கிளிநொச்சி வீழ்ந்தது. ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு ஜனாதிபதி புலிகளுக்கு இறுதி வேண்டுகோள்: தொகுப்பு-ஏகாந்தி

kilinochchci_victory_.jpgபுலிகளின் அரசியல், நிர்வாகத் தலைமையகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று (02) கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ். – கண்டி ஏ-9 வீதி ஓமந்தை முதல் பரந்தன் வரை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சியில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புலிகளின் மறைமுக அரச நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று முற்பகல் சுற்றிவளைத்து உள்நுழைந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மும்முனைகளில் முன்னேறிய படையினர் கிளிநொச்சி நகரத்திற்குள் பிரவேசித்து நேற்று நண்பகல் அளவில் இறுதி நடவடிக்கையை மேற்கொண்டதாக நேற்றுப் பகல் தேசிய பாதுகாப்பு நிலையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம்

* 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம்
* நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள்
* 95 கிராம சேவையாளர் பிரிவுகள்
* மூன்று பிரதேச சபைகள் (பச்சிலைப்பள்ளி, கரச்சி, பூநகரி)
* 1279 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது
* சனத்தொகை – 1,95,812
* தமிழர் தொகை – 1,95,386 (99.78%)
* இலங்கை சோனகர் – 424 (0.22%)

கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர்.

புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பரந்தன் நகரை ராணுவம் கையகப்படுத்தியது. இதன் மூலம் வன்னிப் பகுதியில் முக்கிய தளங்களை இழந்துள்ளனர் புலிகள். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சி ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே கிளிநொச்சியைக் குறிவைத்து ராணுவம் பல முனைகளில் தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் புலிகளின் தடுப்பரண்கள், தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக இந்த முயற்சி தடைபட்டு வந்தது. இந்த மோதலில் ராணுவத்தரப்பில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது தங்களது இலக்கை ராணுவம் ஒரு வழியாக எட்டியுள்ளது.

புலிகளின் தற்போதைய ஒரே முக்கியதலமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. ஆனால் ராணுவத்தின் அடுத்த குறி முல்லைத்தீவுதான் என்பதால் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்கும் என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது. இலங்கையிலிருந்து இன்று வெளிவந்துள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவமே பிரதான செய்தியாக பிரசுரமாகியிருந்தது. நேற்றைய தினம் அரசாங்க தொலைக்காட்சியில் கிளிநொச்சி சம்பவம் குறித்த சில செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. ஆனால், கிளிநொச்சியின் வெற்றியானது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அடக்கிவிட்டது என்று பொருள் கொள்ளப்படுமாயின் அது பெருந் தவறு. இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு, யானையிரவு போன்ற சுமார் 40 கி.மீ. வரை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அறிவித்தார். இது கிழக்கில் தொப்பிகலை பிரதேசத்தைவிட குறைந்த பிரதேசம் என்றும் தெரிவித்தார். எனவே, இராணுவத்தின் அடுத்த இலக்காக முல்லைத்தீவு, யானையிரவு போன்ற பிரதேசங்கள் அமையுமென்பது அவர் கருத்துக்களிலிருந்து புலனாகின்றது. கிளிநொச்சியின் வெற்றி என்று கூறும்போது நகர்சார்ந்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றியாக அது அமையுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி விடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபடக்கூடிய நிலை அதிகரிக்கப்படலாம் எனப்படுகின்றது.

இது தொடர்பான செய்தித் தொகுப்புகள் கீழே இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல.

mahi.jpgகிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல. தெற்கு வடக்கை தோல்வியுறச் செய்ததாக வரைவிலக்கணப்படுத்தக்கூடிய தொன்றுமல்ல. இது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மனித வாழ்க்கையை விளையாட்டாகக் கொண்ட கொடூர பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்த தீர்க்கமான வெற்றி. மக்களை இனம், மதம் என பிரிப்பதற்குப் பிரயத்தனம் செய்த இனவாதத்தைத் தோற்கடித்த வெற்றியாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். படையினர் கிளிநொச்சியை நேற்றுக் கைப்பற்றியதையடுத்து அதனை உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (02) பிற்பகல் இடம் பெற்ற இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது 2009ம் ஆண்டை வெற்றியின் ஆண்டென நான் அறிவித்தேன். அதன்படி, வருடம் பிறந்து இரண்டாவது நாளில் போராட்ட வரலாற்றில் முக்கியமானதொரு வெற்றியைச் சொந்தமாக்க முடிந்துள்ளது. உலகளவில் பிரபலமான அமைப்பான விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்த கிளிநொச்சியை எமது படையினர் வெற்றி கொண்டுள்ளனர். கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நான் கனவுகாண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். எனது கனவு நனவாகியுள்ளது. இது எனது கனவுமட்டுமல்ல. அமைதியையும் சுதந்திரத்தையும் விரும்புகின்ற அனைவரினதும் கனவு இது. அனைத்து மக்களினதும் கனவு எமது படையினரால் நனவாக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண வெற்றியல்ல. வரலாற்று வெற்றி. புலிகளின் கோட்டையை எமது படையினர் மீட்ட வெற்றியென்பது பயங்கரவாதத்துக்கு எதிராக முழு உலகிற்குமான வெற்றி. முழு உலகமும் இதற்காக எமது படை வீரர்களைப் பாராட்டும். கிளிநொச்சி என்பது தனியானதொரு அரசு அமைக்க எண்ணியோரின் தலை நகரமாகும். சர்வதேச ஊடகங்கள் மட்டுமன்றி சில ராஜதந்திரிகளும் நம்பி செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. புலிகளின் அந்த தனிராஜ்யத் தலைநகரம் கை நழுவியது.

2005ம ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முழு நாட்டிலும் ஒரே சட்டத்தை நிலைநாட்டுமாறு மக்கள் எம்மைக் கேட்டுக்கொண்டனர். பல உடன்படிக்கைகளால் பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துமாறு கேட்டனர். முப்படையினரும் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றவே அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. 2009ம் ஆண்டில் எமது நம்பிக்கை மேலும் மேம்பாடடைந்துள்ளது. படையினர் தமது கண், காது, இரத்தம் மட்டுமன்றி தமது உயிரைக் கூட தியாகமாக வழங்கியே இவ்வெற்றியைப் பெற்றுள்ளனர். இதற்காக நாட்டுத் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரினதும் கெளரவத்தை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த வரலாற்று வெற்றிக்கு தலைமைத்துவம் வழங்கிய முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட சகல படை உயரதிகாரிகள், வீரர்கள் அனைவருக்கும் நாட்டு மக்களின் கெளரவம் உரித்தாகட்டும்.

நாட்டு மக்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது. மக்கள் இந்த அர்ப்பணிப்புடனான பங்களிப்பை இன்னும் குறுகிய காலத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்கும் வரை இதற்காக ஆதரவு தருமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு இறுதியாக வேண்டுகோள்விடுக்கின்றேன். பல தசாப்தங்களாக புலிகளின் பிடியில் பணயக் கைதிகளாகவுள்ள வடக்கு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தமிழில் உரை

வடக்கு மக்களே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பான எதிர்காலத்தை நான் நாட்டுத் தலைவன் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்கிறேன் என வாக்குறுதியளிக்கிறேன். ஒரே கொடியின் கீழ் மகிழ்வுடன் வாழ நவீன இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம். எமது இணைந்த அர்ப்பணிப்பு சகல தடைகளையும் வென்று முன்னோக்கிச் செல்ல வழிவகுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்களுக்கான வாக்குறுதியைத் தமிழில் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டை தகர்ந்தது…’ – இராணுவப் பேச்சாளர்

kili-01.jpgபுலிகளின் கனவு ஈழத்தின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்தமை அவர்களுக்குப் படுதோல் வியாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நீதிமன்றம், வங்கி, சமாதான செயலகம், அரசியல் தலைமையகம், நடவடிக்கைத் தலைமையகம் போன்ற அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளையும் கிளிநொச்சியி லேயே புலிகள் வைத்திருந்தனர். இன்று அவர்களின் ஈழத் தலைநகர் சிதைக்கப்ப ட்டுள்ளதுடன் புலிகள் ஏ-9 வீதியின் கிழ க்குப் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளார்களென்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

சட்டவிரோத வரிசேகரிப்புக்கும் தளமாக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப் பட்டுள்ளதால் ஆனையிறவு, பளை பகுதிகளுக்கு புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய பிரிகேடியர் நாணயக்கார, தொப்பி கலைக்குச் சமமான ஒரு பிரதேசத்தில் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

‘புலிகளின் 236 இலக்குகள் தாக்கி அழிப்பு’ – விமானப் படை பேச்சாளர்

kili-02.jpgபரந்தன் மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது, புலிகளின் 236 இலக்குகளை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்தார். இராணுவத்திற்கு உதவியாக 139 தடவைகள் விமானப்படையின் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2008 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் படை நடவடிக்கைகளுக்கு பாரிய வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி நகருக்குள் படையினர் பிரவேசித்ததை அடுத்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் விமானப்படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்:- விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. – 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி புலிகளின் 32 இலக்கு மீது 25 தடவைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ள அதேசமயம் கிபிர் மற்றும் எப்-7 ரக ஜெட் விமானங்களை பயன்படுத்தி 204 இலக்குகள் மீது 144 தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வந்த இராணுவத்தின் 57 வது படைப் பிரிவினருக்கும், முதலாவது செயலணியினருக்கும் உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. விமானப் படையினரின் வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் கிளிநொச்சி, பரந்தன், இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், பலமான மற்றும் ஒன்று கூடும் தளங்கள் பல முக்கிய இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர் விமான ஓட்டிகளும், களமுனையிலுள்ள போர் வீரர்களும் இதனை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈழப் போர் … ஒரு பார்வை…

1983 – விடுதலைப் புலிகள் நடத்திய கொரில்லாத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர். இதை முதல் ஈழப்போர் என புலிகள் வர்ணித்தனர்.

1987 – போர் நிறுத்தத்திற்கு முயன்ற இந்தியா, அதை அமல்படுத்த படைகளை அனுப்பியது. அமைதி ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒத்துக் கொண்டாலும் கூட ஆயுதங்களைக் கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையோ மோதல் மூண்டது. 1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

1990 – 3 ஆண்டு கால சண்டைக்குப் பின்னர் இந்தியப் படைகள் இலங்கையை விட்டு கிளம்பின. யாழ்ப்பாணத்தை கையகப்படுத்தியது புலிகள் இயக்கம். 2வது ஈழப் போர் தொடங்கியது.

1991 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

1993 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா பலியானார்.

1995 – அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தார். ஆனால் கடற்படைக் கப்பலை தகர்த்தனர் புலிகள். 3வது ஈழப் போர் தொடங்கியது. ஆனால் அரசு வசம் போனது யாழ்ப்பாணம்.

1995 -2001 – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் தீவிரமடைந்தது. கொழும்பு மத்திய வங்கியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். சந்திரிகாவும் காயமடைந்தார்.

2002 – நார்வே முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

2003 – அமைதிப் பேச்சுக்களிலிருந்து விலகினர் புலிகள். போர் நிறுத்தம் செயலிழந்தது.

2004 – கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள். அதே ஆண்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. தமிழர் பகுதிகளில் பேரிழப்பு.

2006 – ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசுப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.

2007 – கிழக்கில் உள்ள புலிகளின் முக்கிய நகரான வாகரையை ராணுவம் மீட்டது. ஜூலையில், கிழக்கு மாகாணம் முழுமையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

2008 – ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. ஆகஸ்ட் மாதம் வடக்கில் நான்கு பகுதிகளில் ராணுவம் முன்னேறியது. கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்தது.

2009 – ஜனவரி 2ம் தேதியான இன்று கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்தது.

வெற்றியின் பயனை மக்கள் அனுபவிக்க எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – ரணில்

ranil-2912.jpgகிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியை நாட்டு மக்கள் அனுபவிக்கும் விதத்தில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறுனார். நாட்டில் மக்கள் இன்று பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள் மத்தியில் வாழுகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய மானியங்கள், சலுகைகள் வழங்கப்படவேண்டியது இன்று அவசியம். அரசு அதனைச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்கள், தொகுதிகளின் அமைப்பாளர்களுக்கு அறிவூட்டும் இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது; சிந்தனை என்று கூறுவது நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரக்கூடியதாக அமைந்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு இங்கு சிந்தனையில்லை. இன்று அடாவடித்தனம், அநீதி, ஊழல்கள், வீண்விரயம், மக்களிடம் அனுதாபம் காட்டாமை போன்ற தீய வழிகள் காணப்படுகின்றன. நாட்டில் இவை இருக்கக்கூடாது. எரிபொருள் விற்பனை தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் 120 சத வீத இலாபத்துடன் எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவது நாட்டு மக்களுக்கு அநீதியையும் அசௌகரியங்களையும் இழைப்பதாகும்.

கிளிநொச்சியை கைப்பற்றியதாக அறிவிக்கின்றனர். இதனால், நாம் படையினரை கௌரவித்து பாராட்டி எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கிளிநொச்சியை கூட்டாக வைத்துக்கொண்டுதான் விலைவாசிகள் உயர்த்தப்பட்டது. அவ்வாறானால் இம்மாதத்திலிருந்து பெற்றோலை 100 ரூபாவாகவும் மண்ணெண்ணெயை 5 ரூபாவாகவும் குறைத்து மக்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மக்களே இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றார்.

பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம்

கிளிநொச்சி நகரை படையினர் கைப்பற்றி விட்டனர் என்ற செய்தி நேற்று அறிவிக்கப்பட்டதும் தெற்கில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் செய்தனர். ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கோஷமெழுப்பியவாறு தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாகவும் சென்றனர். கொழும்பில் சகல பகுதிகளிலும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. பிரதான வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும், கோஷமெழுப்பியும் பட்டாசு கொளுத்தியதாகவும் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. நகரெங்கும் கோர்வை கோர்வையாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சிப் பகுதியை அரச படையினர் கைப்பற்றியதாக ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து இரத்தினபுரி நகரில் நேற்று (02) பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இராணுவ வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

அனுராதபுரம் நகரையும் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பட்டாசு கொளுத்தி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அனுராதபுரம் டி. எஸ். சேனநாயக்க சுற்று வட்டம், ஓங்கிப் பகுதி, பழைய நகரப் பகுதி, மார்க்கப் பகுதி, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஒன்று கூடிய பொதுமக்கள் கிளிநொச்சி வெற்றியை பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம, கெக்கிராவ, ஹொரவப்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய, மதவாச்சி, கெபிதிகொள்ளாவ, ரம்பாவ, கலன்பிந்துனுவெவ, திறப்பனே, மரதன்கடவள, எப்பாவல, மிஹிந்தலை போன்ற நகரங்களிலும் பொதுமக்கள் ஒன்று கூடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் பட்டாசி வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்ட நிகழ்வு தமிழ் மக்களின் உள்ளங்களை புண் படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக மாற இடமுண்டு. இத்தகைய சம்பவங்களினால் இனக்குரோதங்களை வளக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகக் கொள்ளலாம்.

கொழும்பு விமானப் படை தலைமையகம் முன்னால் தற்கொலைத் தாக்குதல்
மூன்று விமானப்படைவீரர்கள் பலி; 34 பேர் காயம்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்து சில மணிநேரத்திற்குள் விமானப்படை தலைமையகத்தின் முன்பு தற்கொலை குண்டுதாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. தற்கொலை குண்டுதாரி தலைமையகத்திற்குள் நுழையும் முன்பே நுழைவாயிலில் இந்த குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தி வருமாறு:-

கொழும்பு விமானப் படைத்தலைமையகத்திற்கு முன்னால் நேற்று (02) மாலை இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று விமானப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வீதியின் மறுபுறத்திலிருந்து வேகமாக ஓடிவந்த தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இரண்டு பஸ் வண்டிகளும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 13 விமானப் படைவீரர்களும், 23 சிவிலியன்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அலுவலகக் கடமைகளை முடித்துக்கொண்டு ஊழியர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் பெரும் வாகன நெருக்கடி காணப்பட்டது. இந்த நேரத்தில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

குண்டு வெடிப்பு இடம்பெற்றதும் முப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்ததுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. லேக்ஹவுஸ் சுற்று வட்டத்திலிருந்து கொம்பனி வீதி வரையிலான வீதிப்போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு சில மணிநேரத்தில் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Comments

  • anathi
    anathi

    சரி.தமிழர்களின் பிரச்சனைகளுக்கு பேரினவாத அரசு முன்வைக்கும் தீர்வு என்ன?

    Reply
  • ஓர் இலங்கைத் தமிழன்
    ஓர் இலங்கைத் தமிழன்

    புலிகள் தோற்றது. முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்தது போல மக்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புலிகளை எதிர்த்துக் கொண்டு செல்லும் நாள் விரைவில் வரும். அதனைத் தொடர்ந்து சிறு பிரதேசத்தினுள் அகப்பட்டிருக்கும் புலிகள் எறிகணை, விமானத் தாக்குதல்களாலேயே அழித்தொழிக்கப்படுவர். 2009 இறுதிக்குள் புலிப் பாசிசத்தின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணிகள் அடிக்கப்படும்.

    அழிந்தனர் புலிகள்.
    தமிழர்க்கு விடுதலை.

    Reply
  • suganthy arumugam
    suganthy arumugam

    The Fall. what next Mr prapa?

    Reply
  • sanath
    sanath

    Coming days you can see goverment real face.

    Reply
  • Arun Ambalavanar
    Arun Ambalavanar

    Congratulations Sri Lankan forces. Regardless of the shortcomings of Sri Lankan state, Military force’s achievement cannot be ignored. Afterall Sri lankan forces are the one who paid the cost of the war in blood and in flesh. As a fellow Tamil Sri Lankan I take my hat for the pure valour and at the same time I urge the humanity that govern Sri Lankan forces to look after minorities amid hard choices.

    Reply
  • msri
    msri

    ஓர் இலங்கைத் தமிழன் குறிப்பிடும் மக்கள்படை எது? …………….. மக்களை மகான்களாக + மகோன்தமாக பார்ப்பவர்களும் நடாத்துபவர்களுமே!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அரசு கிளிநொச்சியில் கொடியேற்றுவதும் வெற்றிகொள்வதும் தமிழ்மக்களின் தோல்வியாக யாராவது கருதுவீர்களானால் அது தவறு. ஜனநாயகத்தின் மறுத்தோடிகளின் தோல்வி. ஒருதமிழ் கொலைகாரக் கூட்டத்தினுடைய தோல்வி. இரண்டு சகாப்தற்கு மேலாக தமிழ்மக்களுடைய வாய்க்கு பூட்டுபோடவர்களுடைய தோல்வி. ஒரு இனவிடுதலைப் போராட்டத்தை மொத்த குத்தகையாக்கியவர்களுடைய தோல்வி. மக்களை புறந்தள்ளி விரக்தியடைந்த பிரிவினரை கூட்டி மூளைச்சலவை செய்து பயங்கரவாதியாக்கிய- பயங்கரவாதிகளுடைய தோல்வி. சிங்கள அரசு என்னதீர்வை வைப்பார்கள் என்பதை விட தமிழ்மக்கள் தமது கடந்தகால அனுபவங்களை முன்நிறுத்தி மதஇனஐக்கியமுள்ள தலைமையைத் தெரிவுசெய்து இவ்வளவு காலம் மழுங்கிப் போய்யிருந்த போராட்டத்தை முன்னெப்பார்கள் என்பதே உண்மையாகும்.

    Reply
  • surean
    surean

    மகிந்த மாத்தையாவின் ஆசைப்படி கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது. அடுத்து முல்லைத்தீவும் விழலாம். அப்புறம் என்ன? தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்குவார். அதன்பின் வடக்கு கிழக்கில் பாலும் தேனாறும் ஓடும். மாத்தறை மாத்தையாவின் “அல்வாவை” தமிழ்மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

    Reply
  • kunam
    kunam

    தற்போது முன்னேறுவதுபோல அரசாங்கம் முன்னொருபோதும் படைநகர்வை செய்யவில்லை. அவ்வப்போது இருந்த அரசும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவுகளும் அதற்கான காரணங்களில் ஒன்று. இருபகுதியும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது சற்று மாற்றம் கண்டுள்ளது. கிளிநொச்சியை தொடர்ந்து முல்லைத்தீவு போகலாம். அல்லது ஏதொஒரு புற அழுத்தம் இடையில் போரைக்கூட நிறுத்தலாம். இதுவெல்லாம் அரசியல் சதுரங்கம். இடையில் நிற்கும் நாங்கள் பகடைக் காய்கள். இதுநடக்கும் அதுநடக்காது என்று எதிர்காலம்பற்றி கதைத்துக்கொண்டிருப்பம். அவ்வளவுதான்.

    Reply
  • Thileeban
    Thileeban

    u think bombing innocent civilians is an achievement?? ur tamil blood is dying in Sri Lanka and you …. are congratulatin the army das been killing ur ppl??……
    killinochi doesn mean we goin down…keep dreaming

    Reply
  • anathi
    anathi

    மதஇனஐக்கியமுள்ள தலைமையைத் தெரிவுசெய்து இவ்வளவு காலம் மழுங்கிப் போய்யிருந்த போராட்டத்தை முன்னெப்பார்கள்”

    அப்படியொரு தலமை எங்கேயிருக்கிறது. எல்லாஅரசியலாளர்களும் கடைந்தெடுத்த அயோக்கியர்களாய் உள்ளார்கள். மழுங்கி போயிருந்த போராட்டத்தை முன்னெடுப்பதென்றால் திரும்பவும் ஆயுதம் ஏந்துவதா? திரும்பவும் இரத்தக் களரிக்கு மக்கள் செல்வார்களா?

    Reply
  • BC
    BC

    திரும்பவும் இரத்த களரி ஒரு போதும் வேண்டாம். தாங்காது.

    Reply
  • palli
    palli

    கிளிநொச்சி அரசின் கட்டுபாட்டில் வந்திருப்பது தமிழர்க்கு என்னும் மிக அழிவை தரகூடியதே. உதாரனம் ஈராக். நேர்முக போரைவிட கொரில்லா தாக்குதல் மிகவும் அழிவை ஏற்படுத்தும். எனி புலி செய்யபோவதும் இதியேதான். இதில் புலியின் பலம் என்ன அரசின் பலவீனம் என்ன என்பதை பார்த்தால். புலியின் பலம் தமது இடத்தை பாதுகாக்கும் பணி கிடையாது. ஆகவே ஒரே கொரில்லா தாக்குதலைதான் செய்வார்கள். ஆகவே இவர்களை இனம் காணுவது அரசுக்கு மிகவும் கடினமான செயலாகவே இருக்கும். புலிகள் தாக்குதலை நடத்தி விட்டு மக்களிடமே போய் மறைந்து கொள்வார்கள். இதை அரசு தெரியும் போது பல தமிழர் சந்தேகத்தின் பிடியில் மாட்டுவார்கள். இதில் பலர் கொல்லப்பட நேரிடலாம்.

    அரசின் பலவீனம் போரை விட பிடித்த இடத்தை பாதுகாக்க கூடிய அளவில் ராணுவம் தேவைபடும். போராட்ட காலத்தில் விளிப்புடன் இருப்பது போல் காலம் பூராவும் இருப்பது என்பது சாத்தியமல்ல. ஆகவே புலிகளின் கொரில்லா தாக்குதலால் பல ராணுவம் மரணிக்க நேரிடலாம். இதனால் பல ராணுவத்தினர் தப்பிஓடலாம். இப்படி பல பிரச்சனைகள் உள்ளது. இதுக்கு சரியான ஒரு வழி என்ன?? மக்களை போராட்ட குணத்தில் இருந்து அப்புறபடுத்த அவர்களுக்கு சரியான ஒரு தீர்வை (கிழக்கு போல் இல்லாமல்) மக்கள் ஏற்று கொள்ளகூடிய ஒரு நிர்வாகத்தை அரசு உடனடியாக செய்ய வேண்டும். இதுக்கு அனைத்து ஊடகங்களும்; புத்திஜீவிகளும் வேற்றுமை இன்றி செயல்பட வேண்டும். இல்லையேல் ஈராக்கை விட மோசமான அழிவை இலங்கை மக்கள் அனுபவிக்க நேரிடலாம் என்பது பல்லியின் கருத்து. இது அரசுக்கு வெற்றியா அல்லது புலிக்கு தோல்வியா என்பதை விட இந்தநேரத்தை மக்களுக்காக எப்படி செயல்படுத்தலாமென அனைவரும் சிந்திப்பது மிகவும் நல்லது.

    பல்லி..

    Reply
  • ஆசைத்தம்பி
    ஆசைத்தம்பி

    அட போங்கையா நம்ம நடேசன் கிளிநொச்சியை இராணுவம் பிடிப்பதென்பது பகற்கனவு என்று கூறிக்கொண்டேயிருந்தார். ஆனால் அவர் இன்னும் கனவுலகத்திலை இருந்து மீளலையாம். யாராவது அவரை எழுப்பி விடுங்கப்பா………………..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    போராட்டம் மக்களுக்காவே நடத்தப்படுகிறதே ஒழிய தனியொரு குழுவிற்காகவே ஒரு தனிமனிதனுக்காவோ அல்ல. எமது முப்பது வருட அனுபவம் பலபடிப்பனைகளை எமக்கு வழங்கியுள்ளது. பொருள் அழிவுகளையும் மனித அழிவுகளையும் கொடுத்து ஈழத்துரஜினிகாந்தை உருவாக்கிவிட்டதே பயன். இனி அவர் நடிக்கமாட்டார். ரசிகர்கள் சலிப்படைந்து விட்டார்கள். அரசாலும் நம்மவர் தலைமைகளாலும் ஏமாற்றப்படுவோம் என்பது நிதர்சன உண்மை ஒன்றை உணராதவரை-வங்கிக்கு முன்னால் குண்டுவைத்தால் வங்கி இயங்காமல் விடுவதில்லை இராணுவ அதிகாரியை கொலைசெய்தால் இராணுவத்தை கலைத்து விடுவதில்லை. மந்திரியை கொலைசெய்தால் அந்த இடத்திற்கு வேறுஒருவர் வராமல் விடுவதில்லை. சமூகத்தின் ஐக்கியமும் போராட்டமும் தொழில்சங்களையும் விவசாயகழகங்கள் சங்கங்களை சுற்றியே இருக்கின்றன. ஒரு அராங்கத்தை ஈடாடபண்ணுபவை இவையே

    Reply
  • saam
    saam

    என்னப்பா உலகம் இது தமிழன் வீழ்ந்ததை கூட சக தமிழன் மகிழ்ச்சி அடைகிறான்..

    Reply
  • manmathan
    manmathan

    please do what GANDY AND SUBAS CHANDRABOSE ((nelson mandella))did. rule for 1 year and step down. let Two others take the country forward and you lead the country from behind the screen / curtain

    POWER IS SOMETHING YOU TAKE..
    NOBODY GIVES YOU POWER.

    PLEASE TAKE A REFERANDUM AND LET OBAMA HANDLE THIS PROBLEM

    Parents and GOD will find a solution. Pray and you will get what you ask.
    Manmathan

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சாம்- தமிழன் வீழ்ச்சியடையவில்லை. ஜனநாயகத்தின் மறுத்தோடிகளும் பயங்கரவாதமும் வீழ்ச்சியடைந்தது. கொலை செய்வதையும் போக்குவரத்து வாகனங்களுக்கு குண்டுவைப்பதையும் போராட்டம் என அர்த்தப்படுத்தியது வீழ்ச்சியடைந்தது. “ஆயுதம்கொண்டு போராடுதல்” என்ற மாயை வீழ்ச்சியடைந்தது.

    Reply
  • Senthan
    Senthan

    வருகின்ற தடை எல்லாம் வரி வேங்கை தாண்டும்
    மனமெங்கும் நிறைந்துள்ள முதல்வோன் கை ஒங்கும்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    when i joined to a iyakkam in 1984 my uncle that time he was 45 years old said that “siru pillai vaelaannmai veedu vanthu saeraathu”
    now i feel thats correct???

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வந்தியதேவன் சிறுபிள்ளை செய்த வேளாமை விளைந்தும் வீடுவந்துசேராது மட்டுமல்ல முட்டாள் பாறாங்கல்லை தூக்குவது தன்சொந்த காலில் போடுவதற்கே! மொக்கன் மலத்திலைவிளக்கினால் ஏழு இடத்திற்கு சேதம். இருந்த வெள்ளத்தை வந்தவெள்ளம் கொண்டு போயிற்று… இப்படியே அடிக்கிக்கொண்டு போகலாம்.
    இனநீதியை பெறுவதற்கு வன்முறை…? அது அன்பினால் அல்ல வெறுப்பினால் கட்டப்படுகிறது.அது சமூகத்தை அழித்து சகோதரத்துவத்தை முறியடித்து விடுகிறது. சமூகத்தில் உரையாடலுக்கு பதிலாக அது ஒரேஒருவரின் பேச்சாகிவிடுகிறது. வன்முறையின் முடிவு அதனில் தோல்வியாகி முடிகிறது. இவற்றை ஓர்அளவு புரிந்து கொண்டாலே தமிழ்மக்களின் அவலம் பாதி நிவிர்த்தி செய்தது மாதிரி ஆகிவிடுகிறதுதல்லவா ?

    Reply
  • anathi
    anathi

    “தமிழ் பேசும் மக்கள் சுமார் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக ஜனநாயகமின்மை காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதற்கு புலித் தலைமையே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகள் தங்களது பலத்தை ஒருபோதும் தமிழ்பேசும்; மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதற்கு பயன்படுத்த முன்வந்ததில்லை என்பதினையும் சுட்டிக் காட்டியுள்ளார்”

    முற்றிலும் உண்மை. இன்றைக்கு புலியோடு சேர்ந்து தமிழினமே அதல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழினம் ஆதாளபாதளத்தில்லிருந்து மீண்டுவந்துகொண்டிருக்கிறது. இனித்தான் தமிழ்மக்கள் பயங்கரவாத இம்சையில்லிருந்து விலகி அரசியலை நோக்கி பயணிக்கப் போகிறார்கள்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    சம்பூர் வாகரை குடும்பிமலை பூநகரி கிளிநொச்சி பிடித்தோமென வெற்றி கோசம் போடுபவர் புலிகளை அழிக்கமுடியாத கையேறுநிலையில் சரணடையுங்கள் என்பது கைகெட்டியது வாய்கெட்டாது போன ஏமாற்றத்தை பிரதிபலிக்கிறது. புலிகள் ஏன் தனக்கு வலிந்து தேர்தல் வெற்றிகளை தந்து ரணிலை தலையெடுக்காது தடுக்கிறார்கள் என்பதை ஒரு நிமிடம் மகிந்தா சிந்தித்தால். மிகுதி தானாகவே விளங்கும். யாழை சந்திரிக்கா தலைமையில் கைபற்றிய போது காட்டதபடமா விடதா வசனங்களா. முடிவு எப்படியானதாக இருந்தது? புலிகள் லவுட்ஸ்பீக்கரில் சரணடையுங்களென அறிவித்தல்விட தலையெல்லாம் தப்பியோடி இந்தியாவில் பதுங்க வால்கள் வாலறுந்தபட்டமாக தறிகெட்டு ஒடிய புளொட்டோ ஈபீஆர்எல்எப் அல்ல புலிகள். புலிகள் அழிவதோ சரணடைவதோ இந்திய ராணுவகாலத்தில் நடந்திருக்க வேண்டும். அதையே சளைக்காத போராடி முறியடித்த புலிகள் மகிந்தாவின் சவுண்டை கேட்டு சரணடைவார்கள் என பகல்கனவை காணுங்கள்.

    Reply
  • நேர்கருத்து தோழர்
    நேர்கருத்து தோழர்

    மாற்றுக்கருத்து தோழர் கூறியது, இன்னும் பல புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்த்துகிறது.

    சரணடையுங்கள் என்று மகிந்த கூறுவது புலிகள் சரணடைந்துவிடுவார்கள் என்று மகிந்த நம்புவதாலோ ஆசைப்படுவதாலோ அல்ல. அதனை சொல்லவேண்டும் என்பதற்காக. சரணடைய வாய்ப்பே கொடுக்கவில்லை என்று உலகத்தார் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக. புலிகள் சரண்டையமாட்டார்கள் என்று நிச்சயம் மகிந்தவுக்கும் ஏன் அனைத்து சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தெரியும்.

    புலிகளுக்கு இதுவரை டீல் போட்டுத்தர பேச்சு மன்னர்கள் இருந்தார்கள். இலங்கை ராணுவம் அடிக்கும்போது இந்தியாவிடம் டீல் போடவும், இந்திய ராணுவம் அடிக்கும்போது இலங்கை அரசிடம் டீல் போடவும் வாய்ப்பிருந்தது. கோடிகோடியாய் பணமும் ஆயுதமும் வாங்கி எதிரிகளை தாக்குவதையும் அதை விட “துரோகிகளை’ கொல்லுவதையும் சிறப்பாக செய்துகொண்டிருந்தார்கள்.

    இன்றுதான் சொந்தக்காலில் நின்று எதிர்கொள்கிறார்கள். பார்ப்போம் எப்படி நிற்கிறார்கள் என்று.

    கவனியுங்கள் மாற்றுக்கருத்து தோழரே,

    இதே ஆக்கள்தான் “போருக்கு ஆணையிடுதலைவா” என்று ஊர்வலம் போனவர்கள். ரணிலை துரத்தி மகிந்தவை அமரவைக்க வாக்குச்சீட்டை உபயோகபடுத்தியவர்கள் (அல்லது வாக்குச்சீட்டை தடுத்தவர்கள்).

    இன்று அதே புலிகள்தான் போர்நிறுத்தத்துக்கு இந்திய அரசியல்வாதிகளில் காலில் விழுகிறார்கள். தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், போர் நிறுத்தம் செய்ய வையுங்கள் என்று கூத்தமைப்பு எம்பிகள் மூலம் டெல்லிக்கு காவடி எடுக்கிறார்கள்.

    அதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். இன்று யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று.

    Reply
  • kanna
    kanna

    மாற்றுக்கருத்து தோழர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் புலிக்கு வக்காலத்து வாங்கிறார்.இன்னொருவர் நேர்க்கருத்துதோழர் என்று சொல்லிக்கொண்டு அரசுக்கு வக்காலத்து வாங்கிறார்.இந்தக்கருத்துக்களை சொல்வதற்கு எதற்கு “தோழர்” என்று பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை? தயவு செய்து அந்த மதிப்பு மிக்க சொல்லை கொச்சைப்படுத்தாதீர்கள்.

    Reply
  • accu
    accu

    மன்னாரில் முறியடிப்பு சமர் நடக்கும்போதே தீபன் கூறினார் ஒரு அங்குல நிலமும் விடமாட்டோம் என்று அதை எத்தனை ஊடகங்கள் சொல்லி மகிழ்ந்தன. ஆனால் நடந்ததென்ன? இன்றுவரை எத்தனை பேர் எத்தனையோ சொல்லியாச்சு ஆனால் நடந்ததையும் பார்த்தாச்சு. இனியும் வாய்மாலங்கள் தேவையா? கிளிநொச்சியை பிடிப்பது நடக்காது பகற்க்கனவு என்ற நடேசனே ஓரளவில் கிளிநொச்சியை விட்டாலும் போராட்டம் தொடரும் என்று தமது தோல்வியை மெல்லக்கசியவிட்டார். இப்ப மீண்டும் புலிகள் முழு நிலத்தை இழந்தாலும் கொரில்லா யுத்தத்தில் இறங்குவார்கள் என்பதுபோல் கதை வெளிவரத் தொடங்கிவிட்டது. அப்பஎன்ன பழையபடி எண்பதாம் ஆண்டுக்கு போகிறோமா? இனி மக்களுக்குள் ஒழிப்பது முடியாது அதிலும் நிச்சயமாக வன்னி மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். இனி புலிகளுக்கிருப்பதெல்லாம் கனவுலகில் வாழும் சிறியளவிலாலான புலம்பெயர் மக்கள்தான். அவர்களும் றஜனி ரசிகர்கள் மாதிரி ரெண்டு படம் புட்டுக்கிட்டுதென்றால் கையை விட்டிடுவாங்கள். அவர்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறையவே இருக்கிறது. ஏதோ வீட்டு மோட்கேஜ், கரண்ட்பில், பிள்ளைகளின் ரியூசன் காசு மாதிரி மாதாமாதம் புலிகளுக்கும் காசைக் கொடுப்பதோடு அவர்கள் வேலை முடிந்து விடும். இதுதான் இன்றைய நிலை.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “புலிகள்தான் போர்நிறுத்தத்துக்கு இந்திய அரசியல்வாதிகளில் காலில் விழுகிறார்கள்.”
    எதிரி எதைசெய்யனோ அதை செய்யம்படி கேட்டு அவன் வாயாலேயே மறுப்பு சொல்ல வைத்து அதன் மூலம் எதிரியை சர்வதேசத்திலும் எதிரியின் போர்வெறியை உணராத மற்றும் இந்தியாவின் தமிழினஅழிப்பு நயவஞ்சக முகத்தை இதுவரை அறியாதிருந்த தமிழகமக்களிற்கு ஆதாரத்துடன் எடுத்துகாட்டவே யுத்தநிறுத்த அழைப்பெனும் அடிப்படை ராஐதந்திரம் இலாவகமாக கையாளப்பட்டது. புலிகள் தாயகமீட்பை மேற்கொள்ளும் போது எந்தநாடும் தலையிட்டு தடுக்கும் தார்மீக தகைமை இல்லாது செய்யப்பட்டுள்ளது. மகிந்தா புலிகளை தடைசெய்ய போவதாக சொல்லிவிட்டு வாளாதிருப்பதை தடுக்கவே கொழும்பில் இரு தற்கொடை தாக்குதல்கள் நடத்தப்பட்டு புலித்தடை தூண்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் புலிகள் மகிந்தாவை மீள/மீட்க முடியாத ஒருவழிபாதையினூடக நீண்டதூரம் அழைத்து வந்துவிட்டனர். மகிந்தா சுவைக்கபோகும் இறுதிவெற்றி வரபோகும் மாகணசபை தேர்தல் வெற்றிதான்.

    இருவருடங்களிற்கு மேலாக சக போராளிகளின் உயிரிழப்பு அவயஇழப்பு என பெரும்துன்பங்களையே வன்னிகளமுனையில் நேரில் பார்த்த போராளிகளே மனம்தளராது தலைமையில் நம்பிக்கை வைத்து அவர்களின் கட்டளையை ஏற்று இன்றும் களத்தில் நிற்கும் போது நாம் மனம் தளர்வது பேதமையல்லவா!

    “தோழர்” என்று பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை? தயவு செய்து அந்த மதிப்பு மிக்க சொல்லை கொச்சைப்படுத்தாதீர்கள்.”
    ஈழத்தமிழர்களிடம் ““தோழர்” என்ற சொல் மதிப்பிழந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டதை இன்னமும் அறியாதிருக்கிறீர்கள்.
    “தீபன் கூறினார் ஒரு அங்குல நிலமும் விடமாட்டோம் என்று அதை எத்தனை ஊடகங்கள் சொல்லி மகிழ்ந்தன. ஆனால் நடந்ததென்ன?”
    புலிகள் இன்றுவரை மகிந்தாபடையை கோபபடுத்த மூர்க்கம்கொள்ள தறிகெட சலிப்புற வைப்பதையே இலக்காக கொண்டு செயற்படுகிறார்கள். அதற்கு ஏற்றவாறு வார்த்தை பிரயோகங்கள் இருக்கும்.அதன் ஒரு நேரடிபலன்தான் வெற்றிக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுவதாக சொல்லும் மகிந்தா படையிலிருந்து. 30ஆயிரம் படையினரின் தப்பியோட்டம். எதற்கும் சீன யுத்தவிற்பனர் சன்சூய் மற்றும் மாவோ சேதுங்கின் யுத்ததந்திர குறிப்புக்களை படித்தால் இப்படியான குழப்பங்கள் தீரும்.

    Reply