தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பிற்கு இது வரை மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாவட்டங்களிலும் நிலையங்களை அமைத்து வன்முறை தொடர்பில் அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவிக்கையில் கூறியதாவது;
வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டது முதல் இன்று(03) வரை நாம் மூன்று தேர்தல் வன்முறைகளை பதிவு செய்துள்ளோம். நேற்று முன்தினம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி ஹோங்ககே தனதுதேர்தல் அலுவலகத்தை அமைத்த போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது சகோதரி காயமடைந்துள்ளார். இதற்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர்தல் வன்முறை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்ததினமான டிசம்பர் 31 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது. மற்றைய மூன்றாவது சம்பவமும் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் வன்முறை தொடர்பில் நாம் 5 மாவட்டங்களிலும் எமது நிலையங்களை அமைத்து அவதானித்து வருவதுடன் இதனை அவதானிப்பதற்கு இரு மாகாணங்களிலும் 3 ஆயிரம் பேரை நாம் பயிற்சியளித்து நியமித்துள்ளோம் . 2,400 பேர் நிலையாகவும் 600 பேர் நடமாடியும் இதனை அவதானிக்கவுள்ளனர்.தற்போது இரு மாகாணங்களிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆள் அடையாள அட்டை இல்லாமையால் வாக்களிக்க முடியாது வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளனர். இதனால் இவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றோம் என்றார