளி நிவாரணப் பணிகளுக்கு பல தமிழ் இளைஞர்கள் வந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் ராம்ராஜ் சிறியவயதில் இணைந்து கொண்டு, பின்னாளில் ஒரு சம்பவத்தில் கைதானார். இவருடன் இன்னும் சிலரும் அரசியல் காரணத்தால் கைதாகியிருந்தனர். எனவே சூறாவளி மீட்புப் பணியில் இவர்கள் பங்குகொள்ள முடியவில்லை.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உடனடி நிவாரண வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு சந்ததியார், ராஜன் முதற்கொண்ட இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதன்படி யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இவ்விருவரும் சென்று தம்முடன் அழைத்துச் செல்ல இளைஞர்களை திரட்டினர். உடனடியாக 160 இளைஞர்கள் ராஜன் தலைமையில் உணவுப் பொருட்களுடனும் நிவாரணப் பொருட்களுடனும் புறப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக புறப்பட்டு பின் இங்கிருந்து 14 படகுகளில் கடல்வழியாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை அடைந்தனர்.

வரும் வழியில் உடைக்கப்பட்டிருந்த பாலத்தை இவ்இளைஞர்கள் சாப்பாடு, தண்ணி, நித்திரை இல்லாமல் நின்று சரிசெய்து வாகனங்களில் நிவாரணப் பணிக்கான இடத்தை நோக்கிச் சென்றனர். அங்கு உடனடியாக இவ் இளைஞர்கள் தங்குவதற்காக, வனசிங்கா மாஸ்டர் தலைமை ஆசிரியராக இருந்த அரசடி மகாவித்தியாலத்தில் இவ் ஆசிரியரால் இந்த 160 பேருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின் வாழைச்சேனைக்கு சென்றனர்.

இங்கிருந்த நிலையில் இவர்களால் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தொடர்ந்து சந்ததியார் அவர்களுடன் மேலும் வடக்கில் இருந்து இளைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். மொத்தமாக இப்பணிகளில் 600 வடமாகாண இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரான்ஸிலுள்ள கோவைந்தன் என்பவர் தானும் கலந்துகொண்டதாக சந்திப்பொன்றில் தெரிவித்தார். இவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற ஈபிடிபி இன் பத்திரிகையான தினமுரசு நாளிதளின் ஆசிரியராக இருக்கின்றார்.

இந்த நிவாரணப் பணிக்காக வந்த இளைஞர்கள் அனைவரும் பின் செல்வநாயகத்தின் மகன் ராஜன் (இவர் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்) அவர்களின் ஏற்பாட்டில் இவரின் தந்தைக்காக கட்டப்பட்ட “செல்வநாயகம் நினைவு மண்டபத்தில்” தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசால் கொழும்பிலிருந்து 20 லொறிகளில் அமெரிக்கன் மா மட்டக்களப்பு மக்களுக்காக வந்தது. ஆனால் அதனை இறக்கி வைப்பதற்கு மட்டக்களப்புப் பகுதியில் கட்டடம் எதுவும் கூரையுடன் இருக்கவில்லை. அனைத்தும் சூறாவளியில் பறந்து விட்டது. அம்பாறைக்கும் வாகனங்கள் போகமுடியாத நிலை. அரசு உத்தரவுடன் மாவினைத் திருப்பி அனுப்ப இருந்தனர். ஆனால் உடனே இந்த இளைஞர்கள் 4 மணி நேரத்தில் செயின்ற் மைக்கல் கல்லூரியின் கூரை ஓடுகள் வேயப்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் இந்த பொருட்கள் இறக்கப்பட்டன. அதாவது ஜி. ஏ. யின் ஏற்பாட்டில் புனித மைக்கல் பாடசாலையில் பாதுகாக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையிலும் ராஜதுரை எம்பி தலையிட்டு படுவான்கரை (தனது தேர்தல் பிரதேசம் ஆகையால்) பிரதேசத்திற்கு எல்லா லொறிகளையும் அனுப்பும்படி கேட்டார். ஆயினும் மட்டக்களப்பு இளைஞர்களும் தொண்டர்களாக பணியாற்றியவர்களும் தலையிட்டு படுவான்கரைக்கு 2 லொறிகளும் ஏனையவற்றை பரவலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவிசெய்தனர்.

மேலும் இந்த சூறாவளி அனர்த்தத்தில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை சீரழிந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள வைத்தியர்களோ தாதிகளோ இல்லாத நிலையில் இவ் வைத்தியசாலை இளைஞர்களின் கவனத்திற்கு வந்து 15 நாட்களாக பல இளைஞர்கள் நோயாளிகளை பராமரித்து பல உதவிகளும் செய்தனர்.

இந்த மறுசீரமைப்பு பணி ராஜன் உட்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களால் எட்டு மாதங்களாக செயற்படுத்தப்பட்ட விடயம் சாதாரணமானதல்ல. வடக்கு மாகாண இளைஞர்கள் அன்றே கிழக்கின் மக்களுக்காக தமது படிப்பு, வாழ்க்கை, வேலை, குடும்பம், ஏனைய பணிகள் என்பவற்றை விட்டுவிட்டு முழுநேரத் தொண்டர்களாக செயற்பட்டதை அந்த கிழக்கு மக்கள் மறக்கமாட்டார்கள்.

வடகிழக்கு முரண்பாடுகளுக்கு குறுந்தேசியவாத ஒரு சில தமிழ்த் தலைமைகள் (முழு வடக்குத் தலைமைகளும் அல்ல) காரணமாக இருக்கலாம். ஆனால் வட கிழக்கு இளைஞர்களோ, பெரும்பாலான வடகிழக்கு மக்களோ காரணம் என்றுகூறி தமது நலன்களுக்காக வடகிழக்கு பிரிவினைக்கு தூபம் போடுபவர்கள் வரலாறையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.

பிரபாகரனின் செயற்பாடுகள்:
இந்த மட்டக்களப்பு சூறாவளி நிவாரணத்தின் போது புலிகளோ, புதிய தமிழ் புலிகளோ பங்குபெறவில்லை. 1976ல் பிரபாகரனால் புலி உறுப்பினர் மட்டக்களப்பு மைக்கல் என்பவர் கொலை செய்யப்பட்டமை மட்டக்களப்பு மக்களிடையே பெரும் பதட்டத்தை உண்டுபண்ணி இருந்தது. அதனால் பிரபாகரன் ராஜனிடம் தங்கள் இயக்கத்திற்கு சில இளைஞர்களைக் கேட்டு இருந்தார். அதற்கிணங்க சில இளைஞர்கள் பிரபாகரனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

1)லோகநாதன் (தற்போது செக்-குடியரசில் இருப்பவர். அந்நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.)
2)தாமரைக்கேணியைச் சேர்ந்த பாரூக் என்ற புனைபெயரைக்கொண்ட தமிழ் இளைஞர்.
3)மாணிக்கவாசகரின் மகன் (தற்போதும் கனடாவில் புலிகளின் முக்கிய உறுப்பினர்) உட்பட 5 பேர் ராஜனால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பின் பிரபாகரனால் பயிற்சிக்கான இடம் ஒன்று கேட்கப்பட்டது. ராஜனால் வவுனியா- இறம்பைக்குளம் அருகே ‘பண்டிக்கெய்த குளம்’ என்ற இடத்தில் இடமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

அதேபோல் குட்டிமணி உட்பட 35 இளைஞர்கள் சிறிசபாரத்தினம் மூலம் ராஜன் அவர்களிடம் இடஉதவி கேட்டதற்கிணங்க அவர்களுக்கான பகுதி ஒன்று நாவலர் பண்ணையில் ஒதுக்கப்பட்டது. 1978 பிற்பகுதியில் சிறி, குட்டிமணி உடன் தனியாக இயங்கத் தொடங்கியிருந்தார். அப்படி அன்றே ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் அக்கம் பக்கம் இயங்கிய போதும் ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன்தான் இருந்தனர்.

காந்தீயம்:
இந்நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரின் வேலைத்திட்டங்களின் பொறுப்புணர்வை அறிந்த டாக்டர் இராஜசுந்தரம், அவர்களை தனது வீடான கொக்குவில் பொற்பதியில் வைத்து சந்தித்து ‘காந்தீயம்’ என்ற ஒரு அமைப்பு வேலைத்திட்டத்தில் ஒன்றிணைத்தார். இதன்படி பரவலாக சமூக, பொருளாதார குடியேற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காந்தீயக் கொள்கையில் கிராம மட்டத்தினாலான வேலைத் திட்டங்களின் தோற்றப்பாட்டுடன் வேலைகள் நடந்தது.

ஆனால் உள்ளே டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், ராஜன், சிறி போன்ற இளைஞர்களை மையப்படுத்தி ஒரு அரசியல் செயற்பாடும் நகர்ந்தது. ஆனால் இவ்அரசியல் செயற்பாடுகளில் காந்தீயவாதியான டேவிட் ஐயாவிற்கு பெரிதாக உடன்பாடும் இல்லை. பலவிடயங்கள் தெரியப்படுத்தப்படவுமில்லை. எனினும் இந்நகர்வு பல இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

இப்படியாக ஒருபக்கம் காந்தீய வேலைத் திட்டங்களோடு கிராம முன்னேற்றங்களும், பண்ணைகளும் விஸ்தரிக்கப்பட்டது. வெளிவேலைத் திட்டமாகவும் ஒரு வரையறுக்கப்பட்ட அரசியல் வளர்ச்சியும் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தது.

மறுபக்கம் உமா மகேஸ்வரன், பிரபாகரன், ஊர்மிளா, நாகராஜா, நிர்மலன் ரவி, சித்தப்பா, யோன், ராகவன் ஆகியோரைக் கொண்ட புலிகள் அமைப்பு சில தீவிரவாத செயற்பாடுகளுடன் இயங்கியது.

மட்டக்களப்பில் இளைஞர் பேரவை:
1979ல் சந்ததியார் – ராஜன் முயற்சியில் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இளைஞர் பேரவை என்ற பெயரில் அலுவலகம் திறக்கப்பட்டு முதன்முதல் கொடி ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதுதான் பின்நாளில் கழகக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. 1979ல் இக் கொடியுடன் இங்கு பெரும் மேதின ஊர்வலம் நடைபெற்றது வரலாற்று முக்கியத்துவமானது.

1978 சூறாவளியின் மீள்நிர்மாணப் பணிகளில் இந்த வட மாகாண இளைஞர்களின் ஈடுபாட்டால் கிழக்கு மாகாண இளைஞர் மட்டத்திலும் ஒரு வட கிழக்கிற்கான நல்லுறவை உருவாக்கியது. தமிழ்தேசிய தலைமைகளின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பெரும்பான்மையோர் காசி – வண்ணை – சேனாதி போன்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் வட்டத்தை விட்டு பரவலாக வெளியே செயற்படத் தொடங்கினர். இதன் எதிரொலிப்பு இந்த மட்டக்களப்பு ஊர்வலத்தினதும் பொது கூட்டத்தினதும் பெரும் வெற்றியாக அமைந்தது.

பஸ்தியாம்பிள்ளை கொலை:
பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல செயற்பாடுகளால் இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் பார்வை தமிழ் இளைஞர்கள் மீது திரும்பியது. பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட 4 பொலிஸாரின் உடல்கள் கிணற்றில் கிடந்து அழுகி சில நாட்களுக்குப் பின் ராணுவம் கைப்பற்றியது. பிரபாகரனும், அன்ரனியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் அங்கு சென்றனர். அந்த உடல்களை மூன்றாவது நாள் கிணற்றில் எட்டிப் பார்த்ததில் இந்த உடல்களின் அகோரநிலையால் பிரபாகரன் மிகக் கிலேசமடைந்ததாகவும் இதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்ததில் மூன்று நாட்கள் பரந்தனில் 5ம் வாய்க்காலிலுள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அந்த வீட்டினர் சொன்ன தகவலும் ஒன்று உண்டு.

இதன் முக்கிய கட்டமாக வவுனியாவில் இன்பம், பாலேந்திரன் உட்பட 4 தமிழ் இளைஞர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். மேலும் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்ட அமுலும் பல தமிழ் இளைஞர்களை முக்கியமாக பண்ணைகளில் செயற்பட்டவர்களை தலைமறைவாக்கியது.

இந்நிலையில் புலிகள் அமைப்பினரும் சிதறி இந்தியா வரையில் சென்று தப்பினர். இந்நிலையில்தான் இந்தியாவில் வைத்து புலிகளின் உடைவு இடம்பெற்றது. ‘உணர்வு’ குழுவாக ஒன்றும் ‘புதியபாதை’ குழுவாக ஒன்றுமாக பிரிந்தனர்.

காந்தீயப் பண்ணைகளில் இருந்தவர்கள் மிக கவனமாக குடியேற்றங்களிலும் வேலைத் திட்டங்களிலும் ஈடுபட்டதாலும் காந்தீயம் என்ற பெயர் ஒரு பாதுகாப்பை அளித்ததாலும் இவர்களுக்கு பெரிதாக அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை.

ஊர்மிளாவின் மரணம்:
முன் குறிப்பிட்டதுபோல் புலிகள் உடைந்து போனதில் இந்தியாவிலும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாத நிலையில் அவர்களுக்கு உள்ளும் தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின் “சாந்தி கிளினிக்”கில் வைத்தியம் பார்த்தார். ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார். இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழீழ விடுதலைக் கழகம் தோற்றம்:
புலிகளின் உடைவில் உமாமகேஸ்வரன் புலிகளின் மரண தண்டனைக்கு தப்பி இந்தியாவில் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் சந்ததியும் ராஜனும் வவுனியாவில் பேசிமுடிவெடுத்து ராஜன் இந்தியாவிற்கு சென்று உமாவை சந்தித்து இங்கு அழைத்து வருவதாக இருந்தது. இந்த முடிவின்படி ராஜன் தலைமன்னாரினூடாக (ராஜன் தலைமன்னாரில் படகிற்காக காத்து நிற்கும் போது தான் ஊர்மிளா இறந்த செய்தி கிடைத்தது.) இந்தியா சென்று மற்றாஸ் மண்ணடி என்னும் இடத்தில் உமாவை சந்தித்து பல விடயங்கள் பேசி ஒரு புதுக்கட்டமைப்பில் செயற்படுவதற்கு உமாவும் உடன்பட்டார்.

இதன்பின் ராஜன் புறப்பட்டதும் உமா நாட்டிற்கு திரும்பிவரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு உமாவும் வந்து சேர்ந்தார். இதை அடுத்து 1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சங்கானை தொண்டர் கந்தசாமி என்பவரின் வீட்டில் “தமிழீழ விடுதலைக் கழகம்” என்ற பெயருடன் ஏற்கனவே 1979ல் தெரிவு செய்யப்பட்ட கொடி – நிறங்களுடன் முதலாவது கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வசந்தன் என்ற சந்ததியார், ராஜன் என்ற ஞானசேகரன், முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன், சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி, மாணிக்கம்தாசன், அவ்வீட்டு கந்தசாமியின் மகன் கண்ணன் (தற்போது ஜேர்மனில் இருப்பவர்) ஆகியோர் உறுப்பினர்களாயினர்.

இதற்குப் பின் சில வாரங்களில் இவ் உறுப்பினர்கள் சந்தித்து முதலாவது மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது. இதில் சந்ததியார், ராஜன், உமாமகேஸ்வரன், சுந்தரம், பாபுஜி தெரிவு செய்யப்பட்டனர்.

சுந்தரத்தால் மானிப்பாயைச் சேர்ந்த காத்தான் என்ற கிருஷ்ணகுமார் 1979ல் கழகத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

கழகத்தின் இராணுவ நடவடிக்கைகள்:
இதன்பின் கழகத்தின் முதலாவது ராணுவ நடவடிக்கையாக 1980 செப்டம்பரில் ஒரு செயற்பாடு கழகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அந்த முடிவிற்கமையவே ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். வவுனியா, கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் ஐ.தே.கட்சி அலுவலகம் திறக்க ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக காமினி திசநாயக்கா இங்கு வந்தவேளையில் இக்கொலை நடைபெற்றது.

அடுத்ததாக கிளிநொச்சி வங்கிக்கொள்ளை 1981ல் ஒக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இவ் வங்கிக் கொள்ளையில் 116 கிலோ தங்கம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. பணம் இருக்கவில்லை. இதில் ராஜன், சுந்தரம், நிரஞ்சன், உமா, பாருக் (பின் புலிகளால் கடத்தி இதுவரை இல்லாமல் போனவர்) அன்பழகன், (இவர் திருகோணமலை திரியாயை சேர்ந்தவர். வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டவர்.) றொபேட் (தெல்லிப்பளையைச் சேர்ந்த இவரும் வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டார்), பாபுஜி, சிவசுப்பிரமணியம் (பரந்தன்) உட்பட 12 பேர் பங்காற்றினர்.

சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார். தொடர்ந்து மாணிக்கம்தாசன், பாபுஜி, பாருக், றொபேட், அன்பழகன் ஆகியோர் ஓரு மாதத்தின் பின் அடுத்தடுத்து தமது கவனக் குறைவால் பிடிபட்டனர்.

இயக்க மோதல்கள்:
1982ல் புலிகளால் தேடப்பட்ட சுந்தரம் தை 2ம் திகதி யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த சுந்தரத்தின் கொலைக்கு இறைகுமாரனே (இவரின் பொறுப்பில் தான் புலிகளின் உணர்வு பத்திரிகை இருந்தது) காரணம் என்று சந்ததியாரால் முடிவெடுக்கப்பட்டு இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரும் பின்னால் கழகத்தில் இணைந்த வடலியடைப்பு கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். (இவர் 1984ல் கழக படைத்துறைச்செயலராக நியமிக்கப்பட்டார்.)

கழகத்தில் கந்தசாமி அல்லது சங்கிலி என்பவர் 1981ல் பண்ணை வேலைத் திட்டத்திற்காக சந்ததியாரால் (வவுனியாவில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில்) கொண்டு வரப்பட்டவர். சங்கிலி 1984ல் புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். புளொட் அமைப்பில் இடம்பெற்ற உட்படுகொலைகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1988ல் வவுனியா முள்ளிக்குளம் புளொட் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இணைந்து தாக்கப்பட்ட போது கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இருதரப்பிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

உமா மகேஸ்வரன் செயலதிபரானார்:
கழகத்தை உருவாக்கிய அடிமட்டத் தோழர்களும், மத்திய குழு உறுப்பினர்கள் அதிகமானோரும் கைது செய்யப்பட சந்ததியாருடன் உமா முன்னணி அங்கமானார். இதில் உமாவின் கடந்தகால புலிகளின் தீவிர அரசியலும், உமா – பிரபா இணைவு – பிரிவு என்பது மட்டும்தான் சராசரி மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பரவலாக தெரிந்து இருந்தது. உமாவின் தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளும், 1982ல் பாண்டி பஜார் உமா – பிரபா சூடுபாடும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் உமாமகேஸ்வரனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. உமாமகேஸ்வரனை கழகத்தின் செயலதிபர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. கழகத்தை உருப்படுத்திய ராஜன் உள்ளேயும் சந்ததியாரின் அட்டகாசமில்லாத, அமைதியான, ஆழமான சுபாவமும் உமா மகேஸ்வரனை கழகத்தின் முதன்மையாக்கியதில் ஆச்சரியம் இல்லை.

ஆரம்பத்தில் இருந்து காந்தீயத்தினூடாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் எனக் காலற நடந்து தேடிக்கண்டு பிடித்த எத்தனையோ செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ராஜசுந்தரம், டேவிற் ஜயா அவர்களின் பெரிய பொருளாதார வெளிநாட்டு நிதிகளுடன் கூடிய சமூகஸ்தாபன நகர்வுகளும் கழகத்தின் மத்திய குழுவிலிருந்து அடிமட்டம் வரை பெரியளவில் எமது போராட்டப் பாதைக்கு உரமிட்டது.

சந்ததியாரால் 1980, 1981, 1982 என்று ஒவ்வொரு கட்டமாக காந்தீய வேலைத்திட்டம் பண்ணைகளூடாக பிரதேச ரீதியாக பரவலாக உள்வாங்கப்பட்ட திருமலையில் ஜெயச்சந்திரன், ஜான், சலீம், கேசவன், மட்டக்களப்பு வாசுதேவா, ஈஸ்வரன், யோகன் கண்ணமுத்து, வவுனியா முரளி, ஆதவன், பொன்னுத்துரை, கந்தசாமி, சறோஜினி, பெரிய செந்தில் ஆகியோருமாக பின் மத்திய குழுவரை இவர்களின் பாத்திரம் நகர்ந்தது.

கழக மத்திய குழு உறுப்பினர்கள்:
1. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் – செயலதிபர். யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். இயக்க உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.

2. வசந்தன் என்ற சந்ததியார் – அரசியல் துறைச் செயலாளர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டார்.

3. ராஜன் என்ற ஞானசேகரன் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். புளொட் உள்முரண்பாட்டில் அதிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எப் அமைப்பை உருவாக்கியவர். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.

4. வாசுதேவா – மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இவரும் இவருடன் சென்றவர்களும் தந்திரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

5. கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் – படைத்துறைச் செயலராக இருந்தவர். யாழ்ப்பாணம் வடலி அடைப்பைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

6. சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி – புதியபாதை பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாகக் கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளி இவர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

7. காத்தான் என்ற கிருஸ்ணகுமார் – யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர்.

8. ஜக்கடையா என்ற ஆதவன் – வவுனியாவைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.

9. பெரியமுரளி – வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது மத்திய கிழக்கில் வாழ்கிறார்.

10. ஈஸ்வரன் – மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஹொலண்ட்க்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

11. அசோக் என்ற யோகன் கண்ணமுத்து – அம்பாறைப் பொறுப்பாளராக இருந்தவர். புளொட் உள்முரண்பாட்டில் ஈஎன்டிஎல்எப் அமைப்புடன் இணைந்து பின்னர் அதிலிருந்தும் வெளியேறியவர். பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த இவர் தொடர்ந்தும் அரசியல், கலை இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

12. பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன் – தள இராணுவப் பொறுப்பாளர். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். திருகோணமலையைச் சேர்ந்தவர்.

13. காந்தன் என்ற ஜான் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். உள்முரண்பாட்டில் புளொட்டை விட்டு வெளியேறி தீப்பொறி குழு ஆகச் செயற்பட்டவர்களில் முக்கியமானவர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மே 18 இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியமானவர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.

14. பாலன் என்ற சலீம் – தள நிர்வாகப் பொறுப்பாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர். தீப்பொறிக் குழு உடன் வெளியேறியவர்.

15. கேசவன் – தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர். புதியதோர் உலகம் நாவலின் ஆசிரியராக இவரது பெயரே குறிப்பிடப்பட்டு உள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவர்.

16. பாபுஜி – அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் ஈஎன்டிஎல்எப் இல் இணைந்து கொண்டவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார்.

17. செந்தில் – அனைத்து முகாம் பின்தள பொறுப்பாளராக இருந்தவர். வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கொல்லப்பட்டார்.

18. மாணிக்கம் தாசன் – இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தவர். உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது போது இவர் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் பின்னர் உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை செய்ததில் மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்டு இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இறுதியில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

19. குமரன் என்ற பொன்னுத்துரை – தளப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.

20. சங்கிலி என்ற கந்தசாமி – புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இயக்கத்தினுள்ளும் வெளியேயும் நடந்த பல படுகொலைகளுக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

21. சறோஜினி – இவர் வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார். மத்திய குழுவில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் இவர்தான்.

22. நிரஞ்சன் அல்லது காக்கா என்ற சிவனேஸ்வரன் – யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர். உட்படுகொலை செய்யப்பட்டவர்.

23. சீசர் – இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். தொழிலாளர் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்.

24. சேகர் – இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழீழ விடுதலைக் கழகம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆனது:
1983ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வவுனியாவிலுள்ள காந்தீய தலைமை அலுவலகம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. டாக்டர் ராஜந்தரமும் டேவிட் ஐயாவும் கைது செய்யப்பட்டு பதட்டமான சூழல் இருந்தது. இந்நிலையிலும் 1983ம் ஆண்டு மேதினம் திருகோணமலையில் சின்ன முற்றவெளியில் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) தலைமையில் தமிழீழ விடுதலை கழகம் என்ற பெயரிலேயே நடைபெற்றது. இதன்போது 3 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கழகக் கொடியின் கீழ் இம் மேதினம் நடைபெற்றது.

இதற்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் கழக உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதில் மட்டக்களப்பு பொறுப்பாளர் வாசுதேவா தலைமையிலும் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் யோகன் கண்ணமுத்து தலைமையிலுமாக கிழக்கிலிருந்து உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டனர். யாழ் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுத்துரை தலைமையில் ஒரு பேரூந்து நிறையவே உறுப்பினர்களும் முல்லைத்தீவு பொறுப்பாளர் சுந்தரம் என்ற நவம் தலைமையில் ஒரு குழுவும் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் ஒரு குழுவுமாக கழக உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.

இதில் விசேட பேச்சாளராக வாசுதேவா, யோகன் கண்ணமுத்து இன்னும் சிலரும் உரையாற்றியிருந்தனர். ஜான் மாஸ்ரர் மருத்துவபீட பல்கலைக்கழக நுழைவு கிடைத்த புதிதென்பதால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றும் திருமலை முன்னணி இளைஞர்களான ஜெயகாந்தன், ராதாகிருஸ்ணன் (இவர்கள் தற்சமயம் லண்டனில் வசிப்பவர்கள்.) ஆகியோரும் மத்திய குழு உறுப்பினர் சலீம் உட்பட பல கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலைக் கழகம் என்ற பெயரும் 3 நட்சத்திரங்கள் அமைந்த கழக கொடியுடன் நடந்த கடைசி நிகழ்வும் ஆகும். இந்த மே தினக் கூட்டம் இலங்கை அரசின் உன்னிப்பான கண்காணிப்புக்கு உட்பட்டு புகைப்படங்களும் அவர்களால் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்ட காந்தியமும் அரசின் விசாரணைக்குட்பட்டு மூடப்பட்டு கழக – காந்தீய உறுப்பினர்கள் ராணுவ கெடுபிடிகளுக்கு உட்பட்டனர். இதனையடுத்துக் கூடிய மத்திய குழு தங்கள் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அறியப்பட்டதனால் தங்கள் அமைப்புக்கு பெயரையும் கொடியையும் மாற்ற முடிவெடுத்தனர். தமிழீழ விடுதலைக் கழகம், ‘மக்கள்’ ஜ உள்வாங்கி தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆனது. கழகக் கொடியில் இருந்த மூன்று நட்சத்திரங்களில் இருண்டு நட்சத்திரங்கள் நீக்கப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புதிய கொடியைப் பெற்றது.

1983 இனக்கலவரமும் அதன் பின்னரும்:
1983 யூலை வெலிக்கடைப் படுகொலையில் எமது மக்கள் விடுதலைப் பாதையின் அச்சாக சுழன்று திரிந்த டாக்டரின் இழப்பு பேரிழப்பாகியது. அதனைத் தொடர்ந்த 1983 இனக்கலவரம். இழப்புக்களுடனும் ஒரு வெறித்தனமான உத்வேகத்துடனும் எமது விடுதலைப் போராட்டத்தை அசாதாரண வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதில் கழகத்தின் வளர்ச்சியானது வீங்கி முட்டி ஊதிப்பெருத்த நிலையில் 1983 பிற்பகுதியில் உள்முரண்பாடுகளுக்கு உட்பட்டது.

இதில் சில தனி நபர்களின் பலம் – பலவீனம் தான் வரலாற்றுடன் நகர்ந்தது. உமா மகேஸ்வரன் தனது பாதுகாப்பிற்கென தனதருகில் வைத்திருக்கக் கூடியவர்கள் தன்னைச் சுற்றிய விசுவாசிகளாகவும் தனது சொல்பேச்சுக் கேட்பவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இந்தத் தகுதியின் அடிப்படையில் பதவிகள் நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டமையும் மூத்த உறுப்பினர்களை ஓரம்கட்டி அதுவும் சந்ததியார், ராஜன் ஆகியோரின் பாத்திரங்களையும் பதவிகளையும் முடக்கி அரசியலின் அரிச்சுவடு தெரியாத வாசுதேவாவை அரசியற் துறைச்செயலராகவும், எதற்கும் தலையாட்டும், ராணுவம் என்பது என்னவென தெரியாத கண்ணனை படைத்துறை செயலாளராகவும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை உமா தன் கைவசப்படுத்தியும் வைத்திருந்தார். அதற்காக தனிநபர் விசுவாசத்தை மட்டுமே தகுதியாக கொண்டோரை கொண்ட ஒரு புலனாய்விற்கே சம்பந்தம் இல்லாதோரை தனது கைக்குள் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் வரையறுக்கப்பட்ட அரசியலை ஒழுங்குபடுத்தி செய்து வந்த நிலையில் சந்ததியாரின் 1983ற்கு பின்பான நிகழ்வுகள் அவரை நெருக்கடிக்குள் தள்ளியது. கழகத்தின் இந்த அபரீத வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போனதும் நாட்டை விட்டு அந்நிய தேசத்தில் போராட்டம் திசை திரும்பிய நிலையுமாக பல எதிர்கால கேள்விகளையும் குழப்பத்தையும் இவருக்கும் இவரை சுற்றியிருந்த அல்லது இவரை மையப்படுத்தியவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. முடிவு தெரியாத – முடிவெடுக்க முடியாத சூழல் இவர்களை இறுகியது. இவரின் சூட்சுமமான பேச்சு, நிதானமான போக்கு இவரை இந்த வேகமான வளர்ச்சிக் கட்டத்தில் காலத்தின் கைதியாக்கியது.

மேலும் இதற்கு பின்வந்த வரலாறு பின்னால் எல்லோருக்கும் தெரியப்பட்டதே. காந்தீயத்தினூடு கழகம் கட்டமைக்கப்பட்ட சம்பவங்களிற்கு முன்னால் காந்தீயத்திற்கான ஒவ்வொரு மாவட்டத்திற்கான செயற்பாடுகளும் அதில் டாக்டர் ராஜசுந்தரம், டேவிட் ஐயாவின் நகர்த்தல்களும் தனி ஒருபதிவிற்கானது.

கழகத்தின் உட்படுகொலைகளில் உயிரிழந்த போராளிகளுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
நிலா(முன்னாள் கழகப் போராளி)

இக்கருத்துக்களம் பகுதியில் தமிழீழ விடுதலைக் கழகம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகிய இயக்கங்களில் இருந்து உட்படுகொலையிலும் இயக்க மோதலிலும் மற்றும் மோதல்களிலும் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர்களைப் பதிவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேசம்நெற்

Show More

Your email address will not be published. Required fields are marked *

101 Comments

  • அஜீவன்
    அஜீவன்

    சில திருத்தங்கள் நிலா…..

    //ஈஸ்வரன் – மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஹொலண்ட்க்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.//

    ஈஸ்வரன் சுவிசில் வைத்தே நோய்வாய்ப்பட்டு காலமானார்.

    // ஆனால் பின்னர் உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை செய்ததில் மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்டு இருந்தார். //

    இவர்கள் சுவிசில் வைத்தே டுமாலினால் படுகொலை செய்யப்பட்டனர். டுமால் வவுனியாவில் வைத்து கொல்லப்பட்டார்.

    பல தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். விடுபட்டதாக உள்ள தகவல்கள் தொடரட்டும். பாராட்டுகள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இக்கருத்துக்களம் பகுதியில் தமிழீழ விடுதலைக் கழகம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகிய இயக்கங்களில் இருந்து உட்படுகொலையிலும் இயக்க மோதலிலும் மற்றும் மோதல்களிலும் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர்களைப் பதிவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.//

    இவ்வளவு விடயமும் தெரிந்த நிலாவுக்கு கொல்லபட்டவர்கள் விபரம் தெரியவில்லையே; உயிரின் மதிப்பு அமைப்புகளில் அம்முட்டுதான்; ஆனாலும் ஜயருக்கு இந்த கட்டுரை சில சங்கடங்களை கொடுக்கலாம்; எது எப்படியோ இன்னும் பல கடந்தகால சாக்கடைகள் வரவேண்டும்; ஆனால் நிலா வரவுகள் உங்கள் கட்டுரையை நிரப்புகிறது; செலவுகள்(கொலைகள்) தவிர்க்கபட்டதா? அல்லது தடை செய்யபட்டுள்ளதா?? கட்டுரையாளர் தனது கட்டுரையில் மிக கவனம் செலுத்தியது தெரிகிறது; ஜயர் போல் எட்ட கால் வக்காமல் அடக்கமாய் தனது சாட்சியத்தை சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்; ஆனாலும் இந்த பல்லிக்கு விமர்சனமே பிழைப்பு என பலர் ஆதங்கபடுவதால் நிலாவின் கட்டுரையிலும் விமர்சனம் இருக்கவே செய்யும்:

    நல்லாத்தான் தொடங்கினாங்கா ஆனா காந்தியம் இருந்து கழகம் வரை பகலில் நல்லதையும் இரவில் கெட்டதையும் செய்தாங்க எனத்தான் சொல்ல வேண்டும்; நிலாவின் பக்கத்தால் நல்லவை; நாகரிகமானவை; வல்லமை பற்றி வருவாதால் அதற்கு மாறான கெட்டவை: கேவலமானவை; ஏலாமை பற்றிய பதிவுகளுடன் சிலர் வரலாம் அதில் பல்லியும் இனையலாம்??

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /23. சீசர் – இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். தொழிலாளர் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்.
    24. சேகர் – இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது./– இந்தக் கருத்துக்களை ஆட்சேபிக்கிறேன்!. இக்கட்டுரையாளர் பிரான்ஸில் வசிப்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன். புலிகள்? அழிவின் பின் சில வருங்கால வசதிக்காக இத்தகைய கருத்து சொருகப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு என்று சில பிரத்தியேக புண்ணாக்கு குண இயல்புகள் உள்ளன மேலுள்ளவை அதையே பிரதிபலிக்கிறது!.
    எவனாவது இவர்கள் மிளகாய் அரைக்க தலையை காட்டினால் நண்பன். ஏமாந்தாலும் சொந்தக்கருத்தை முன் வைப்பவன் “இந்திய புலனாய்வு உளவாளி”. தலையை காட்டுபவன் பாண்டிசேரிக்காரன். சிறிது உஷாராக இருப்பவன்? தமிழ்நாட்டுக்காரன். ஏன் புலனய்வு அதிகரியாக தமிழ் தெரிந்த ஆந்திராகாரன், கேரளாகாரன், கார்த்திகேயன் போன்ற கர்நாடகாகாரன். இன்னும் பல வட இந்தியர்கள் உள்ளனர் அவர்களின் பெயர் கிடைக்கவில்லையா?. இது என்ன புலனாய்வு அதிகாரி சந்திரசேகரனின் பெயரா?. ஆதாரம் உள்ளதா?. புண்ணக்குகளின் தவறான பாதையை சுட்டிக்காட்ட வேலை மெனக்கெட்டு ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிலரையும் உளவுதுறையாக வட்டமிடுவது, தனிப்பட்ட அரிப்பை சொரிந்துக் கொள்ளுவதற்கும் அதை புண்ணாகுவதற்கு மட்டுமே பயன்படும்!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    பிளாட்(தமிழீழ மக்கள் விடுதலை கழகம்) இந்திய அமைதிபடை காலத்தில்,இந்திய உளவுத்துறைக்கு எதிராக கொழும்பிலிருந்து இலங்கை உளவுத்துறைக்கு ஆதரவாக இயங்கியது என்றும்,பிரேமதாசாவுக்கு ஆதரவாக சிவிஅப் பை முதலில் தாக்கியது என்றும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மாலத்தீவு தாக்குதலும் கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஆதரவாக இந்திய உளவுதுறைக்கு எதிராகவே நடத்தப்பட்டதாக கூறுவதுண்டு!.

    Reply
  • பல்லி
    பல்லி

    //மாலத்தீவு தாக்குதலும் கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஆதரவாக இந்திய உளவுதுறைக்கு எதிராகவே நடத்தப்பட்டதாக கூறுவதுண்டு!//
    இதுக்கான பதில்;:://எவனாவது இவர்கள் மிளகாய் அரைக்க தலையை காட்டினால் /:/
    இதுபற்றிய பல்லியின் கருத்து சொன்னவன் சேம்பேறி, கேட்டவன் படு சேம்பேறி;

    // இக்கட்டுரையாளர் பிரான்ஸில் வசிப்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன்// இது கூட உள்வதுறைதான் தெரியுமோ:

    //எவனாவது இவர்கள் மிளகாய் அரைக்க தலையை காட்டினால் நண்பன். ஏமாந்தாலும் சொந்தக்கருத்தை முன் வைப்பவன் “இந்திய புலனாய்வு உளவாளி”. தலையை காட்டுபவன் பாண்டிசேரிக்காரன்.// புரியலையே இதில் என்ன சொல்ல வருகிறீர்கள், ஈழதமிழன் கேனையன் என்றா? அல்லது இந்திய புலன் திறமையானதென்றா??

    //ஏன் புலனய்வு அதிகரியாக தமிழ் தெரிந்த ஆந்திராகாரன், கேரளாகாரன், கார்த்திகேயன் போன்ற கர்நாடகாகாரன். இன்னும் பல வட இந்தியர்கள் உள்ளனர் அவர்களின் பெயர் கிடைக்கவில்லையா?. //
    இவர்கள் ஈழதமிழர் அரசியலில் ஈடுபடவில்லை; இந்திய தலைவரின் படுகொலையில் ஈடுபட்ட ஈழதமிழர்(தமிழக தமிழரும்தான்) விசாரனையில் ஈடுபட்டனர் ,ஆனால் கட்டுரையாளர் இனம் காட்டியது கழக மத்திய குழுவை:
    //தனிப்பட்ட அரிப்பை சொரிந்துக் கொள்ளுவதற்கும் அதை புண்ணாகுவதற்கு மட்டுமே பயன்படும்!.//
    எட்டாத முதுகை சொறிய புறப்படும்போது சிறிது சிரமமாகதான் இருக்கும்; ஆனாலும் கடிக்கும் இடத்தில் சொறியும் போது உள்ள சுகமிருக்கே??

    :://பிளாட்(தமிழீழ மக்கள் விடுதலை கழகம்) இந்திய அமைதிபடை காலத்தில்,இந்திய உளவுத்துறைக்கு எதிராக கொழும்பிலிருந்து இலங்கை உளவுத்துறைக்கு ஆதரவாக இயங்கியது என்றும்,பிரேமதாசாவுக்கு ஆதரவாக சிவிஅப் பை முதலில் தாக்கியது என்றும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. //
    கட்டுரையாளர் கழக ஆரம்பத்தில் ஏதோ தேடுகிறார்; ஆனால் இவரோ கழகத்தின் முடிவுரையை சொல்லி விட்டார்,

    Reply
  • மாயா
    மாயா

    நிலா ; அதிக பிரயாசைப்பட்டு எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கட்டுரை எனும் போது தவறுகள்குறைந்தும் தகவல்கள் சரியாகவும் வரப் பாருங்கள். பின்னோட்டம் எழுதும் போது பிரச்சனையில்லை. யாரோடாவது முட்டி மோதித் திருத்திக் கொள்ளலாம். யாருக்கும் சாராமல் எழுதப் பாருங்கள். அது கட்டுரையின் தன்மையை மெருகு செய்யும். பலம் தரும். நிலா ; தெரிந்ததோடு ; ஆரம்ப கால போராளிகளோடு நெருங்கியோ அல்லது கேட்டோ தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். தெரிந்ததை தொடர்ந்து எழுதுங்கள். இப்படி முன் வந்து எழுதுவதே பெரிய விடயம். நன்றி.

    நிலா எப்போது கதிரவனாக மாறும்? காத்திருக்கிறோம்.

    Reply
  • kovai
    kovai

    //.. .பிரபாகரனால் பயிற்சிக்கான இடம் ஒன்று கேட்கப்பட்டது. ராஜனால்(வவுனியா ஜனாதிபதி?) வவுனியா- இறம்பைக்குளம் அருகே ‘பண்டிக்கெய்த குளம்’ என்ற இடத்தில் இடமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது..அதேபோல் குட்டிமணி உட்பட 35 இளைஞர்கள் சிறிசபாரத்தினம் மூலம் ராஜன்(வவுனியா ஜனாதிபதி?) அவர்களிடம் இட உதவி கேட்டதற்கிணங்க அவர்களுக்கான பகுதி ஒன்று நாவலர் பண்ணையில் ஒதுக்கப்பட்டது.//
    தெருப்பொறுக்கியாக, பரந்தன் சந்தி ரவுடியாக, ஆனந்தசங்கரியின் அடியாளாக செயற்பட்டு வந்த ‘பரந்தன் ராசன்’ சொன்ன வரலாற்றைக் கேட்டு, நிலா’ எழுதிவிட்டு, தனக்குத் தெரிந்ததையும் கடைசியில் சேர்த்திருக்கிறார். அய்யர் புலிகளில் இருந்தவர்; இருந்தபோதுள்ள புலிகள் தொடர்பான, விடையங்களை எழுதியவர். புளொட்டை உருவாக்கியதில் வாத்திக்கும், அய்யருக்குந்தான் முக்கிய பங்குண்டு. பின் உமா, சந்ததி, ராஜன் இடம் கேட்டு வந்து, மடம் புடுங்கியவர்கள்.
    ‘பரந்தன் ராசன்’ இந்திய உளவாளியாகவே அன்றிலிருந்து இன்று வரை செயற்படுகிறார் என்பதே நிதர்சனமானது. அவரது அன்றைய எசமானுக்கு(ஆனந்தசங்கரி) இந்தியா, யுனெஷ்கோ விருது என்ற பேரில் கொஞ்சம் கொடுத்ததும் தற்செயலானதல்ல. நிலா! எப்போது கழகத்தில் அல்லது போராட்டப் பாதையில் அடியெடுத்து வைத்தீர்கள்?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /புரியலையே இதில் என்ன சொல்லவருகிறீர்கள், ஈழதமிழன் கேனையன் என்றா? அல்லது இந்திய புலன் திறமையானதென்றா??.எட்டாத முதுகை றிய புறப்படும்போது சிறிது சிரமமாகதான் இருக்கும்; ஆனாலும் கடிக்கும் இடத்தில் சொறியும் போது உள்ள சுகமிருக்கே??/– பல்லி.
    பல்லி!, “கடிப்பவர்களை” தெளிவாக ஆதாரத்துடன் அடையளம் காட்டலாமே(புலனாய்வை). அதற்குறிய தெளிவான அரசியலை முன் வைக்கலாமே. இந்தியா என்றால் தமிழ்நாடு என்ற “இலங்கைதமிழர் சின்ரோமை” வைத்துக்கொண்டு, ஆளுக்குகொன்றாக எதிரும் புதிருமாக கருத்துக்களை கூறிக்கொண்டு தமிழ்நாட்டை இப்போது சுற்ற ஆரம்பித்துள்ளீர்கள். இந்தியாவில் பெங்களூரில் என்டாவென்றால், இ.என்.டி.எல்.எஃப். ராஜன்(ஞானசேகரன்) ராஜீவ்காந்தி தன்னை 1987ல் சந்தித்து தனிப்பட்ட ரீதியில்,வடக்கும் – கிழக்கும் இணைந்த தமிழீழம் வாங்கிதருவதாக கூறியதாகவும், அதை தமிழ்நாட்டுக்காரர்கள்தான் கெடுத்துவிட்டதாகவும் வேறு கதை கூறுகிறார்.
    அரசியல் அறிவு இல்லாத ஆயுதம் தரித்த தமிழ் காடையர்கள் வெளிநாடு முழுவதும் நிறைந்துள்ளனர், அவர்கள் லிஸ்டில் பல்லி சேரவில்லை என்று நினைக்கிறேன். “கடிப்பவர்களை” விட்டுவிட்டு அப்பாவி தமிழக மக்களை பலிவாங்க துணை போக மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரத்தனாடு பண்ணையார் முதல், சென்னை விமான குண்டுவெடிப்பு (ஒபராய் தேவன்), ராஜீவ் கொலை(அப்பாவி காங்கிரஸ் தொண்டர்கள்)வரை இதுதான் நடந்துள்ளது!.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    எனக்குத்தெரிந்த கழக வரலாற்றில், கட்டுரையாளார் பரந்தன் ராஜனையும் மற்றும் மாதகல் பாபுஜியையும் இந்தக்கட்டுரையில் மிகைப்படுத்துவதாகவே தெரிகிறது. பாபுஜி, ஆரம்பகால கழக நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிராத ஒருவர், அவர் எவ்வாறு கிளிநொச்சி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றினார் என்பது கேள்விக்குறிய விடயமே! இதற்கு பாபுஜின் வயதையும் உமாவின் வயதையும் ஒப்பிட்டுப்பார்க்கவும். மேலும் பாபுஜின் குணாம்சங்கள் கிளிநொச்சி நகரில் வசித்தவர்களுக்கு நன்கு தெரிந்தவொன்று. ஆகையால் அவர் கழகத்தின் ஆரம்பத்தில் இதயபூர்வமாக இணைந்திருக்க வாய்ப்பில்லை, மேலும் பாபுஜி என்பவர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு வன்முறையாளனும், சமூகநீதிகளுக்கு அப்பாற்பட்டவனும் என்பதை நான் கிளிநொச்சியில் பார்த்தவன், அவருடன் பேசியவன், விவாதித்து அடிவாங்கியவன். இந்தக் கட்டுரையை எழுதியது ….. என்பது எனக்குத் தெரிகிறது.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //24. சேகர் – இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது./– இந்தக் கருத்துக்களை ஆட்சேபிக்கிறேன்!.//- DEMOCRACY on December 11, 2010 1:47 pm

    உங்களது சென்னைக் “கூவம்” தொடக்கம் “மட்ராஸ்” பேரூந்து நிலையம்வரை மனித மலத்தில் சறுக்கிச்சென்று பஸ் எடுத்தவர்களில் நானும் ஒருவன், ஆகையால் உங்கள் குப்பைகளை இந்தத் தளத்தில் விவாதிக்க முன்வரவேண்டாம். தமிழ்நாட்டுக்காரர் பற்றிய அபிப்பிராயம் இலங்கைத் தமிழர்களுக்கு நிறையவேயுண்டு – அதைப்பற்றி வேறு ஒருதளத்தில் விவாதம் செய்வோம். தமிழ்நாட்டுக்காரர் பலபேர் ஐரொப்பாவிலும் அமெரிக்காவிலும் இலங்கைக்தமிழர் தாங்களென பொய் ஆதாரங்களை சமர்ப்பித்து இன்றுவரை இவ்விடங்களில் வாழ்கிறார்களே – அது உங்களுக்கு புரியுமோ? – மேலும் சேகர், ஜோன், மணி(மலையாளம்) என்பவர்கள் நான் சந்தித்த இந்திய புலனாய்வார்கள்தான், ஆகையினால் உங்கள் முதுகை கொஞ்சம் கண்ணாடியில பாருங்கோ!

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி சேரவில்லை என்று நினைக்கிறேன்.::// democracy
    நன்றி பல்லி எப்படியும் 50 பின்னோட்டத்துக்கு மேல் எழுதி இருப்பேன்; அதில் ஒன்று கூட உங்கள் நம்பிக்கையை தவிர்த்திருக்காது;

    //பல்லி!, “கடிப்பவர்களை” தெளிவாக ஆதாரத்துடன் அடையளம் காட்டலாமே புலனாய்வை). அதற்குறிய தெளிவான அரசியலை முன் வைக்கலாமே. ::// கண்டிப்பாக அதுக்கு உங்கள் உதவியும் வேண்டுமே;

    //அரசியல் அறிவு இல்லாத ஆயுதம் தரித்த தமிழ் காடையர்கள் வெளிநாடு முழுவதும் நிறைந்துள்ளனர்,//
    இது நாகரிகமான கருத்தல்ல,அதனால் இதுக்கு பல்லி பதில் இல்லை; நிலா மீது பல்லிக்கு விமர்சனம் உண்டு; அதுக்கு முன்பு உங்களோடு வாதம் செய்கிறேன்; பல்லி நிலாவின் வக்கிலல்ல,

    //சென்னை விமான குண்டுவெடிப்பு (ஒபராய் தேவன்), ராஜீவ் கொலை(அப்பாவி காங்கிரஸ் தொண்டர்கள்)வரை இதுதான் நடந்துள்ளது!.//
    இது சரியான தகவல் அல்ல, அதனால் இதை சரி பார்த்தபின் வாதம் செய்யலாமே;

    /கட்டுரையாளார் பரந்தன் ராஜனையும் மற்றும் மாதகல் பாபுஜியையும் இந்தக்கட்டுரையில் மிகைப்படுத்துவதாகவே தெரிகிறது./ thalapathy
    இதில் எனக்கும் உடன்பாடுதான் ஆனால் ராசனுடன் பாபுஜியை சமபடுத்த முடியாது; தளபதியின் கருத்தில் சில உன்மைகள் உண்டு,

    :://அவர் எவ்வாறு கிளிநொச்சி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றினார் என்பது கேள்விக்குறிய விடயமே!::// இது பிரபாகரன் தேசிய தலைவன் ஆகியது போல் நம்மப முடியாத உன்மைதான்;
    //மேலும் பாபுஜின் குணாம்சங்கள் கிளிநொச்சி நகரில் வசித்தவர்களுக்கு நன்கு தெரிந்தவொன்று. // இது பாபுஜி ஈ என் டி எல் எவ் ஆன பின்புதானே;

    //ஆகையால் அவர் கழகத்தின் ஆரம்பத்தில் இதயபூர்வமாக இணைந்திருக்க வாய்ப்பில்லை, // அப்படி இனைந்தவர்கள் யாராவது பெயரை உங்களால் சொல்ல முடியுமா??

    //மேலும் பாபுஜி என்பவர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு வன்முறையாளனும், ::// அவர் மட்டுமா??

    //இந்தக் கட்டுரையை எழுதியது ….. என்பது எனக்குத் தெரிகிறது.// அதனால் உங்கள் கருத்து சரியாகி விடுமா??

    :://தெருப்பொறுக்கியாக, பரந்தன் சந்தி ரவுடியாக, ஆனந்தசங்கரியின் அடியாளாக செயற்பட்டு வந்த ‘பரந்தன் ராசன்’ // kovai
    இதை பல்லி பலமுறை சொல்லியுள்ளேன்; ஆனால் சங்கரி கூட ராஜனின் உதவியை கேட்டாரே தவிர ராஜனுக்கு என்றும் சங்கரியின் உதவி தேவைபட்டதில்லை என்பதும் தங்களுக்கு தெரிந்ததுதானே,

    //பரந்தன் ராசன்’ சொன்ன வரலாற்றைக் கேட்டு, நிலா’ எழுதிவிட்டு, தனக்குத் தெரிந்ததையும் கடைசியில் சேர்த்திருக்கிறார்.//
    ஆக நிலா ஜயர் மாதிரி எழுந்தமானத்தில் எழுதவில்லை என்பதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்கள்;

    //அய்யர் புலிகளில் இருந்தவர்; //
    நிலா கழகத்தில் இருந்ததாகதானே சொல்லியுள்ளார்; அதுவும் போக தனக்கு தெரியாததை தெரிய படுத்தும்படியும் கேட்டுள்ளாரே;

    ::// இருந்தபோதுள்ள புலிகள் தொடர்பான, விடையங்களை எழுதியவர்.//
    அப்படியா?? அப்படியானால் எப்படி 39 அமைப்பு உருவானது என்பது ஜயருக்கு தெரியாதா??

    // புளொட்டை உருவாக்கியதில் வாத்திக்கும், அய்யருக்குந்தான் முக்கிய பங்குண்டு. //
    வாழ்த்துக்கள்; அப்படியாயின் எப்படி இவர் கழக மத்திய குழுவில் இடம் பெறவில்லை, ஆள் கூடி போச்சு என ஒதுங்கி விட்டாரா??

    //பின் உமா, சந்ததி, ராஜன் இடம் கேட்டு வந்து, மடம் புடுங்கியவர்கள்.//
    கழகத்தின் முக்கியமானவர்கள் இவரிடம் மடம் புடுங்குவதானால் இவரது குடும்ப சொத்தா கழகம்;

    ://பரந்தன் ராசன்’ இந்திய உளவாளியாகவே அன்றிலிருந்து இன்று வரை செயற்படுகிறார் என்பதே நிதர்சனமானது. //
    ஆக ஒரு தெரு பொறுக்கி உடன் இந்தியா தொடர்பு வைத்திருக்கும் அளவுக்கு ராஜன் ஒரு திறமைசாலி என்பது உங்கள் கருத்து;

    // அவரது அன்றைய எசமானுக்கு(ஆனந்தசங்கரி) இந்தியா, யுனெஷ்கோ விருது என்ற பேரில் கொஞ்சம் கொடுத்ததும் தற்செயலானதல்ல.//
    இதை சங்கரியர் ஒத்து கொள்வாரா?? அல்லது இந்தியாவில் கிருஸ்னராசாவுடன் திரிந்த காலத்தில் மீண்டும் ஒரு அரசியல் இடத்தை ராஜன்தான் சங்கரிக்கு ஏற்படுத்தியது என்பதை சங்கரியோ அல்லது கிருஸ்னராசாவோ மறுக்க முடியுமா??

    // நிலா! எப்போது கழகத்தில் அல்லது போராட்டப் பாதையில் அடியெடுத்து வைத்தீர்கள்?//
    இதுக்கான பதிலை நிலா வியாளன் பின்னேரம்தான் என சொன்னால் உங்களால் என்ன செய்ய முடியும்? 30 வருடம் அடியெடுத்து வைத்து எதை கிழித்தீர்கள் இந்த கேள்வியை கேப்பதற்க்கு,?? கோவை நீங்கள் ஜயாவின் ரசிகன் என்பது தெரியும் ஆனால் உங்கள் எழுத்து ஜயருக்கும் உங்களுக்குமே ஈழ போராட்டம் தெரியும் என்பது வேடிக்கை; நிலா சொன்ன பலர் உயிருடன் உள்ளனர், ஜயர் சொல்லிய பலர் உயிருடன் இல்லை: என்பதே பல்லியின் கருத்து,
    :://இப்படி முன் வந்து எழுதுவதே பெரிய விடயம். நன்றி.//maya
    இது பல நிலாக்களையும் ஜயர்களையும் உருவாக்கும்;

    //நிலா எப்போது கதிரவனாக மாறும்? காத்திருக்கிறோம்.// சில எஸ்பிறஸ்கள் சந்திரனாக தூங்கும் போது என நினைக்கிறேன்;

    நிலா உங்களுடன் ஆரோக்கியமான கருத்து முரன்பாடு பல்லிக்கு உண்டு; அதை சமயம் பார்த்து எழுதுகிறேன், என் நோக்கம் யாரையும் தாழ்மை படுத்துவதல்ல, ஜெயபாலன் சொன்னது போல எனக்கு சில உன்மைகள் தெரிந்தாக வேண்டும்;

    //ஆளுக்குகொன்றாக எதிரும் புதிருமாக கருத்துக்களை கூறிக்கொண்டு தமிழ்நாட்டை இப்போது சுற்ற ஆரம்பித்துள்ளீர்கள்//democracy
    அது ஈழ மக்களுக்கு என்ன புனிதமான பூமியா??
    ஜெயலலிதாவில் இருந்து சுப்பிரமனிய சுவாமிமட்டும் ஈழ தமிழரைதான் தம் மூலபொருளாய் அரசியல் நடத்துவதுகூட தெரியாமலா நந்தாவுடன் கனடா பற்றி ஆராட்சி செய்யிறியள்,
    தொடரும் பல்லி;;;

    Reply
  • பல்லி
    பல்லி

    :://உங்களது சென்னைக் “கூவம்” தொடக்கம் “மட்ராஸ்” பேரூந்து நிலையம்வரை மனித மலத்தில் சறுக்கிச்சென்று பஸ் எடுத்தவர்களில் நானும் ஒருவன், ஆகையால் உங்கள் குப்பைகளை இந்தத் தளத்தில் விவாதிக்க முன்வரவேண்டாம். தமிழ்நாட்டுக்காரர் பற்றிய அபிப்பிராயம் இலங்கைத் தமிழர்களுக்கு நிறையவேயுண்டு – அதைப்பற்றி வேறு ஒருதளத்தில் விவாதம் செய்வோம். //

    சபாஸ் தளபதி;

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சென்னை ரோட்டில் மட்டும் மலம் இல்லை!, ”இந்தியா முழுவதும்” ஜனநெருக்கடி உள்ள பெருநகரங்களில் உருவாகிவிட்ட சேரிகளின் அருகில் இத்தகைய நிலை காணப்படுகிறது என்பது தளபதி, பல்லி போன்றவர்களின் கண்களில் தெரியவில்லையா?. நீங்கள் தமிழ்நாட்டை மட்டும் “மனநோய் பிரதிபலிப்பில்” குறிவைப்பது ஏன்?. அப்படி, இப்படி என்று அடுத்தக்கட்டமாக “இரண்டாம் முள்ளிய வாய்க்காலுக்கு” தயாராகின்றீர்களோ!.

    Reply
  • bala
    bala

    இங்கு வைக்கப்படும் கருத்தாடல்கள் இன்றைய முக்கிய தேவையை விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் சதிநடவடிக்கைகள் பொய்ப்பிரச்சாரங்கள் பற்றிய தகவல்களை அவற்றை அறிந்தவர்களை எழுத ஊக்குவிப்பனவாக அமைந்தால் நலம். இல்லையெனில் வாசகர்கள் கவனங்களை திசை திருப்பும் முயற்சியாகி பலனற்றுப் போகலாம்;

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார். //
    செத்தவரை பிரதே அறைக்குதான் கொண்டு செல்வார்கள். சரி மறுபிறப்பெடுத்தவர் எப்படி ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார்.
    //தொடர்ந்து மாணிக்கம்தாசன் பாபுஜி பாருக் றொபேட் அன்பழகன் ஆகியோர் ஓரு மாதத்தின் பின் அடுத்தடுத்து தமது கவனக் குறைவால் பிடிபட்டனர்.//
    உன்னிப்பாக கவனிக்கவும் இராணுவபிடியிலிருந்த ராஜனிற்கும் மேற்குறிப்பிட்டவர்களின் கைதிற்கும் தொடர்பில்லை.
    //முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் – செயலதிபர். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர்//
    // உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை //
    ஊரின்பெயர் நாட்டின்பெயரை கூட சரியாக சொல்வதில் கவனமெடுக்காதவரிடம் வரலாற்று உண்மை அறியவெளிகிட்டது நம்ம தப்புதான்.
    //ராம்ராஜ் சிறியவயதில் இணைந்து கொண்டு பின்னாளில் ஒரு சம்பவத்தில் கைதானார். இவருடன் இன்னும் சிலரும் அரசியல் காரணத்தால் கைதாகியிருந்தனர். எனவே சூறாவளி மீட்புப் பணியில் இவர்கள் பங்குகொள்ள முடியவில்லை.//
    இது எந்தகுழு நிலா என்பது புரிகிறது.

    //அவர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்வதற்காக யாருக்கும் சந்தேகம் வராதவாறு ; தன்னோடு அழைத்துச் சென்று ; என்னை உமா தன்னருகே அமர்த்திக் கொண்டார். அங்கே நடக்கும் நிகழ்வுகளை யாரும் ஒலி – ஒளிப்பதிவு செய்யக் கூடாது என தடை விதித்திருந்தனர்.

    நான் அவர்களோடு (ஈரோஸ்) பேசி புளொட்டின் நிகழ்வுகளை மட்டும் ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்ய விடுமாறு கேட்டதற்கிணங்க ; ஓகே சொன்னார்கள். ஆனால் நான் அனைவரது பேச்சையும் ஒலிப்பதிவு செய்தேன். அப்போது இப்போது போல பெரிதாக டெக்னிக்குகளும் இல்லை. பெரிதாக சந்தேகங்களும் இல்லை. சொன்னதை நம்பும் காலம் அது என இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

    நான் உமா பேசும் போது காதில் ஹெட் போனை வைத்துக் கொள்வேன். அவர் பேசி முடிந்ததும் சிறிய டேப் ரெக்கோர்ட் மேல் ஹெட் போனை வைத்துவிடுவேன். ஆனால் டெக்கோர்டிங் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் ஹெட் போனை முதல் முறை தூக்கி வைத்ததும் உமா என்னை மெதுவாக காலில் கிள்ளினார். நான் “வெட கரணவா” ( வேலை செய்யுது)என சிங்களத்தில் சொன்னேன்.. பின்னர் காதுக்குள் எல்லாம் தேவை என்றார். நான் பேசாமல் சிரித்தேன்.//
    இது அஜீவனின் வாக்கு மூலம்.

    // சேகர் – இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார்.//
    இது நிலாவின் வாக்கு மூலம்.
    எனியும் புளொட் இயக்கம் ஈழத்தமிழருக்காக இயங்கியது என்று நம்புவர்களை ஏமாளிகள் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    நிலாவின் பதிவுகள் ஆரம்பமாகி விட்டது. நல்ல முயச்சி இதில் உள்ள எனக்கு தெரிந்த சில விளக்கங்கள். இறைகுமாரன் ,உமைகுமாரன் கொலையில் கண்ணன் (ஜோதிஸ்வரன்)சம்பந்தம் இல்லை அப்போது அவர் சென்னையில் பாண்டிபஜார் சம்பவம் காரணமாக ஜெயிலில் இருந்தார் மேலும் ஆணைகோட்டை போலீஸ் நிலைய தாக்குதல் பற்றி பதியவில்லை சேகர் மாஸ்டர் retd. army officer மதுரையை சேர்ந்தவர் 82, 83 கால எமக்கு பலவித உதவிகளை செய்துள்ளார் பயிச்சி பொறுப்புக்கள் எல்லாம் அவர் தான் .அதனாலதான் மத்தியகுழு மீட்டிங்கில் கலந்து கொள்வார் சீசர் பாண்டிச்சேரி பெரும்சித்திறனர் அமைப்பை சேர்த்த பெரும் தமிழ் ஆர்வலர் 82, 83 கால பகுதியில் உமா ஜெயிலில் இருக்கும் போது பிளாட் ஆபீஸ்சை இரகசியமாக நடத்தியவர்கள் நானும் ,மாதவன் அண்ணாவும் தான் கந்தசாமி சங்கிலி , மாறன் வெளிவேலைகள் . செந்தில் (புலவர்) பாய்ச்சி உதவிகள் காத்தான் கிருஸ்ணகுமார் வவுனியாவை சேர்ந்தவர் .உமவில் உறவினர் .நிரஞ்சன் உடுவிலை சேர்ந்தவர்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    // எனியும் புளொட் இயக்கம் ஈழத்தமிழருக்காக இயங்கியது என்று நம்புவர்களை ஏமாளிகள் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். – தோஸ்து //

    எந்த ஒரு தமிழ் கட்சியும் , எந்த ஒரு தமிழ் இயக்கமும் நம்பிய தமிழர்களை ஏமாற்றியே உள்ளது. இருந்ததையும் அழித்தார்களே தவிர ஆக்கவில்லை. இதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

    அனைவரும் தமது சுயநலத்தை முன்னிறுத்தியே அரசியலோ அல்லது போராட்டமோ செய்தார்கள். இவர்களை நம்பியது அனைத்து தமிழர்களதும் மடத்தனம். இனியும் நம்புவது அதை விட மொக்குத் தனம். மக்களுக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால் விட்டுக் கொடுப்புகளும், நம்பிக்கைகளும் , மனம் விட்டு பேசும் தன்மையும் , கிடைத்ததை பெற்று முன்னேறும் மனமும் இல்லாத இவர்களால் முழு சமுதாயமும் அழிந்து விட்டது. அந்த வகையில் இலங்ககைத் தமிழர்கள் ஏமாளிகள்தான்.உண்மையானவர்கள் வீதிகளுக்கும் , தரகர்கள் வசதி வாய்ப்புகளுக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். பலரை அழித்து சிலரை ஆளாக்கியுள்ளது இப் போராட்டம், அரசியல்.

    இனியும் இந் நிலையை தொடர்வதா? இல்லையா? என்பதே இன்றைய முக்கிய கேள்வி தோஸ்து?

    Reply
  • nila
    nila

    இத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள எனது பதிவினை ஆரோக்கியமாக பார்ப்பவர்களுக்கும், இது சம்பந்தமான விமர்சனப்பதிவுகளை தொடருபவர்களுக்கும், இத் தளத்தில் ஒரு வரலாற்றுப்பதிவை தொடர்ந்தும் விமர்சனங்களோடு நகர்த்துவதற்கு வழிகோலியுள்ள தேசம் நிர்வாகத்தினருக்கும் நன்றிகள்!

    என்னால் தவறவிடப்பட்ட அல்லது தவறுதலாக தெரியப்படுத்தப்பட்ட தரவுகளை சுட்டிக்காட்டும் கருத்தாளர்களுக்கும் விமர்சனங்களை ஆரோக்கியமாக நகர்த்தி மேலும் வரலாற்று ஆவணங்களை செழுமைப்படுத்த அல்லது ஒவ்வொரு பகுதியாகத்தானும் முழுமைப்படுத்த உதவும் பதிவாளர்களுக்கும் நன்றிகள்!

    இந்த எனது பதிவின் சார்பாக சில நபர்களினூடு எழும் சந்தேகங்களை என்னால் முடிந்தவரை நிவர்த்தி செய்ய கடமைப்பட்டுள்ளேன்.தொடர்ந்தும் நான் கடந்த கால வரலாற்றுக்களை பதிவில் கொண்டுவரும் முயற்சியில் இருப்பதால் உங்களனைவரோடும் இவ்வாறு தளத்தில் விவாதிப்பது அல்லது பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானதும் அவசியமானதாவே கருதுகின்றேன்

    அஜீவன்:ஈஸ்வரன் சுவிஸில் வைத்தே நோய்வாய்பட்டு காலமானார் என்பது சரியானதே:
    அதுபோல் ராபினும் அவரது மனைவியும் சுவிஸில் படுகொலை செய்யப்பட்டதென்பதும் சரியானதே: இவற்றை உன்னிப்பாக கவனித்து உடனடியாக முதல்பதிவாக திருத்தியமைக்கு நன்றிகள்! எனது கவலையீனத்திற்கு மன்னிப்புக் கோருகின்றேன்.

    பல்லி: நீங்கள் குறிப்பிடும் கழகத்திற்கான வரவுகளும் கொலைகளுக்கான செலவுகள் அல்லது இழப்புக்கள் பற்றி இனியாவது ஒரு நிலுவையில் பார்க்கப்படுவது கண்டிப்பானதே. உங்களைப் போல் இவை சம்பந்தமான எனது தேடல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நிலா என்ற கடந்த பதிவுகளில் தளத்தில் நடந்த பல கொலைகளை பல ஆதாரத்துடன் கொணர்ந்துள்ளேன். இறந்தவர்களை சாட்சியாக்க முடியாது ஆனால் எங்கெங்கோ இழந்தவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பக்கத்திலிருந்தவர்கள் என்று இருப்பவர்களைத் தான் நாம் தேடிப்பிடித்து சாட்சி பகிர வைக்க முடியும். அதிலும் இன்னும் நாட்டிலிருப்போரின் பாதுகாப்பு கருதியும் மற்றும் வெளிநாட்டிலிருப்போர் எத்தனையோ பேர் மனவிரக்தியில் ஒதுங்கிய நிலையில் இருக்கும் போதோ அன்றி தம்மை வெளிப்படுத்த முடியாத பல நிலைகளிலோ உள்ளனர். எனவே இவற்றின் சிரமங்கள் உங்களுக்கும் புரியும். நானும் ஒரு கழகத்தோழராக இருந்தாலும் பின்தளத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலையில் தான் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். எனவே சரியான ஆதாரங்கள் இல்லாமல் எழுந்தமானத்திற்கு என்னால் பின்தள படுகொலைகளைப்பற்றி கூறமுடியாதுள்ளது; கழகத்தின் பின்தளத்தில் பலதரப்பட்ட நிலையில் பல கட்டமைப்பில் அண்ணளவாக 6000 போராளிகளெனவும் பின்னுக்கு முன்னாக பல காலகட்டங்களின் பயிற்சி முகாம்களின் தொகை 26 எனவும் ஒரு கணக்கு உள்ளது. இதில் நானும் ஒரு நபர்தான்.

    மேலும் ஒரு வரலாறு அல்லது ஆவணப்படுத்தல் ஆராயப்படும் போது அதன் தோற்றம்- ஆரம்ப கட்டமைப்பு- அரசியல் சூழல்- தனிநபர்களின் குணாம்சங்கள் -அதன் பங்களிப்புக்கள்-அதன் வளர்ச்சிப் போக்குகள்- உள் உடைவுகள் -பிரிவுகள்- அதனூடு நகர்த்தப்படும் செயற்பாடுகளென ஒரு பரிமாண வளர்ச்சிப்போக்கில் தான் எதுவும் ஆதாரப்படுத்தப்பட வேண்டும். இதில் எமது 4 சகாப்த போராட்டம் தங்கியுள்ளது. இதில் பல ஆயிரம் பேர் ஏன் லட்சம் பேர் கூட சம்பந்தப்பட்டிருக்கலாம். எம்மைப்போல் சில நூறு பேராவது தொலைந்த வரலாற்றை- தொலைக்கப்பட்ட எமது போராட்ட அடையாளத்தை தேடிக்கொண்டிருக்கலாம்; இதில் எமது பங்களிப்பு ஆரம்பமும் சிறு துரும்பும்தான். இதில் எமதுகழகத்தின் தோற்றுவாய் மக்கள் மத்தியில் செயற்பட்ட செயற்பாடே தான். எனது தேடலும் இந்த காந்தீயத்தினூடாக -அந்த மக்களின் வேலைத்திட்டங்கள் அதன் குடியேற்றங்களினூடாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் கையிலெடுக்கப்பட்ட விதமும் தான். உண்மையில் இந்த வழியில் ஆரம்பத்தில் எமது இளைஞர்களால்- சில குறிப்பிடத்தக்கவர்களின் தியாகத்தால் நகர்த்தப்பட்டுள்ளது. இதனை முன்னெடுத்த எம் போராளிகளின் தியாகத்தால் மட்டுமல்லாது உட்படுகொலைகள்- சக இயக்க படுகொலைகள் இலங்கையரசின் படுகொலைகளென உரமிடப்பட்டுள்ளது. இதில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மூலம் வரலாற்றை பதிவு செய்தாலும் அதுவும் கொச்சப்படுத்தப்படுமானால் இது சிலரின் காழ்ப்புணர்ச்சியா? எனினும் இவற்றையெல்லாம் எதிர்பார்த்ததுதான். எனினும் சில விசமப் பேச்சிற்கு காது கொடுப்பதை தவிர்த்துக் கொள்கின்றேன். எனினும் எனக்கு பல்லி வக்கில் இல்லாவிட்டாலும் எந்தக் கட்டுரைகளிலும் பல்லி சில நியாய தர்மங்களை கடைப்பிடிப்பதால் இந்த தளத்திலும் சிலவற்றிற்கு பல்லி சாட்சியம் பகிர்வதால் எனக்கு வேலை மிச்சம். நன்றிகள். பல்லியின் சந்தேகங்கள் கண்டிப்பாக உண்மையைத் தேடுவதாக அமையுமென்பதால் பல்லி உட்பட ஆரோக்கியமானவர்களின் விமர்சனங்கள் இத்தளத்தை வளமாக்கும்.

    டெமோகிரசி: தேசம் நிர்வாகம், கழக மத்திய குழு உறுப்பினர்களின் இறப்பு- இருப்பு உட்பட்ட சில விபரங்களை இக் கட்டுரையில் வெளிப்படுத்தச் சொல்லி கேட்டதற்கிணங்க எனது தேடலிற்குட்பட்ட 24 பேரின் விபரங்களை நான் அறிந்த மட்டில் வெளிப்படுத்தியுள்ளேன். இதில் யாரையும் கொச்சைப்படுத்தியோ யாரையும் வேண்டுமென்று தவறவிட்டோ பதியவில்லை

    இதில் சீசர், சேகர் அவர்களைப்பற்றி விசேடமாக நாம் நினைவில் கொள்ளவேண்டியதுள்ளது.
    சீசர்: இவர் ஒரு பாண்டிச்சேரியை சேர்ந்தவராக இருந்தும் எமது போராட்டத்தில் (பெருஞ்சித்தனார்மூலம் அறிமுகம்)82 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பெரும் பங்காற்றியுள்ளார். கலைத்திறமைகள் கொண்ட இவர் மூலம்தான் எமக்கு காலத்தாலும் அழியாத கழகப்பாடல்கள் கிடைத்தன. இவரின் எழுச்சிகரமான, உணர்வுபுர்வமான கவிதை எழுத்தும் மெட்டும் தான் இப் பாடல்களுக்கு அடிநாதமாயின. இவரின் ஆரம்பத்தில் சென்னைக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் எமது அந்நிய நாட்டின் (இந்தியாவின்) வேலைத்திட்டங்கள் பலதிற்கு பெரும் ஆதாரமாக இருந்தது. பின்நாளில் பின்தளமகளிர் ராணுவ பயிற்சி முகாமான பதுளை முகாம் நிர்வாகியாக திறம்பட செயற்பட்டு நூற்றுக்கணக்கான மகளிரை (பல உட்கட்சி அரசியல் கழகத்தில் முரண்பாடுகளாயிருந்த வேளையிலும்) சிறப்பான பயிற்சிகளை முடித்துக்கொண்டு தளத்திற்கு அனுப்பி வைக்கும்வரை கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டார். (‘இதற்கு ஆதாரம் பதுளை முகாம் பொறுப்பாளராக இருந்த ஒருவர் இன்று நாட்டில் இருக்கும் திலீப். மற்றும் மகளிரை பாதுகாப்பாக கடல் மூலம் படகுகளில் வழியனுப்பி வைத்ததில் பொறுப்புடன் செயற்பட்டவர்களில் பிரான்ஸில் வசிக்கும் டேவிட் என்பவருமாகும்)

    மேலும் சீசர் அவர்கள் எமது கழகத்தின் முரண்பாடுகள் முற்றி சிதறிய நிலையிலும் எல்லாவிடத்திலும் மிக கண்ணியமாக நடந்து கொண்டார். அதற்கு பின்னும் ஏன் இன்று வரையில் கூட தனக்கென்றுள்ள ஒரு அரசியல் வழியில் முழுநேரத்தொண்டராக “தொழிலாளர் பாதை” என்ற அமைப்பின் முதல்தர செயற்பாட்டாளராக செயற்படுகின்றார்.

    சேகர் மாஸ்ரர்: 83 காலகட்டங்களில் எமது விடுதலைப் போராட்டம் கணிசமான முறையில் இந்தியாவை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இதில் கழகம் உட்பட மற்றைய இயக்கங்கள் வரை இந்தியாவால் உள்வாங்கப்பட்டது வரலாறே (இதில் இந்தியாவின் அரசியல் லாபம் என்பது வேறுவிடயம்) அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி உட்பட்ட இந்திய அரசும் எல்லா இயக்கத்திற்குமான ஆதரவு, பாதுகாப்பு, இருப்பிடங்கள், ஆயுதங்கள், பயிற்சிகள், பணஉதவிகள் உட்பட்ட அனைத்தையும் மேற்கொண்டன. இதில் கழகத்திலிருந்து 116 கழக உறுப்பினர்களை பெற்றுக்கொண்டு டெல்லி பயிற்சி ஒன்றை அளித்தனர். இப் பயிற்சிக்காலத்திலிருந்து ஓய்விலிருந்த ராணுவ அதிகாரியான சேகர் என்பவரின் பொறுப்பிலேயே இது நடந்தது. மிகத் திறமையான நிர்வாகியும் பயிற்றுனரான இவர் எல்லா கழகத்தோழர்களுடனும் சகஜமாக அன்பாக பழகுவார். இங்கு பயிற்சி பெற்ற 116 பேரில் பலர் பின்நாளில் பின்தள பல முகாம்களின் பயிற்சியாளராகவும் பொறுப்பாளராகவும் செயற்பட்டனர். சின்ன மெண்டிஸ் தளப்பொறுப்பாளராகவும், மன்னார் ராணுவ பொறுப்பாளர் நடேசன், வவுனியா ராணுவப்பொறுப்பானர் நியாஸ் என்ற சோதிலிங்கம் மட்டக்களப்பு ராணுவப்பொறுப்பாளர் பக்தன் உட்பட்ட பல முக்கியமான இப் பயிற்சியாளர்கள் தளத்திலும் ராணுவ பொறுப்பைமேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் சேகர் மாஸ்ரர் தொடர்ந்து பின்தளத்திலுள்ள அனைத்து முகாம்களுக்கும் என்நேரமும் சென்று வரக்கூடிய அனுமதி செயலதிபரால் வழங்கப்பட்டிருந்தது. இவரும் முகாம்களிலேயே மாறி மாறி செயற்பட்டு சேவையாற்றினார். கழக உறுப்பினர்கள் மத்தியில் இவர் நடந்து கொண்ட விதம் எல்லோரையும் கவர்ந்திருந்தது.

    நான் பயிற்சி எடுத்திருந்த தொலைத்தொடர்பு முகாமிற்கு ஒரு வாரம் விசேட பயிற்றுனராக வந்திருந்தார். அங்கு பயிற்சிகள் முடிந்து வெவ்வேறு தொலைத்தொடர்பு நிலையங்களை பொறுப்பெடுக்க இருந்த எமக்கு சில முக்கிய பயிற்சிகளை தெளிவுபடுத்தினார். அதாவது சர்வதேச மட்டத்திலான தொலைத்தொடர்பு சமிஞ்சைகளை கையாளும் விதம்-அவற்றை உடைத்து செயற்படுத்தும் லாவகங்கள், ரகசிய செய்திகள் அனுப்பும் வழிமுறைகள் ராணுவ புலனாய்வின் கட்டமைப்புக்கள் என பலதரப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தினார். தான் இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி என்பதை மறைக்கவில்லை. ராணுவத்திலிருக்கும் போது தனக்கு நடந்த விபத்தொன்றில் காலில் சிறிய ஊனம் இருப்தையும் குறிப்பிட்டார்.

    இந்தியா எம்மை எல்லாம் கையேற்று அத்தனையும் செய்து கொண்டிருக்கும் போது எங்களனைவரினதும் செயற்பாட்டை கவனிக்காமலோ அன்றி எம்மை பின் தொடராமலே இருப்பார்கள் என்று எதை வைத்து சொல்ல முடியும். ஒரு நாட்டிற்கு எப்படி அரசியல்- ராணுவம் நிர்வாகக்கட்டமைப்பு என்பது முக்கியமோ அதுபோல் புலனாய்வு என்பதுவும் முக்கியம். அதுவும் புலனாய்வு என்றும் பிரதமரின் நேரடிக்கட்டுப்பாட்டிலோ அன்றி அதன் சார்பானவர்களின் மேற்பார்வையிலோ தான்இருக்கும்.-இந்திய உளவுத்துறையின் செயற்பாடுகளை அதன் வலைப்பின்னல் வேலைகளை அதன் நிர்வாக கட்டமைப்புக்களை “பி.ராமன் என்னும் முன்னாள் ராணுவ அதிகாரியும் தற்போதுவரை மத்திய அரசின் சில பொறுப்புக்களில் இருப்பவரால் எழுதிய “நிழல் வீரர்கள்” என்னும் புத்தகத்தை படித்தால் பல விடயங்கள் புரியும்) (இதில் கழகத்தின் புலனாய்வு புலனற்றவர்களிடம் இருந்ததை குறிப்பிடவில்லை); எனவே சேகர் மாஸ்ரரின் பங்களிப்பு இப்படியாதென்பதில் என்ன சந்தேகம் உள்ளது. இது செயலதிபர் உட்பட அறிவுள்ள அனைவர்க்கும் தெரிந்திருக்கும். மத்திய செயற்குழுவில் இவரின் பிரவேசம் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
    எனவே இவர்கள் இருவரின் நிலைப்பாட்டையும் தான் பதிவில் சுருக்கமாக கொண்டுவந்தேனே ஒழிய கொச்சைப்படுத்தவில்லை. தற்போது இவர்களின் கழகத்திற்கான பங்களிப்பை எனக்கு தெரிந்தவரை பதிவிட்டுள்ளேன். அவர்கள் யாராக இருந்தாலும் எம் கழக உறுப்பினர்கள் மத்தியில் என்றும் அவர்களுக்கென்ற ஓர் மரியாதை இருந்தது. எம்மைப் போன்றோரிடமும் அந்த நன்றி இன்றும் உள்ளது.

    மேலும் கழகம் இந்தியன் ராணுவம் வந்த காலத்தில் இலங்கை அரசுடன் நின்றமை மறக்கவோ மறுக்கவோ முடியாதவை (இதற்கு முக்கிய காரணம் மாணிக்கம்தாசன் என்பதும் உண்மை) அதுபோல் மாலைதீவு நிகழ்வு பற்றி நீங்கள் குறிப்பட்டதுவும் நான் பலரிடம் அறிந்ததில் உண்மையாகத்தான் உள்ளது.

    Reply
  • nila
    nila

    கோவை: நான் 1979 காந்தீயத்தினூடாகவோ அதன் பின் வந்த கழகத்தினூடாகவோ அரசியலுக்கு வந்திருக்கலாம்.ஏன் அதற்கு முற்பட்ட கூட்டணி அரசியலிலும் அதைத் தொடர்ந்த அரசியல் நகர்வுகளிலும் எனது பார்வையாளர் தன்மையோ பங்களார் தன்மையோ எனக்கு உண்டு. அதற்காக எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை. நான் என்றும் எந்த போராளிகளையும் ஏன் சக இயக்கப் போராளிகளையும் மதிக்கத் தெரிந்தவர். இப்படியான எனது செயற்பாட்டால்தான் எங்கெங்கோ இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து ஆவணப்படுத்தலை என்னால் முடிந்தவரை செய்கின்றேன். ஆகவே என் அரசியலை தேடி அலையாதீர்கள்.!

    இதில் நான் எந்த அரசியல் முண்ணணி போராளியையும் சக தோழமையுடன் மதிக்கின்றேன் அரசியல் நாகரீகத்தை என்றும் கடைப்பிடிக்கின்றேன். நானும் பல கொலைக்களங்களை, உயிராபத்துக்களை தாண்டி சவாலாக வாழ்கின்றேன் ஏன் இந்த ராம்ராஜ் என்பவரால் கூட முன்பொருகாலத்தில் அவமதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இது தான் அரசியல். அதற்காக என்னால் யாரையும் எதிரியாகவோ காழ்ப்புணர்ச்சியுடனோ பார்க்க முடியாதுள்ளது. அந்தந்த சூழல்களையும் காலத்தையும் வைத்து தான் ஒவ்வொன்றையும் அலச வேண்டும். தனிநபர் விசுவாசத்தையோ முரண்பாட்டையோ அல்லவே…

    நாவலர் பண்ணையின் வரலாறு பற்றியும் அங்கு பங்காற்றியவர்களின் உயிரோடிருப்பவர்கள் விபரம் பற்றியும் எனது பதிவில் உள்ளது. அதில் பயிற்சி பெற்ற டெலோ தோழர்கள் கண்டிப்பாக எங்கோ உள்ளனர். ஏனெனில் டெலோவின் இந்த பயிற்சி கூட டெலோவின் வரலாற்று ஆவணத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கலாம்.

    “பண்டிக்கெய்த குளம்” பண்ணை பற்றிய உண்மையை கூற இன்றும் புலியின் தொடர்பிலும் முக்கியத்துவத்திலும் உள்ள இருவர் (இவர்கள் ராஜனால் பிரபாகரனுக்கு கண்டுபிடித்து கொடுக்கப்பட்டவர் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்) உள்ளனர். (சென்ற வருடம் கூட ஒரு முயற்சிக்கு லோகநாதன் என்னுடன் சுவிஸில் வந்து நின்ற நேரம் தொடர்பு கொண்டார்) எனவே லோகநாதனையும் மாணிக்கவாசகரின் மகன்…… ஆகிய இருவரையும் ஐயரிடம் சொல்லி கண்டுபிடித்தீர்களென்றால் உங்கள் சந்தேகங்களை உறுதிபடுத்த முடியும் இதன் மூலம் ரவுடி ராஜனின் வரலாற்றுப் பாத்திரமும் உங்களுக்கு புரியும்
    பண்ணைகள், குடியேற்றங்கள்- பின் காந்தீயம் என நகர்ந்து எந்த இடைவெளியும் இல்லாமல் கழகம் உருவாகிய விதத்தை சம்பவங்கள் சரித்திரங்கள் மரணங்கள் கொலைகள் குத்து வெட்டுக்களுடாக ஆதார பதிவாக ஒரே கட்டுரையிலேயெ முன் வைத்துள்ளேன். தொடரும் என் பதிவுகளில் காந்தீயத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கான செயற்பாடும் இதில் கழகத்தின்கணிசமான மத்திய குழு உறுப்பினர்களின் உள்வாங்கலும் தரவுகளாக்கப்படும். அப்போதாவது புரியும் கழகத்தின் கட்டுமாணங்கள் எப்படி உருவாக்கப்பட்டதென்று பொறுத்திருங்கள்.

    தளபதி: இக் கட்டுரையில் முன்பு குறிப்பிட்டது போல் வாழும் வரலாற்றுப் பாத்திரங்களோடு சம்பந்தப்பட்டவையே இந்தப் பதிவுகள் எல்லாம். எம்மைப் போல் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் வெளியே வந்து எழுதினால் உண்மைகள் நிருபிக்கப்படும். காத்திருப்போம்; பாபுஜி பற்றி நீங்கள் ஐ.பி.கே காலத்தின் நடவடிக்கைகள் குறிப்பிட்டிருந்தது நூறுவீதம் உண்மையே. ஆனால் பின்னால் ஈ.என்.டி.எல்எப் தலைமையால் பாபுஜியைப் போன்ற அட்டகாசம் செய்த உறுப்பினர்கள் (மனோ மாஸ்ரர், ராஜன் போன்றோரால் விசாரிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதும் தெரிந்திருக்க நியாயமில்லைதானே. அதே போல் ராஜனை விட இளமையாக பாபுஜி இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் சில வேலைகளை சுறுசுறுப்பாக செய்யக் கூடியவரென்பதால் இணைத்திருக்கலாம். இதே வயதில் வந்த தாசன் கழகத்திற்கு முதல் கூட்டத்திற்கு வந்திருந்தும் அடுத்து கூட்டப்பட்ட கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினராக பாபுஜி தெரிவாகியமை எங்கோ இடிக்கின்றதே. அன்றைய காலகட்டத்தில் விடுதலைக்கு வந்த எல்லோருமே பெரும் அர்ப்பணிப்புக்களுடன் தான் வந்துள்ளார்கள். அதில் பிற்பட்ட காலங்கள் கறைபடிந்தவையாக இருந்திருக்கலாம். கிளிநொச்சி வங்கிக் கொள்ளையில் பாபுஜி சம்பந்தப்பட்டதென்பது நூறுவீத உண்மை. ஏனெனில் இது சம்பந்தமாக பிடிபட்ட நிலையில் தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெலிகடை சிறைச்சாலையில் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி நேரடியாக மீண்டும் கழகத்தில் இணைந்து கொண்டார். இதற்கான அத்தனை பதிவும் இலங்கை சார்ந்த அந்தந்த ஆண்டிற்குரிய மனித உரிமை பதிவில் கிடைக்கும். மற்றும் இலங்கைஅரசின் ஆவணங்களில் சாதாரணமாக தேடினாலேயே காணலாம்.

    இவைகளெல்லாம் யாருக்கும் வக்காலத்து வாங்குவதற்காக அல்ல ஆதாரப்படுத்தக் கூடிய வரலாற்று ஆவணத்திற்குரிய விடயம் ஆகும்.எனக்கும் உங்களைப்போல் பாபுஜியின் பிற்கால நடவடிக்கைகளில் கடும் விமர்சனம் உள்ளது. இவர்களைப்போன்ற ஒரு சில நபர்களால் தான் புலி உள்ளிட்டு எல்லாவற்றையும் அழிக்க வழிகோலியது. புலியை விமர்சிக்கும் நாம் இவர்களைப் போன்றோரின் செயற்பாடுகளை விமர்சிக்க தயங்கமுடியாது. மன்னிக்கவும் முடியாது.

    தோஸ்து: “சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார்”/

    நீங்கள் ஒரு முக்கியமான தவறை இந்த இடத்தில் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அதாவது இறந்ததாக நினைத்து கொண்டு ராணுவம் சென்றுவிட்டது…)என்பதில: குதித்து ஒடும் நிலையில் ராஜன் சுடப்பட்டதும் மதிலிற்கு வெளியே நிலத்தில் விழுந்துகிடந்ததை ராணுவம் இறந்ததாக நினைத்து உடலை இழுத்துச் சென்றதென்பதை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தை இந்த மதில் சுவருக்கு அப்பால் நின்ற கன்னியாஸ்திரிகள(கன்னியாஸ்திரிகர் மடம் அருகே இருந்ததால்); கண்டு கூறக் கேட்டதையே அன்றைய பத்திரிகைச் செய்தியாக அறிந்தேன். பின் இத் தகவல்களைத் திரட்டும் போது இதனை உறுதிப்டுத்திக் கொண்டேன். மேலும் சூட்டுக்காயங்களுடன் பிடிபட்ட ராஜன் ராணுவ வைத்தியசாலையில் நினைவுதப்பிய நிலையில் சிலநாட்களுக்குப்பின்பே கண்விளித்தார். எனவே உயிரோடிருக்கும் ஏனைய சாட்சிகள் தான் சாட்சிபகிர வேண்டும்.

    வங்கிக்கொள்ளை நடந்து பாபுஜியும் மற்றொருவரும் மாதகலில் நிற்கும் போது வீட்டை விட்டு வெளியே புறப்படும் போதெல்லாம் வெளியே எட்டி எட்டி ராக்கி பார்த்து போய்வந்துள்ளனர். இதனை கவனித்த முன்வீட்டினர் இந்த வீட்டில் ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்ந்து பொலிஸிற்கு தகல் கொடுத்ததன் அடிப்படையிலேயே இவர்கள் பிடிபட்டார்கள். பச்சை கண்ணாடி போட்டு எல்லாவற்றையும் பார்த்தால் …..

    முதலிலேயே குறிப்பிட்டபடி தேசம் நிர்வாகம் சில மத்திய குழு உறுப்பினரின் விபரம் கேட்டது குறிப்பிடப்பட்டதே.
    உமா- புன்னாலைகட்டுவன் என்பதும் ராபின் கொலை கொலண்ட்டில் என்பதும் தவறுதலாக இணைக்கப்பட்டதே. தயவு செய்து தேசம் நிர்வாகம் சார்பாக நான் மன்னிப்பு கேட்கின்றேன். அதற்காக இந்த சிறு தவறுகளை உதாரணம்காட்டி எனது பதிவுகளுக்கு -களங்கம் கற்பிக்காமல் எந்த குரோத மனப்பான்மையுடனும் யாரையும் கொச்சைப்படுத்தாமல் விமர்சனத்தை சுட்டிக்காட்டுங்கள் நன்றி

    எனக்கும் ராமராஜின் ஊடக அரசியலில் விமர்சனம் உண்டு. அவரின் ஈ.என்.டி.எல்.எப் அரசியலில் கடந்தகால பாத்திரத்தில் அடாவடித்தனங்களை நோக்கிய கடுமையான விமர்சனம் உள்ளது. ஆயினும் பதினாறு வயதில் அவரின் அரசியல் வரவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் விடுதலையின் பால் அவருக்குள்ள அக்கறை வீதிக்கு அவரை இழுத்து விட்டதும் பின்நாளில் அரசியல் கைதியாக இளைஞர்களுடன் சேர்ந்து சிறைசென்றதும் மறக்கவோ மறுக்கவோ முடியாதே! அதுபோல் இன்றுவரை எமக்கு ஒத்துப்போகாத அரசியலாயினும் அவரின் சமூகப்பாத்திரமும் கழகத்திற்கு அவர் செய்த பொருளாதார உதவிகளும் மறைக்கப்பட முடியாதவையே. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது எமது பதிவுகளும் சாட்சிகளும் முடிந்தவரை உண்மையை தேடுகின்றேன்.

    வெற்றி: நானும் இப்பதிவு செய்யும்வரை காத்தான் வவுனியா என்றே நினைத்தேன். ஆனால் சில சம்பந்தப்பட்டவரின் தகவலின்படி சொந்த இடம் மானிப்பாய் என்றும் தொழிலிற்காக வவுனியாவில் இருந்ததென்றும் பதிவு கிடைத்தது. மேலும் இறை – உமை கொலை பற்றி பிரான்ஸிலுள்ள பழைய மகளிரமைப்பு கொழும்புகிளை செயற்பாட்டாளர் ஒருவர் (அவர் தனது பெயரை எதற்கும் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லியுள்ளார்)(உங்களுக்குப் புரிந்திருக்குமென நினைக்கின்றேன்) திடமாக தகவல் தந்துள்ளார். எனவே உங்கள் தகவலையும் வைத்துக்கொண்டு மீண்டும் சரியான விபரம் திரட்டுகின்றேன்: சிறிய விடயங்களை கூட கவனமெடுத்து உங்களைப்போன்று ஆரோகச்கியமாக சுட்டிக்காட்டி திருத்துவதற்கு நன்றி….

    கிளிநொச்சி வங்கிக் கொள்ளையில் காத்தான் என்ற கிருஸ்ணகுமாரும் -மாணிக்கம்தாசனும் (மாணிக்கம் தாசன் பிடிபட்டார் என்றுமட்டுமே முதலில் குறிப்பிட்டுள்ளேன்) பங்கேற்றதென்பதை தவறவிட்டுள்ளேன். தயவுசெய்து இப்பதிவையும் கட்டுரையுடன் இணைத்து பார்க்கவும். முடிந்தால் கிளிநொச்சி வங்கி கொள்ளையின் நேரடி விவரணம் தரலாம். ஆனால் இது ஆரோக்கியமானதா என்பதனை யோசிக்கவேண்டியுள்ளது.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    சேகர் மாஸ்டர்ருக்கும் இந்தியஅரசு பயிற்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சேகர் மாஸ்டர் 82 நடுபகுதியில் இருந்து பிளாட்க்கு தனிப்பட முறையில் வேலை செய்தவர்

    Reply
  • Kanna
    Kanna

    U P ட்ரைனிங் பெறட 116 உறுப்பினர்கள் , மத்திய அரசின் நேரடியான நிறுவனத்தால் traiining பெற்றனர். இதில் சேகர் மாஸ்டர் சமபந்தபடவில்லை.
    சேகர் மாஸ்டர் இனால், தேனீ , புதுகோடை இருந்த 2 முகாம் உருபினர்களும் ராணுவ ட்ரைனிங் உம , L கேம்ப் ராணுவ தலைமை ட்ரைனிங் உம கொடுக்கப்பட்டது. சேகர் மாஸ்டரின் பங்களிப்பை மதிக்காது புறகனிப்பது என்பது நகரிகமற்ட செயல். மதுரைஎல் வீடு, பிள்ளைகள், மனைவி விட்டு விட்டு, முகாம்களில் தனது பங்களிப்பை செய்தது புனிதமானது. பென்சன், வீடு வாடகை வருமானம் என வாழவேண்டியவர் , முகாம்களில் சாக்கில் படுத்த காலங்கள் மறக்கமுடியாதவை.
    சேகர் மாஸ்டர் அடிப்படியல் கடல் படையென் நிர்முல்கி Divi எல் இருந்து வெசட தாக்குதல் குழுவில் இருந்தவர். இவர் கடல், இராணுவ படைகளின் நுணுகங்களை அறிந்தவர். இராணுவா அறிவில், அவரிடம் இருந்து எப்போதம் அறிவதிட்கு எமக்கு வெடயங்கள் உண்டு. தொலைதொடர்பு , கடல், விமான அறிவுகளை பகிர்ந்து கொண்ட ஒரு மனிதன்.
    motorbike ட்ரைனிங் எல் ஒரு சாகச முற்சிஎன் பொது கால், கை எல் கயம்படதினால் பாதிப்புக்கு உள்ளானவர்.

    கிளிநொச்சி பேங்க் வெட்யதில் ட்ரக்டர் ஸ்ரீ தவரவேட படுள்ளார். ஆனைகோடை சம்பவத்தை தரமுடியமா??

    Reply
  • prof
    prof

    தோழர் நிலா தங்களின் 24 செயற்கமிட்டி விபரங்களில் தவறு உள்ளது.
    சுந்தரம், நிரஞ்சன், காத்தான் ,பார்த்தன் ஆகியோர் பின்னய செயற்கமிட்டியில் இருக்கவில்லை என நம்புகிறேன்.
    அப்படிப்பார்த்தால் சத்தியமூர்த்தி, பாண்டியன்குளத்தை சேர்ந்த ஒருவர் காந்தீயத்தில் இருந்தவர் பெயர் உடனும் நினைவில் வரவில்லை ஆகியோரும் புளொட்டின் ஆரம்பகால செயற்குழுவில் இருந்தவர்களே.

    இங்கு உங்களது பதிவில் தேவதாஸ்(மாறன்), மரியதாஸ்(சுப்பு) யாழில் மா நகரசபை பொறியியலாளராகவுள்ளார்.,இந்த இரு சகோதரர்களும் செயற்கமிட்டியில் இருந்தவர்கள். மாறன் கமிட்டியில் தெரிவுசெய்யப்பட்ட போதும் சிறிலங்கா சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை விட இப்போதும் புளொட்டில் அங்கம் வகிக்கும் சதானந்தன்(ஆனந்தி) உம் செயற்கமிட்டியில் இருந்தவர்கள். அதேபோல் தயாபரன்(கைதடி) குமரகுருபரனின் சகோதரன் பின்னர் தீப்பொறியுடன் இணைந்தவர். தற்போது கனடாவில் உள்ளார். இவரும் செயற்கமிட்டியில் இருந்தவரே.

    எனது தகவலை தெரிந்த தோழர்கள் சரிபார்க்கவும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.நிலா அவர்களே, இந்தியாவும் இலங்கையும் சுதந்திரத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய “சட்டத் தரவுகளையே” பின்பற்றின. இதில் “யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம்” போல சிலவைகள் உள்வாங்கப்பட்டாலும் (வாரன் ஹேஸ்டிங் காலம் 1784), பின்னால் கைவிடப்பட்டது. ஆனால் ஆன்மீக இந்தியா வேறுதளத்தில் இயங்கியது. அதன் ஒரு சின்ன “மேனிஃபெஸ்டேஷன்” தான் மோகன்தாஸ் காந்தியின் “அஹிம்ஸை”!. இந்திய உளவு நிறுவனம் சட்டத்தின்படி செயல்படுவது. நீங்கள் பயிற்சி எடுத்த காலத்தில் சென்னை பெரியார் திடலிலும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி இடம், வலம், என்று இலங்கைத்தமிழருக்கு பயிற்சி கொடுத்தார். சேகரைப் போலவே அவரும் இந்திய உளவுத்துறை அல்ல!. ஐரோப்பிய சட்டத்தரவுகள் பெரும்பலும் ரோமானிய சட்ட மூலங்களை கொண்டவை.

    சட்டத்தின்படி, தனிமனிதனோ, குழுக்களோ ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது தனிமனிதனின் “வன்முறை” அவன் வாழும் நாட்டின் இராணுவத்திடம் கையளிக்கப்படுகிறது, தனிமனிதனின் வன்முறை தூண்டப்பட்டால் அதற்கெதிரான பாதுகாப்பை வழங்குதல் அவர்கள் கடமையாகிறது.
    நீங்கள் இந்தியா வந்து இறங்கியவுடன் உங்கள் வன்முறையை இந்தியாவிடம் கையளித்து விட்டீர்கள். இந்தியா உங்களை இராணுவ மயப்படுத்தும்போது சட்டபடி இந்தியர்களை பாதுகாக்கும் பொறுப்பே கையளிக்கப்படுகிறது. இலங்கைத்தமிழர்கள் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டவர்களே என்பது அர்த்தம். இதில் “ஈழ மக்களின் உரிமை எது?”. இது ஐரோப்பிய சட்டம் இந்திய தார்மீக கடமை அல்ல. தார்மீக கடமையை “ஈழ உரிமை என்று முன் வைக்கப்பட்டதா?.

    கடந்த முப்பதாண்டுகால சம்பவங்கள், நீங்கள் இந்தியாவிடம் உங்களின் வன்முறையை கையளிக்கவில்லை என்பதையும், அதைவிட இலங்கை இராணுவத்திடமே அதை கையளிக்க விருப்பமுடையவாராக இருந்துளீர்கள் என்பதும் இடையில், “ஈழ உரிமை” என்ற பெயரில் தேசவழமையை வலியுருத்தியுளீர்கள் (தமிழ்த் தலைமை சட்டத்தரணிகளாக இருந்ததால்).
    ஹேஸ்டிங் சட்ட வரைவுகளை இந்திய உயர்குல இந்துக்கள் – முஸ்லீம்களின் கையில் ஒப்படைத்தாலும், கிழக்கிந்திய வர்த்தக கம்பெனியாகையால், பார்சிகள் போன்ற பூகோள அடிப்படையிலான வர்த்தகர்களுக்கு செல்வாக்கு மிகுந்தது. ஆனால் தேசவழமை “சட்ட சலுகை” பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக பரப்பில் இடம்பெயருதலை அடிப்படையாக கொண்ட வடக்குமாகாண பூர்வீக அடையாளத்தை அங்கீகரித்து அதன் அடிப்படையிலான சலுகையாக இருந்தது. இதுவே “தமிழீழ உரிமையின்” மூலக்கூறாக இன்றுவரை உள்ளது?!. இது “சீதனத்தை” கூட சட்டமாக அங்கீகரிக்கிறது. ஆகையால் இந்த “உரிமை” இலங்கைத்தமிழ் பகுதி அனைத்தையும் உள்வாங்க சிரமப்பட்டது!.

    ஆதனச் சட்டம்:
    வட மாகாணத்திற்கு வெளியே உள்ள ஆதனம் தொடர்பில் ஏதாவது சிவில் வழக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்படும்போது அந்த வழக்கில் வருகின்ற எதிர்வாதி “தான்” தேச வழமைச் சட்டத்தால் ஆளப்படுகின்ற பிரசை என்று குறிப்பிடுகின்ற போது அந்த வழக்கின் வழக்காளி எந்த இனத்தவராக இருந்தாலும் அந்த வழக்கு தேசவழமை சட்டத்தின்படிதான் விளங்கப்படவேண்டும்.எதிராளிக்கு ஏற்புடைய சட்டமும் அதுவே!.
    தேச வழமை சட்டம் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களது ஆள்சார்ந்த பிரச்சனைகளுக்கும் இடம் சர்ந்த பிரச்சனைகளுக்கும் விடை சொல்லுகிறது.
    “THESAWALAMAI APPLES TO THE TAMILS WITH THE CEYLON DOMICILE AND JAFFNA INHABITANCY”.
    இந்த சட்டங்களின் அடிப்படையில் “தமிழர் என்ற இனக்குழுவின்” பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறதா?.
    “தமிழ்நாட்டுத் தமிழர்களின்” வன்முறை, சட்டத்தின் அடிப்படையிலில்லாமல் ஆன்மீகத்தின் அடிப்படையில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த தார்மீகக் கடைமையை அது பாதுகாக்கிறதா?. திராவிடநாட்டு கோரிக்கை இந்த அதிருப்தியை வெளிப்படுத்துகிறதா?. இந்திய அமைதிப்படை இந்தநெருடலில் பங்கு வகிக்கிறதா?, அல்லது அது செய்தது சரியா?. தற்போது நடைபெறுவதும், நடைப் பெற போவதும் யாருடைய உரிமையை பாதுகாக்கிறது?.
    தேசவழமைச் சட்டம் ஒரு உண்மையான ஈழத்தமிழரின் “உரிமை சட்டக் கோரிக்கையாக” உருபெற முடியுமா?!.
    ஞாயிற்றுகிழமை, நவம்பர் 28, 2010
    யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது:
    கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப்பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
    யாழ்ப்பாண மக்களினால் பின்பற்றப்படும் தேச வழமை சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
    வடக்கு கிழக்கில் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ் கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்…..

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    DEMOCRACY!!
    நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள். தேசவழமையையும் அதன் சமூகச்சட்ட திட்டங்களையும் இலங்கைச் சட்டவாக்கத்தில் உள்வாங்க வைத்தவர்கள், நீங்கள் ஏற்கனவே இங்கு எழுதியமாதிரி என்ன கேனைப்பசங்களா. இனிவரும் காலங்களிலும் இது இல்லாமல் போகாது, ஏனெனில் நாம் இந்து அல்லது சைவர்களை கூடுதலாகக்கொண்ட திராவிட சமூகங்களில் ஒன்றாயிற்றே. இந்தியா விரும்பினாலும்சரி அல்லது விரும்பாவிட்டாலும்சரி தனது பயணத்தில் கடைசிவரியில் எம்மையும் கட்டாயமாக கூட்டிச்செல்ல வேண்டியிருக்கிறதே! – இந்தியா இதை தனக்காக செய்ய உள்ளூர விரும்பாவிட்டாலும் தனது பாரம்பரியத்தையும், உலக அரங்கில் தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக செய்தே ஆகவேண்டியுள்ளது!

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஆனைகோட்டை சம்பவத்தை தரமுடியமா??//
    நிலா உங்களூடைய கட்டுரையின் வெற்றியே மேலே உள்ள பின்னோட்டம் தான், உங்களிடம் இருந்து இன்னும் பல தகவல்களை எதிர்பார்கிறார்கள். அதற்காக எட்டக்கால் வையாது கிட்டக்கால் வைத்து தெரியாததை தெரிந்து கொண்டு தகவல்களை எழுதவும். இது பல்லியின் பின்னோட்டம் அல்ல அனுபவ அறிவுரை.
    அத்துடன் சேகர் மாஸ்ரர் பற்றிய தகவல்களை அல்லது அவரது கடந்தகால செயல்பாடுகள் பற்றி இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்கள் கட்டுரைக்கும் அவரது எதிர்காலத்துக்கும் உகந்தது. நீங்கள் குறிப்பிட்ட அவரது தகவல்கள் சரியானவையே இன்னும் மேல் கொண்டு அவரது தகவல்கள் அல்லது அவரது ஈழ ஈடுபாடு தேவை எற்படும் போது பல்லியும் தருகிறேன். அத்தோடு கழகம் பற்றிய கடந்த காலத்தை எழுதாமல் கடந்த கால தமிழ் மக்களின் தடுமாற்றத்தை அல்லது ஏமாற்றத்தை எழுத முயற்சிக்கவும் இதுக்கான தகவல்களை தளமது தேசத்தில் தேடுவதோடு நில்லாமல் இன்னும் பல தளம் தேடி அல்லது உங்களது தொடர்புடைய அன்றைய தமிழ் உணர்வாளர்கள் மூலம் பெற்றுக்கொண்டு எழுத முயற்சிக்கவும்.

    தூற்றுவோர் இருப்பார்கள் போற்றுவோர் மறப்பார்கள் அதை எண்ணி காலத்தை வீணக்காது எடுத்த முயற்ச்சியை முடிந்த மட்டும் தேச தள உதவியுடனும் நண்பர்களின் அறிவுரையுடனும் தாங்கள் எழுதினால் பல நிலாக்களூம் சூரியன்களும் உதயமாகும்.
    அதேபோல் டெமொக்கிரசி எழுதும் ஏடகூட தகவல்களுக்கு தேசிய தலைவரின் தளபதிகள் போல் இல்லாமல் நம்ம தேசத்தின் தளபதி பொறுப்புடன் பதில் அளிப்பதால் தாங்கள் தொடர்ந்தும் தங்கள் கட்டுரையின் தவறுகள் நிறைவுகளையும் சரி பார்க்கவும். ஆனாலும் உங்கள் கட்டுரையில் பல்லிக்கு ஆக்கபூர்வமான விமர்சனம் அல்லது திருத்தம் உண்டு. ஆனால் தாங்களே அதை நிவர்த்தி செய்வதால் தற்காலிகமாக எனது விமர்சனத்தை பின் போட்டுள்ளேன்.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியமான இன்னொருபக்கம் பார்க்கப்படாது விடப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது. அது நிக்கரவெட்டிய வங்கி கொள்ளையும் அதன் பின்புல மர்மங்களும்.
    இன்றுவரை நிக்கரவெட்டியவங்கி கொள்ளை புளொட்டிற்கு நிதிபலம் கிடைப்பதற்காகவே நடத்தப்பட்டதாகவே நம்பப்பட்டது. ஆனால் அதில் பெரும் சதி புதைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்றுவரை கண்டு கொள்ளப்படவில்லை. வெற்றிகரமான அவ் நடவடிக்கையின் பின்அதில் பங்கெடுத்த சில புளொட் உறுப்பினர்கள். அதி நம்பிக்கைகுரியவர்களாகவும் யாராலும் கேள்வி கேட்கமுடியாதவர்களாகவும் கதாநாயக அந்தஸ்த்துடன் உமாவை சுற்றி உலா வந்துள்ளனர். குறித்த ஒரு பொறுப்பை பெற்று புளொட்டின் ஒன்றுகூடல்களில் மாத்திரமில்லாது சக விடுதலை அமைப்புகளினூடன சந்திப்புக்களிலும் சர்வசாதரணமாக பங்கு பற்றியுள்ளனர்.

    இன்னொரு உறுப்பினர் புளொட்டின் முக்கிய உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தாரும் வசித்த குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்ததுடன் அங்கு வந்து போபவர்களை கண்காணித்ததுடன் அவர்களிடன் கதையும் கொடுத்து அவர்களின் விபரங்களை அறிந்து வைத்துள்ளார். இத்தனைக்கும் இவர் புளொட்டில் எந்த முக்கிய பதவியும் வகிக்காத நிக்கரவெட்டிய கதாநாயகன்.
    நிக்கிரவெட்டிய நடவடிக்கை என்பது சிறிலங்கா புலனாய்வு உறுப்பினர்களை உமாவின் ஆசியுடன் புளொட்டின் தலைமைலக்குள் சந்தேகவராது நம்பிக்கையுடன் நடமாடவும் அவர்களுக்கு விசேட அந்தஸ்தத்தை பெற்று கொடுக்கவும் சிறிலங்கா புலனாய்வு துறையின் அநுசரணையுடன் நிகழ்தப்பட்ட நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

    சேகரென்ற இந்திய புலனாய்வு அதிகாரி புளொட்டின் மத்தியகுழு கூட்டம் பயிற்சிமுகாங்கள் தாக்குதல்திட்டம் வகுக்கும் இரகசிய ஒன்று கூடல்கள் என்று எங்கும் நீக்கமற உமாவின் பிரத்யேக அனுமதியுடன் சர்வசாதரணமாக பங்குபற்றியுள்ளார்.

    உமா என்பவர் ஈழவிடுதலைக்கு போராட வரவில்லை தமிழ் இளைஞர்களிடமிருந்த போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கவும் முடக்கி வைக்கவும் சிறிலங்கா புலனாய்வு அமைப்பால் அனுப்பட்ட புலனாய்வு அதிகாரி. அவர் புளொட் போராளிகளின் கைகளிற்கு ஆயுதம் சென்றடைவதை தடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். ஆயுத போராட்டத்தில் முனைப்பு காட்டியவர்களை அந்தபயிற்சி இந்தப்பயிற்சி என்று அலையவைத்து தண்ணீர் காட்டியுள்ளார். சிறிலங்கா இந்திய புலனாய்வாளர்களிற்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுத்து புளொட் அமைப்பையே புலனாய்வாளர்களின் மேச்சல் தரையாக்கியுள்ளார். அந்த ஆயுதம் வருது இந்த ஆயுதம் வருதென்று ஈழத்திலிருந்த இந்தியாவிலிருந்த புளொட் போராளிகளை போராட்டகளம் செல்லாதவாறு தந்திரமாய் முடக்கியுள்ளார்

    உமா உயிருக்கு கடைசி வரை அச்சுறுத்தலாகவிருந்தது சக போராட்ட அமைப்பான புலிகளே தவிர எதிரியான சிறிலங்கா அல்ல. இன்னும் சொல்லப்போனால் சிறிலங்காவில் தமிழருக்கெதிராக இயங்கிய சிங்களவர்கள் உமாவின் உற்ற நண்பர்கள். புளொட்டிக் சீரழிவென்பது உமா வென்ற சிறிலங்கா புலாய்வு அதிகாரியின் அதி வெற்றிகரமான நடவடிக்கை என்பதை புரிந்து உண்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நன்மை பயக்கும். இல்லையேல் சீரழிவு தொடரும்.

    Reply
  • மகுடி
    மகுடி

    நிலா, உங்களுடன் முரண்பட்டதாக நீங்கள் குறிப்பிடும் ராமராஜ் என்பவர்தானே ஈஎன்டீஎல்எப்பை உருவாக்கியவர்? லண்டனில் வானோலி நடத்துபவரா அல்லது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியமான வர்த்தகர் முஸ்தபா என்ற ராமராஜா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //ராமராஜ் என்பவர்தானே ஈஎன்டீஎலெப்பை உருவாக்கியவர்?//
    //லண்டனில் வானோலி நடத்துபவரா //
    // தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியமான வர்த்தகர் முஸ்தபா என்ற ராமராஜா?//
    இன்னும் சில முகங்கள் உண்டு அத்தனையும் வியாபாரமே வியாபாரமே; தேவையாயின் கந்தசஸ்டி கவசம் போல் சொல்லலாம்;

    Reply
  • மாயா
    மாயா

    //புளொட்டின் சீரழிவென்பது உமா வென்ற சிறிலங்கா புலாய்வு அதிகாரியின் அதி வெற்றிகரமான நடவடிக்கை என்பதை புரிந்து உண்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நன்மை பயக்கும். இல்லையேல் சீரழிவு தொடரும். – தோஸ்து//

    தோஸ்து; புளொட் சீரழிவுக்கு தாங்களும் காரணமாக இருந்துள்ளது தங்களது எழுத்துகளில் இருந்து தெரிகிறது. சிலர் தமக்கு யாராவது சொல்லும் தகவல்களை கண்ணை மூடிக் கொண்டு எழுதுவதால் உண்மை தெரிந்தவர் என அடுத்தவர்கள் எண்ணி விடலாகாது. இதை அனைத்து தமிழ் இயக்கங்களும் செய்தன என்பது வரலாறு.

    நல்ல காலம். இப்போது சிறீலங்கா புலனாய்வாளர்களாக பலரை அடையாளப்படுத்துகிறீர்கள்? அன்று இதைச் சொல்லியிருந்தால்; உள்ளே போட்டுத் தள்ளிய 200 – 300 அப்பாவிகளோடு இன்னும் அதிக அப்பாவிகள் உரத்தநாட்டிலோ அல்லது தேனியிலோ சவுக்கந் தோப்புக்கு உரமாக்கி இருப்பார்கள். இதை நீங்கள் புளொட்டில் செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. கண்ணை மூடிக் கொண்டு எழுதும் அல்லது நம்பும் பழக்கத்தை விட்டு உண்மைகளை உணரத் தலைப்படுங்கள்.

    //உண்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நன்மை பயக்கும். இல்லையேல் சீரழிவு தொடரும்.//

    உங்களது அடுத்த கட்ட நகர்வுதான் என்ன? உங்களைப் போன்றோரை நம்பி எப்படி இணைவது. நீங்கள் புளொட்டில் ஒரு முக்கிய பதவியில் இருந்தவராக எழுதியிருப்பதில் இருந்து புரிகிறது. ஆனால் அங்கே நடந்த உட் கொலைகள் அல்லது தவறுகளை நீங்கள் சுட்டிக் காட்டியிருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அப்படியான பதவிக்காக மெளனம் சாதித்திருப்பீர்கள் என்பது எனது அனுமானம்.

    நீங்கள் எழுதுவது போல உமா படு முட்டாளுமல்ல; அரச உளவாளியாக இருந்தவருமல்ல. காலம்; அப்படியான மாற்றத்தை கொண்டு வர வைத்தது. புளொட்டின் ஆரம்பம் தமிழீழம் என்ற தனிநாட்டு போராட்டமாகத் தொடங்கினாலும்; அது ஒட்டு மொத்த இலங்கை தழுவிய போராட்டம் எனும் நிலைக்கு மாற்றம் பெற்றது. அதற்காகவேதான் சிங்கள; ஆங்கில வானோலி சேவைகளை தமிழ்ஈழத்தின் குரல் ஒலிபரப்பியது. தமிழரது போராட்டத்தை அல்லது உரிமைகளை அங்கீகரித்த தலைவர்களை சந்தித்தது. குறிப்பாக விஜய குமாரணதுங்க – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க போன்றோரை குறிப்பிடலாம். இவர்கள் அனைத்து போராட்ட அமைப்பினரையும் சந்தித்தனர். இவர் யாழ் சென்று புலிகளது கிட்டு மற்றும் மாத்தையா போன்றவர்களையும் சந்தித்தார்.

    அனைத்து இயக்கங்களும் இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தியே உள்ளனர். அல்லது ஏதோ ஒரு வகையில் உறவுகளை வைத்தே இருந்தனர். அது தவிர்க்க முடியாதது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால்; அதை தீர்க்க எத்தனை இணைப்பாளர்கள் வந்தாலும் கணவனும்; மனைவியும் மனம் விட்டு பேசாமல் தீர்வுக்கு வர முடியாது. அது போல இலங்கையின் இனப் பிரச்சனை தீர்வுக்காக எந்த உலக நாடு வந்தாலும் ; இலங்கை அரசினதும்; தமிழ் தரப்பினரதும் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது.

    சிங்கள அரசுகளை மிக கடுமையாக எதிர்த்த புலிகளே; பிரேமதாச போன்ற தலைவர்களோடு மட்டுமல்ல இன்றைய மகிந்தாவோடும் நெருக்கமான தொடர்புகளை பேணி வந்துள்ளனர்.

    சிலர் மீண்டும் இந்தியா வந்து தமிழீழம் பெற்றுத் தரும் என்று நம்பவும்; அடுத்தவருக்கு நம்பிக்கை கொடுக்கவும் முனைகிறார்கள். இது மாபெரும் தவறான கற்பனை. இது புலிகள் அமெரிக்கா கப்பல் அனுப்பும் என்று காத்திருந்ததற்கு ஒப்பானதாகும்.

    அண்மையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியது: ஸ்ரீலங்காவின் அதன் வடக்கு மற்றும் கிழக்குப் பிரச்சினைகளுக்கு அதன் சொந்த நாட்டில் உருவாக்கப் படும் தீர்வே பரிகாரமாக வேண்டும்.

    இந்த அங்கத்தில் உள்ள நடிகர்களில் இந்தியா ஒரு நடிகனாக இல்லை என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா ஒரு தீர்வுக்கு வருவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். அதே நேரம் மற்றவர்கள் சொல்கிறார்கள் இந்தியா இதில் தலையிடாமல் ஸ்ரீலங்கா அதன் சொந்த முடிவை ஏற்படுத்த விடவேண்டும் என்று.

    13வது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கு இந்தியாவின் பிரதமர்தான் துணை புரியவேண்டும் என்பதில்லை. இந்தியா ஒரு நட்புறவுள்ள அயல்நாடு என்ற வகையில் அது தன் கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் எதற்காகவும் வற்புறுத்தல் செய்யாது. இந்தியத் தீர்வு இங்கே பயன்தரப் போவதில்லை. ஸ்ரீலங்காவின் பிரச்சனைகளுக்கான ஸ்ரீலங்காவின் சொந்தமான தீர்வு ஸ்ரீலங்காத் தன்மையுடன் இருக்க வேண்டும்.ஒரு தீர்வினை தெரிவதற்காக அங்குமிங்காக உதாரணங்களை தேர்வு செய்யலாம். ஸ்ரீலங்கா உண்மையிலேயே விரும்பினால் இந்தியாவின் உதவிகளையும் கருத்துக்களையும் தேடலாம். ஆனால் நான் முன்பு சொன்னது போல இறுதி முடிவு ஸ்ரீலங்காவிடமிருந்துதான் வரவேண்டும். மேலும் மிகவும் முக்கியமாக ஐக்கிய ஸ்ரீலங்காவிடமிருந்து அது வரவேண்டும்.”

    சிலர்; ஈழப் போராட்டத்தை தொடர இந்தியாவுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக எமக்கு நம்பிக்கை ஊட்ட முனைகிறார்கள். இது இனி சாத்தியமற்றது. அவர்கள் தகவல்களை பெறுகிறார்கள் என்பதே உண்மை. இந்தியா செய்த மாபெரும் தவறு ஈழப் போராளிகளுக்கு இலங்கையில் இடமளித்து பயிற்சியளித்தது என்பதை ராஜீவின் கொலையோடு உணர்ந்துவிட்டார்கள். இன்னொரு துன்பியலுக்கு சாமரம் வீச மாட்டார்கள்.

    இந்திய புலனாய்வு துறை ஆலோசகர் சந்திரசேகர் மிக அருமையாக லண்டனில் வைத்து சொன்னார் ” நாங்கள் தமிழீழம் பெற்றுத் தருவதாக உங்களுக்கு எங்கே சொன்னோம். எமது தேவைக்காக உங்களை பாவித்தோம்.” உண்மை.

    அதைத்தான் அன்றும்; இன்றும்; என்றும் அவர்கள் செய்வார்கள். சர்வதேசமும் அதையேதான் செய்கிறது. இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இப்படியான முறைகளை கையாள்கிறது. இது ஒருவகை பிளெக் மெயில்தான். எமக்கு தலைமைத்துவம் வேண்டுமென்று அல்லது நாம் வாழ அப்பாவி மக்களை பகடைக் காய்களாக்கலாகாது. அதற்கான தண்டனை ஒருநாள் கிடைத்தே தீரும். அதற்காக வருந்த வேண்டி வரும். – மாயா

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    இந்திய புலனாய்வு துறை ஆலோசகர் சந்திரசேகர் மிக அருமையாக லண்டனில் வைத்து சொன்னார் ” நாங்கள் தமிழீழம் பெற்றுத் தருவதாக உங்களுக்கு எங்கே சொன்னோம். எமது தேவைக்காக உங்களை பாவித்தோம்.” உண்மை (மாயா)

    1985 ஆரம்பத்தில் இந்திய அரசோடு ஆயுதக் குழுக்கள் சந்தித்த போது , எல்லா இயக்க தலைமையும் கூடுதலாக ஒருத்தரும் வந்திருந்தார்கள்.

    புளொட் சார்பாக உமா அண்ணாவோடு நானும் போயிருந்தேன். முதல் நாள் ஜீ. பார்த்சாரதி வீட்டில் சந்தித்த போது, பார்த்சாரதி அவர்கள் “நாளை இந்திய அரசோடு பேசப் போகிறீர்கள். அப்பொழுது தமிழீழம் பெற ஆயுதமும், பயிற்சியும் உங்களுக்கு வழங்குவோம் என்று நாளைக்கு நாங்கள் சொல்லுவோம். ஆனால் நீங்கள் நினைவில் வைத்திருங்கள், உண்மையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையில் சில தேவைகள் இருக்கின்றன. அதற்காக உங்களை நாங்கள் பயன்படுத்துகின்றோம். உங்கள் மூலம் இலங்கை அரசை பலவீனப்படுத்தி பேச்சு வார்த்தை மூலம் ஒரு நல்ல ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை பெற்றுத் தருவோம். பேச்சு வார்த்தைகளில் அமிர்தலிங்கத்தை முன்னிலைப்படுத்தியே பேச்சு வார்த்தை இருக்கும். அந்த தீர்வுத் திட்டத்துக்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழீழத்தை பெற நேரடியாக இந்தியா அனுமதிக்காது. காரணம் பூகோள ரீதியில் தமிழ் நாடும் , இலங்கை தமிழ் பகுதிகளும் மிக நெருக்கமாக உள்ளன. அதோடு முன்பு தமிழ்நாட்டிலும் தனிநாட்டுக் கோரிக்கை இருந்தது. இலங்கையில் தனிநாடு கிடைத்தால், அதன் பாதிப்பு தமிழ்நாட்டிலும் உருவாகும். இந்தக் காரணத்தால் தமிழ் ஈழும் கிடைக்க இந்தியா ஒரு போதும் உதவி செய்யாது. ஆனால் இப்போ விடுதலை போராட்ட முறைகளையும், வெளிநாட்டு தொடர்புகளையும் பெற்றிருக்கிறீர்கள். நாங்கள் பெற்றுத் தரும் இந்த தீர்வை வைத்துக் கொண்டு நீங்கள் இலங்கையில் உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அங்கே உங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்து கொண்டு, எல்லா இயக்கங்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இனியும் தமிழருக்கு எதிராக இலங்கை அரசு ஈடுபட்டால், நீங்கள் இப்போ இந்தியாவில் எப்படி படைகளை திரட்டி வைத்துள்ளீர்களோ , அதே மாதிரி இலங்கையிலுள்ள உங்கள் பிரதேசங்களில் மக்களை திரட்டி தனி நாடு ஒன்றுக்காக போராடுங்கள். அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை வைத்து இந்தியா கூட தமிழீழத்தை அங்கீகரிக்கலாம். இங்கே உங்கள் போராளிகளை வைத்திருப்பது தேவையற்றது.” என்று தெளிவாக அன்றைய இந்திய கருத்தைக் கூறினார்.

    அன்று பிரபாகரன், திலகர், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, கேதீஸ்வரன், ராஜீவ் சங்கர், ரத்னசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அடுத்த நாள் இந்தியா சார்பாக, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அருண்நேருவை, டெல்லி வசந்விகார் என்ற இடத்திலுள்ள இரகசிய இடமொன்றில் சந்தித்தோம்.

    முதல்நாள் பார்த்சாரதி சொன்ன அறிவுரைகளையும் உண்மைகளையும் ஒரு காதில் வாங்கி மறு காதால் விட்டு விட்டு இந்தியாவை குறை சொல்லியே பிழைப்பு நடத்தி விட்டோம்.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    ” நாங்கள் தமிழீழம் பெற்றுத் தருவதாக உங்களுக்கு எங்கே சொன்னோம். எமது தேவைக்காக உங்களை பாவித்தோம்.” -இந்திய புலனாய்வு துறை ஆலோசகர் சந்திரசேகர்/ மாயா on December 15, 2010 11:45 am
    “இனியும் தமிழருக்கு எதிராக இலங்கை அரசு ஈடுபட்டால், நீங்கள் இப்போ இந்தியாவில் எப்படி படைகளை திரட்டி வைத்துள்ளீர்களோ , அதே மாதிரி இலங்கையிலுள்ள உங்கள் பிரதேசங்களில் மக்களை திரட்டி தனி நாடு ஒன்றுக்காக போராடுங்கள். அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை வைத்து இந்தியா கூட தமிழீழத்தை அங்கீகரிக்கலாம்.” ஜீ. பார்த்சாரதி/vetrichelvan on December 15, 2010 2:18 pm

    சொல்லவில்லை,ஆனால் சொன்னோம்.

    “..இந்தியா உங்களை இராணுவ மயப்படுத்தும்போது சட்டபடி இந்தியர்களை பாதுகாக்கும் பொறுப்பே கையளிக்கப்படுகிறது…” / DEMOCRACY on December 13, 2010 9:10 pm

    இந்தியாவின் பாதுகாப்பிற்கும்,அதன் மேலாண்மை நிலைக்கும் போராடி,அழிந்து போனவர்கள் ஈழத்தமிழர்கள்.அந்த அழிவில் பூதாகாரமாய் வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள். “கள்ளிப்பால் கலாச்சார”முறையால், தான் பெற்றவர்களைக் கொன்று, இந்தியா இலங்கையை, சீனாவிடம் தாரை வார்த்து விட்டது. ஜீ. பார்த்சாரதி சொன்ன உண்மையின்படி “இருக்கும் சூழ்நிலையை” அமெரிக்காவிடம் எதிர்பார்த்தபடி இந்தியா, தன் ஆண்மையை இழந்து நிற்கிறது.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //முதல்நாள் பார்த்சாரதி சொன்ன அறிவுரைகளையும் உண்மைகளையும் ஒரு காதில் வாங்கி மறு காதால் விட்டு விட்டு இந்தியாவை குறை சொல்லியே பிழைப்பு நடத்தி விட்டோம்.//
    முதல்நாள் பார்த்சாரதி உங்களுக்கு சொன்ன அறிவுரைகள் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றனவே.
    “தமிழீழத்தை பெற நேரடியாக இந்தியா அனுமதிக்காது.” “தமிழ் ஈழும் கிடைக்க இந்தியா ஒரு போதும் உதவி செய்யாது” என்று உறுதிபட நறுக்கு தெறித்தால் போல் சொன்னவர்.” இலங்கையிலுள்ள உங்கள் பிரதேசங்களில் மக்களை திரட்டி தனி நாடு ஒன்றுக்காக போராடுங்கள். அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை வைத்து இந்தியா கூட தமிழீழத்தை அங்கீகரிக்கலாம்.” என்று பம்மியுள்ளார்.
    //பேச்சு வார்த்தை மூலம் ஒரு நல்ல ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை பெற்றுத் தருவோம்//
    மாகணசபை அமைக்க ஒற்றையாட்சியுள்ள சிறலங்காதானே தீர்வாக இருந்தது. இந்த “ஐக்கிய இலங்கைக்குள் ” என்ற சொல்லாடல் எதற்கு.
    //அமிர்தலிங்கத்தை முன்னிலைப்படுத்தியே பேச்சு வார்த்தை இருக்கும்//
    ஆனால் ஈபிஆர்எல்எப் எல்லோ முன்னிலைப்படுத்தப்பட்டது. அவர் சும்மாவா இல்லை நீங்கள் சும்மாவா!
    //அங்கே உங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்து கொண்டு//
    மாகணசபை ஊடக அபிவிருத்தி!. அருமையான அறிவுரைதான். இந்திராவின் மறைவுடன் பார்த்சாரதியின் பதவிக்கு ரொமேஸ் பண்டாரி நியமிக்கப்பட்டதான தகவல்களும் உண்டு.
    // இறுதி முடிவு ஸ்ரீலங்காவிடமிருந்துதான் வரவேண்டும்//மாயா இப்படிபங்களதேஸ் மக்கள் கிழக்குதீமோர் மக்கள் கொசோவா மக்களும் நினைத்திருந்தால். இன்றும் அடிமையாகதான் இருந்திருப்பார்கள்.
    // கண்ணை மூடிக் கொண்டு எழுதும் அல்லது நம்பும் பழக்கத்தை விட்டு உண்மைகளை உணரத் தலைப்படுங்கள்.//
    “யார் வாய் எப்பொருள் கேட்பினும் மெய்பொருள் காண்பதறிவு ” என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். நானெழுதிய பின்னூட்டங்களிற்கு ஒருவரல்ல பல புளொட்போராளிகளின் வாக்குமூலம் சான்றாகவுள்ளது. இதே தேசம்நெற்றிலும் போதியதகவல்கள் உண்டு.
    //நீங்கள் புளொட்டில் ஒரு முக்கிய பதவியில் இருந்தவராக //
    ஐயா நான் புளொட்டுமல்ல புலியுமல்ல.வெகு சாதரண ஈழத்தமிழன்.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //நல்ல காலம். இப்போது சிறீலங்கா புலனாய்வாளர்களாக பலரை அடையாளப்படுத்துகிறீர்கள்? அன்று இதைச் சொல்லியிருந்தால்; உள்ளே போட்டுத் தள்ளிய 200 – 300 அப்பாவிகளோடு இன்னும் அதிக அப்பாவிகள் உரத்தநாட்டிலோ அல்லது தேனியிலோ சவுக்கந் தோப்புக்கு உரமாக்கி இருப்பார்கள்.// – மாயா on December 15, 2010 11:45 am

    திரு. மாயா அவர்களே!

    நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் திரும்பத் திரும்ப இப்படியான பொய்க்குற்றச்சாட்டுக்களை புளொட்டின் மீது முன்வைக்கிறீர்கள். அவன் சொன்னான், இவன் சொன்னான் அல்லது உமாமகேஸ்வரன் சொன்னார் என்ற இறந்தவர்களை சாட்சியமாக்காமல்,சரியான ஆதாரங்களுடன் புளட்டின் உட்படுகொலையில் மண்ணாகியவர்களின் விபரங்களை இந்த பொதுத்தளத்தில் பதிவிடுமாறு உங்களுக்கு இத்தால் சவால் விடுகின்றேன்.

    Reply
  • மாயா
    மாயா

    சவால்தானே? விட்டவர்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டார்கள். தெரிந்ததை சொல்கிறேன். இயக்கங்களில் இருந்தவர்களது உண்மை பெயர்கள் எவருக்கும் தெரியாது. எந்த இடம் என்றும் யாருக்கும் தெரியாது. சீனி வாங்க கடைக்கு வந்தவனும்; படகு ஒன்று வருகிதாம் எனக் கடல் கரைக்கு வந்தவனும் பின் தளத்துக்கு 2 கிழமை 3 மாதம் என்று இந்தியா போனால் புதுப் படம் பார்க்கலாம் என்றும் நடிக நடிகைகளை பார்க்கலாம் என்றும் ஏற்றினார்கள். கடைசியில் அவன் பெயர் அவனுக்கே மறந்து போனது. இயக்கத்தில் சேர்ந்தவர்களிடம் ; இயக்கத்தில் இருந்தவனிடம் கேளுங்கள் அவன் உண்மை என்று சொல்லுவான்.

    வெளிநாடு வந்தவனே பொய் பேரும் ; கள்ள ஐடீயும் கொடுத்து பதிகிறான். இயக்கத்துக்கு போனவன் ஏதோ அரசாங்க உத்தியோகத்துக்கு சர்ட்டிபிக்கேட்டோடு போனவர்கள் போல பெயர் கேட்கிறீர்கள்? எனக்கே இயக்கத்தில் 4 பெயர். இடத்துக்கு இடம் வேறு பெயர். சவால் விடுபவர்களிடம் கேட்கிறேன். முடிந்தால் ஒரு முகாமிலிருந்த 25 பேரது உண்மை பெயரையும் ; அவர்களது ஊரையும் ; அவர்கள் எப்போது இயக்கத்துக்கு வந்தார்கள் ; எப்போது வெளியேறினார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். சும்மா வெளியில் இருந்து பட்டம் விடுவது லேசு. உள்ள இருந்து பட்டை கழண்டால்தான் விசயம் விளங்கும்.

    சாதாரணமானவர்களுக்கு மட்டுமல்ல உள்ள இருந்தவர்களுக்கே அதிகம் தெரியாது. அடுத்தவர்களிடம் பொறுக்கி எழுதுவதை விட்டு ; தனக்கு தெரிந்ததை அல்லது நடந்ததை எழுதுங்கள். அது சரித்திரமாகும். அல்லது பம்மாத்துகளாகத்தான் எண்ண வேண்டி வரும். இயக்கங்களுக்கு வருபவன் சாகத்தான் வருகிறான். பதவிக்காக எவனும் வருவதில்லை. சிலரை தேவைகளுக்காக அழைத்து வருகிறார்கள். ஆனால் திரும்பிச் செல்ல விடுவதில்லை. விட்டதில்லை. ஒன்று சாவு. அல்லது விட்டு ஓடத்தான் வேண்டும்.

    அப்படித்தான் இதுவரை நடந்துள்ளது. அடுத்தவன் சொல்வதை எழுதாமல் ; தனக்கு நடந்ததை அல்லது தான் பார்த்ததை அல்லது தானே அறிந்ததை எழுதுங்கள். அது போதும். அதுவே உங்கள் எழுத்துகளுக்கு என்றும் பலம் சேர்க்கும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //புளட்டின் உட்படுகொலையில் மண்ணாகியவர்களின் விபரங்களை இந்த பொதுத்தளத்தில் பதிவிடுமாறு உங்களுக்கு இத்தால் சவால் விடுகின்றேன்.// அடிக்கடி நம்ம தளபதி சபாஸ் சொல்ல வைக்கிறியள்;

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    திரு. மாயா அவர்களே! இதுதான் எனது கேள்விக்கு உங்களது பதிலாயிருப்பின், இனிவர இருக்கும் சனநாயக மக்களின் தர்பாரில், நீங்களும் துரோகம் செய்தவராகிவிடுவீர்கள் – உங்கள் காலத்து இந்திய சினிமா படங்கள் இதுவரை எங்கள் சமுதாயத்தில் எந்த யதார்த்ததையும் மக்கள் மத்தியில் பிரதிபலிக்கவில்லை. புளொட்டுக்கு நீங்க கதாநாயகனாக இருக்கவிரும்பினால் நான் அதை மனப்பூர்வமாகத் ஏற்றுக்கொள்கிறேன். இனிவரப்போகும் புளட்டில் உங்கள் பாத்திரம், படமா, சினிமாவா அல்லது கற்பனைகள் கலந்த உங்களின் பின்னூட்டங்களா? – சரியான விடையை மனங்கோனாமல் இங்கு பதிவிடுங்கள்!

    Reply
  • மாயா
    மாயா

    திரு. தளபதி அவர்களே; நான் சாதாரணமான ஒரு பங்காளியாக இருந்தேன். எனது பின்னோட்டங்கள் இனி வராது. யார் மனதையும் நோகடிப்பதால் எனக்கு என்ன லாபம்.
    நன்றி. வணக்கம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://இனிவரப்போகும் புளட்டில் உங்கள் பாத்திரம், //
    புரியவில்லை தளபதி, இனிவரும் கடந்தகால புளொட்டின் கதைகளுக்கா? அல்லது இனி செயல்பட போகும் புளொட்டுக்கா??

    Reply
  • பல்லி
    பல்லி

    //. யார் மனதையும் நோகடிப்பதால் எனக்கு என்ன லாபம்.//
    மாயா நீங்கள் ஒதுங்குவதால் தளபதிக்கு என்ன லாபம்; புளொட் ஒதுங்கியதாலேயே புலி வளர்ந்தது என்பதை உங்களுக்கு பல்லி சொல்ல வேண்டுமா?? ஆகவே வாதம் வரவேற்க்கபட வேண்டியதுதான், அறிந்ததை சொல்லும் பல்லியே வெக்கபடாமல் தேசத்தை ஒட்டும்போது அனுபவத்தை சொல்லும் மாயா மறைவது நல்லதல்ல; தொடருங்கள்;

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    தோஸ்து உங்கள் சந்தேகம் நல்லதுதான் .இந்திரா காலம் முதல் 1985 நடுபகுதிவரை இலங்கை தொடர்பான விடயங்களை கையாண்டது இந்திய வெளி.விவகார கொள்கை .,திட்டமிடல் அமைப்பே .அதன் தலைவர் G.பார்தசாரதியாவார் .இவர்களின் ஆலோசனைகளின் படி ரா செயல்பட்டது .அந்த கால கட்டத்தில் மாகணசபை திட்டம் இல்லை G.P சொன்ன சூழ்நிலையை வைத்து இந்தியா கூட தமிழீழத்தை அங்கீகரிக்கலாம். என்ற கருத்து ஒரு 10. 15 வருடங்களின் பின். நடக்க குஉடிய நிகல்வினையே சொன்னார் .மேலும் இயக்கங்கள் அமிர்தலிங்கத்தை முன்னிலை படுத்துவதை தடுக்க பலவித முயச்சிகள் செய்தது தனிக்கதை 1985 இல் நடுப்பகுதில் இந்திய வெளி.விவகார அமைச்சு செயலாளராக ரோமேஷ்பண்டாரி வந்தார் . ராஜீவ் காந்தி யேன் நண்பர் .இவர் வந்தபின்பே இலங்கை பரச்சனை இந்திய வெளி.விவகார அமைச்சு கையாள தொடங்கியது திம்பு .talks ….ரோமேஷ்பண்டாரி இன் முயற்சி .ராஜீவ் காந்தி பலவித குழப்பமான வழிகளில் இலங்கை பிரச்சனையை கையாள தொடங்கியதால்தான் சிக்கலாகி பின்பு ரொமேஷ் பண்டாரி போய், A.P வெங்கடேஸ்வரன் வந்தார் .பின்பு இலங்கையின் இந்திய தூதுவர் டிக்ஸ்டித் வந்தார் ,அவரின் வேலைதான் 87 இந்திய_இலங்கை ஒப்பந்தம் .இவர்கள்தான் அமிர்தலிங்கத்தை தவித்து தங்கள் சொல் கேப்பவர்களை முன்னிலை படுப்தினர்கள் ஓவரு அதிகாரியும் தானே ராஜீவ் விடம் நல்லபெயர் எடுக்கமுயச்சி செய்து குழப்பி விட்டார்கள் . பிளாட்டில் நடந்த கொலைகளை வெளிநாடுகளில் வசிக்கும் சம்பந்த பட்டவர்கள் உண்மையான கணக்குகளை சொல்ல முன்வரவேண்டும் .தஞ்சாவூர் இல் துணி விக்கவந்த ஹின்டிக்காரனை பிடித்துபோய் சிங்களம் பேசுவதாக சொல்லி கொலை செய்தகதையும் உண்டு .ஒரு நல்ல விடுதலை இயக்கம் சிதறுண்ட வரலாறு பிளாட் தான் ..நாம் உண்மைகளை சொன்னால் இனி வரும்காலத்தில் விடுதலையை யாரும் முன் எடுத்தால் பிளாட் சரித்திரம் ஒரு நல்ல பாடமாகும் ,தளபதி .பல்லி,மாயா ,தோஸ்து தங்கள் முக மூடிகளை கழட்டி விட்டு விட்டு வந்தால் நல்ல ஆரோக்கியமான உண்மைகள் வெளிவரும் என நினைக்கிறேன்

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //தோஸ்து தங்கள் முக மூடிகளை கழட்டி விட்டு விட்டு வந்தால் ….//
    என்னை எனது ஊரவர்களும் பாடசாலை காலங்களில் அறிமுகமானவர்களும் இப்போ நான் வாழும் கிராமத்திலுள்ள தமிழர்களும் மாத்திரம் அறியும் வெகு வெகு சாதரணமானவன். இந்நிலையில் தோஸ்து எனும் முக மூடியை கழட்டினாலும் என்னை தேசம்நெற்றில் யாரும் அறியும் வாய்ப்பில்லை.
    அறிவுரை சொன்ன பார்த்சாரதியே 1987ல் இந்தியா நேரடியாக இலங்கை விவகாரத்தில் தலையிடும் போது அதிகாரத்தில் இல்லை என்கிறீர்கள். அவர் சொன்னவற்றில் பலது நடக்கவில்லை.” அறிவுரைகளையும் உண்மைகளையும் ஒரு காதில் வாங்கி மறு காதால் விட்டு” என்று நாங்கள் வருந்துவதில் அர்த்தமில்லை. நீங்களே சொல்கிறீர்கள்”ஓவரு அதிகாரியும் தானே ராஜீவ் விடம் நல்லபெயர் எடுக்கமுயச்சி செய்து குழப்பி விட்டார்கள்” என்று. சுயவிமர்சனம் என்ற கோதாவில். இந்திய அதிகாரிகள் செய்த குழறுபடிகள் சகுனிதனங்களிற்கு ஈழத்தமிழனை பொறுப்பாக்க முடியாது.
    //ஒரு நல்ல விடுதலை இயக்கம் சிதறுண்ட வரலாறு பிளாட் தான்//
    உமாவை தவிர்த்துவிட்டு சொல்கிறேன். எனது அறிவிற்கு எட்டியவகையில் ஈழத்தமிழரின் வாழ்வில் மிக நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல் அமைப்பாக இருந்தது புளொட்தான். அதன் சிதைவுதான் ஈழத்தமிழரின் பேரிழப்பு. இதுகளை யோசித்தால் சோகமும் விரக்தியும்தான் நெஞ்சை ஆக்கிரமிக்குது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதுகளை யோசித்தால் சோகமும் விரக்தியும்தான் // தோஸ்து
    இதானால் பல்லி எப்போதும் சுவாஸ் நெப்போலியனுடனே ஆறுதலாய் பேசிகொண்டு இருப்பேன், இடைகிடை தேசத்திலும் எம் சோகத்தை கொட்டுவதுண்டு,

    Reply
  • ம வரன்
    ம வரன்

    நண்பர்களே, பல பல விதமான கருத்துகளை முன்வைத்திர்கள் ஆனால் ஒருசிலரை பற்றியும் தெரிந்தால் எழுதுங்கள் கண்குலசிங்கம் மற்றும் அரபாத் தேவகுமாரன் நன்றி

    Reply
  • Kulan
    Kulan

    கட்டுரை எதிர்காலம் குறித்து நிற்பதால் எனக்குத் தெரிந்தவற்றையும் அன்றைய போராட்டத்தில் மிக நெருங்கிய தொடர்புடையவன் என்பதாலும் எனக்குத் தெரிந்த கட்டுரையாளர் தவறவிட்ட சிலவிடயங்களை தர விரும்புகிறேன்.
    /இவ்வாறான இயக்கங்களில் ஒன்றான கழகம், ஆரம்பத்தில் அடித்தள மக்கள் மத்தியில் நின்று கட்டமைக்கப்பட்டது. /
    இது எவ்வளவு தூரம் சரியானது என்பது ஆய்வுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உட்படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். புலி உடைவால் எற்பட்டு பாதுகாப்பற்ற நிலையை சமாளிப்பதற்காக ஆரம்பகாலத்தில் ஆழமறியாமல் காலைவிட்ட கணக்கு இனங்கண்டு கொள்ளாது கழகத்தில் பலர் சேர்க்கப்பட்டனர் இதுவே பிற்காலத்தில் சிந்தனைத் தெளிவற்ற உறுப்பினாகளிடையே குழப்பங்களை உருவாக்கி கழகம் சிதைத்தது. கழகம் மத்திய தரப்பு வர்க்கத்தை அதிகமாக உள்வாங்கியிருந்தது. உமாமகேஸ்வரனின் பாதுகாப்பை அன்று முக்கியமாகக் கருதினார்களே தவிர போராட்டத்தின் போக்கு: பரிமாணம்: நிதானம் என்பன இழகுநிலையில்தான் இருந்தது. இனங்கண்டு போராளிகளை இணைத்துக் கொண்டது புலிகள் அதனால் கட்டுப்பாடு அதிகமாகவும் தளர்நிலை இன்றியியும் இருந்தது. இதை நான் உமாவுக்கும் சுந்தரத்துக்கும் கூறியிருந்தேன். அவர்கள் அதை ஒத்தும் கொண்டார்கள். வேறுவளியில்லை என்ற பதில்தான் கிடைத்தது. மக்கள போராட்டம் என்று கருதுபவர்கள் மக்களிடையேயான சரியான தொடர்பு நிலையைப் பேணுதலும் கெறில்லாக்களை மக்கள் பிரிவுடன் தொடர்பின்றி வைத்திருத்தலும் அவசியமானது காரணம் மக்கள் என்றும் உளவாளிகளும் இணைந்திருக்கும் பகுதி. இதைக்கழகம் சரியாகச் செய்யவில்லை. இதனால்தான் கழகத்தின் இராணுவப்பகுதி ஸ்திரமற்று இருந்தது. படைத்துறைப் பொறுப்பாளரான கண்ணன் என்று அழைப்கப்படும் சோதீஸ்வரன் எந்தவகையில் படைத்துறைக்குத் தகுதியுடையவர் என்று யாராவது கூறுவார்களா? விளையாட்டு என்றாலே வெளியில் நின்று வேடிக்கை பார்த்து வளர்ந்த ஒருவர் உமாவின் விசுவாசி என்பதால் படைத்துறை நடத்தத் தகுதியுடையவராக முடியுமா? குறைந்த பட்சத் தகுதியாவது தேவையில்லையா? கழகம் அவசரத்தில் கட்டப்பட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

    /தமிழரசுக் கட்சி இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக செயற்பட்ட இளைஞர்கள்/
    இளைஞர்போரவையின் பிராந்திய அமைப்பாளராக இருந்தவன் என்பதால் இதை எழுதுகிறேன். தமிழரசுக்கட்சியின் இளைஞர் அமைப்பு இருக்கவில்லை. அது வெறும் விடுதலைபற்றிப் பேசும்: காங்கிரசைத் தள்ளிவிழுத்த செல்வநாயகம்: அமிர்தலிங்கம் போன்றவர்களால் கட்டி எழுப்பப்பட்ட ஒன்று. அது தனியப் பாராளுமன்றத்தையே குறிக்கோளாகக் கொண்டது. இளைஞர் பேரவையே கருத்து ரீதியாகவும் அரசியற்கட்சியின் பின்னணியிலும் வளர்ந்த ஒன்று. இன்று இருந்தது த.வி.கூட்டணியே. சமகாலத்தில் சிவகுமாரன் சத்தியசீலன் போன்றோரின் மாணவர் பேரவையிலும் என்போன்ற சிலர் இணைந்திருந்தார்கள். அரசியல் சித்தாந்தங்களை ஆய்வுசெய்வதும் அதுபற்றிய உரையாடல்களைக் கேட்டதும் அரசியற்கட்சியின் பின்னணி கொண்டதுமாக இருந்தது இளைஞர்பேரவை மட்டுமே. தமிழரசுக்கட்சியும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒன்றல்ல. ஆனால் அவர்களின் பலர் த.வி.கூ யில் இணைந்திருந்தார்கள். உ.ம் அமிர்தலிங்கம்: செல்வா;

    கட்டுரையாளருக்கு ஞாபகத்திற்காக: இளைஞர்களின் உத்வேகத்தையும்: தெரிவுசெய்த போராட்டமுறைகளையும்: மக்களையும் தம்நலனுக்காகப் பயன்படுத்தியவர்கள் அன்றை அரசில்வாதிகள். குமாரசூரியர் துரையப்பா போன்றோரை துரோகிகளாகக் காட்டி அரசியல் பிழைப்பு நடத்தினர். இப்படி முதலில் தமிழ்மக்களுக்கு சிங்களவனை எதிரியாக்கி; சிங்களக்கட்சிகளை எதிரியாக்கி பின் சிங்களக்கட்சிகளில் போட்டியிடும் தமிழர்களை எதிரியாக்கி பின் தமிழினத்தையே தமிழருக்கு எதிரியாக்கி சென்றிருக்கிறார்கள் தமிழரசுக் கட்சியும் காங்கிரசும். இன்றைய தமிழனின் நிலைக்கு காரணமாக இருந்தது சிங்களப் பேரினவாதத்தின் துவேசநடவடிக்கைகள் மட்டுமல்ல எமது அரசியில்வாதிகளின் தூரநோக்கற்ற செயற்பாடுகளை. இளைஞர்களை தமது மெய்பாதுகாவல்களாக்க முயற்சித்த போதே துப்பாக்கி அதிகாரத்தைப் பெறத்தொடங்கியது.

    /1977 இனக்கலவரத்திற்கு சில மாதங்களின் பின் உமாமகேஸ்வரன், ஊர்மிளா, மண்டுர் மகேந்திரன் போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்புகள் ஏற்பட்டது/
    தனிநபர் தீவிரவாதிகளாகவும்: சிறு சிறு அமைப்புக்களாகவும் உ.ம் காந்தீயம். இளைஞர் பேரவை விடுதலைப்பிரிவு இவை இக்காலகட்டத்தியோ தீவீரவாத அமைப்பைக் கட்ட முயன்றனர். இதன் பிரகாரம்தான் புலிகள் உருவாக்கப்பட்டனர். இனறு பலர் புலிகளே முதலில் தோன்றிய இளைஞர் அமைப்பு எனவும் பிரபாகரன்தான் தோற்றுவித்தார் என்பதும் பிழையானதே. ஆங்காங்கே இளைஞர்கள் தமது சக்திகளுக்கேற்ப இயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். இவை பின்று ஒன்றிணைந்த பிரிந்து பலவாயின.

    கட்டுரையாளர் நிலா! ஒருபொதுப்படையாக எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். காரணம் நீங்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறீர்கள். மற்றவர்களை மறந்து விடுகிறீர்கள்.

    சந்ததி: உமாமகேஸ்வரன்; இரகுபதி; ராஜன்; சுந்தரம்; கண்ணன்; காக்கா; இன்னும் இன்னும் பழைய போரளிகளுடன் மக்கள் போராட்டத்தை தொடங்கியவர்கள் நாங்கள். எத்தனையோ வருடங்களின் பின்தான் புலி என்ற அமைப்பே உருவானது என்பதை புலிகள் உணர்ந்து கொள்வது அவசியம்.

    1978 மட்டக்களப்புச் சூறாவளிக்கு யாழ்பாணத்தின் நின்று சகல நிர்மாணப்பணிகளைச் செய்தவர்களின் நானும் ஒருவன். எம்முடன் தோளோடு தோள் நின்று உழைத்த வடலிடைப்பைச் சேர்ந்த கனககுலசிங்கம் (பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் முன் தேனீர்கடை நடத்தியவர்) முன்னின்று உழைத்தவர். பிற்காலத்தில் உமாககேஸ்வரனைப் பாதுகாத்து வைத்திருந்தார் என்று அழைத்துச் சென்ற இராணுவம் இன்னும் அவரைத் திருப்பி அனுப்பவில்லை. இதேபோன்றே அரபாத் என்று அழைக்கப்படும் வடலியடைப்பைச் சேர்ந்த தேவன் காந்தீயத்தில் தொடர்ந்து பணியாற்றினார் இவரும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு யாழ்பாணத்தில் சிறையை உடைத்து ஓடிவந்தும் மீண்டும் விடிபட்டவர் இன்னம் திரும்பி வரவேயில்லை. இவர்களின் ஆணித்தரமான செயற்பாடுகளே கழகத்தின் விரிவு என்பதையும் குறிப்பிடவும்: புலிகளோ கழகமோ ஆரமப்பிப்பதற்கு முன்னரே அன்று இளைஞர்களாக இருந்த நாம் மக்கள் தொண்டிலும் ஈடுபட்டிருந்தோம். நாம் யாழ்பாணத்தில் சேர்த்த பொருட்கள் தான் சந்ததி போன்றோர்ரால் மட்டநகருக்குக் கொண்ட சொல்லப்பட்டது. அடிபடுவது மேளம் பெயர் வித்துவானுக்காக இருக்கக் கூடாது.

    /இந்த மட்டக்களப்பு சூறாவளி நிவாரணத்தின் போது புலிகளோ, புதிய தமிழ் புலிகளோ பங்குபெறவில்லை. 1976ல் பிரபாகரனால் புலி உறுப்பினர் மட்டக்களப்பு /புலிகள் என்று மக்கள் பணியில் ஈடுபட்டார்கள்?
    /திருப்தியடைந்த பெரும்பான்மையோர் காசி – வண்ணை – சேனாதி போன்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் வட்டத்தை விட்டு பரவலாக வெளியே செயற்படத் தொடங்கினர். இதன் எதிரொலிப்பு / மாவை சிறை சென்றபோது உமா பெயரளவில் பொறுப்பேற்றிருந்தார். யாப்பு விடுதலைக்குரியதாக மாற்றப்பட்டது. மாவை திரும்பி வந்ததும் அதை மீண்டும் பாராளுமன்றப் பாதைக்குத் திருப்ப முயன்றபோதே இளைஞர்பேரவை இரண்டானது. தீவீரவாதப்போக்கை விரும்கிய நாம் வெளியேறினோம். எமது பாதைகளை நாமே வகுத்துக் கொண்டோம். மக்கள் மயப்பட்ட பாதை ஆயுதங்களுடன் இணையத்தொடங்கியது.

    /பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல செயற்பாடுகளால் இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் பார்வை தமிழ் இளைஞர்கள் மீது திரும்பியது. பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட 4 பொலிஸாரின் உடல்கள் கிணற்றில் கிடந்து அழுகி சில நாட்களுக்குப் பின் ராணுவம் கைப்பற்றியது. பிரபாகரனும், அன்ரனியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் அங்கு சென்றனர். அந்த உடல்களை மூன்றாவது நாள் கிணற்றில் எட்டிப் பார்த்ததில் இந்த உடல்களின் அகோரநிலையால் பிரபாகரன் மிகக் கிலேசமடைந்ததாகவும் இதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்ததில் மூன்று நாட்கள் பரந்தனில் 5ம் வாய்க்காலிலுள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அந்த வீட்டினர் சொன்ன தகவலும் ஒன்று உண்டு/ இனியோருவில் ஐயர் வேறு ஒன்றையல்லவா சரித்திரமாக்கியிருக்கிறார்.
    பஸ்தியாம்பிள்ளை கொலையில் கழகஆரம்ப உறுப்பினர்களின் பங்களிப்பு உண்டு. தனிய செல்லக்கிளி சுட்டார் என்று புலுடா விடுகிறார்கள். சிறு குறிப்பை மட்டும் தருகிறேன் பப்பாப் பழத்தை இரண்டாக வெட்டி அதனுள் வைத்தே ரவைகள் கொண்ட செல்லப்பட்டது. இதில் வீபூதிப் பூச்சும் ஒருவர்.

    இந்த ஊர்மிளாவின் மரணமும் உமாவின் தொடர்வும் புலிஉடைவுக்குக் காரணமாக இருந்தது என்பதை நிலா ஏன் எழுதத் தயங்குகிறீர்கள்? உமா பிரபா இணைந்த செயற்பட்ட விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. உமா பிரபாகரனாலேயே புலிகளின் தலைவராக்கப்பட்ட விடயம் நீங்கள் அறியாத ஒன்றல்ல. அதையும் எழுதுங்கள். இது சரித்திரத்தில் முக்கிய பகுதி.

    நிலா நீங்கள் விரைவாகப் போகிறீர்கள். கழகம் தோற்றம் பெற்றது தம்பிக்கோ புலிகளின் மறுபக்கத்துக்கோ தெரியாது. புலிகளின் கட்டுப்பாட்டின்படி இயகத்தை விட்டுப்பிரிந்தால் குறிப்பிட்ட காலம் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது அவசியம். இதை மீறி உமாநடந்ததை வைத்தே உமாவுக்கு மரணதண்டனை விதித்தார்கள். எந்த இயக்கமானாலும் சரி தனிப்பட்ட மனிதரிலும் அதுவும் தமிழரையே முதன்முதலில் பதம்பாத்திருக்கிறார்கள். கழகம் உடைந்த முதல் செய்த தாக்குதல் சுழிபுரம் போஸ்கந்தோர்.

    /இதனையடுத்து இந்த சுந்தரத்தின் கொலைக்கு இறைகுமாரனே (இவரின் பொறுப்பில் தான் புலிகளின் உணர்வு பத்திரிகை இருந்தது) காரணம் என்று சந்ததியாரால் முடிவெடுக்கப்பட்டு இறைகுமாரன் உமைகுமாரன் ஆகிய இருவரும் பின்னால் கழகத்தில் இணைந்த வடலியடைப்பு கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். (இவர் 1984ல் கழக படைத்துறைச்செயலராக நியமிக்கப்பட்டார்/
    நிலா மிகமுக்கியமான தவறான தகவலை எழுதியுள்ளீர்கள். கண்ணனும் இறையும் எனது நெருங்கிய இயக்க நண்பர்கள். கண்ணனையும் என்னையும் யாரும் பிரித்துப்பார்க்க முடியாது. இது தவறான தகவல். இறைக்கும் சுந்தரத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. இறையும் என்னுடன் இளைஞர்பேரவையில் இருந்தவரே வித்தியாசம் 7-8வயது மட்டுமே. இறைபற்றிய தகவல்களை காலம் வரும்போது தருகிறேன்.

    நிலா! மீண்டும் என்வாழ்வின் பின்புலத்தைத் திறந்து காட்டியமைக்கு நன்றிகள். தாங்கள் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்போல் தெரிகிறது. இருந்தாலும் இதில் என்னைத் தவறவிட்டுவிட்டீர்கள் காலம் வரும்போது நானே வந்து சகலதையும் சொல்லுவேன்.

    Reply
  • S Varathan
    S Varathan

    ம.வரன்!
    /நண்பர்களே, பல பல விதமான கருத்துகளை முன்வைத்திர்கள் ஆனால் ஒருசிலரை பற்றியும் தெரிந்தால் எழுதுங்கள் கண்குலசிங்கம் மற்றும் அரபாத் தேவகுமாரன் நன்றி/

    கனககுலசிங்கமா? கண்குலசிங்கமா? கனககுலசிங்கம் என்றால் இவர் வடலியடைப்பைச் சேர்ந்தவர். இளைஞர் பேரவையில் இருந்தவர். முக்கியமாக புளொட்டின் பழைய புள்ளிகளுடன் மிகத்தொடர்புடையவர். இவர் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் அதே வீதியில் வசித்து வந்தவர்கள். அப்பாடசாலைக்கு முன் மைதானத்துக்கருகில் தேநீர்கடை நடத்தி வந்தவர். இக்கடை பலபோராளிகளின் தொடர்பாடும் இடமாக இருந்தது. இவர் இவருடன் திலீபன் என்பவரும் இளைஞர் பேரவையில் இணைந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆயினர். கனககுலசிங்கத்துக்கும் திலீபனுக்கும் வயது வேறுபாடு மிக அதிகம். இருந்தபோதிலும் திலீபன் மகாஜனக்கல்லூரில் படித்த காரணத்தால் அவருக்கு பலபோராளிகளின் தொடர்புகள் கிடைக்கப்பெற்றன. இவர்கள் பிற்காலத்தில் கனககுலசிங்கத்தில் கடையைப் பாவித்தார்கள். திலீபனூடாக தொடர்பாக்கப்பட்டவர்கள் இறைகுமாரன், சந்ததி, வாசுதேவா, ராஜ்மோகன், சோதீஸ்வரன் கண்ணன் (தானாக இனங்கண்டு கொண்டவர்) இன்னும் இன்னும். அது அரசியல் சூடுபிடிக்காத காலம். இக்காலத்திலேயே இவர்கள் இனம் தீர்வு என்று வெளிக்கிட்டவர்கள். இவர்களுக்கு அமிர்தலிங்கம் போன்ற அரசியல் தலைவர்களின் தொடர்பும் இருந்தது. திலீபன் என்பவர் மகாஜனக்கல்லூரி உதைபந்தாட்ட வீரனாக இருந்த காரணத்தினால் அதிகமான தொடர்புகளை அப்பகுதியில் இருந்தும் பெற்றுவந்தார். இவர்கள் இருவருக்கும் அரசியல் உயர்மட்டத் தொடர்புகள் இருந்தன. திலீபன் தந்தையார் தொழிற்சங்கத் தலைவராகவோ அல்லது சிங்கள எதிர்ப்புச்சட்டத்துக் கெதிராகப் போராடியவர் என்பது அறியப்பட்டது.

    கனககுலசிங்கத்துடன் உள்ளூர் இளைஞர்கள் பலர் தொடர்பாக இருந்தார்கள். இவரை இருப்பன் என்றே அழைப்பார்கள். வட்டுக்கோட்டைத் தொகுதி இளைஞர்பேரவை அமைக்பாளர்களாகவும் வட்டுகோட்டை மாநாட்டு ஒழுங்குதாராகளாகவும் இருந்தவர்கள் திலீபன், கனககுலசிங்கம், சேயோன், சந்ததி, கலைநகர்வீதி ராஜலிங்கம் என்பவர்களாகும். சேயோன் சந்ததியின் ஊரவர் ஆனைக்கோட்டை பொலிஸ்நிலைய ஆயுதங்களை பதுக்கிய சம்பவம் தொடர்பாகப் பிடிபட்டவர் மீண்டும் திரும்பவில்லை. கனககுலசிங்கம் உமாமகேஸ்வரனை பாதுகாத்து வைத்திருந்தார் என்ற காரணத்துக்காகப் பிடிக்கப்பட்டவர் திரும்பி வரவே இல்லை. சந்ததிக்கு என்ன நடந்தது என்று எல்லோரும் அறிந்ததே. இதில் இராஜலிங்கம் இளைஞர்பேரவை உடைவுக்கு முன்னரே நீங்கி விட்டார். இதில் உயிருடன் இருந்தவரும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர் திலீபன். இவர் வடலியடைப்பை விட்டு அவரது குடும்பமே போய்விட்டது. இணுவில் எனும்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும். 1985 வரை உயிருடன் இருந்ததாகவும் அறியப்பட்டது. திலீபன் கனககுலசிங்கம் போன்றோருக்குப் பின்னரே சோதீஸ்வரன் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். இவர் விற்றோரியாக் கல்லூரியில் பயின்று வந்தவர்.

    அரபாத் தேவகுமாரன். திலீபன் கனகுலசிங்கம் போன்றோரின் ஏற்பாட்டின் பேரில் சந்ததியூடாகப் காந்தியத்தில் வேலைசெய்தார். அப்போ அவருக்கு இயக்கத் தொடர்புகள் கடைத்தன. புளொட்டுடன் தொடர்புடையவர் என்றும், காந்தியததில் இருந்தவர் என்பதாலும் பிடிபட்டார். இவர் பலவருட சிறைவாத்தில் ஒருநாள் இவரை கடலுக்குக் குழிக்கக் கொண்டுபோன வேளை பாதகாவலரை உச்சிவிட்டு சிறையில் இருந்து தப்பித்தார். நேரடியாக திலீபனிடம் இணுவிலுக்கு கால்நடையாகவே சென்றிருக்கிறார். ஆனால் திலீபன் இணுவிலில் இல்லை. தொடர்ந்து வடலியடைப்புக்கு வந்த சில உதவிகளைப் பெற்றுக் கொண்டு காந்தியம் பண்ணைக்கு வவுனியாவுக்குப் போகும் புகையிரதத்தில் இராணுவமும் உடன் ஒரு கொம்பாட்மென்டில் போனது. இதையறியாத தேவன் எனப்படும் தேவகுமாரன் (அரபாத்) அந்தக் கொம்பாட்மென்டினுள் ஒட்டுத்தாடிகளுடன் போகவும் அவரை இராணுவத்தில் ஒருவன் அடையாளம் காணவும் கணக்காக இருந்தது. அப்போது பிடிபட்ட தேவன் திரும்பி வரவே இல்லை.

    இந்தப்பேராளிகள் அந்தக்காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். தனிநபர் தீவிரவாதிகளாகவும், குறுகிய குழுக்களாகவும் இருந்தவர்கள் பின் இளைஞர்பேரவை உடைவின் பின் புலிகளாக அணையத்தொடங்கினர். புலியை ஆரப்பித்தவர் பிரபாகரன் என்பதும் புளொட்டடை ஆரம்பித்தவர் உமாமகேஸ்வரன் என்பதும் தவறான தகவல்களே. தமிழ்பகுதி எங்கும் அரசியல்வாதிகளின் வாக்கு வேட்டையால் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்திருந்தார்கள். சந்ததி சேயோன் இறைகுமாரன் உமை போன்ற படித்தவாலிபர்கள் மட்டுமல்ல திலீபன், கண்ணன், தேவகுமாரன், போன்ற பாடசாலை மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருந்தார்கள். ஆங்காங்கே ஒருவரை ஒருவர் அறியாமலேயே அமைப்புகள் குழுக்கள் போராட்டங்கள் தீவீரவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

    திலீபன் என்பவர் பிற்காலத்தில் மாத்தயா தம்பி அன்ரன் கேடி கேடிஸ் சீலன் சுதுமலை பற்குணம், சத்தியநாதன் போன்ற புலிகளுடனும் ஒப்பரே வாமன் ராஜன் காக்கா உமா உமை இறை சுந்தரம் குமணன் போன்ற அன்றைய மையப்போராளிகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும் அறியப்படுகிறது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //எம்முடன் தோளோடு தோள் நின்று உழைத்த வடலிடைப்பைச் சேர்ந்த கனககுலசிங்கம் (பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் முன் தேனீர்கடை நடத்தியவர்) முன்னின்று உழைத்தவர். // varathan
    இவர்கள்தான் முகம் தெரியாத முற்போக்குவாதிகள் மட்டுமல்ல சமூகநலன் விரும்பிகளும்:

    //இந்த ஊர்மிளாவின் மரணமும் //
    இது இயற்கையானதுதானே??

    //ஊர்மிளாவின் மரணமும் உமாவின் தொடர்வும் புலிஉடைவுக்குக் காரணமாக இருந்தது //
    இப்படி சொல்லலாமே இதை காரணம் ஆக்கினார்கள்;

    //உமா பிரபா இணைந்த செயற்பட்ட விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை//
    இருவரும் எங்கே ஒன்றாய் செயல்பட்டார்கள்; ஆளை ஆள் புகழ்ந்தார்கள்; பின்பு புடுங்குபட்டார்கள் ,அப்புறம் சுடுபட்டார்கள் இதுதானே இவர்கள் வரலாறு;

    //விளையாட்டு என்றாலே வெளியில் நின்று வேடிக்கை பார்த்து வளர்ந்த ஒருவர் //
    நல்ல மனுஸன் கழகபடைதுறையான பின்னும் அதே கொள்கைதான்; கழகத்தில் நடப்பதை வேடிக்கைதான் பார்த்தார்;

    //புலியை ஆரப்பித்தவர் பிரபாகரன் என்பதும் புளொட்டடை ஆரம்பித்தவர் உமாமகேஸ்வரன் என்பதும் தவறான தகவல்களே. //
    அப்போ யார்தான் ஆரம்பித்து வைத்த பெருமக்கள். அவர்களுக்கு முடிந்தால் முச்சந்தியில் ஒரு சிலை வைப்போம்:

    //உமா பிரபாகரனாலேயே புலிகளின் தலைவராக்கப்பட்ட விடயம் நீங்கள் அறியாத ஒன்றல்ல.//
    இதைதான் சொல்லுறது வேள்விக்கு விடுகிற ஆட்டுக்கு மாலை போடுவது என,

    //இந்தப்பேராளிகள் அந்தக்காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள்.//
    30 வருடத்துக்கு பின்னும் அது மாறவில்லை; அதன் அறுவடைதான் மே 17;
    தொடரும் பல்லி;;

    Reply
  • jeyarajah
    jeyarajah

    குலன் எழுதியதுபோல் புலி புதியபுலி இதுதான் ஆரம்பித்தது என்பதல்ல. அதற்கு முன்பும் உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் இருந்தவர்கள். அவர்களையும் மறக்கக் கூடாது. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வெளிக்கிட்டவனை சுட்டவனை தொட்டுக்காட்ட வேண்டும்.

    பக்குவப்பட்ட மாயாவிற்கே இவ்வளவு சுடுகோபமா. வந்து எழுதுங்கள்.

    Reply
  • Kulan
    Kulan

    ஜெயராஜ்- நன்றிகள். எனது ஆதங்க உண்மை உணர்வோடு அடிமட்டத்தில் நின்று வேலைசெய்தவர்களையும்; சுயலாபம் கருதாது உழைத்தவர்களையும் நாம் இழந்தபின்பும் சரித்திரத்தில் அவர்களை நாம் இழக்கக் கூடாது என்பது எனது ஆதங்கம். இளைஞர்களை உசுப்பேத்திய அரசில் படுபாவிகளுக்கு வளர்த்து கடாக்களே பதில் சொல்லிப்போயினர்;

    பல்லி! பகிடியாக எழுதியிருந்தார் ///புலியை ஆரப்பித்தவர் பிரபாகரன் என்பதும் புளொட்டடை ஆரம்பித்தவர் உமாமகேஸ்வரன் என்பதும் தவறான தகவல்களே. // பிரபாகரனுக்கு முன்னரே துப்பாக்கி தூக்கிய பலரை தாங்கள் அறியவில்லைப்போல் இருக்கிறது. அவர்கள் தனிநபர் தீவீரவாதிகளாய் இருந்தார்கள். இன்று சிலர் உயிருடன் இருக்கிறார்கள். இவர்களை எந்தப்பட்டியலில் போடப்போகிறீர்கள் என்று பல்லி சொன்னால் நாமும் ஒரு பட்டியல் தயாரிக்கலாமல்லவா?

    பல்லி- வட்டுக்கோட்டை எம்பி தியாகராசாவை சுடப்போய் அது குறிதவற தியாகராசா சோபாவுக்குப் பின்னால் ஒழிந்த தப்பிய விசயங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இச்சம்பவத்தில் பங்குபற்றிய இருவரும் வெளிநாட்டில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தீர்களா? பிரபாகரன் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் பேச்சில் எடுபட்டுப்போனவர்கள். எம்மைப்போல் தரப்படுத்தல் போன்ற எந்த தரங்கெட்டவிடயத்திலும் தலைபோகாதவர்கள். இவர்களுக்கு உணர்வு எங்கு இருந்து வந்தது. பிரபாகரனின் வாழ்வும் போராட்டமும் கதாநாயகத்துவமே (கீரோயிசும்) இராணுவத்தை தமிழ்பகுதிகளில் இருந்து கலைத்துவிட்டால் தமிழீழம் என்று முழுமையாக நம்பிய ஒரு முட்டாள்தான் பிரபாகரன். இவர் இறுதிவரையும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லையே. மாவிலாற்றில் நடந்த போரில் கூட எதையும் படிப்காமல்தானே முள்ளிவாய்கால் வரை போய் கவிண்டார்கள். புளொட்டோ புலிகளோ தான் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் என்று யாராவது நம்பினால் அது முட்டாள் தனமானது. அரசியல் ரீதியான போராட்டங்கள் பிரபாகரன் உமா பிறப்பதற்கு முன்பிலிருந்தே நடந்து வந்திருக்கிறது. அந்தப்போராட்டம் இன்னும் முடியவில்லை என்பது எனது குறிப்பு. அரசாங்க எழுத்துவினைஞர் சங்கம் போன்ற அமைப்புக்கள் தமது போராட்டங்களைச் சட்டரீதியாக நடத்தினார்கள். ஒருபோராட்டம் வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அதில் பங்குபற்றியவர்கள் யாரையும் தவறவிடக்கூடாது. இதைச் சரித்திரம் மன்னிக்காது. ஆதலால்தான் நான் ஆரம்பகாலப் போராளிகளை கொண்டுவந்தேன்;

    பரமேஸ்வரன் போல் இல்லாது தூய்மையான மனத்துடன் அன்று சத்தியாக்கிரகம் இருந்த எனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களும் போராளிகள் தான். சத்தியாக்கிரகமும் ஒரு போராட்ட வடிவமே. ஆயுதப்போராட்டம் மட்டும் போராட்டமாகாது. இந்த சத்தியாக்கிரகப்போராட்டம் ஐஆர்ஏ மட்டுமல்ல இன்று அது ஒருபோராட்ட வடிவமாகவே கருதப்படுகிறது.

    பல்லி! உமாமகேஸ்வரன் எதையும் ஆரம்பிக்கவில்லை. அன்று உமா ஒரு சேவயராகக் கடமையாற்றியவர். பொலிசாரல் தேடப்படுகிறார் என்ற இரண்டு விடமும் மக்களுக்குப் போதுமானது. படித்தவர்களுக்கு என்று மரியாதையும் பொலிஸ் தேடுகிறது என்பதால் விடுதலை வீரன் என்ற பட்டங்கள்தான் அன்று புளொட் தன்பட்டாளத்தை பெருக்க உதவியது. இது கூட ஆரம்பகாலப் போராளியான சந்ததி சேயோன் காந்தியம் டாக்டர் போன்றவர்களைக் கூடத் புறம்தள்ளியது என்பதை அறிவது அவசியம். உமாவின் பாதுகாப்புக் கருதி அவசரப்பட்டுக் கட்டப்பட்ட படியால்தான் புளொட் அவசரப்பட்டே உடைந்து போனது.

    ///இந்த ஊர்மிளாவின் மரணமும் //
    இது இயற்கையானதுதானே?.-பல்லி இது இயற்கையானதோ இல்லையோ இதை உமா மிக அழகாகப் பயன்படுத்தினார் பிரபாகரனை ஒரங்கட்டுவதற்கு. உமா த.இ.பேரவையினுள் மட்டுமல்ல புலிகள் முதல் புளொட்வரை பிரச்சனைகளுக்கும் பிரிவுகளுக்கு காரணமாக இருந்தவர் என்பதை யாராவது மனந்திறந்து மறுத்துக் கூறமுடியுமா? நாலு சிஐடிக்களையோ அல்லது ஆயுதம் ஏந்த அரசில்வாதிகளையோ சுடுவதுதான் போராட்டம் என்று புரிவுகள் தான் அன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இதை புலிகளும் புளொட்டும் மற்ற இயக்கங்களும் தாராளமாகச் செய்தனர். சுருங்கக் கூறின் அனைவரும் சுட்டுப்பழகியதே தமிழனில் தான். அதை அனைத்து இயக்கங்களும் இறுதி வரையும் செய்தார்கள் இன்றும் செய்கிறார்கள். இன்னும் செய்வார்கள். இந்தநிலை மாறும் வரை ஒருமுகப்பட்ட விடுதலைபற்றி எப்படிச் சிந்திப்பது.

    இங்கே நிலாவின் முயற்சி அளப்பரியது. இதை சரியாக நிறைவேற்ற அனைவரும் கைகொடுப்பது நல்லது. குழப்பவோ திசைமாற்றவோ முயல்பவர்களைத் தேசம் இனங்கண்டு அவர்களை வேறு கட்டுரைகளில் நின்று கூத்தாட விட்டால் நல்லது.

    Reply
  • proff
    proff

    புதியதோர் உலகம் எழுதிய தீப்பொறி கோவிந்தன் என்னிடம் ஊர்மிளா மரணம் தொடர்பாக சொன்னதை நினைவுபடுத்துகிறேன்.

    சந்ததியார் தன்னிடம் சொன்னதாக கோவிந்தன் கூறினார் இந்த தகவலை.
    ஊர்மிளா உமா மூலம் கர்ப்பமுற்றிருந்ததாகவும் கர்ப்பத்தை அழிப்பதற்கு மருத்துவமாது சாந்தியின் கிளினிக்கில் சிகிச்சை நடந்ததாகவும் இது தொடர்பான இரகசிய கடிதமொன்று அப்போது புளொட்டின் அலுவலக விடயங்களை பராமரித்த சறோஜினியிடம் (சந்ததியின் காதலி) அகப்பட்டுக் கொண்டதாகவும் இந்த சிகிச்சையில் நடந்த மர்மத்திலேயே ஊர்மிளா இறந்ததாக கோவிந்தன் சொன்னார். இது பற்றி சறோஜினிக்கு தெரியும் எனச் சொன்னார். சறோஜினி கனடாவில் தற்போது உள்ளார். தோழர்களே விசாரித்துப் பார்க்கவும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சறோஜினியிடம் (சந்ததியின் காதலி) //
    உன்மையில் இவர் சந்ததியின் காதலியா?? இங்கேயும் ஒரு மர்மம் உண்டு; அதுவும் நீங்கள் தேடும் ஒரு நபர் இதில் கதானாயகனாகிறார்,

    :://கொண்டதாகவும் இந்த சிகிச்சையில் நடந்த மர்மத்திலேயே ஊர்மிளா இறந்ததாக கோவிந்தன் சொன்னார். //
    அதுமட்டுமா கோவிந்தன் சொன்னார், கோவிந்தா? கோவிந்தா எனவல்லவா புதிதாய் உலகம் படைத்தார், அந்த புத்தகத்தை கூட விமர்சனத்துக்கு கொண்டுவரும்படி பல்லி பல தடவை கேட்டு விட்டேன்; ஏன் தெரியுமா?? கோவிந்தனுடன் செயல்பட்ட சிலர் அன்றே ஒரு இசைபிரியாவை உருவாக்கி விட்டார்கள்;
    //சந்ததியார் தன்னிடம் சொன்னதாக கோவிந்தன் கூறினார் //
    ஏன் சந்ததியாருக்கு தமிழ் தெரியாதோ??
    //ஊர்மிளா உமா மூலம் கர்ப்பமுற்றிருந்ததாகவும் கர்ப்பத்தை அழிப்பதற்கு மருத்துவமாது சாந்தியின் கிளினிக்கில் சிகிச்சை நடந்ததாகவும் இது தொடர்பான இரகசிய கடிதமொன்று அப்போது புளொட்டின் அலுவலக விடயங்களை பராமரித்த சறோஜினியிடம் //
    இப்படியெல்லாம் என்ன றூம் போட்டு சிந்தனை செய்வீங்களா சாமியோ;

    Reply
  • ram
    ram

    அன்புள்ள பல்லிக்கு
    நீங்கள் நீண்ட நாட்களாக தீப்பொறி அமைப்பு தொடர்பாக சில விமர்சனங்களை வைத்துக்கொண்டுள்ளீர்கள் என்று தெரிகிறது. அதனை வெளிப்படையாக முன்வைக்க தயங்குவதேன்?
    மாயா குறிப்பிடும் முள்ளில் சேலை விழுவது தொடர்பான விடயமும் நீங்கள் குறிப்பிடும் விடயமும் ஒரே விடயங்களே என நான் கருதுகிறேன்.
    உங்களிடம் போதிய தகவல்கள்> ஆதாரங்கள் இருந்தால் அதனை துணிச்சலுடன் முன்வையுங்கள் அதனை விடுத்து ஒரு அமைப்பின் மீது அநாவசியமான சேறடிக்க முயல வேண்டாம். தீப்பொறி அமைப்பினர் நீங்கள் குறிப்பிட முனையும் தவறுகளை செய்யவே இல்லை என்கிறேன் நான் முடியுமானால் எங்கே நிரூபியுங்கள் பார்க்கலாம்.
    ராமநாதன்.

    Reply
  • nila
    nila

    குலன்>வரதன் போன்ற எம் மூத்த பழைய போராளிகள் இத்தளத்திற்கு வந்து தமது பங்காற்றலையும்-வரலாற்று சாட்சியங்களையும் பகிர்ந்து கொள்ள முன் வந்தமைக்கு பாராட்டுக்களும் எமது நன்றி நிறைந்த வரவேற்புக்களும் உரித்தாகுக!
    ஏனெனில் புலியும்-புளொட்டும் தான் அல்லது பிரபாவும் -உமாவும் தான் இந்த எமது விடுதலைப் பாதையை வகுத்து போராடினார்கள் என்ற மாயையை உடைத்து உண்மையாக இப் போராட்டம் எங்கிருந்து-எந்த சக்திகளால் காலப்பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து உருப்பெற்று >அங்கங்கெல்லாம் இடம்மாறி இன்று சுழன்று நாம் எங்கு நிற்கின்றோம்-அங்குள்ள எம்வர்க்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்-இந்த எமது கடைசிக் காலத்திலாவது எமது போராட்ட வரலாற்றை தீர்க்கமான ஒரு உண்மை முகத்துடன் -உள்ளார்ந்த விமர்சனத்துடன் திருப்பிப் பார்த்து வரலாற்றுப் பதிவுகளாக வெளிக்கொண்டுவரும் போது உங்களைப் போன்றோரை வெளிக்கொணர்ந்து இந்த பணியை செழுமைப்படுத்த தான் காத்திருந்தோம். இந்தத் தளத்தில் மேற்கொள்ளும் எமது செயற்பாடு யாருக்கும் எதிரானதல்ல. பல போலிகளை அம்பலப்படுத்தி வரலாற்றில் புதைந்தவர்களை- புதைக்கப்பட்டவர்களை- மறந்தவர்களை- மறக்கப்பட்டவர்களை- அறியாதவர்களை- அறியப்படாதவர்களை ஒரு மையப்புள்ளியை நோக்கி நகர்த்தி எதிர்காலத்திற்காவது சில உண்மைகளை நாம் விட்டுச்செல்ல வேண்டுமென்பதுதான் எம்மைப் போன்ற எல்லோருக்குமுரிய வரலாற்றுப் பாத்திரம். ஏனெனில் இந்த போராட்டத்தில் எம்மை வழிநடத்திய அல்லது எம்முடன் வழிநடந்த எத்தனையோ மறைந்த போராளிகள்> தியாகிகளின் கனவுகள் தியாகங்கள் எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் எல்லாம் அடையாளம் இல்லாதாக்கப்பட்டுள்ளன அல்லது அடையாளப்படுத்தப் படவில்லை. எனவே இவற்றை எமக்கு தெரிந்தளவில் வெளிக்கொணர்வதுதான் நாம் அவர்களுடன் நடந்து வந்த பாதைக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்

    மாணவர் பேரவை> இளைஞர்ரேவை அவை உடைந்து அல்லது நகர்ந்து அல்லது உருமாறி எமது ஆயுதப்போராட்டம் பரிணமித்ததும்> இதில் எமது குறுந்தமிழ் தேசியத்தின் பங்களிப்பும் நீங்கள் குறிப்பிடுபவை சரியானவையே. ஆயினும் இவர் இவர்களின் வர்க்க குணாம்சம் இப்படி இப்படித்தான் இட்டுச் செல்லும் என்பது தவிர்க்க முடியாது ஏனெனில் இன்றும் தொடரும்நிலை அதுதான்..

    ஆயினும் கழகத்தின் ஆரம்ப கட்டுமாணம் குடியேற்றம்- மக்கள் மத்தியின் செயற்பாடு- வடகிழக்கு மக்களுக்கான புரிந்துணர்வு காந்தீயப் பொதுப்பணி என உங்களைப் போன்றோரால் திட்டமிடப்பட்டு வரையறுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தமைக்கு நீங்களே உயிரோடுள்ள சாட்சிகளாக உள்ளீர்கள்.(ஆயினும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்தவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் இன்றுபோல் அன்று உலகம் உள்ளங்கையில் இல்லை. தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி இல்லாத காலம். இன்று நாம் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்துகின்றோம். அவ்வளவுதான். மற்றும்படி நாம் யாரையும் தவிர்க்க- மறக்க- மறுக்க முடியாது. அது எமது தேடலுக்கு நாகரிமமும் அல்ல) எனவே இந்த வரையறைக்குள் கழகத்தின் முதல்நிலைபடிகளில் புலியிலிருந்து வந்த ஒருசிலரின் புலிக்குணாம்ச வருகையும் சேர்ந்து வந்ததும் தவிர்க்க முடியாதே.
    புலியின் ஆரம்பஅரசியல் கெரில்லாத ராணுவத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடு; கழகத்தின் செயற்பாடோ என்றும் மக்களை மையப்படுத்தியதும் ஜனநாயகத்தை எதிரொலிப்பதுமாகவே இருந்தது. இதில் ஆரம்பத்தில் புலி கட்டுப்பாட்டோடு இருந்;து சக போராளிகளையே மெளனிக்கத்தான் வைத்தது. ஆனால் அதேநேரம் கழகத்தின் 83ற்கு பிற்பட்ட வீக்கமும் சில தலைமைகளின் பலம்> பலயீனம் பல திறமையானவர்களை பின்தள்ளி அல்லது குழிபறித்து அல்லது குழிக்குள் இட்டு எமது கழகத்தின் எதிர்காலத்தை சிதறடித்ததை எனது பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். இது யாவரும் அறிந்த உண்மையும் கூட.

    சோதீஸ்வரன் என்ற கண்ணனின் பல நல்ல பண்புகளை நானும் அவருடன் செயற்பட்ட காலங்களில் அறிந்துள்ளேன் அவர் இறையின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்பது எனக்கும் நம்பமுடியாதுதான் உள்ளது. ஆனால் அவரை ஏவி விட்டவர்களின் பாத்திரத்தை பொறுத்துத்தானே செயற்பாடு அமையும். ஆயினும் எனக்கு தகவல் தந்தவரை தற்போது தொடர்பு கொள்ள முடியாதுள்ளது. கண்டிப்பாக இதுபற்றி இன்னும் தேடுவோம்.
    ஏனெனில் கண்ணன் 86க்கு பிற்பட்ட காலத்தில் மாணிக்கம் தாசனின் வேலைத்திட்டம் ஒன்றிற்குள் ஒருசில நபர்களை மூன்று மாதம் மட்டில் பெரும்திட்டம் தீட்டி ஈடுபடுத்தி செயற்பட்ட நிலையில் இந்த வேலைத்திட்டம் கடைசி நேரம் ராஜனை போடுவதற்குத்தான் குறிவைத்ததென தெரிந்த மறுநிமிடமே அப்படியே எல்லாவற்றையும் மிக சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினார். அந்நேரம் அவருக்கு தாசனால் இருந்த உயிராபத்தையும் துச்சமாக மதித்திருந்தும் இது நடந்தது. இதற்கு ஏவிவிடப்பட்டவர்கள் இந்த பெரியதொரு சதியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டவர்களென்று 3 முக்கிய சாட்சிகள் உயிருடன் உள்ளனர். இந்த நேரம் கந்தசாமி பொறுப்பிலுமில்லை பாபு (திருமலை- என்பவர் இவர்வெளிநாட்டில் எங்கோ உள்ளார்) புலனாய்வுக்கு பொறுப்பாக இருந்தும்; எதுவுமே தெரியவுமில்லை. இபபடித்தான் கழகத்தின் கேவலங்கள் பின்பகுதியில் இருந்தது. கண்டிப்பாக இப்படியான சில உண்மைகள் ஏதோ ஒரு பொதுதளத்தில் -நாம் வெளிப்படும் நேரம் வரும் போது முன்வைக்கப்படும் பல உயிருள்ள எம்மைப்போன்ற சாட்சிகளோடு….

    மேலும் கண்ணன் அவர்களிடம் படைத்துறைக்கான தகுதிகள் இல்லாமல் உமா அவரை தனது தலையாட்டும் வித்தைக்காக வைத்திருக்கலாம். ஆனால் கண்ணனிடம் உள்ள மனிதாபிமானத்தினையும் பல அரிய பண்புகளையும் மறக்க முடியாது. அதேபோல் 84>85 காலப்பகுதிகளில் பின்தளத்தில் குளறுபடிகள் நடந்த வேளைகளிலும் தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரி அமைப்புக்கள் சம்பந்தமான பல முக்கியமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார்;. நான் சென்னையில் வேறு கழக அலுவலாக வந்து போகும் போதும் நேரம் கிடைக்கும் போது இருதடவைகள் சில முற்போக்கு சக்திகளின் சந்திப்புக்களுக்கு அழைத்துச் செல்வார். இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் எம் கழகத்தில் அந்தந்த தகுதியானவர்க்கு அந்தந்த இடங்கள் கோடுக்கப்படாமல் பதவிகளை -பொறுப்புக்களை பிழையான ஒரு சில தலைமைகள் தங்கள் வசதிக்கு- தங்கள் காழ்ப்புணர்வுகளுக்கு- பயன்படுத்தியமையையே சுட்டிக்காட்டுகின்றேன்

    அதற்காக உமாவை ஒரு புலனாய்வின் கைக்கூலியென்றோ- முன்பு இந்திய அரசின்- பின்பு இலங்கையரசின் ஒற்றர் என்றோ சொல்லி நாம் இருந்த எமது விடுதலைப்பாதையே கொச்சைப்படுத்த முடியாது. ஆனால் உமா எல்லாவிதத்திலும் எல்லோரையும்(அது புலனாய்வாக இருந்தாலென்ன> போராளிகளாக இருந்தாலென்ன> சக முக்கியஸ்தவராக இருந்தாலென்ன) பயன்படுத்த வெளிக்கிட்டு தான் துரோகத்திற்கு பயன்பட்டதாகதான் முடிந்தது; இது தான் அவரின் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

    கண்டிப்பாக உமாவின் பாத்திரம் -தாசனை நம்பி உமாவின் கடைசிக்கால செயற்பாடுகள் விரிவாக ஆராயப்பட வேண்டும். ஏனெனில் உமா எதை மற்றவர்க்கு செய்தார் அல்லது செய்வதற்கு கண்டும் காணாது உடந்தையாக இருந்தாரோ அந்த கழகத்தில் அந்த நபர்கள் மத்தியில் அதே உட்கொலைக்கு பலியாகியுள்ளார். இதுபற்றி இன்றுள்ள கழகத்தலைவர் சித்தார்த்தர்- ஆனந்தி -ஆர்.ஆர் உட்பட்ட முக்கியஸ்தர்கள் (இக் கொலையின் போது நிலைமை தெரிந்தவர்கள்) முன்வந்து உண்மைகளை சுயவிமர்சனம் பகிரங்மாக செய்தால் தான் கழகம் அடுத்த கட்டம் உண்மையாக நகர முடியும். ஏனெனில் கழகம் எப்படி எப்படி யார் யாரினது உழைப்பினால் உருவானதென்பது உங்களைப் போன்றோரின் வரவின் மூலம் அத்தாட்சிப்படுத்தப் படுகின்றது. எல்லோரையும் புலனாய்வு லிஸ்டிக்குள் இலகுவாக சொல்லி தப்பவைக்காமல் உமா என்ற கழக செயலதிபர் உட்பட்ட அத்தனை பாத்திரமும் அவர்களின் வரலாற்று ஆளுமைகள்-பாத்திரங்களுடன் சீர்தூக்கி பார்த்து ஆராயப்படுத்தபட வேண்டும்

    ஏனெனில் புலிகளையே இன்னும் விமர்சித்து முடிவுக்கு வர முடியாத நாங்கள் எமது கழகத்தின் வரவாற்றையாவது எம்மக்கள் விடுதலையை எங்கு கொண்டு விட்டுள்ளோம் இனி நாம் எல்லாம் சேர்ந்து ஏதும் செய்ய முடியுமா? என சிந்திக்க வேண்டும் ஏனெனில் கொலைக் கறை படாத கைகள் என்ற வரலாறு சித்தாத்தர் அவர்களிடம் உண்டு. இன்றும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை முன்னெடுக்கும் தலைமைகளில் குறிப்பிடத்தக்கவர் என்பதுவும் ஒன்று. மேலும் கடைசியாக இலங்கையில் நடந்த தேர்தலில் கூட பல நெருக்கடியிலும் விலைபோகாதவர். அரசுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட அரசும் ஏன் கழகத்தின் உள்வட்டத்தில் கூட பெரும் அழுத்தம் கொடுத்தும் அதை நிராகரித்தவர். அதுபோல் ரி.என்.ஏ சார்பாக தர்மலிங்கத்தின் மகன் சித்தாத்தரிற்கு கெளரவமாக ஒரு சீட் சம்பந்தரால் ஒகுக்கப்பட்ட போதும் இவற்றை நிராகரித்து தேர்தல் தோல்வியிலும் கழகத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்தியவர். எனவே மக்கள் போராட்டத்திற்காக -எமது விடுதலைக்காக எத்தனையோ தியாகிகளின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இந்த கழகம் இன்னும் சிந்தித்து சுயவிமர்சனத்துடன் செயற்பட நேரம் உள்ளது. இது எமது ஆதங்கம் தான். இது எமது புற விமர்சனம் அல்ல..

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    நான் இந்த இனத்தில் பிறந்ததற்காக, எனது துணியைக்கூட முட்கள் கிழிக்குமானால், நான் அம்மணமாக உலகம்முழுவதும் “தமிழன்” என்ற இனத்தின் அடையாளமாக சுற்றிவர தயாராய் இருக்கிறேன், ஏனனில் எமது சமூகம் எனக்கு கற்றுத்தந்தது அதுதான். இன்றைய எமது சமுதாயத்தின் நிலையிலும், எமது அடுத்த சந்ததிகளின் கெளரமான வாழ்வின் இருப்பிற்காகவும், நான் எமது துணியை முட்களுடன் செருகி எது உண்மை, எது பொய் என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது – இதற்கு எல்லாப் போராளிகளும் தயாரா? – கருத்துப்பதிவிடுபவர்கள் குளுவாதத்தை நிறுத்தி, வேற்றுமைகளிலும் ஒற்றுமை காணவேண்டுமென்பதே எனது அவா!!! – என்ன உங்கள் துணி மட்டும் முட்களில் கிழியாதோ?

    Reply
  • பல்லி
    பல்லி

    //என்ன உங்கள் துணி மட்டும் முட்களில் கிழியாதோ?//
    ஜயோ தளபதி அது கிழிந்து 30 வருடமாகிறது; நாம் நிர்வானமாக(மனங்கள்) தான் திரிகிறோம்; பேச்சுரிமை கிடையாது; செயல் உரிமை கிடையாது,
    அரசியல் உரிமை கிடையாது; பிள்ளைகள் எமக்கு உரிமை கிடையாது; அமைப்புகளை எதிர்க்கும் உரிமை கிடையாது; அனைத்துக்கும் மேலாக எந்த கொடுமையிலும் போராடவே எமக்கு உரிமை கிடையாது; இப்போ சொல்லுங்க எம்மீது துணி உண்டோ??

    //நீங்கள் நீண்ட நாட்களாக தீப்பொறி அமைப்பு தொடர்பாக சில விமர்சனங்களை வைத்துக்கொண்டுள்ளீர்கள் என்று தெரிகிறது.//
    அப்படியா எனக்கு மறதி அதிகம், ஆனாலும் என் எழுத்தை கவனிப்பதுக்கு ராமுக்கு நன்றிகள்;

    //அதனை வெளிப்படையாக முன்வைக்க தயங்குவதேன்?//
    புரியலையே அப்படியானால் தேசத்தில் எழுதுவது இருட்டில் எழுதுவதா?? அல்லது என் முகம் காட்டி எழுத வேண்டுமா? முகத்தை அப்புறமாய் பார்த்துக்கலாம் கருத்தை இப்போதைக்கு கவனிக்கவும்;

    //மாயா குறிப்பிடும் முள்ளில் சேலை விழுவது தொடர்பான விடயமும் நீங்கள் குறிப்பிடும் விடயமும் ஒரே விடயங்களே என நான் கருதுகிறேன்.// ஒரு தவறா??

    //உங்களிடம் போதிய தகவல்கள்> ஆதாரங்கள் இருந்தால் அதனை துணிச்சலுடன் முன்வையுங்கள் //
    இப்போ மட்டும் என்ன நடுங்கியபடியா எழுதுகிறோம்;

    //அதனை விடுத்து ஒரு அமைப்பின் மீது அநாவசியமான சேறடிக்க முயல வேண்டாம்.//
    சேத்தின் மகிமையை இவர்கள் மீது பூசி கெடுக்க மாட்டேன்; அதுசரி பொறியின் தீ பற்றி நீங்க சொல்லலாமே;

    //தீப்பொறி அமைப்பினர் நீங்கள் குறிப்பிட முனையும் தவறுகளை செய்யவே இல்லை என்கிறேன் நான் //
    உங்கள் கருத்தே அவர்கள் தவறு செய்யவில்லை என சொல்லவில்லை; அவர்கள் பல்லி சொல்லிய தவறுகள் செய்ய இல்லை என்பதுதானே, ஆக அவர்கள் தவறு செய்தார்கள் என்பது உங்கள் வாதம், அதேபோல் பல்லி சொல்லிய தவறும் செய்தார்கள் என சொல்லும் காலமும் வெகுதூரம் இல்லை,

    //முடியுமானால் எங்கே நிரூபியுங்கள் பார்க்கலாம்.-ராமநாதன்.//
    ஆக தீப்பொறியை சந்திக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் உங்கள் கவனம் இருக்கு, இதுக்காய் பல்லிக்கு கடுப்பேத்தி காரியம் செய்ய பாக்கிறியள், உங்க ஆசை நிறைவேறும்;

    Reply
  • nila
    nila

    proff! எந்த அடிப்படையில் சந்ததியார் கோவிந்தனிடம் சொன்னதாக ஊர்மிளாவின் விடயம்பற்றி அவதூறான செய்தியைச் சொல்கின்றீர்கள். எனக்கு சந்ததியாரை 1975>76; ம் ஆண்டு காலத்திலிருந்தே தெரியும். அதுபோல் காந்தீய அமைப்பினூடாக 1979லும் அதற்கு பிற்பட்ட அரசியல் கழக செயற்பாட்டிலும் கடைசியாக நான் 1984 மேதினம் (இந்த மேதினமே பார்த்தனின் அஞசலி நாளாக பார்த்தன் 1984 ஏப்ரல் 24 மட்டக்களப்பில் பொலிஸாரால் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டாலும் ஏப்ரல் 30 மாலைதான் இலங்கையரசின் வானொலி செய்தியினூடாக லலித் அத்துலக் முதலியின் அறிக்கையின் மூலம் இவ் மரணம் உறுதிப்படுத்தப்பட்டதும் இது சம்பந்தமாக செல்வன் எனற கிருபாகரன் (பின்நாளில் சிவராம்- ஈஸ்வரனால் மூதூரில் வைத்து கொலைசெய்யப்பட்ட) பின் தளத்திற்கு வந்து பார்த்தனின் மரணம் பற்றி தான்தான் நேரடி சாட்சியென உறுதிப்படுத்திய பின் அடுத்த நாளான இந்த மேதினம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.) அன்று சந்தித்தது வரையான காலங்கள் வரை மிக நன்றாகவே பழகியுள்ளேன். எனவே இந்த சந்ததியாரிடம் ஒரு பெண்ணை இவ்வளவு சின்னத்தனமாக விமர்சிக்கும் பழக்கம் இருக்குமென்பதை அறவே நம்பமுடியாது. மேலும் அவர் பெண்கள்பால் மிக கண்ணியமாக நடந்து கொள்வார். இவரை நம்பி எத்தனையோ பெண்கள் தமது வீட்டிற்கு தெரிந்தும் தெரியாத நிலையிலும் காந்தீயத்திற்கு- அரசியலுக்கென்று வந்துள்ளனர். இவர் பொதுவாகவே இளைஞர்கள் மத்தியில் மிகுந்த மரியாதைக்குரியவர். பின்னாளில் அரசியல் விமர்சனங்களில் முரண்பாடுகள் வந்தாலும் கண்ணியங்களை என்றும் விட்டுக் கொடுத்தவரில்லை.

    மேலும் ஊர்மிளாவின் பதிவினை தெளிவாக எனது கட்டுரையில் சாட்சிகளுடன் தெளிவுபடுத்தியுள்ளேன். அவரின் மஞ்சல் காமாலை முற்றிய நிலையிலான இயற்கை மரணத்திற்கான சாட்சிகள் நாட்டிலும் வேறு வெளியிடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஏன் டாக்டர் ராஜசுந்தரத்தின் மனைவி சாந்தி லண்டனில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்னும் நான் தொடர்புகளில் இருக்கின்றேன். இந்த நிலையிலே இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் உண்மைகளை மூடிமறைத்து ஏன் இப்படி செய்திகள் வெளிவருகின்றன. சந்தியார் இப்படியான செய்திகளைப் பரப்புபவர் இல்லை. உமாவால் தனக்கு உயிருக்கு ஆபத்தென்று தெரிந்திருந்தாலும் இப்படி மூன்றாம் தர அரசியல் நடத்துபவர் அவரில்லை எனவே இதற்குப் பின்னால் என்ன உள்ளதென உண்மை புரிபவர்களுக்கு புரியும்.

    உமா- பிரபா- ஊர்மிளா நாகராசா சுந்தரம் உட்பட்டோர் புலியில் உள்ளபோது உமாவின் தலைமையை நோக்கி வேட்டுவைப்பதற்காக நாகராசா போன்றோரால் பிரபாவிற்கு துதிபாடிதிரிந்த ஒருசிலர் செய்த போலிபிரச்சாரம்தான் இந்த உமா- ஊர்மிளா கள்ளத்தொடர்பு என்ற பேச்சுக்கள். நான் முன்பே குறிப்பிட்டது போல் உமா-ஊர்மிளா கொழும்புக் கிளை அரசியல் முதற்கொண்டு தீவிரமாக செயற்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒரே ஊரினர். நீண்ட கால நட்பில் உள்ளவர்கள் இரு ஆண்கள் பழகினால் அரசியல். இதுவே ஒரு ஆண்-ஒரு பெண் அரசியலில் பழகினால் கள்ளத் தொடர்பா? ஏன் இன்னும் நாம் எங்கோ நிற்கின்றோம். ஊர்மிளா எல்லோரிடமும் வழிந்து கதைக்கும் பேர்வழியல்ல. கணக்கு வழக்குகளிலும் கறாரானவர். யாரையும் முகத்திற்கு நேரே விமர்சிக்கக்கூடடிய ஒரு துணிச்சலான பெண். எமது போராட்டத்தில் இளைஞர்களின் தீவரவாத அரசியலில் முற்றுமுழுதாக தன்னை அர்ப்பணித்து இறக்கும்வரை ஒரு போராளியாக இறந்த முதல்பெண். இப்பெண் இப்படி எத்தனை போட்டி பொறாமை- காழ்ப்புணர்ச்சிகள்-வெட்டுக்குத்துகளுக்குள் நீச்சல் அடித்து போராடியிருப்பார். இறந்தபின்பும் இப்படி பழி சொல்லும் இச்சமூகத்திலுள்ள இச் சிலருக்காகவும் சேர்த்துத்தானே போராடியுள்ளார். எனவே இபபடி கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பவர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் தங்கள் பிழைகளுக்கு பொறுக்கித்தனமான நியாயம் தேடுபவர்களாகவே தான் இருக்கமுடியும்.

    proff முற்பட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். பிற்பட்ட மத்திய குழுவில் நிரஞ்சன்> சுந்தரம்> காத்தான்> பார்த்தன் ஆகியோர் இருக்கவில்லையென. இந்த போராளிகளெல்லாம் சாகும்வரை மத்தியகுழுவில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் ஏன் கழகம் என்ற எம் உறவுகள் மத்தியில் இருந்தார்கள். இருக்கின்றனர். என்றும் இருப்பார்கள்.

    மேலும் மத்திய குழுவிலுள்ள மாறன் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்கள். உமா -பிரபா பாண்டிபஜாரில் சூடுபட்ட காலங்களில் சென்னையில் செயற்பட்ட மாறனையா? இவர்தான் இன்று கொழும்பில் வசிக்கும்… என்பவரா? தயவுசெய்து விடுபட்ட நபர்களை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி:
    சதானந்தன் என்ற ஆனந்தி தற்போதும் புளொட்டில் கொழும்பு தொடர்பில் உள்ளார். அவர் எந்தக் காலகட்டத்தில் மத்திய குழுவிற்குள் வந்தார் என தெரியவில்லை ஆனால் அவர் மத்திய குழு உறுப்பினராக இருப்பதற்கு சாத்தியம் உள்ளது.

    குருபரனின் தம்பி தயாபரன் இருந்தது பற்றி எனக்கு தெரியவில்லை. விபரத்தை குறிப்பிடவும் நன்றி. மேலும் கண்ணாடி சந்திரன் என்பவர் தளத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார் மிக திறம்பட கழகத்திற்காக செயற்பட்டுள்ளார். இவருடன மல்லாவி சந்திரன் என்பவரும் தீவிரமாக தளத்தில் சிறப்பாக செய்துள்ளனர். 83 -84 ஆண்டுகளில் இவர்கள் பங்களிப்பு பெரும் பாத்திரமாக கழகத்தில் இருந்துள்ளது. பின் சந்ததியார் -உமா முரண்பாட்டிற்கு பின்னால் இவர்கள் கொலை செயயப்பட்டதாக சொன்னார்கள் பின் அறிந்த விடயமாக அவர்கள் கழகத்தை விட்டு ஒதுங்கியதாகவும் உயிருடன் இருப்பதாகவும் அறிய முடிந்தது. இதுபற்றி முடிந்தவர்கள் தகவலை தெரியுங்கள். இவர் மத்திய குழுவில் இருந்ததாக தெரிகின்றது. பார்த்தன் இறந்ததும் தள ராணுவப்பொறுப்பை இவர் வகித்ததாக தெரிகின்றது. எனவே விடுபட்ட குறிப்புக்களை பொறுப்புக்களுடன் பதிவிடுவதற்கு நன்றி

    இங்கு நாம் பக்கசார்பற்ற கருத்துக்களையும் உண்மையான தகவல்களையும் தான் வைக்கின்றோம் கொச்சைப்படுத்தல்களை பொறுப்புள்ள நாம் தவிர்த்து நடப்போம்! கொச்சைப்படுத்துவதை பிழைப்பாய் வைத்திருப்பவரின் அரசியல் வறுமையையும் நாம் மன்னிப்போம்….? ;; !

    Reply
  • Kulan
    Kulan

    நிலா நன்றிகள். வேலைப்பழுக்கள் காரணமாக எழுத்துகளை குறைந்திருந்தபோது இப்படி ஒரு நல்ல முயற்சிக்கு எனது சரியான பங்குகளை தருவது அவசியமே
    /உமா- பிரபா- ஊர்மிளா நாகராசா சுந்தரம் உட்பட்டோர் புலியில் உள்ளபோது உமாவின் தலைமையை நோக்கி வேட்டுவைப்பதற்காக நாகராசா போன்றோரால் பிரபாவிற்கு துதிபாடிதிரிந்த ஒருசிலர் செய்த போலி பிரச்சாரம்தான் இந்த உமா- ஊர்மிளா கள்ளத்தொடர்பு என்ற பேச்சுக்கள்/
    இது சரியான தகவலே. சுந்தரம் இந்தியாவில் எலெக்ரோனிக் படிப்பதற்காக மாமன்மாரால் அனுப்பி வைக்கப்பட்டவர். அவர் அங்கு படித்ததெல்லாம் சிவப்புப் புத்தகங்களே. இக்காலகட்டத்தில்தான் சுந்தரத்துக்கு இயக்கத் தொடர்புகள் ஏற்பட்டன.

    நாகராசா வாத்தி மட்டும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. பிரபா எடுத்தேன் கவித்தேன் என்ற பண்புகளைக் கொண்டவர். உமா சிறிது சோம்பேறி. இந்தத் துருவங்களின் இணைவில் செயற்பாடுகளில் இழுபறி இருந்தது. தம்பியும் சிலவேளைகளில் தான்தோன்றித்தனமாக நடந்தார். போகவிட்டு புறம்சொல்லல் போன்ற குறைபாடுகள் அள்ளி வைப்புக்களுக்குக் காரணமாக இருந்தது. அன்று புலிகளின் மத்தியசெயற்குழுவில் இருந்தவர்கள் ஒரேமாதிரியான கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவர்களாக இருக்கவில்லை.

    சந்ததியை நான் நன்கு அறிவேன். பெண்களைப்பற்றி எண்ணுவதற்கு எங்கப்பா நேரம். இவர் இளைஞர்பேரவையில் இருந்தபோதும் மக்கள் மயப்பட்ட குடியற்றத் தடுப்பு போன்ற அடிமட்ட வேலைகளிலே கண்ணும் கருத்துமாக இருப்பார். இந்த இளைஞர்பேரவையிலும் புஸ்பராசா போன்றவர்கள் காங்கேசந்துறைத் தொகுதி அமைப்பாளராக இருந்தார். இவர்கள் புலிகளின் பக்கம் ஆதரவு கொண்டவர்கள் என்று எண்ணுகிறேன். மட்டக்களைப்பைச் சேர்ந்து வாசுதேவாவும் இளைஞர் பேரவையில் இருந்து வந்தவர்களே.

    Reply
  • alex.eravi
    alex.eravi

    கண்ணாடிச் சந்திரன் எனப்படும் தயாபரன் தற்போது டொரோண்டோ, கனடாவில் உள்ளார். இதில் ஜோக் என்னவென்றால், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் இவரையும் இவருடன் சேர்ந்தவர்களையும் வலை விரித்து தேடித் திரியும்போது இவர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கி இருந்தனர். (முக்கியமாக சென்னையில்) பின் 80இன் நடுப்பகுதியிலேயே கனடா வந்துவிட்டனர். இவருடன் திருநெல்வேலியை சேர்ந்த வல்லிபுரம் விபுலானந்தனும் சேர்ந்தே இந்தியாவில் இருந்து பயணமாகினர். (வல்லிபுரம் விபுலானந்தன் என்பவர் அந்நேரம் கழகத்தினார் பிடித்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் திருநெல்வேலி ஊரை சேர்ந்தவர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் கட்டாயத்தில் விடுதலை செய்யப்பட்டார்)

    மேலும் பெரதேனியா பல்கலைகழகத்தின் பொறியியல் மாணவராக இருந்து கழகத்தின் முழுநேர ஊழியராக இருந்த கண்ணாடிச் சந்திரன் எனப்படும் தயாபரன் அவரின் அறிவு காரணமாக அவரின் நண்பர்களினால் ‘மண்டையன்’ என்றும் அழைக்கப்பட்டார். மேலும் இவர் அந்நேரம் மத்திய குழுவில் இருந்தார். கனடா வந்தபின் வல்லிபுரம் விபுலானந்தன் தன சுயநல போக்கினால் கனடாவின் புலிப் பினாமிகளுடன் தொடர்பை பேணி வந்ததுடன் புலிகளின் ஆட்சியில் யாழும் சென்று வந்தார். ஆனால் கண்ணாடிச் சந்திரன் எனப்படும் தயாபரன் அரசியலை விட்டு ஒதுங்கி சாதாரண மனிதனாக கஸ்டப்பட்டு தொழில் செய்து இன்று வீடு பரிசோதகராக உள்ளார்.

    மேலும் வயல்வெளி நிறைந்த வேளைசேரியில் 80களில் நிலாவை இலகுவாக பார்க்ககூடியதாக இருந்தது. தற்போது வானலவான கட்டிடங்கள் உள்ள வேளைசேரியில் கஸ்டப்பட்டுத்தான் நிலாவை பார்க்க வேண்டும். அதைபோல் நான் தேடித் திரிந்த என் நம்பிக்கைக்குரிய அதே கணபதி நிலாதான் இன்று பிரான்சில் உள்ளதென்றால் தேசம் நெட்டுக்கு நன்றி. (நிலாவின் பிரதிபலிப்பான ஒளியின் மூலமாக மறைந்திருந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதர்க்கு) ஆனால் பக்க சார்பில்லாமல் உண்மைகள் ஆவணமா வரவேண்டும். (ஓம் கணபதி எல்லா தொடர்பையும் விட்டு பிரான்சில் ஒதுங்கி இருந்ததாக அறிந்தேன்)

    ‘உண்மைகள் என்றும் உறங்குவதில்லை’ என்பதற்கு அமைய விணாகிப் போன எத்தனையோ அர்ப்பணிப்புகள்… உயிர்கள்… எல்லோரையும் நினைவு கூறுவோம்! ஆவணப் படுத்துவோம்!!

    கழகம் ஓர் பலர் சார்ந்த பலரின் பலவிதமான அர்ப்பணிப்புகளுடன் வளர்ந்த ஓர் பல்கலை கழகமாக இருந்து பின் கலக்கம் நிறைந்த கலங்கிய குட்டையாக மாறி இன்றும் கழகமாக கவுதமர் போன்றோரது அர்ப்பணிப்புகளுடன் இயங்கிக் கொண்டுள்ளது.

    மேலும் நண்பர் மாறன் (மகாஜனா கல்லூரி/ தெல்லிப்பளை தேவதாசன்) கொழும்பில் இறந்துவிட்டார் என்று அறிந்தேன்.
    ஆனந்தி அண்ணர்… வெற்றி போன்றோர் தமது பங்களிப்பை இங்கு தருவது இந்தியாவில் நடந்த பலவற்றை நிலாவில் ஒளி விம்பத்தினூடாக இங்கு சூரிய ஒளியின் நேரடியான இயற்கையின் சுழற்சியான எல்லாம் திரும்ப வரும் என்ற இலக்கணத்திர்க்கூடாக கொண்டுவருவது வரவேற்க்கத்தக்கது.

    மேலும் பல எழுத உள்ளது, பின்னர் வருகிறேன்… தற்போது கண்ணாடிச் சந்திரன் எனப்படும் தயாபரன் பற்றி கேட்டதனாலும் அவர் பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்குமாக தற்போது வந்தேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சந்திரன் எனப்படும் தயாபரன் பற்றி கேட்டதனாலும்//
    அதே போல் மல்லாவி சந்திரனும் அமெரிக்காவில் உள்ளார், இவர் ராஜனின் சகோதரங்களினுடன் தொடர்பில் உள்ளதாக நம்புகிறேன்;

    Reply
  • nila
    nila

    குலன்! தலைமைகள் என்று சொல்லப்பட்டவர்களின் பண்புகள் -தனிப்பட்ட குணாம்சங்கள் எப்படியெல்லாம் போராட்டத்தை திசைமாற்றியதென நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கின்றது.
    ஒரு நல்ல தலைமைத்துவம் என்பது :
    1)தன்னம்பிக்கை
    2)நடுநிலை
    3)ஆளுமை
    4)சத்தியம்
    5)துணிவு
    6வழிகாட்டி
    7)விவேகம் என்ற குணாம்சங்கள் கொண்டது. இதில் எம்தலைமைகளுக்கு இவைகள் சராசரி இல்லாவிட்டாலும் பின் வந்த காலத்திலோ அன்றி அனுபவங்களினூடாகத் தான் என்றாலும் இப் பண்புகளை வளர்த்தார்களா? அல்லது தகுதியுள்ளவர்களைத்தானும் வளரவிட்டார்களா?
    இப்படியான இவர்களை நம்பி வந்த நாங்களும் எம் மக்களும் தானே இன்று அனதைகளாக்கப்பட்டுள்ளோம்…
    மேலும் சுந்தரத்தின் தெரியாத பின் தகவல்களை தந்துள்ளீர்கள். நன்றி. ஆரம்பத்தில் விடுதலைக்கு வந்த சக்திகளெல்லாம் அதிகமாக ஏதோ ஒருவிதத்தில் தனித்திறமை கொண்டவர்களே. கண்டிப்பாக வரலாற்று ஆவணங்கள் பதிவாக வெளிவரும்போது இப்படி ஒவ்வொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டும். நன்றி..நன்றிகள்..

    அலக்ஸ் இரவி:
    இத்தளத்தில் புதிய வரவாக வந்தமைக்கு தோழமையுடன் வாழ்த்து தெரிவித்துக்கொண்டு உங்களால் தரப்பட்ட முக்கிய தகவலுக்கு நன்றிகள்
    முதற்கண் மாறன் என்ற தேவதாசனின் மரணச் செய்திக்கு எமது அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினருக்கும் எமதுஆழ்ந்த அனுதாபங்கள்.
    இவர் எப்போ எப்படி இறந்தார். இவர்தான் அந்த மத்திய குழு உறுப்பினரா? இவர்தான் 82ல் கழகத்தில் சென்னையில் நின்றவரா? தயவுசெய்து விபரமாகத் தரவும்.

    மற்றும் கண்ணாடிச் சந்திரனைப்பற்றி பார்த்தன் மூலமும் பிற்பட்ட காலங்களில் பலரின் மூலமும் தற்போது பிரான்ஸிலுள்ள கிளிநொச்சி கண்ணன் மூலமும் அவரின் திறமைகள் சாதுர்ரியம் அர்ப்பணிப்புக்களை அறிந்தேன். அவர் புளொட்டின் கொலைக்காரக் கும்பலின் தேடுதலில் கொலை செய்யப்பட்டார்களோ என்றுகூட ஒருகட்டத்தில் கேள்விபட்டதுண்டு. இப்போது நீங்கள் தந்த தகவல் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. ஆயினும் இப்படியான எம் திறமைசாலி இளைஞர்கள் உயிருக்கு பயந்து வாழ்க்கையை தொலைத்து விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்க வழக்கம் போல் பெருமூச்சுத்தான் விடமுடியும். இவற்றையெல்லாம் நினைக்கும் போது இறந்தவர்களுடன் நாமும் இறந்திருந்தால் இந்த வலியாவது தெரியாமல் இருந்திருக்கும் என நினைப்பதுண்டு. இவையெல்லாம் எமது ஆற்றாமைதானே. இந்த கண்ணாடி சந்திரன் தான் தயாபரன்(இவர் லண்டன் ரேடியோ குருபரனின் தம்பியா?) என்பது எனக்கு இப்போதுதான் புரிகின்றது

    மேலும் நீங்கள் நினைக்கும் கணபதி விக்கினேஸ்வரன் நான் இல்லை. ஒரு காலகட்டத்தில் நான் அவரின் கொமினிகேஷன் மாணவராக இருந்துள்ளேன். அவரும் மிக நேர்மையானவர். எனது மிக மதிப்பிற்குரிய ஒரு நபர். எமது விடுதலைப்பாதையின் விபரிதத்தால் பிற்காலத்தில் மிக விரக்தியடைந்திருந்தார். 1990களில் பிரான்ஸிற்கு சென்று அங்கும் ஒதுங்கியே இருந்து பின் குடும்பத்துடன் 2000ஆண்டிற்கு பின் லண்டனில் சென்று செட்டிலாகிவிட்டார். இப்போ அங்கு தபால்கந்தோர் ஒன்றில் தொலைதொடர்பு பகுதியில் வேலை செய்து கொண்டு கிறிஸ்தவ வேதசாட்சியாக குடும்பத்தோடு பணியாற்றுகின்றார். எவ்வளவோ திறமைகளுடன் -விடுதலைக் கனவுகளுடன் புறப்பட்ட நாம் எப்படி எப்படியெல்லாம் சிதறுண்டு-விரக்தியுடன் பழைய முகங்களை காணக்கூடாதென்று கூட வாழ்கின்றோம். இதுதான் விடுதலை தந்த பரிசா?

    அலக்ஸ் கண்டிப்பாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து உற்சாகத்துடன் எழுதுங்கள். இங்குள்ள எம் எல்லோருக்கும் வாழ்க்கைச் சுமை அதிகம்தான் ஆயினும் வரலாறு பலரின் வாழ்வை மீட்டுத்தரும் பணியை நாம் சிறிது எமது கடைசிக்காலத்தில் சிறிது நகர்த்தி விடுவோம் எம்முடன் இருந்து இல்லாமல் போன எம்மவர்களுக்காக…

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    உமா அண்ணா பிரபாகரன் மோதலுக்கு பாலசிங்கம்தான் காரணம். புலிக்கு சோசலிசம் சொல்லிகொடுக்க வந்த பாலா, புலியின் வெளிநாட்டு, அரசியல் தொடர்புகளை உமாவும், ஊர்மிளாவும் தான் செய்து வந்தார்கள். இது பாலசிங்கத்துக்கு பிடிக்கவில்லை. ஏக்கனவே உமா மேல் முரன்பட்டு இருந்த நாகராஜ் வாத்தியை பயன்படுத்தி உமா, ஊர்மிளா பற்றி கதை கட்டி விட்டார். ஊர்மிளா இறந்தது மஞ்சள் காமாளையல்தான் இதை 83 இல் பிளாட் ஆபீஸ் சில் வைத்து எம்மிடம் ஐயரும், நாகரசவும் கூறி சில பழைய சம்பவம்களையும் கூறினார்கள். மாறன் என்கிற தேவதாஸ் முதன் முதலில் இந்திய உளவு பயிச்சி பெற்று இலங்கைபோய் பிடிபட்டு 87 இல் இலங்கை, இந்திய ஒப்ந்ததின் பின்பு வெளிவந்தார். அவருக்கு எந்த முக்கிய பொறுப்பும் கொடுக்கவில்லை. மனம் உடைந்து இருந்தார். உமா கொலைக்கு பின் வவுனியா போக்குவரத்து சபை முகாமையாளராக பதவியில் இருந்தபோது மாணிக்கம்தாசன் கொடுத்த தொல்லைகளால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தோம். 82, 83 இல் நான், சங்கிலி, மாறன், மாதவன் அண்ணா மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தோம். மேலும் நிலா இறை குமரன் கொலையில் கண்ணனுக்கு ஒருவித சம்பந்தமுமில்லை. அந்த நேரம் பாண்டிபஜார் சூட்டில் பிரபாகரன் சுட்டு கண்ணன்தான் காயம்பட்டு, அதே இடத்தில் பொலிசில் பிடிபட்டார் உமா, கண்ணன், நிரஞ்சன் ஜெயிலில் இருக்கும் பொது சந்ததியர்தான் இறைகுமாரன், வவுனியா விமானபடை வீரர்கள் தாக்குதலுக்கு அனுமதி கொடுத்தது. இது விடயமாக ஜெயிலில் வைத்து உமா அண்ணா, கண்ணன் சந்ததியரோடு சண்டை பிடித்தபோது மாறன், நானும் இருந்தேன்

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //கொலைக் கறை படாத கைகள் என்ற வரலாறு சித்தாத்தர் அவர்களிடம் உண்டு. ……//nila
    இது உண்மையானால் 1)சித்தாத்தர் புளொட் தலைமைக்கு வந்த பின் புளொட் செய்த படுகொலைகளிற்கு யார் பொறுப்பு 2)எதற்காக சித்தாத்தரின் (தற்போதைய புளொட்) தோழர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிலங்கா அரசு மாதகொடுப்பனவு செய்தது.

    Reply
  • proff
    proff

    நிலா!
    நான் யாருக்கும் களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் ஊர்மிளா மரணத்தின் இன்னொரு பக்கத்தை எழுதமுற்படவில்லை. எனக்கு தெரிந்த நான் நேரடியாக கேட்ட கோவிந்தனின் வாக்குமூலம் இது. இனி சாந்தியோ சறோஜினியோ உண்மையைத்தான் சொல்வார்கள் என்றுமில்லை. கோவிந்தனையும் சந்ததியாரையும் கேட்கவும் முடியாது. நாம் எல்லோரையும் தூய மகாத்மாக்கள் என்று நினைத்துதான் கவிழ்ந்தோம். மகாத்மா காந்தி பற்றியும் பல்தரப்பட்ட சில்மிச கதைகள் உள்ளன.

    ஊர்மிளா மரணம் தொடர்பாக ஜேஆர் அரசில் காவல்துறை மாஅதிபராக இருந்த அனா செனிவிரத்தினாவுக்கு பெருஞ்சித்திரனார் மூலம் ஒரு இரகசிய கடிதம் உமா எழுதியதான தகவல் ஒன்றும் உள்ளது.

    தயாபரன் (கண்ணாடிச்சந்திரன்) கனடாவில் உள்ளவர். மனோ கணேசனின் கட்சியை சேர்ந்த கைதடி குமரகுருபரனின் சகோதரன்.

    தேவதாஸ் (மாறன்) மரியதாஸ்(சுப்பு) இருவரும் சகோதரர்கள் இருவரும் மத்தியகுழுவில் இருந்தவர்களே. நான் தெளிவாக எழுதியுள்ளேன்; மாறன் சிறிலங்கா சிறையில் இருந்தபோது மத்தியகுழுவுக்கு தெரிவு செய்யப்பட்டவர். மாறனின் சகோதரன் மரியதாஸ் தீப்பொறி வெளியேற்றத்தின் போது வெளியேறி சில காலம் தீப்பொறியுடன் தொடர்பில் இருந்துவிட்டு முற்றாக அரசியலில் இருந்து விலகிவிட்டார். யாழில் மா நகரசபையில் பெருந்தெருக்கள் திணைக்கள நேர்மையான பொறியியலாளராக இருந்தவர். தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் அன்மையில் EPDP இன் இணையத்தளத்தில் தேவானந்தாவால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வொன்றிலும் காணமுடிந்தது. மரியதாஸ் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோதும் யாழ் மா நகரசபையில் பணியாற்றியவர் என அறியமுடிகிறது.

    மரியதாஸ் சேந்தனுடனும் சில ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டவர் என அறிந்திருந்தேன். சேந்தன் விசுவானந்தனின் மைத்துனர்.

    இறை உமை கொலையில் பாலமோட்டை சிவம், சங்கிலி, மாவலி ராஜன் ஆகியோருக்கும் சம்பந்தமிருந்தது. மாவலி ராஜனே இறையின் வீட்டில் புலிகள் இயக்கத்தின் ஒரு மோட்டார்சைக்கிள் இருப்பதாகவும் அங்கு பிரபா வந்து செல்வதான தகவலை கொடுத்தவர் என அறிந்திருக்கிறேன்.

    இனி வேறு இது பற்றி தெரிந்தவர்கள் இன்னும் எழுதுங்கள்

    சீசர் என்ற இந்தியாவை சேர்ந்த மத்தியகுழு உறுப்பினரும் இன்னமும் இந்தியாவில் உள்ளார்.அண்மைக்காலத்தில் இயற்கை மரணமடைந்த முன்னாள் புளொட் உறுப்பினர் உருத்திரனின்( தமிழ்நாட்டில்) கல்வெட்டு ஒன்று கிடைத்தது. அந்த கல்வெட்டை சீசர் தொகுத்திருந்ததை பார்த்தேன்.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    தோஸ்து!
    உங்களுடைய கேள்விகள் மிகவும் பாமரத்தன்மையானவை. உங்களது கேள்விகளுக்கு திரு. த. சிர்த்தார்த்தன் அவர்கள் பதில்கூற இங்கு வரமாட்டார். உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கீழ்வருவன:

    1).
    “புளட்” உறுப்பினர்களையும் மற்றும் ஆதரவாளர்களையும் கொல்லவேண்டுமென்பதே புலிகளின் முக்கிய நோக்கமாகவிருந்தால், அதனை நிறைவேற்றவிடாது தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் எதிர்நடவடிக்கைகள் எடுத்தால், அது படுகொலையா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் புலிகள் “புளட்டை” கொன்று குவித்தாலும் – அதை மானுட தர்மம்மென்று ஏற்றுக்கொண்டு – கொல்ல வந்த புலிக்கு மாலைபோட வேண்டும் என்பதுமாதிரி இருக்கிறது. இந்த உங்கள் தத்துவத்திற்கு உலகில் எந்த இளிச்சவாயனுமே தயாரில்லை. எந்த உயிரும் தனதுயிரைக் காப்பாற்றுவதற்காக எதிர்வினை செய்யும்.

    2).
    1987 ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
    //2.11 The President of Sri Lanka will grant a general amnesty to political and other prisoners now held in custody under The Prevention of Terrorism Act and other emergency laws, and to combatants, as well as to those persons accused, charged and/or convicted under these laws. The Government of Sri Lanka will make special efforts to rehabilitate militant youth with a view to bringing them back into the mainstream of national life. India will co-operate in the process.//

    இந்த அடிப்படையிலே தான், இலங்கைஅரசினால் பண உதவிகள் எல்லா இயக்கங்களுக்கும் வளங்கப்பட்டன. நடந்து முடிந்த புலிகளுக்கெதிரான போரில், இந்தியா எந்த அடிப்படையில் இலங்கைக்கு உதவியது என்பதை இந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை வாசித்து தெளிவடைக!! -http://www.sangam.org/2007/07/Accord.php?uid=2484

    Reply
  • jeyarajah
    jeyarajah

    குலன்/ இந்த இளைஞர்பேரவையிலும் புஸ்பராசா போன்றவர்கள் காங்கேசந்துறைத் தொகுதி அமைப்பாளராக இருந்தார். இவர்கள் புலிகளின் பக்கம் ஆதரவு கொண்டவர்கள் என்று எண்ணுகிறேன்./
    இல்லை குலன். இந்த இளைஞர்பேரவையில் இருந்த பிரான்சிஸ் பின்பு புலிகளின் ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர். புஸ்பராசா எல்லாம் விட்ட பிரான்ஸ் வந்து ஒதுங்கி இருந்தவர். பின்பு வரதர் நாபா மூலம் ஈபிஆர்எல்எவ் இயக்கத்திற்காகச் செயற்பட்டவர். அவர் புலிக்கான ஆதரவு எடுக்கவில்லை. ஆனாலும் சாகும் தறுவாயிலும் தனது பழைய நண்பன் பிரான்சிஸ்சை காணவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் பிரான்சிஸ் அவரது மரணவீட்டிற்குச் சென்றவர்.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    என்ன காரணம் proff பல தவறான செய்திகளை (ஊர்மிளா மரணம் தொடர்பாக ஜேஆர் அரசில் காவல்துறை மாஅதிபராக இருந்த அனா செனிவிரத்தினாவுக்கு பெருஞ்சித்திரனார் மூலம் ஒரு இரகசிய கடிதம் உமா எழுதியதான தகவல் ஒன்றும் உள்ளது.) தருகிறார். பெருஞ்சித்திரனார் ஒரு பெரும் தமிழ் வெறியர் இந்த மாதிரி செயல்களை செய்யமாட்டார். செய்யவும் விடமாட்டார்

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஆனாலும் சாகும் தறுவாயிலும் தனது பழைய நண்பன் பிரான்சிஸ்சை காணவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் பிரான்சிஸ் அவரது மரணவீட்டிற்குச் சென்றவர்.//
    அதுமட்டுமல்ல ஜெயராஜ்; புஸ்பராஜா வருந்தி கேட்டும் தான் புலி அதனால் வரமுடியாது என சொல்லிவிட்டார் இந்த பிரான்ஸ்ஸிஸ், அதுக்குகான காரனம் பின்புதான் தெரியவந்தது, காதலாம் காதல்; (வேண்டாம்) ஆனால் புஸ்பராஜா இறக்கும் தறுவாயில் தனது நண்பனை பார்க்க வேண்டும் எப்படியும் அழைத்துவருபடி அவரது குடும்பத்திடம் கண்ணீர்விட்டாராம், புலிக்கும் கண்ணீருக்கும் என்ன சம்பந்தமே இல்லையே; பலரை கண்ணீர்விட செயத புலிகுணம் இந்த பிரான்ஸ்ஸ்சிடமும் இருந்ததால் அவர் உயிருடன் இருந்தபோது அருகாமையில் இருந்தும் பார்க்காமல் அவரது இறப்பை ரசிப்பதுக்காய் இறப்பு வீட்டுக்கு வந்தாராம்; அங்கு புஸ்பராசாவின் சகோதரங்கள் இவர்மீது கோபம் கொள்ள சிலர் சமாதானம் செய்து அன்று அந்த பிரச்சனை அடங்கியது, ஆனால் இனிமேல் காலங்களில் பிரான்ஸிஸ் அரசியல் செய்தால் தகுந்த பதில் அல்லது கடந்தகால கனவுகள் அம்பலம் அம்பலம்; இது நான் ஒரு ஒன்றுகூடலில் கேட்டது;

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //உங்களது கேள்விகளுக்கு திரு. த. சிர்த்தார்த்தன் அவர்கள் பதில்கூற இங்கு வரமாட்டார்//
    ” கொலைக் கறை படாத கைகள்” தன்னுடையவை என்று இங்கு வந்து த. சித்தார்த்தன் சொல்லாத நிலையில் நான் அவரிடம் எப்படி பதிலை எதிர்பார்க்க முடியும்.
    // தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் எதிர்நடவடிக்கைகள் எடுத்தால் அது படுகொலையா?//
    நண்பரே எனக்கு எது படுகொலை எது ஆயதமோதல்பலி எது மரணதண்டணை என்ற சட்ட வரையறை தெரியும். நான் கேட்பது சித்தார்த்தன் தலைமையிலான புளொட் மேற்கொண்ட படுகொலைகள் பற்றி. புளொட்ஆயுதமோதலில் மாத்திரம்தான் புலியை கொன்றது.புளொட்டால் கைது செய்யப்பட்ட புலிகளை புலிகளின் குடும்ப உறவுகள் மற்றும் ஆதரவாளர்களை கொல்லவில்லை. சாதரண பொதுமக்களை கடத்தி கப்பம் வாங்கவில்லை கப்பம் தரமறுத்தவர்களை கொல்லவில்லை.என சொல்லப்போகிறீர்களா!
    //1987 ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையிலே தான் இலங்கைஅரசினால் பண உதவிகள் எல்லா இயக்கங்களுக்கும் வளங்கப்பட்டன//
    1)ஆயுதஅமைப்பிலிருந்தவர்களுக்கு புனர்வாழ்வென்பது முதலில் ஆயுதங்கள் களையப்பட்டு ஆயுதஅமைப்பு கலைக்கப்படும். ஆயுதாரிகள் இயல்பான சமூகவாழ்விற்கு திரும்ப ஏதுவாக தொழிற்பயிற்சியும் முடிவில் தொழில் தொடங்குவதற்கான நிதியும் வழங்கப்படும். இந்த காலப்பகுதிக்கான வாழ்கை செலவும் கொடுக்கப்படும். ஆனால் புளொட் அமைப்பு 2009 வரை ஆயுதகுழுவாகவெல்லோ சிறிலங்கா அரசால் பராமரிக்கப்பட்டது.
    2)இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் குறிபிடப்பட்ட போராளிகளிற்கான புனர்வாழ்வென்பது 1987-1989 காலப்பகுதியில் நடந்து. 1987லிருந்து 2009 வாழ்வு கொடுப்பனவு புனர்வாழ்வு என்று சொல்கிறீர்களா அப்படியிருந்தாலும்? 1987 வரை போராளிகளாய் இருந்தவர்களிற்குதான் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் குறிபிடப்பட்ட புனர்வாழ்வு பொருந்தும் நண்பரே. புளொட் அமைப்பில் 1990ற்கு பிறகு இணைக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு எந்த அடிப்படையில் சிறிலங்கா அரசு மாதக்கொடுப்பனவு செய்தது?
    3)சரி தடுப்புமுகாமிலிருக்கும் முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு விடயம் அண்மையில் பேசப்பட்ட போது எதற்காக சித்தார்த்தன். புளொட் உறுப்பினர்களிற்கும் புனர்வாழ்வு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுவரை புளொட் உறுப்பினர்களிற்கு புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்தானே . இந்நிலையில் புளொட் உறுப்பினர்களிற்கு சிறிலங்கா அரசின் மாதக்கொடுப்பனவு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் குறிபிடப்பட்ட புனர்வாழ்வு என்ற வாதம் வலுவற்றதாகின்றதே நண்பரே!

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //சாதரண பொதுமக்களை கடத்தி கப்பம் வாங்கவில்லை கப்பம் தரமறுத்தவர்களை கொல்லவில்லை.என சொல்லப்போகிறீர்களா!//
    //ஆனால் புளொட் அமைப்பு 2009 வரை ஆயுதகுழுவாகவெல்லோ சிறிலங்கா அரசால் பராமரிக்கப்பட்டது.//
    //புளொட் அமைப்பில் 1990ற்கு பிறகு இணைக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு எந்த அடிப்படையில் சிறிலங்கா அரசு மாதக்கொடுப்பனவு செய்தது?//- தோஸ்து on December 21, 2010 4:13 pm

    விபரங்களை நீங்கள் வெளியிடுங்கள், விளைவுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்! இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமையினால்தான் இத்தனை குழப்பங்களும் சீரழிவுகளும். இந்த குழப்பங்களில்தான் நீங்கள் குறிப்பிட்டவகைகளும் இடம்பெற்றன!

    Reply
  • nila
    nila

    proff! நீங்கள் ஊர்மிளா அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஒரு உமாவின் கடிதம் சம்பந்தப்பட்டதாக கூறியிருந்தீர்கள். நான் இந்த விடயம் பற்றி நீண்ட காலத்திற்கு முதல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டிருந்தேன். எனவே இன்று அந்த விடயம் பற்றி அன்றைய போராளி ஒருவரிடம் சரியான தகவலை கேட்டு அறிந்து கொண்டேன். அதாவது
    நாங்கள் குறிப்பிட்டது போல் ஊர்மிளா மஞ்சல் காமாலை நோய் முற்றியநிலையில் “சாந்தி கிளினிக்” ல் மண்டுர் மகேந்திரனும் டாக்டர் சாந்தி அவர்களும் அருகே இருந்த நிலையில் இறந்துள்ளார். இந்நேரம் உமா- பிரபா பிரிவு நடந்து உமாவிற்கு பிரபா குழுவினரால் மரணதண்டனை விதிக்கப்பட்ட நேரம். இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டிலேயே ஆளுக்கால் தலைமறைவாய் திரிந்த நேரம் இந்நேரம்தான் சந்ததியார்-ராஜன் கூடி முடிவெடுத்து உமாவை கழகத்தில் இணைப்பதென்பதும் அதன் பின் ராஜன் மண்ணடியில் உமாவை சந்தித்ததென்பதுவும் மேலே எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அதன்படி ராஜன் இந்தியாவிற்கு புறப்பட்ட வழியில் ஊர்மிளாவின் மரணச்செய்தி கேள்விபட்டதால் திருச்சியில் நின்று தொலைபேசி மூலம் மேற்கொண்டு ஊர்மிளாவின் மரணத்தகவலை அறிய அங்குள்ளவருடன் தொடர்புகொண்டபோது தமிழ்நாட்டிலிருந்து மணவைத்தம்பி என்ற தமிழ்நாட்டு (இவரும் எம்மவர்க்காக நிறையவே ஒத்துழைப்பு தந்தவர்) நபர் ஜெயவர்த்தனாவிற்கு ஒரு தந்தி கொடுத்திருந்ததாகவும் அதில் “இந்த ஊர்மிளாவின் மரணம் இயற்கையானது அல்ல: பிரபாகரனால் ஊர்மிளாவிற்கு மெதுநிலை சயனைற் மூலம் ஏற்படுத்தப்பட்ட கொலை தான் என தமக்குத் தெரியுமெனவும் குறிப்பிட்டு இந்த செய்தியை இலங்கையரசுக்கு அனுப்பியுள்ளார். எனவே இச் செய்தியை உடனே ராஜன் மூலம் அங்கு விசாரிக்கச் சொல்லப்பட்டது. உடனே ராஜனும் உமாவிடம் விசாரித்ததில் மணவைத்தம்பி ஏதோ உணர்ச்சி வேகத்தில் அப்படிச் செய்துவிட்டார் என்று உமா மூலம் கூறப்பட்டிருந்தது. அப்போது இப் பொய் செய்தியால் தொடர்ந்தும் திரு.திருமதி ராஜசுந்தரமும் சுற்றியுள்ளவர்கள் எல்லோருமாக இலங்கை அரசின் கெடுபிடிக்குள் சிக்கப்போவதை உமாவிற்கு ராஜனால் சுட்டிக்காட்டப்பட்டது. பின் 1989 மட்டில் ராஜன் மணவைத்தம்பி அவர்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தபோது அன்று ஏன் இப்படி ஒரு பொய்யான தந்தியை இலங்கையரசுக்கு அனுப்பினீர்கள் என ராஜனால் கேட்கப்பட்டபோது மணவைத்தம்பியின் பதிலானது “முகுந்தன்(உமா) இப்படி ஒரு செய்தியை தன்னிடம் தந்து உங்கள் பெயரில் இலங்கை அரசிற்கு (ஜெயவர்த்தனாவிற்கு) அனுப்புங்கள் என்று சொன்னதால்தான் நான் அப்படிச் செய்தேன் மேற்கொண்டு இதில் உள்ள எந்த விடயத்தையும் நான் ஆராயவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு கேவலமாக அன்றே தமிழ்நாட்டுத் தமிழரை வைத்து நடந்திருக்கின்றதென்றால் எங்கள் தலைமைகளின் நாணயம்- நேர்மை -குழிபறிப்புக்களை என்னவென்று சொல்வது. குழிபறித்தவர்கள் குழிக்குள் போனாலும் சம்பந்தப்பட்ட சாட்சிகள் உயிரோடுதானே உள்ளனர். நாம் நம்பி வந்த தலைமைகளின் சொந்தமுகங்கள் தொடர்ந்து தெரிய தெரிய இதற்கா நாம் புறப்பட்டோம் என மனம் பதைக்கின்றது.

    Reply
  • proff
    proff

    நிலா!
    எனது பதிவில் குறிப்பிட்ட பெரும்சித்திரனார் என்பது தவறானது. நீங்கள் எழுதியுள்ள மணவைத்தம்பி என்பதே சரியானது. எனது மனப்பதிவில் உடனும் அப்பெயர் வரவில்லை. எனது தகவலுடன் தொடர்புபடுத்தி தாங்கள் எழுதிய தகவல்கள் பற்றி மற்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    Reply
  • Mohan
    Mohan

    உமை, இரைகுமரன் கொலை தொடர்பகா கன்னதசான் பெயரும் அடிபட்டது

    Reply
  • மகுடி
    மகுடி

    //உமை, இரைகுமரன் கொலை தொடர்பகா கன்னதசான் பெயரும் அடிபட்டது// – Mohan

    சண்முகம் என்ற பெரிய மென்டிசுக்கும், வெங்கட் என்ற கண்ணதாசனுக்கும்; தற்போது கனடாவில் வசிக்கும் தடியன் ரவிக்கும் உமை, இறைகுமரன் கொலையில் தொடர்புண்டு. இக் கொலையில் கந்தசாமி(சங்கிலி)க்கு தொடர்பிருப்பதாக எழுதப்பட்டடிருந்தது. ஆனால் இக் கொலை நடைபெறும் போது சங்கிலி சென்னையில் இருந்தார்.

    நிலா மற்றும் புரொபசர் ஆகியோர் குறிப்பிடும் அளவுக்கு முகுந்தன் எனப்படும் உமாமகேசுவரன் தமிழினத்துக்கு துரோகம் இழைத்தவராக தெரிகிறது. இதைத் தெரிந்த பின்பும் முன்னணித் தோழர்கள் ஏன் அவரை அப்புறப்படுத்தாமல் கடைசி வரை அவருக்கு துதி பாடிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இப்போதுதான் இவர்கள் முகுந்தன் குறித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறார்கள். புலி இருக்கும் போது சால்ரா அடித்த கூட்டம், இப்போது மாறிக் கதைப்பது போல இருக்கிறது இந்தக் கூட்டமும்.

    இந்த துரோகத்தை வளர விடாது ஒழித்த ராபின் கூட்டமே உண்மையான விடுதலைப் போராளிகள் போலத் தெரியுது. அதற்கு முன் இப்போது கதைக்கும் அனைவரும் முகுந்தனின் படத்தை கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு பெரியய்யா எனத் தெரிந்தோர் என்பதை எம்மால் மறக்க முடியவில்லை. இனிவரும் காலங்களிலாவது எந்த ஒரு தனி மனிதரையும் முன்னிலைப்படுத்தி அரசியலோ அல்லது விடுதலைப் போராட்டமோ செய்யக் கூடாது என்பதை எமது கடந்த கால வரலாறு இயம்புகிறது. இதை இனியாவது நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    Reply
  • Kulan
    Kulan

    //குலன்/ இந்த இளைஞர்பேரவையிலும் புஸ்பராசா போன்றவர்கள் காங்கேசந்துறைத் தொகுதி அமைப்பாளராக இருந்தார். இவர்கள் புலிகளின் பக்கம் ஆதரவு கொண்டவர்கள் என்று எண்ணுகிறேன்./
    இல்லை குலன். இந்த இளைஞர்பேரவையில் இருந்த பிரான்சிஸ் பின்பு புலிகளின் ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர். புஸ்பராசா எல்லாம் விட்ட பிரான்ஸ் வந்து ஒதுங்கி இருந்தவர். பின்பு வரதர் நாபா மூலம் ஈபிஆர்எல்எவ் இயக்கத்திற்காகச் செயற்பட்டவர். அவர் புலிக்கான ஆதரவு எடுக்கவில்லை. ஆனாலும் சாகும் தறுவாயிலும் தனது பழைய நண்பன் பிரான்சிஸ்சை காணவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் பிரான்சிஸ் அவரது மரணவீட்டிற்குச் சென்றவர்.// ஜெயராஜ்-

    நன்றி ஜெயராஜ். மிக மிக வேதனையான விடயத்தை அறிகிறேன். எல்லோரும் ஆரம்பத்தில் ஒன்றாய் இருந்தோம். எந்த இயக்கமாக இருந்தாலும் நாம் தமிழர்கள் எம்மக்களுக்காகத் தானே போராட எண்ணினேம். அதிகாரம் வெறி ஆயுதமனநோய்… எம்சமூகத்தையே மனநோயுள்ள சமூகமாக மாற்றி விட்டது. பழையனவற்றை தேடும்போதும் மீழாய்செய்யும் போதும் வேதனையும் விரக்த்தியும் தான் மீதமாகிறது. இதனால் பலகாலமாக ஒதுங்கி எதுமே அறியாதவன் போல் இருந்தேன். தேசம் இழுத்து வந்து விட்டிருக்கிறது. ஒரு விடயத்தை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலோ அன்றி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவர்கள் எவரும் சந்தோசமாக இருக்க வில்லை. மனச்சாட்சியின் தண்டனைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை அறிவது அவசியம். இதை முக்கியமாகப் புலிபினாமிகள் எமது புலம்பெயர்ந்த மக்களிடையே தாம் தம் திமிருக்காக செய்யும் அட்டகாசங்களையும் பொறுக்க முடியவில்லை. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடிந்த கதைதான். என்னை மன்னித்து விடுங்கள்.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //விபரங்களை நீங்கள் வெளியிடுங்கள் விளைவுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்//
    சித்தார்த்தன் தலைமையிலான புளொட் மேற்கொண்ட கடத்தல் கப்பம் கொள்ளை மற்றும் படுகொலை நான் பட்டியலிட நீங்கள் அதற்கான கொள்கைவிளக்கம்/மறுப்பறிக்கை தருகிறேன் என்கிறீர்கள். நான் 1987லிருந்து போனமாதம் வரை கோமாவில் இருக்கவில்லை நண்பரே! 1987லிருந்து இந்திய சிறிலங்கா அரசால் பராமரிக்கப்பட்ட தமிழ் ஆயுதகுழுக்கள் என்ன செய்தன அதனை எப்படியெல்லாம் நியாயப்படுத்த/மறுக்க முனைந்தன என்பது எனக்கு அத்துப்படி.
    //இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமையினால்தான் இத்தனை குழப்பங்களும் …//
    இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைதானே சொல்கிறீர்கள். இந்த ஒப்பந்தம் யாரின் நன்மைக்காக செய்யப்பட்டது என்பதும் தெரியும். சிறையில் துன்புற்ற இளைஞர்களிற்கு விடுதலை கிடைத்ததும்.அதேசமயம் 10 000 ஈழத்தமிழரின் உயிரை பலியெடுத்ததும். தமிழருக்கு எந்த உருப்படியான உரிமைகளே அதிகாரங்களே கிடைக்கவில்லையென்பது தெரியும் . ஒப்பந்தம் போட்டாவைக்கே அதை நடைமுறைபடுத்த முழு உளவிருப்பு இருக்கவில்லை இந்நிலையில் “நடைமுறைப்படுத்த விடாமையினால்தான் ” என்று பழியை எங்கோ போடுறீங்கள்.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    திரு. தோஸ்து அவர்களே!
    நான் கடந்த இரு தசாப்த்தங்களுக்கு மேலாக இலங்கையில் இருக்கவில்லை, மேலும் இனவாத அடிப்படையில் எழுதும் ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற செய்திகளை நம்புவதில்லை, ஏனனில் கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்து அறிவதே மெய் என்ற கோட்பாட்டில் வாழுபவன் நான். அதனால்த்தான் உங்கள்மூலமாக என்னநடந்தது என்ற விபரங்களை அறியலாமென ஆவலாய் இருந்தேன், ஆனால் நீங்களோ கோமாவில் இருக்கவில்லையென எழுதி சமாளித்து விட்டீர்கள்.

    சரி, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடான இனப்பிரச்சனைக்கான ஆரம்பகட்ட தீர்வை ஏற்றுக்கொண்டு, படிப்படியாக கடந்த 23 வருடங்களில் மாகாணசுயாட்சிக்கு எமது பிரதேசங்களை வளர்த்தெடுத்திருக்கலாமென்றால் அதையும் “இதில ஒன்றுமில்லை”யென்று வேண்டாமென்கிறீர்கள், அப்படியானால் உங்களிடம் ஏதோ ஒரு சிறப்பான திட்டம் இருப்பதாக தெரிகிறது. அந்த திட்டத்தை எங்களுக்கும் கொஞ்சம் விளக்குவீர்களானால், இந்த இனத்தில் பிறந்த குற்றத்திற்காக நாங்களும் உங்களுக்கு ஆதரவு தருவோம் தானே. உங்கள் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //……எழுதி சமாளித்து விட்டீர்கள்//Thalapathi
    “விளைவுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்” என்று நீங்களே சொல்லிவிட்டு 24 மணித்தியாலத்திற்குள் “உங்கள்மூலமாக என்னநடந்தது என்ற விபரங்களை அறியலாமென ஆவலாய் இருந்தேன் ஆனால் நீங்களோ கோமாவில் இருக்கவில்லையென எழுதி சமாளித்து விட்டீர்கள்” என்கிறீர்கள். நண்பரே இப்போ சொல்லுங்கள் யார் சமாளித்தது.
    //இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடான இனப்பிரச்சனைக்கான ஆரம்பகட்ட தீர்வை ஏற்றுக்கொண்டு படிப்படியாக கடந்த 23 வருடங்களில் மாகாணசுயாட்சிக்கு எமது பிரதேசங்களை வளர்த்தெடுத்திருக்கலாமென்றால்//
    உருப்படியான உரிமைகளே அதிகாரங்களே இல்லாத மாகணசபையை வைத்துக்கொண்டு ” படிப்படியாக கடந்த 23 வருடங்களில் மாகாணசுயாட்சிக்கு எமது பிரதேசங்களை வளர்த்தெடுத்திருக்கலாம்” என்ற பொறிமுறையை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ. அதிலும் “மாகாண சுயாட்சிக்கு எமது பிரதேசங்களை வளர்த்தெடுத்திருக்கலாம்” என்ற பொறிமுறையை முக்கியம் கொடுத்து சொல்லுங்கோ!
    //உங்களிடம் ஏதோ ஒரு சிறப்பான திட்டம் இருப்பதாக தெரிகிறது. அந்த திட்டத்தை எங்களுக்கும் கொஞ்சம் விளக்குவீர்களானால்//
    ஒன்றுபட்டு ஒரு நாட்டிற்குள் வாழமுடியாது இனங்களிடையே முரண்பாடுகள் மோசமாக தலைதூக்கும் போது உரிமைகள் மறுக்கப்படுவதாக கருதும் பிரதேசமக்களிடம் ஐனநாயகமுறையில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி மக்களின் விருப்படி தீர்வை கொடுப்பது. இதுதான் இன்றைய ஐனநாயக உலகில் சாதரண நடைமுறை.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    தோஸ்து!
    நீங்களும் உங்கள் சந்ததிகளும் வெளிநாடுகளில் தான் வாழப்போகிறோம் என்று முடிவெடுத்துவிட்டால், அதை வலுப்படுத்துவற்காக, நடக்க முடியாதவகளைகள் எல்லாவற்றையும் கோரிக்கைகளாக முன்வைக்கலாம்தானே. இதைப் போலத்தான் உங்கள் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்குமென என எனக்கு எண்ணத் தோன்றுகிறது. வாசிப்பவர்களுக்கு நம்மிருவரினது கருத்தாடல்களின் மையப்பொருள் கட்டாயமாக புரிந்திருக்குமென நம்புகிறேன்.

    உங்கள் கருத்துகளுக்கு நான் பச்சையாய் விளக்கம் தருவதாயின் எனது கருத்துக்கள் இப்படியிருக்கும். எனது பின்னூட்டத்தை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன், முடிந்தால் விபரங்களை முன்வையுங்கள்!
    Thalaphathy on December 21, 2010 9:53 pm

    //சாதரண பொதுமக்களை கடத்தி கப்பம் வாங்கவில்லை கப்பம் தரமறுத்தவர்களை கொல்லவில்லை.என சொல்லப்போகிறீர்களா!//
    //ஆனால் புளொட் அமைப்பு 2009 வரை ஆயுதகுழுவாகவெல்லோ சிறிலங்கா அரசால் பராமரிக்கப்பட்டது.//
    //புளொட் அமைப்பில் 1990ற்கு பிறகு இணைக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு எந்த அடிப்படையில் சிறிலங்கா அரசு மாதக்கொடுப்பனவு செய்தது?//- தோஸ்து on December 21, 2010 4:13 pm

    விபரங்களை நீங்கள் வெளியிடுங்கள், விளைவுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்! இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமையினால்தான் இத்தனை குழப்பங்களும் சீரழிவுகளும். இந்த குழப்பங்களில்தான் நீங்கள் குறிப்பிட்டவகைகளும் இடம்பெற்றன!

    Reply
  • ரகு
    ரகு

    சுந்தரத்தின் படுகொலைக்கு பின் “புதியபாதை” ஆசிரியராக இருந்து மாதாமாதம் ஐம்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் புலிகளின் மற்றும் இராணுவ போலீஸ் கண்களுக்கு மண் தூவி தானே யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிட்ட கண்ணாடி சந்திரன் (தயாபரன்) 1984ல் புளட்டின் ஒரத்தநாடு “B” முகாமில் கந்தசமியாலும் மொட்டை மூர்த்தியாலும் மாதக்கணக்கில் சித்திரவதை செய்யப்படுகையில் விஷயம் வெளியில் கசிந்து கதை பரவியதை அடுத்து தவறுதலாக வேறு ஒருவருக்கு பதிலாக மாறி கைது பண்ணி சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்லி இந்திய இராணுவத்தை சேர்ந்த சேகருடன் சேர்ந்து தளபதிகளுக்கான முகாம் ஒன்றை ஆரம்பித்து பாலஸ்தீனத்திலும் உத்தரபிரதேசத்திலும் பயிற்சி பெற்றவர்களுக்கு தளபதிகளுக்கான பயிற்சி கொடுக்குமாறு முகுந்தனால் (உமா) பணிக்கபட்டார்.
    இதே “B” முகாமில் புலிகளின் பொட்டம்மான் அப்போது வேதாரணியத்தில் கரைக்கு பொறுப்பாக இருந்த போது கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட போது சென்னையில் கண்ணன் (ஜோதீஸ்வரனை) புலிகள் கடத்தி பேரம் பேசி பொட்டம்மானை விடுவித்தனர். விடுதலை இயக்கங்களில் முதன் முதலாக சித்திரவதை முகாம் ஆரம்பித்த பெருமை புளட்டையே சாரும்.

    ஊர்மிளா அக்கா செங்கமாரி வந்து மங்கமாரியாக்கி இறந்து போனா.
    ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் சென்னையில் மொட்டைமாடியில் வேறு வேறு பாயில் படுத்தது உண்மை.
    உமாமகேஸ்வரனின் வாரிசுகளை கருவில் அழிக்க சென்னையில் அபோசன் கிளினுக்கு அடிக்கடி துணைக்கு போன அனலைதீவுகுமார் (குமரகுரு / மைக்கல்) தற்போது கனடாவில் ஸ்காபரோவில் இருக்கிறார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பின் “புதியபாதை” ஆசிரியராக இருந்து மாதாமாதம் ஐம்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் புலிகளின் மற்றும் இராணுவ போலீஸ் கண்களுக்கு மண் தூவி தானே யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிட்ட கண்ணாடி சந்திரன் (தயாபரன்)//
    இதில் ஒரு புத்தகத்தையாவது அவர் வாசித்தாரா?? ஏனென்றால் அவரது நீங்கள் சொல்லும் காலம் மக்கள் பற்றியதாக இருக்கவில்லை என அவரது நண்பர்கள் சொல்லுவதால் அப்படி கேட்டென்; ஊருக்கு உபதேசமோ என;

    //சேகருடன் சேர்ந்து தளபதிகளுக்கான முகாம் ஒன்றை ஆரம்பித்து பாலஸ்தீனத்திலும் உத்தரபிரதேசத்திலும் பயிற்சி பெற்றவர்களுக்கு தளபதிகளுக்கான பயிற்சி கொடுக்குமாறு முகுந்தனால் (உமா) பணிக்கபட்டார்.//
    இந்த இடத்தில் சந்திரன் தனது புதியபாதை அறிவை கோட்டை விட்டு விட்டாரே, இங்கே மட்டும் அவர் தனது பி முகாம் (சங்கிலி மூர்த்தி) பெருமைகளை சொல்லியிருந்தால் இம்மட்டு அலங்கோலம் வந்திருக்காது அல்லவா?? காரணம் நீங்கள் சொல்லும் முகாமில் பயிற்ச்சி பெற்றவர்கள் உமாவை விட கழகத்தை நேசித்தவர்கள் அல்லவா??

    //இதே “B” முகாமில் புலிகளின் பொட்டம்மான் அப்போது வேதாரணியத்தில் கரைக்கு பொறுப்பாக இருந்த போது கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட போது சென்னையில் கண்ணன் (ஜோதீஸ்வரனை) புலிகள் கடத்தி பேரம் பேசி பொட்டம்மானை விடுவித்தனர். //
    கேக்க நல்லாய்தான் இருக்கு; ஆனால் இது உன்மையா தெரியவில்லையே; அத்துடன் சாத்திய படுமா இது? ஆனாலும் இதுக்குள் ஒரு உன்மை மறைந்திருக்கு;

    //ஊர்மிளா அக்கா செங்கமாரி வந்து மங்கமாரியாக்கி இறந்து போனா. ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் சென்னையில் மொட்டைமாடியில் வேறு வேறு பாயில் படுத்தது உண்மை.//
    உங்கள் சில்மிஸம் தெரிகிறது;

    //உமாமகேஸ்வரனின் வாரிசுகளை கருவில் அழிக்க சென்னையில் அபோசன் கிளினுக்கு அடிக்கடி துணைக்கு போன அனலைதீவுகுமார் (குமரகுரு / மைக்கல்) தற்போது கனடாவில் ஸ்காபரோவில் இருக்கிறார்.//
    அப்போ மைக்கல் மாமா வேலை செய்யதான் இந்தியா சென்றாரா?? விடுதலைக்கு போனவர் கருகலக்க அதுவும் அடிக்கடி ,,,,,, இது பிரபா உமாவுக்கு கொடுத்த மரண தண்டனைக்கான காரணம்; ஆக புலியை நியாயபடுத்த மிக சிரமபடுறியள்; உமா பெண்கள் விடயத்தில் சபலம் கொண்டவர்தான்; ஆனால் ஊர்மிளாவை அவருடன் தொடர்பு படுத்துவதால் அது பொய்யாகும் பட்சத்தில் அவரது பின் நாள் லீலைகளும் பொய்யாகி விடும்; இங்கே நான் உமாவை நியாய படுத்தவில்லை, ஊர்மிளாவின் செயல்பாடுகள் பலர்போல் பல்லிக்கும் தெரியும் என்பதால் உங்கள் இந்த கருத்து பொய்யாகவே இருக்கும் என்பது என் கருத்து; ஊர்மிளாமீது மிக கோபம் கொண்டவர் நக்கீரன் நாகராசாதான்; இப்போ நாகராசாவின் வரவு(அமைப்புக்குள்) செலவு (பிரிதல்) எப்படி என உங்களுக்கு இந்த மர்ம கதையை சொன்ன அல்லது தெரிந்த அந்த நபரிடம் கேட்டால் சில உன்மைகள் வெளிவரும்; இல்லையேல் இதே தேசத்தில் அவரது காலம் வரும்போது கச்சேரிதான்;

    Reply
  • vanavil
    vanavil

    பொட்டம்மானை தஞ்சாவூரில் வைத்து புளொட் சுற்றி வளைத்தது உண்மை. தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக பொட்டம்மான் அங்கே வந்திருப்பது தெரிந்து சுற்றி வளைத்தார்கள். ஆனால் அவரைப் பிடிக்கவோ அல்லது கைது செய்யவோ இல்லை.பொட்டம்மானை எச்சரித்து அனுப்பி விட்டார்கள். இந்த நடிவடிக்கைக்கு மறு எச்சரிக்கையாக , தங்களாலும் எதையும் செய்ய முடியும் என்று நுங்கப்பாக்கம் தமிழர் தகவல் நடுவத்தில் வைத்தே கண்ணனை புலிகள் கடத்தினார்கள். இதற்கு மறைமுகமாக அன்றைய டீஐஜீ அலெக்சாண்டர் உதவியிருந்தார்.

    கண்ணனைக் கடத்திய போது புகார் செய்யச் சென்ற உமா மற்றும் சித்தர் ஆகியேரிடம் யாரோ கடத்தியிருக்கிறார்கள் என்று புகார் கொடுக்குமாறும் , எல்டீடியின் பெயரே வரலாகாது என டீஐஜீ அலெக்சாண்டர் சொன்னார். அதை எதிர்த்து உமா கதைத்த போது ; இப்ப நினைத்தால் உங்கள் இருவரையும் உள்ளே போடுவேன் என்று மிரட்டினார். பின்னர் எதுவித நடவடிக்கையுமில்லாமல் கண்ணனை விடுவித்தார்கள். போலீசாரும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அன்றைய பிரதமர் ராஜீவிடம், உமா புகார் ஒன்றைக் கொடுத்தார்.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    நான் இத்தலைப்பின் முயற்சியை ஈழத்தமிழரின் வாழ்வில் மிக நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல் அமைப்பாக இருந்த புளொட்டின் மீள் அரசியல் மீட்சிக்கான முயற்சியாகத்தான் பார்த்தேன். பிறகுதான் புரிந்தது சீரழிவின் நீட்சியாகவுள்ள வவுனியா வசூல்ராஜாகளிற்கான வக்காலத்தென. இனி இது சீரழிவுகளை நீட்டிசெல்வோருக்கான பிரச்சாரபதிவாகவே என்னால் பார்க்க முடியும். முன்னோக்கிய அரசியல் கருத்தாடலிற்கு இத்தலைப்பில் இடமில்லை.
    //விபரங்களை நீங்கள் வெளியிடுங்கள் விளைவுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்//Thalaphathy
    நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏலவே பதில் சொல்லியாச்சு. நான் கேட்ட எதாவதொரு விடயத்திற்கு பதில் சொல்லியிருக்கிறீர்களா? எனது கேள்விக்கு புதிதுபுதிதான பதில் கேள்விதான் உங்கள் பதில். இந்தவகையான உங்கள் பின்னூட்டம் அரசியல் சிந்தனை வரட்சியின் வெளிப்பாடு.
    “கடத்தல் கப்பம் கொள்ளை மற்றும் படுகொலை நான் பட்டியலிட நீங்கள் அதற்கான கொள்கைவிளக்கம்/ மறுப்பறிக்கை” தரும் செயல்பாடு அலுத்து சலிச்சு போன பிற்போக்கு அரசியல் பிரச்சாரம்.

    //நீங்களும் உங்கள் சந்ததிகளும் வெளிநாடுகளில் தான் வாழப்போகிறோம் என்று முடிவெடுத்துவிட்டால் …..//
    அப்படி நானொரு முடிந்த முடிபிற்கு வந்திருந்தால் இலங்கை அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டிய தேவையென்ன? நான் வாழும் நாட்டின் மொழி. நவீனதொழில் அனுபவம். இந்நாட்டின் அரசியல் விடயங்களில் ஆர்வம் காட்டினால் போதுமானது நண்பரே.
    250 000 ஈழத்தமிழ் உயிர்களை பலிகொடுத்த எங்களிற்கு அதிகாரமும் உரிமைகளுமுடைய அரசென்ற கட்டமைப்புடைய தீர்வை நோக்கி நகர்வதைதான் முன்னோக்கிய அரசியலாக பார்க்க முடியும். உரிமைகளே அதிகாரங்களே இல்லாத மாகணசபையை வைத்து ஈழத்தமிழர்களிற்கு எந்த அரசியல் பொருளாதார. விமோசனமும் கிடைக்காது.

    // நடக்க முடியாதவகளைகள் எல்லாவற்றையும் கோரிக்கைகளாக முன்வைக்கலாம்தானே.//
    கொசவாவிலும் கிழக்குதீமோரிலும் நடந்திருக்கு. இலங்கையில் தமிழருக்கு உரிமையோ பாதுகாப்போ இல்லையென்ற முடிவிற்கு சக்திமிக்க நாடுகள் வந்தால்.ஈழத்தமிழர்களிற்கு விமோசனமும் கிடைக்கும். அதற்காகத்தான் சிறிலங்கா அரசுமீது யுத்தகுற்றச்சாட்டையும் மனிதவுரிமை மீறலையும் நீதிமன்ற தீர்ப்பினூடக உறுதிசெய்ய புலத்தமிழரின் அயராத முயற்சி.

    “நோகமல் நுங்கோ இளநீரோ சாப்பிடமுடியாது” இந்நிலையில் விடுதலைக்கு கடும் அயராத போராட்டம் தேவை. முன்னோக்கிய அரசியல் பார்வையுடன் கருத்தாட முடியுமானால் தொடருங்கள். இல்லையெனில் “கொள்கைவிளக்கம் /மறுப்பறிக்கை” தரும் செயல்பாடு “கேள்விக்கு பதிலில்லாது புதிதுபுதிதான பதில் கேள்வி” என்பது. எனது உங்களது தேசம்நெற் நிர்வாகத்தினது நேரத்தை வீண்னடிப்பதுதான் விளைபயனாக இருக்கும். அதில் எனக்கு துளியேனும் ஆர்வமில்லை.

    Reply
  • ரூபன்
    ரூபன்

    நண்பர்களே!
    இங்கு, பொய்களும், புளுகுகழுமே.. கடந்தகால வரலாறாக படைக்கப்ட்டுள்ளது! இந்த உண்மைகளை இதயசுத்தியோடு மக்கள் முன் ‘வெட்கத்தை விட்டுப்’ பேச பலர் தயாரகவில்லை!

    இந்தக் கட்டுரையில் கூட ஊர்மிளாவின் விசயம்தான் சூடுபிடித்தும் உள்ளது!

    நிலா!, ஊர்மிலாவின் சடலம் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டதா? (வறுதலைவிளான்) அல்லது வன்னியில் புதைக்கப்பட்டதா?
    இதுபற்றி ஊர்மிளாவின் இனம்சனத்தின் கருத்தென்ன?

    ரூபன்
    24 12 10

    Reply
  • பல்லி
    பல்லி

    //இங்கு, பொய்களும், புளுகுகழுமே.. கடந்தகால வரலாறாக படைக்கப்ட்டுள்ளது! இந்த உண்மைகளை இதயசுத்தியோடு மக்கள் முன் ‘வெட்கத்தை விட்டுப்’ பேச பலர் தயாரகவில்லை!//
    அப்படியானால் உங்களுக்கு தெரிந்த உன்மைகளை வெட்க்கத்தை விட்டு சொல்லுங்கோவன்;

    //இந்தக் கட்டுரையில் கூட ஊர்மிளாவின் விசயம்தான் சூடுபிடித்தும் உள்ளது!//
    அப்படி சொல்ல முடியாது பலவிடயம் போல் ஊர்மிளா விடயமும் பேசபடுகிறது; அவர் ஈழ போராட்டத்தின் முதல் பெண்மணி என நினைக்கிறேன்; இது தவறாக கூட இருக்கலாம்; அந்த வகையில் ஈழவரலாறு வரும்போது அவர் பேசபடுவது நியாயம்தானே; ஆனால் அவர் பற்றி அனாகரிகமாக பேசுவதை தவிர்க்கலாம் என்பது பல்லியின் கருத்து;

    //இதுபற்றி ஊர்மிளாவின் இனம்சனத்தின் கருத்தென்ன?//
    நீங்கள் கூட இதுபற்றிய கருத்தை சொல்லலாம்; காரணம் நீங்களும்;;;;;;;;;

    //நிலா!, ஊர்மிலாவின் சடலம் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டதா? (வறுதலைவிளான்) அல்லது வன்னியில் புதைக்கப்பட்டதா?//
    நல்லவேளை எரித்ததா அல்லது புதைத்ததா என கேக்காமல் இப்படி கேட்டதால் இதுக்கான விளக்கம் தங்களுடன் பல்லியும் நிலா மூலம் தெரிந்து கொள்கிறேன்;

    //நான் இத்தலைப்பின் முயற்சியை ஈழத்தமிழரின் வாழ்வில் மிக நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல் அமைப்பாக இருந்த புளொட்டின் மீள் அரசியல் மீட்சிக்கான முயற்சியாகத்தான் பார்த்தேன்//
    இல்லை தோஸ்த்து நீங்கள் அப்படியான விடயங்களைதான் கவனிக்கிறியள்; கட்டுரை பற்றி குலன் குசும்பு போன்றோர் மிக ஆரோக்கியமான கருத்துடந்தானே வந்தார்கள்; காரணம் அவர்கள் அன்று செயல்பட்டவர்கள், அதேபோல் தளபதி தனக்கு தெரிந்த சீரளிவை சொல்லுகிறார்; ஆனாலும் அவர் கட்டுரையை விட்டு விலகி செல்லவில்லைதானே? இங்கே யாரையும் நியாயபடுத்தவில்லை, ஆனால் நடந்த அனியாயங்கள் சொல்லபடும் போது சில நியாயங்கள் புலபடலாம்;

    //பதிலில்லாது புதிதுபுதிதான பதில் கேள்வி” என்பது. எனது உங்களது தேசம்நெற் நிர்வாகத்தினது நேரத்தை வீண்னடிப்பதுதான் விளைபயனாக இருக்கும். அதில் எனக்கு துளியேனும் ஆர்வமில்லை.//
    இது தவறான வாதம் உங்கள் நேரம் காலம் பற்றி தான் உங்கள் கவலை; ஆனால் உன்மைகள் உறங்க வேண்டுமா என சிந்தித்தால் நாம் தொடரதான் வேண்டும், அதுக்காக தேசம் தமது நேரத்தை கணக்கில் எடுக்காது என நினைக்கிறேன்; அதேபோல் உங்களுக்கு பிடித்தமான அல்லது விரும்பிய பதில் கிடைக்காதபோது இப்படி கேள்வி பதில் என மொட்டையாக சொல்லுவது சரிதானா??

    Reply
  • ரூபன்
    ரூபன்

    பல்லி,
    உமக்கு முதல் முதலாக எழுதுகிறேன்!
    ”//நிலா!, ஊர்மிலாவின் சடலம் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டதா? (வறுதலைவிளான்) அல்லது வன்னியில் புதைக்கப்பட்டதா?//
    நல்லவேளை எரித்ததா அல்லது புதைத்ததா என கேக்காமல் இப்படி கேட்டதால் இதுக்கான விளக்கம் தங்களுடன் பல்லியும் நிலா மூலம் தெரிந்து கொள்கிறேன்;”

    கட்டுரையில்…

    ”ஊர்மிளாவின் மரணம்:
    முன் குறிப்பிட்டதுபோல் புலிகள் உடைந்து போனதில் இந்தியாவிலும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாத நிலையில் அவர்களுக்கு உள்ளும் தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின் “சாந்தி கிளினிக்”கில் வைத்தியம் பார்த்தார். ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார். இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.”
    விபரமாக: (இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது)

    இது பற்றி ஊர்மிளாவின் இனம்சனத்தின் அவிப்பிராயங்களும் முக்கியமல்லவா? பல்லி..

    ரூபன்
    24 12 10

    Reply
  • kovai
    kovai

    //…அவர் ஈழ போராட்டத்தின் முதல் பெண்மணி என நினைக்கிறேன்….// பல்லி
    அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர்.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://உமக்கு முதல் முதலாக எழுதுகிறேன்!:://
    பல்லியை மதிப்பவர் சிலர் மிதிப்பவர் பலர்; ஆனால் ரூபன் தாங்கள் பல்லியை மதிப்பவர் போல் உள்ளதால் அதுக்கு பல்லியின் நன்றிகள்,
    //தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின் “சாந்தி கிளினிக்”கில் வைத்தியம் பார்த்தார். ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார்//
    பலரது கொட்டாவிக்கு இது தூக்கமாக அமையும்:
    //இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். //இது வராலாற்று பதிவு;

    //. இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது:://
    இதைவிடவா இனி ஒரு சான்றிதழ் வேண்டும்;நன்றி
    ரூபன் இனி இதுபற்றி பேசுவோரை பல்லி பார்த்துக்கிறேன்;
    //இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.”//
    இது நானும் அறிந்தேன்; என்னைபோல் பலரும் அறிந்திருப்பார்கள்,
    //விபரமாக: (இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது)//
    இதை ஊர்மிளாவின் உறவின் தகவலாகவே நான் பாற்க்கிறேன்;
    //இது பற்றி ஊர்மிளாவின் இனம்சனத்தின் அவிப்பிராயங்களும் முக்கியமல்லவா? பல்லி..:://
    இதில் எந்த மனிதருக்கும் கருத்து முரன்பாடு இருக்காது;
    தயவு செய்து ரூபன் எழுதுங்கள் உன்மைகள் உங்களை போன்றோரிடம்தான் இருக்கிறது, என் எழுத்து உங்களை காய படுத்தியிருந்தால் பல்லியை மன்னிக்கவும்;
    //அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர்.//
    இதில் என்னால் எப்படி கோவையுடன் தர்க்கம் செய்ய முடியும் ; உங்களுக்கு ஆமா போடுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை, பல்லி எப்போதும் உன்மைக்கு அடிமை;

    Reply
  • ரூபன்
    ரூபன்

    பல்லி,
    ரூபன், ஊர்மிளாவின் எந்த உறவுமல்ல!
    ”//விபரமாக: (இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது)//
    இதை ஊர்மிளாவின் உறவின் தகவலாகவே நான் பாற்க்கிறேன்;”

    எனது கருத்து ஊர்மிலாவின் உறவின் கருத்துமல்ல!!
    மன்னிக்கவும், தங்களின் கற்பனைக்கு!
    ரூபன்
    24 12 10

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    நிலா தொடங்கிய விடயம் எல்லோரையும் மீள்பரிசோதனைக்கு உள்ளாக்குவதும் இவர்கள் மறக்கப்படக்கூடாது என்பதுமாகும். ஆனால் நிலாவினுடைய எழுத்துக்கும் ஈஎன்டிஎல்எப் அறிக்கைக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கு. இந்த ராஜன் பற்றி இரண்டு முகம் உண்டு அதற்காக யாரும் திருந்தமாட்டார்கள் என்பதல்ல. தனிநபர் துதிபாடல் இனியும் தொடரக்கூடாது.
    /அதற்காக பொய்களும் புழுகுகளும் வரலாறாக படைக்கப்பட்டுள்ளது/(ரூபன்) இது தவறு.
    /இந்த உண்மைகளை இதய சுத்தியோட மக்கள் முன் வெட்கத்தை விட்டு பேச யாரும் தயாரில்லை/(ரூபன்) இது உண்மை ஆனாலும் நீங்களும் தயாரா?

    மட்டக்களப்பு சூறாவளியில் உதவியதால் மட்டும் வடகிழக்கு புரிந்துணர்வு ஏற்பட்டது என்பது சரியாகப்படவில்லை அதற்கு பின்பும் எத்தனையோ விளைவுகள் வந்து விட்டன. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இப்படியே இந்தியாவிலிருந்து அறிக்கையும் நடைப்பயணமும் அங்கு தமிழர்க்கு தீர்வை தருமா?

    ராஜன் இந்தியா வா என்கிறார். புலி அமெரிக்கா வா லண்டன் வா என்கிறார்கள். ஆனால் தங்களால் முடிந்தவற்றை அந்த மக்களுக்குச் செய்பவர்கள் பரவாயில்லைபோல் தெரிகிறது.

    Reply
  • ரூபன்
    ரூபன்

    இடையில் இருந்து…/ ”அதற்காக பொய்களும் புழுகுகளும் வரலாறாக படைக்கப்பட்டுள்ளது/(ரூபன்) இது தவறு. /இந்த உண்மைகளை இதய சுத்தியோட மக்கள் முன் வெட்கத்தை விட்டு பேச யாரும் தயாரில்லை/(ரூபன்) இது உண்மை ஆனாலும் நீங்களும் தயாரா?”
    ஜெயராஜ்,
    எந்தவிதமான பழைய ‘பல்லாங்குழி’ ஆட்டத்துக்கும் நான் தயாரில்லை! இது தெளிவான அரசியல்!!

    உதாரணத்துக்கு …
    ‘வடக்குக் , கிழக்கோ , உங்களது ”தமிழ் தேசிய ‘ கொம்பாசுக்குள்’ நான் சுழரமுடியாது!! நான்
    /”அதற்காக பொய்களும் புழுகுகளும் வரலாறாக படைக்கப்பட்டுள்ளது/(ரூபன்) இது தவறு ./இந்த உண்மைகளை இதய சுத்தியோட மக்கள் முன் வெட்கத்தை விட்டு பேச யாரும் தயாரில்லை/(ரூபன்) இது உண்மை ஆனாலும் நீங்களும் தயாரா?”
    பொய்களும் புளுகுகளும்) தவறு என்கிறார்கள்! ஆனால் எதை இதயசுத்தியோடு போசவேண்டும்!-
    நாங்கள் அதைத்தான் பேசுகிறோம், புரியவிலலை என்றால் யார் என்ன செய்வது! இது யதார்த்தம்!!

    ”இந்தியா வா என்பதா’ அமெரிக்க வா என்பதா எமது (அரசியலின்)பிரச்சனையல்ல!! ஜெயராஜ் விபரமாக பேச முடிந்தால் பேசலம்…
    ரூபன்
    24 12 10

    Reply
  • kovai
    kovai

    //…..மட்டக்களப்பு சூறாவளியில் உதவியதால் மட்டும் வடகிழக்கு புரிந்துணர்வு ஏற்பட்டது என்பது சரியாகப்படவில்லை …// Jeyarajah
    அமீர் தலைமையில் கூட்டணியினர், மட்டக்களப்பு இராஜதுரைக்கெதிராக, சூறாவளியைப் பின்புலமாக்கி, இளைஞர்களை அனுப்பி செயற்பட வைத்தமையே உண்மை. வடக்கிலிருந்து சென்ற இளைஞர்கள் பணபலம் படைத்து, ஒழுங்கமைப்பாக செயற்பட்டவர்களல்ல. சென்ற இவர்கள் இராஜதுரையை புறக்கணித்தது மட்டுமல்ல, சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தூணாக விளங்கிய ராஜன் செல்வநாயகத்தினிடம் அடைக்கலம் புகுந்தார்கள். வடக்கில் துரையப்பாவைப்போல, கிழக்கில் ராஜன் செல்வநாயகம், கூட்டணியினரால் துரோகியாகப் பார்க்கப்பட்டவர். ஆயினும் கூட்டணியினரால் துரோகியிலும் துரோகியாக பார்க்கப்பட்டவர் இராஜதுரை. இராஜதுரையின் பிரிவே, அரசியலில் கிழக்கை தளர வைத்தது.
    மைக்கலின் கொலை புலிகளின் மத்திய குழுவிற்கு மட்டும் தெரிந்த விடையம். நட்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஈரோசினர், புலிகளிடம் காசு உருவிக் கொண்டு, உள்விடையங்களை அறிந்து, பறை தட்டினார்கள். பின் தொடர்ந்து புளொட் தூக்கிப் பிடித்தார்கள். இந்தக் கொலை வடக்குக் கிழக்கு எனப் பார்க்கப்படவில்லை.
    இன்று தன் வளர்ச்சிக்கு சூறாவளியைத் துணைக்கழைப்பதும், கூட்டணிக் கெடுபிடியாக செயற்பட்டதை மறைப்பதும், சூறாவளியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பங்கை ஒழித்ததும், இருந்தவர்களெல்லாம் முள்ளிவாய்க்காலில் இறந்து போய்விட்டார்கள் என்ற நினைப்புதான்.
    ராஜன்!
    இந்திரா காந்திக்காய் அறக்கட்டளை வை. ராஜீவ்காந்திக்காய் ஸ்ரீபெரும்புதூருக்கு போ. ராகுல் காந்திக்காக டெல்கிக்கு நட. அது உன் வாழ்வு நிலை.
    அதற்காக எம் வரலாற்றை புனையக் கூடாது

    Reply
  • aaru
    aaru

    //அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர்.//
    இதில் என்னால் எப்படி கோவையுடன் தர்க்கம் செய்ய முடியும் ; உங்களுக்கு ஆமா போடுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை, பல்லி எப்போதும் உன்மைக்கு அடிமை;// பல்லி
    பல்லி, ஒரு தாழ்மையான வேண்டுகோள்… உங்களுக்கு அல்லது எனக்கோ உன்மை எது என்று தெரிந்தால் நாங்கள் இப்படி பின்ணூட்டம் விட்டு வாழ்க்கை களிக்க மாட்டோம். இதை விட பெரிசாக செய்வோம். உங்களுக்கு உன்மை எது என்ரு தெரிந்தால் வடிவாக சொல்லி எல்லோரையும் சேர்த்து கொண்டு போங்களேன்.

    Reply
  • S.Varthan
    S.Varthan

    எனக்கு வடலியடைப்புத் திலீபனுடன் அதிகம் நெருங்கிய பழக்கம் இருந்ததால் அரசில் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து சிலகாலம் செயற்பட்டேன். அக்காலத்தில் கண்ணன் சுந்தரம் இன்னும் சிலர் கோண்டாலிலுள்ள குமணன் வீட்டில் சந்திப்பார்கள் தங்குவார்கள். புதியபாதை எழுத்துக்கள் அங்கிருந்தே அதிகமாக எழுதப்பட்டன. குமணனின் வீடு ஒரு வாசிகசாலைக்கு முன்னால் இருப்பதால் திலீபன் சுந்தரம் போன்றோல் அங்கிருந்து பேப்பர்களையும் வாசித்துக் கொண்டு குமணனின் வீட்டையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சி.ஐ.டி கள் வந்து அந்த வாசிகசாலையிலும் இருப்பார்கள். அதுவம் அவர்களுக்குத் தெரியும். இளைஞர் பேரவை வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளராக தி.திலீபன் இருந்த காரணத்தினால் சந்ததியார் இறைகுமாரன் போனறோர் திலீபனை தனத்தனியே சந்திப்பார்கள். இவர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பு பலகாலமாக இருந்து வந்தது. முக்கியமாக நாம் திலீபனின் வீட்டில்தான் அதிகமான இயக்கப் போராளிகளைச் சந்திப்பது வழக்கம்.

    முக்கியமாக புலிகள் உடைந்ததும் ஆயுதங்களில் இருந்து புத்தகங்கள் வரை திலீபனிடமே கொடுத்து பாதுகாக்கப்பட்டு வந்தன. புதியபாதை புத்தகங்களின் ஒரு பகுதி திலீபனூடகவே சிலபகுதிகளுக்கு வினையோகிக்கப்பட்டன. புலிகளில் இருந்த விதுரன் (இயற்பெயரைக் கூறவிரும்பவில்லை) திலீபனின் தொடர்பில் இருந்தார். திலீபனுக்கு பல இயக்கப் போராளிகளின் தொடர்பு இருந்தது. புலி கழகம் இருசாராரும் ஆரம்பகால நண்பர்கள் என்பதால் ஒருவரை விட்டு ஒருவரை ஆதரிக்க முடியாதகாரணத்தால் இறுதியில் திலீபன் தலைமறைவானார். இவருக்கு ஆரம்பாக கோண்டாவில் இரயில் எரிப்பு குவேந்திரனின் தொடர்வு கூட இருந்தது. மாத்தயா: குவேதிரதாசன் (புலி); மொட்டை; கேடில்ஸ்; சூரி; அன்ரனி; முரளி (மறுமலர்ச்சிக்கழகம்); யாழ் பல்கலைக்கழகத்தினூடான புலிகள் தொடர்புகள் என்று ஏகப்பட்ட தொடர்புகள் இருந்தன. இவர்கள் புலி; புளொட் இரண்டையும் இணைக்க அரும்பாடு பட்டார்கள். முடியாது போகவே தலைமறைவானார்கள். திலீபனுக்கும் வீட்டில் பாரிய பிரச்சனைகள் ஏற்பட தலைமறைவாவதைத் தவிர வேறு வழிகிடைக்கவில்லை. எமது தொடர்புகள் அறுந்து விட நாம் ஒதுங்கிக் கொண்டோம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி, ஒரு தாழ்மையான வேண்டுகோள்… உங்களுக்கு அல்லது எனக்கோ உன்மை எது என்று தெரிந்தால் நாங்கள் இப்படி பின்ணூட்டம் விட்டு வாழ்க்கை களிக்க மாட்டோம். இதை விட பெரிசாக செய்வோம். உங்களுக்கு உன்மை எது என்ரு தெரிந்தால் வடிவாக சொல்லி எல்லோரையும் சேர்த்து கொண்டு போங்களேன்.//
    இது ஏதோ வில்லங்கம் மாதிரி உள்ளது, ஆனாலும் பல்லிக்கு இதெல்லாம் பளகி போச்சு; வாதம் என்பது எந்த ஒரு விடயத்துக்கும் தேவை, அப்போதுதான் ஒரு தெளிவான முடிவோ அல்லது உன்மையோ கிடைக்கும்:

    //எனது கருத்து ஊர்மிலாவின் உறவின் கருத்துமல்ல!! மன்னிக்கவும், தங்களின் கற்பனைக்கு! ரூபன்//
    இதில் என் கற்பனையை விட உங்கள் முதல் பின்னோட்டம் அப்படி கற்பனை செய்ய வைத்து விட்டது; இருப்பினும் ஊர்மிளா பற்றிய கருத்து நீங்கள் எழுதியது சரியாகதான் இருக்கும் என நினைக்கிறேன்;

    // இந்த ராஜன் பற்றி இரண்டு முகம் உண்டு அதற்காக யாரும் திருந்தமாட்டார்கள் என்பதல்ல. தனிநபர் துதிபாடல் இனியும் தொடரக்கூடாது.//
    இதில் எனக்கும் உடன்பாடுதான்; ஆனால் பளய கதைகளை சொல்லும் போது ஒரு சிலரது பெயர்கள் அடிக்கடி வந்து போகவேண்டி இருக்கு; அதன் படிதான் ஜயர் பிரபாகரனையும் அவர் சார்ந்த சிலரையும் கதாபாத்திரங்கள் ஆக்கி கதை சொன்னார், அவரது அனைத்து பாகங்களிலும் ரத்தகறைதான்; (அவரை சுட்டோம்; வேலியால் பாய்ந்தோம்; கடக்கரையில் படுத்தோம்; மரதோடு மறைந்தோம்; சுட்டோம், வெட்டினோம்;) இப்படி ஆரம்பகால விடயங்களின் தனக்கும் தான் சார்ந்த குழுவுக்கும்(புலி) சாதகமாக கட்டுரை தந்தார், இதை பல்லி சில தடவை இங்கே சுட்டி காட்டினேன்; அதன்பின் கழக கட்டுரை வந்தபோது பல பளயவர்கள் வந்து உன்மைகளை சொன்னார்கள்; பின்புதான் நிலாவின் கட்டுரை வந்தது, அதில் எனது பின்னோட்டம் இந்த கட்டுரை மீது பல்லிக்கு நிறையவே விமர்சனம் உள்ளது என சொன்னேன்; ஆனால் அதன்பின் குசும்பு , குலன்; வாத்தி; வெற்றி, அஜீவன் இவர்களுடன் கோவை ,வரதன் போன்ற அனறய செயல்பாட்டாளர்கள் விவாதத்தில் கலந்து கொண்டதால் பல்லியும் எனக்கு தெரிந்ததை எழுதினேன்; அதேபோல் ஒருசிலரை அன்றய காலகட்டத்தை சொல்லும்போது அவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என சொல்லவேண்டிய கட்டாயமும் இருக்கு, அதன்படிதான் தோஸ்து ,தளபதி வாதமும் தொடர்கிறது; எனக்கு அமெரிக்கா ஈழ அரசியலில் தலையிடும் என்பதில் உடன்பாடு இல்லை; ஆனால் இந்தியா ஈழ அரசியலில் தலையிட வேண்டிய தேவை உள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது, ஆகவே இந்தியாவின் அரசியல்லுக்கு(ஈழ) ராஜன் தேவைபடுவார் என்பது என் கருத்து, ஆனால் நான் ஏன் ராஜனை பற்றி இங்கே எழுத வேண்டி வந்ததென்றால் (இது தனிமனித துதிபாடல் அல்ல) இன்று பல தமிழ் அமைப்புகள் இருந்தாலும் எல்லாமே ஒரு வகையில் அரசை நம்பிதான் இருக்கிறது என்பதை யாரும் மறக்க முடியாது; இது தோழர் இருந்து பிள்ளையான் வரை சித்தர் இருந்து ஆனந்தசங்கரி வரை இதுதான் உன்மை;
    ஆகவே அரசை இன்று விமர்சிக்கும் புலி கூட்டத்தை இந்தியா ஏற்காது ஆக முடிவில் ராஜன் தான் மிச்சம்; ஆனால் ராஜன் மட்டும் எதுவும் செய்துவிட முடியாது அதனால் அதையும் நாம் இங்கு சொல்லிதான் ஆக வேண்டும்; அந்த வகையில்தான் ராஜனை நான் சில இடங்களில் சொன்னேன், அதுவும் போக ராஜன் பற்றி ஏற்கனவே நான் பல இடங்களில் விமர்சனம் செய்துள்ளேன்; இந்த கட்டுரையின்படி ஆரம்பம் பல பேரவைகள் அந்தனையுலும் ராஜன் ரவுடியாய் தன்னும் இருந்திருக்கிறார், அடுத்து காந்தியம் அதிலும் ராஜன் இருந்திருக்கிறார்; அப்புறமாய் கழகம் அங்கேயும் ராஜன் உண்டு; கூட்டணி அதிலும் ராஜன்; கழக உடைவு, புலிகள் உடைவு (கருனா) அன்றய புலி கழக உடைவு இப்படி பல இடங்களில் ராஜன் வந்து போவதால் அடிக்கடி ராஜனை பல்லியும் சொல்லவேண்டி வந்ததே தவிர எனக்கு பிடிக்காத விடயம் தனிமனித துதிபாடல்;

    //எமது தொடர்புகள் அறுந்து விட நாம் ஒதுங்கிக் கொண்டோம்.//
    விடுதலை விரும்பிகள் ஒதுங்கி கொள்ள தறுதலைகள் தலமை ஏற்று புதிய கூட்டம் உருவாச்சு; அங்கேயும் சில விடுதலை விரும்பிகள் இருக்கதான் செய்தார்கள், அவர்களும் துரோகிகள் பட்டத்துடன் அமைப்புகளை விட்டு விண்ணிலும் மண்ணிலும்;;;;;;;;;

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நிலாவின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தோற்றம் என்ற தலைப்பை ஈஎன்டீஎலெப்பின் தோற்ம் என வைத்திருக்கலாம். புளொட், முகுந்தனை தூக்கிக் கொண்டு ஆடினார்கள். புலிகள், பிரபாவை தூக்கிக் கொண்டு ஆடினார்கள். டெலோ, சிறீயை தூக்கிக் கொண்டு ஆடினார்கள். ஈபீ, பத்மநாபாவை தூக்கிக் கொண்டு ஆடினார்கள். இந்த கட்டுரை ராஜனை தூக்கிக் கொண்டு ஆடத் தொடங்கியுள்ளது. நிலா, தனது அரசியலை இக் கட்டுரை மூலம் நடத்த முயல்கிறார். இது நன்றாக சான்று பகர்கிறது. வார்த்தைக்கு வார்த்தை ராஜன் புகழ் பாடுவதாக கட்டுரை அமைந்துள்ளது. இதுவும் புலி அரசியல் போல ஒன்றையே ஆரம்பிக்க முயல்கிறது. பலர் சொல்வது போல நிலா, தனிமனித வழிபாட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவராக அவரது கட்டுரை அவரை அடையாளப்படுத்துகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல, இவர் முகுந்தனின் முக்கியமான ஒருவராக இருந்தார் என தெரிய வருகிறது. தவிரவும் சந்ததியாரை கொலை செய்வதற்கு இவரும் திட்டங்களை வகுத்து சென்னைக்கு வந்து செயல்பட்டதாக, அக் கொலை குறித்து தெரிந்த ஒருவர் சொன்னார். இவரது அரசியல் ஆசைகளுக்கு ராஜன் தவிர வேறு வழி இல்லை. எனவே புலிகள், பிரபா புகழ் பாடியது போல, நிலா; ராஜன் புகழ் பாடத் தொடங்கியுள்ளார் என உணர முடிகிறது.

    ராஜன், தனது அரசியலுக்காக புலிகளில் இருந்து பிரிந்த கருணாவை காப்பாற்றியுள்ளார். இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து கைதான ராஜன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கிருந்து எதுவித ஆபத்தும் இல்லாமல் மீண்டும் இந்தியாவின் இன்னொரு மாநிலமான கர்னாடகாவின் பெங்களுருக்கு வந்து இந்திரா பெயரில் அமைப்பொன்றை நிறுவி நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் அப்பாவிகள், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்தே கைதாகி சிறையில் அடைக்கப்படும் போது, ராஜன் மட்டும் எப்படி எதுவித அசம்பாவிதங்களுக்கும் முகம் கொடுக்காமல் திரும்பி இந்தியா வர முடிந்தது? இவை கேள்விகளாக தொக்கி நிற்கின்றன?

    ராஜன் , இலங்கை – இந்திய அரசுகளோடு நெருக்கமான உறவை பேணி வருவது இங்கே உணர முடிகிறது. ஆனால் வெளிப்படையாக அதை சொல்லாமல் அப்பாவிகளை இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்ல, இந்தியாவின் சமாதான படை வந்து வடக்கு – கிழக்கை தமிழருக்கு மீட்டுத் தர வேண்டும் என நடை பயணம் தொடங்குகின்றனர். இதுவும் இந்திய அரசின் நலன் கருதி, எதிர்வரும் இந்திய தேர்தலுக்கு உதவும் வகையில் செய்யும் ஒரு செயல்பாடே தவிர ஈழ மக்களுக்கான விடிவாகத் தெரியவில்லை?

    இன்றை தேவை, வெளியே வந்திருக்கும் மக்களது புணர் வாழ்வு. அவர்களுக்கான அடிப்படை தேவைகள். ஆயுதமற்ற அரசியல். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது. இனியும் இந்த ஆயுதக் குழுக்களை நம்பும் அல்லது வளர்க்கும் மன நிலை ஈழத் தமிழரை முற்றாக அழித்து விடும். இன்னொரு ஆயுதக் குழு, இனி தேவை இல்லை. ஆயுதமற்ற அரசியலுக்கானகான காலம் மீண்டும் உருவாகியுள்ளது. ஆயுதமற்ற அரசியலை இனி பயன்படுத்தத் தவறினால், கடவுளே வந்தாலும் ஈழத் தமிழரை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற வார்த்தை உண்மையாகிவிடும்.

    Reply
  • ரகு
    ரகு

    //சேகருடன் சேர்ந்து தளபதிகளுக்கான முகாம் ஒன்றை ஆரம்பித்து பாலஸ்தீனத்திலும் உத்தரபிரதேசத்திலும் பயிற்சி பெற்றவர்களுக்கு தளபதிகளுக்கான பயிற்சி கொடுக்குமாறு முகுந்தனால் (உமா) பணிக்கபட்டார்.//
    //இந்த இடத்தில் சந்திரன் தனது புதியபாதை அறிவை கோட்டை விட்டு விட்டாரே, இங்கே மட்டும் அவர் தனது பி முகாம் (சங்கிலி மூர்த்தி) பெருமைகளை சொல்லியிருந்தால் இம்மட்டு அலங்கோலம் வந்திருக்காது அல்லவா?? காரணம் நீங்கள் சொல்லும் முகாமில் பயிற்ச்சி பெற்றவர்கள் உமாவை விட கழகத்தை நேசித்தவர்கள் அல்லவா??//
    – பல்லி

    ஒவ்வொரு முகாமிலிம் இருந்தவர்களுக்கு “B” முகாமில் நடப்பது தெரியும். இருந்தாலும் யாரிடமும் அதைச் சொல்ல வாய் திறக்கவில்லை. பெரியவருக்கு எதிராக கதைப்பவர் போல ஒருவர் ஒவ்வொரு முகாமிலும் இருந்தார்கள். அவர்கள் பெரியவருக்கு சார்பானவர்கள். அவரோடு சேர்ந்து முகுந்தனுக்கு எதிராக கதைத்தால் அவருக்கு சங்கிலி தேத்தண்ணி கொடுப்பார்.

    தளத்தில் ராணுவத்துக்கும் அரசியலுக்கும் பொறுப்பாக இருந்த கண்ணாடி சந்திரனை PLO இல் இருந்து வந்த கண்ணன் (ஜோதீஸ்வரன்) இடம் ராணுவத்தையும் கேசவன் இடம் அரசியலையும் பொறுப்புக் குடுக்க சொல்லி முகுந்தன் கந்தசாமி மூலம் அறிவித்து கண்ணாடி சந்திரனை சித்திரவதை முகாமில் போடுகிறார்கள். காரணம் கண்ணாடி சந்திரன் பெரிய முரளியோடு சேர்ந்து தனனது வீட்டில் பத்திரமாக ஒழித்து வைத்து 83 இறுதியில் சென்னை கொண்டுவந்து முகுந்தனிடம் கொடுத்து நகைகளுக்கு கணக்கு கேட்டதும் ஒரத்தநாட்டில் சித்திரவதை முகாமின் தேவை குறித்து முகுந்தனோடு வாக்குவாதம் பண்ணியதும் தான்.

    சந்திரன் சித்திரவதை முகாமில் இருந்து விடுதலையான பின் நடந்த அடுத்த செயத் குழு கூட்டத்தில் சந்ததியார் கேசவன் ஜான் போன்றவர்களுடன் தனக்கு நடந்ததை சொல்லி புளட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

    இவர்களின் வெளியேற்றத்துக்கு பிறகுதான் அசோக் (யோகன் கண்ணமுத்து) போன்றோர் மத்திய கமிட்டிக்குள் முகுந்தனால் கொண்டு வரப்படுகிறார்கள்

    84 ஆரம்ப காலக் கட்டத்திலேயே உட்கட்சிப்போராட்டத்தில் தொடங்கி புலிகள் மாதிரி கடைசிவரை பிழையான தலைமைக்கு துதிபாடிக்கொண்டும், அல்லது அராஜகத்திற்கு பயந்தும் விட்டுவிட்டு ஓடாமல், ஓடியவர்கள் கூட வாயை மூடிக்கொண்டிருக்காமல் பிழையான ஒரு தலைமையயும் இயக்கத்தையும் உடைத்துவிட்டு சென்றதுதான் உண்மையான நேர்மையான தெளிவான தோழர்களின் வெற்றி.

    சந்திரன மீதான சித்திரவதைதான் புளட் உடைவுக்கும் புளட் அழிவுக்கும் வழி கோலியது. புளட் 84 இல் உடையதொடங்காவிட்டால் புலி இப்படி வளந்திருக்கவும் முடியாது. இலங்கை தமிழர் இன்னமும் துப்பாக்கி முனையில் ஆளப்பட்டிருப்பார்கள்.

    நான் மேலே நகைகள் என்று குறிப்பிட்டது கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான நகைகள் தான்.

    Reply
  • kovai
    kovai

    புலிகள் உடைவிற்கும் ராஜனிற்கும் சம்பந்தமில்லை. ஊர்மிளா விடையத்தில் ஆண்மை காட்டிய உமா, பாதுகாக்கவும், பராமரிக்கவும் தெரியாமல்,
    கோழைத்தனமாக நடந்து கொண்டு, ஊர்மிளாவை இலங்கை அனுப்பியது ஒரு மாபெரும் துரோகம். அதை விட ஊர்மிளா இறந்த போது,
    தானிருந்த ஒரே ஒரு விடுதலை இயக்கத்திற்கெதிராக, இலங்கை அரசிற்கு ‘தந்தி’அடித்தது மிகப் பெரும் கேவலம். உமா தன் தேவைக்காக இயக்கத்தையும், இயக்க உறுப்பினரையும்(ஊர்மிளா) பாவித்து, தூக்கி எறிந்தது ஒரு வரலாற்று மோசடி.
    புலிகளுக்கான சர்வதேச தொடர்புகளை திருடிச் சென்றதும்; தமிழகத்தின் பெருச்சாளிகளை, ஈழத்தமிழர்களை கூறுபோட உதவி பண்ணியதும் உமாவின் தனித்திறமை. உமா பின் நடந்து கொண்ட முறைமைகளுக்கு, இங்கே அனேகர் சாட்சி.

    Reply
  • மகுடி
    மகுடி

    ஊர்மிலா சாவு குறித்து உமா ஜேஆருக்கு தந்தி அடித்தார் என்பதோ அல்லது தந்தி அடிக்கச் சொன்னார் என்பதோ லொஜிக்காக இல்லை. அடுத்து அக் காலங்களில் புலிகளுக்கு புலம் பெயர் தேசங்களில் பெரிதான வரவேற்பு இருக்கவில்லை. புளொட்டைத்தான் புலம் பெயர் தேசங்களில் பரவலாக அறிந்திருந்தார்கள். இது அனைவரும் அறிந்தது. புலிகள் தாக்குதல்களில் மட்டும் கருத்தாக இருந்த போது, வெளிநாட்டு பரப்புரைகளில் புளொட் அதீத ஆர்வத்தோடு செயல்பட்டது. ஈழத்தமிழர்களை கூறுபோட உதவி பண்ணியதும் உமா என்பதை அனைத்து தமிழரும் என்பதே உண்மை. அதில் உமாவும் அடக்கம். அனைத்து தமிழ் தலைவர்களாக செயல்பட்டோரும் இந்திய அரசோடு அல்லது இந்திய உளவுத் துறையோடு பேசும் போது தன்னை முதன்மைப்படுத்தி அடுத்தவரை தரக் குறைவாக அல்லது இந்தியாவுக்கு எதிரானவர்களாக காட்ட முற்பட்டுள்ளார்கள். அனைவர் சொல்வதையும் கேட்டுக் கொள்ளும் இந்தியா எப்போதும் இறுதி முடிவை தானாக எடுத்தது. அதுவே தனிநாடான தமிழீழம் ஒன்று உருவாவதை தடுப்பது. அது இன்றும் தொடரவே செய்கிறது.

    இந்தியாவில் பணத்துக்காக மேடையேறும் பச்சோந்தி மேடைப் பேச்சாளர்கள், தமிழகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் அதையே செய்கிறார்கள். செய்தார்கள். தமிழீழம், தனித் தமிழ்நாட்டுக்கான வாயிலாக தெரிவிப்பதேயாகும். இதுவே தமிழீழத்துக்கு ஒப்பாரியாக முகாரி இராகம் பாட வைத்தது. இதை இனி எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது என உறுதியாக நம்பலாம். சீனா, இந்தியாவுக்கு எதிராகலாம் என்றோ, அமெரிக்கா – பாகிஷ்தான் இந்தியாவுக்கு எதிராகவோ மாறலாம் எனக் கனவு காண்பது நாம்தான். அவர்களோ கூட்டுக் குடித்தனம் போல தமது பொருளாதார உறவுகளை விஸ்த்தரித்துக் கொண்டு செல்கிறார்கள்.

    இவர்களது பேச்சுகள் இலங்கை அரசின் பணத்தையும் பெற்று பேசுவது போல உள்ளது. இவர்கள் தமிழகம் தனி நாடு ஆகும் என்றல்லவா சொல்கிறார்கள்?
    -http://www.youtube.com/watch?v=PPrOy0PcXWQ&feature=player_embedded

    Reply
  • பல்லி
    பல்லி

    //இவர்களின் வெளியேற்றத்துக்கு பிறகுதான் அசோக் (யோகன் கண்ணமுத்து) போன்றோர் மத்திய கமிட்டிக்குள் முகுந்தனால் கொண்டு வரப்படுகிறார்கள் //
    2010 க்கான நகைசுவை விருத்து தேர்வின்றி உங்களுக்குதான்;
    கண்ணாடியை கழகத்கில் ஒரு வீதமானவர்க்கு கூட தெரியாது என்பது கூட ரகுவுக்கு தெரியாதா??

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    /உதாரணத்திற்கு வட கிழக்கோ உங்களது தமிழ் தேசிய கொம்பாசுக்குள் நான் சுழர முடியாது(ரூபன்) /
    இதை கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள் உங்கள் தமிழ் தேசிய கொம்பாசுக்குள் என்றால் புரியவில்லை. தேசியம் என்பது நீங்கள் இல்லாமல் நான் மட்டும் என்பதல்ல. கொம்பாஸ் என்றால் நான் அறிந்தது வட்டாரி அடிமட்டம், அப்படித்தான் எனக்கு தெரியும் புதிதாக ஏதும் விளக்கம் இருந்தால் சொல்லுங்கள்.

    /இந்தியா வா என்பதா அமெரிக்கா வா என்பது எமது பிரச்சினையல்ல விபரமாக பேச முடிந்தால் பேசலாம்(ரூபன்)/
    எமது பிரச்சினை என்றால் வி எஸ் நவரத்தினம் வன்னியசிங்கம் பற்குணம் முதல் சீமான் வரை பேச வேண்டி வரும் தேசம் இடம் தந்தால் பேசுவோம்.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    //84 ஆரம்ப காலக் கட்டத்திலேயே உட்கட்சிப்போராட்டத்தில் தொடங்கி புலிகள் மாதிரி கடைசிவரை பிழையான தலைமைக்கு துதிபாடிக்கொண்டும், அல்லது அராஜகத்திற்கு பயந்தும் விட்டுவிட்டு ஓடாமல், ஓடியவர்கள் கூட வாயை மூடிக்கொண்டிருக்காமல் பிழையான ஒரு தலைமையயும் இயக்கத்தையும் உடைத்துவிட்டு சென்றதுதான் உண்மையான நேர்மையான தெளிவான தோழர்களின் வெற்றி.//இதையா நேர்மையான வெற்றி என்று குறுகிரிர்கள்.தவறு .உங்கள் வாய் பேச்சுக்களை நம்பிய அப்பாவி தோழர்களை தவிக்க விட்டுவிட்டு ஓடியதை விட போராடி தலைமையை யும் ,அராஜகத்தையும் அழித்து விட்டிருந்தால் ,நல்ல ஒரு விடுதலை இயக்கம் கிடைத்திருக்கும் .ஆனால் இவர்களால் செய்ய முடியாமல் போனதக்கு காரணம் வசதி கிடைத்த போது இவர்களும் செய்த தவறுகளும் ,அராஜகங்களும்தான்

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    .86 இல் பிளாட் உடைந்த போது ENDLF ராஜன் இல்லாவிட்டால் ஒரத்தநாட்டில் பல அப்பாவி தோழர்கள் கொல்லப்படிருப்பர்கள்.கொலைவெறியோடு திரிந்த மாணிக்கம் குருப்பும்,கந்தசாமி குருப்பும் ராஜனுக்கு பயந்து தான் ஒன்றும் செய்யவில்லை .எல்லா விடுதலை இயக்கங்களும் வசதியான வெளிநாட்டு அகதிகளை பற்றி மட்டும் கவலை பட்டு இருக்கும் போது ENDLF மட்டும் தமிழ்நாட்டு ஏழை தமிழ் அகதிகளை பற்றி கவலை பட்டு ,தங்களால் முடிந்தமட்டும் செய்யகூடிய அகதி மாணவர்கள் படிக்க செய்யும் உதவிகள் பெரிதும் பாரட்டபடவேண்டியவை பல அகதிமாணவர்கள் பட்டம் பெற்று வெளிவருவது சந்தோசமாய் உள்ளது .உங்களுக்கு ENDLF இன் அரசியல் நிலைப்பாடு பிடிக்காவிட்டாலும் இவர்கள் செய்யும் தமிழ்நாட்டு ஏழை அகதி மாணவர்களி லின் படிப்புக்கு சரி உதவி செய்யலாம்தானே

    Reply