தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் !

தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், நடைபெறவுள்ள நடைபவனியில் தாங்கள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் க.பிருந்தாபன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணித் தலைவர் கி.கிருஸ்னமேனன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணித் தலைவர் கி.கிருஸ்னமேனன் யாழ். ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 21ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இருந்து ஆரம்பமாகும் குறித்த நடைபவனி 26ஆம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நிறைவுபெறவுள்ளது.

இதேவேளை, இளைஞர்களான எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினைகளும் முரண்பாடுகளும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் நாங்கள் தேசியத்துக்கான ஒரு விடயம் வரும்போது ஒற்றுமையான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்துள்ளோம்.

இளைஞர்களாகிய எங்களுடைய செயற்பாடுகளைப் பார்த்து தலைவர்கள், தாங்களும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் இனப் பிரச்சினைக்கான தீர்வினையோ அல்லது ஏனைய விடயங்களையோ பேசமுடியும். உணர்வுபூர்வமாக இருந்தால் நிச்சயமாக அது சாத்தியமாகும். எதிர்காலத்தில் ஒரு ஒற்றுமையான பயணத்தினை மேற்கொள்வதற்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *