வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து மேல் மாகாணத்தில் 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை பொலிஸ் திணைக்களம் இன்று மேற்கொள்கின்றது. மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இந்த கணக்கெடுப்பு பதிவுகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே இந்த பதிவுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
எனவே தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மேல் மாகாணத்தில் வதிபவர்கள் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் அனைவரும் தமது பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் நிலையங்களில் குறிப்பிடப்படும் நிலையங்களுக்குச் சென்று கணக்கெடுப்புக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கொடுப்பு நடவடிக்கை போன்றதே இந்த கணக்கெடுப்பு என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறி ப்பிட்டார். கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு அந்தந்த பொலிஸ் பிரிவுகளினால் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடனே இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த எஸ்.எஸ்.பி. ரஞ்சித் குணசேகர, பதிவுக்கு வரும் மக்கள் எந்தவித தங்குதடையும், தாமதங்களுமின்றி அவசர அவசரமாக தகவல்களை வழங்கிச் செல்ல சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.