ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறும்போது, “ஐ.எஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கிள்ளனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.
கரோனா பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் அரசு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக ஈராக் அரசு அறிவித்தது.
அது போல சிரிய அதிபர் ஆசாத் அரசுப் படைகளால் ஐ.எஸ் படைகள் பெருமளவு தோற்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.