தமிழர் பகுதிகளில் தொடரும் நுண்கடன் தற்கொலைகள்!

நுண்கடன் மற்றும் அது தொடர்பான வட்டி சுமையால் தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் பல அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாகை நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக மனைவி இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் 29.08.2020 இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குணரத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த இளம் பெண்ணுக்கு ஆறு வயதில் ஒரு மகளும், 15 மாதங்களேயான ஒரு கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேவேளை, கணவன் மது போதையுடன் தலைக்கவசமின்றியும் மோட்டார் சைக்கிளின் சாரதி அனுமதிப்பத்திரம், இன்சூரன்ஸ் இன்றியும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ததால் போக்குவரத்துப் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு 30 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாகச் செலுத்த வேண்டியதாகிவிட்டது.

இதற்கான பணத்தை இன்னொருவரிடம் வட்டிக்குப் பெற்று தண்டப் பணம் செலுத்தியுள்ளார். அதேவேளை, வட்டிக்குப் பெற்ற பணத்தை மீளச் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளார். அத்துடன் நகைகளும் அடைவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடும்ப பொருளாதார தகராறு காரணமாக கணவன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலைமை காரணமாக குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் பெற்றோர், சகோதரி வசிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடனைத் தீர்க்க முடியாத மன அழுத்தம், கணவன் பிரிந்து சென்ற விரக்தி ஆகியவற்றால் அவர் கடுமையா பாதிக்கப்பட்டு எவருடனும் மனம் விட்டுப் பேசாது இருந்துள்ளார். இந்நிலையில், தான் குறித்த வீட்டில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, தனது கைக் குழந்தையை குளிப்பாட்டி, படுக்கையறையில் உறங்க வைத்த பின்னர் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *