முல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 1069 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தரும் சிவிலியன்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக பெருமளவில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை நோக்கியே 1069 சிவிலியன்களும் வருகை தந்துள்ளனர். இவர்களில் 260 சிறுவர்கள், 204 சிறுமிகள், 354 ஆண்கள் மற்றும் 291 பெண்கள் அடங்குவர். யாழ். கொக்கிளாய் பிரதேசத்தை நோக்கி 234 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 80 சிறுவர்கள், 44 சிறுமிகள், 80 பெண்கள் மற்றும் 70 ஆண்கள் அடங்குவர்.
படையினர் அண்மையில் விடுவித்த கெவில் பிரதேசத்தை நோக்கி 190 சிவிலியன்கள் காலை 8.30 மணியளவில் வருகை தந்துள்ளனர். இவர்களில் 53 சிறுவர்கள், 39 சிறுமிகள், 51 பெண்கள் மற்றும் 47 ஆண்கள் அடங்குவர். வவுனியாவின் ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி மாலை 3.30 மணியளவில் 483 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 92 சிறுமிகள், 89 சிறுவர்கள், 178 ஆண்கள் மற்றும் 124 பெண்கள் அடங்குவர்.
கிளிநொச்சியின் புலியன் பொக்கரை பிரதேசத்தை நோக்கி 26 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 18 ஆண்கள், 04 பெண்கள், 03 சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவரும் அடங்குவர். இராமநாதபுரத்தை நோக்கி மேலும் 46 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். 15 சிறுவர்கள், 13 சிறுமிகள், 11 ஆண்கள் மற்றும் 10 சிறுமிகள் இவர்களில் அடங்குவர். புலியன்பொக்கரை பிரதேசத்தை நோக்கி மேலும் 87 சிவிலியன்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். 20 சிறுவர்கள், 15 சிறுமிகள், 24 ஆண்கள் மற்றும் 19 பெண்களும் இவர்களில் அடங்குவர்.
புலிகளால் தமக்கு நாளுக்கு நாள் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் இதனை அடுத்தே தாங்கள் வரத் தொடங்கியதாகவும் இந்த மக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பிரிகேடியர், எதிர்வரும் நாட்களில் மேலும் பெருந்தொகையான சிவிலியன்கள் வருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.