செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள 3 ஏரிகள் கண்டுபிடிப்பு !

மெல்லிய வளி மண்டலம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பது சாத்தியமற்றது. ஆனால் தரைக்கு கீழே நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில்  இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்தமான மாஸ்எக்ஸ்பிரஸ் என்ற ஆய்வு களத்தின் ரேடாரில் உள்ள தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலப்பரப்புக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அருகில் நிலத்துக்கு அடி யில் 1.5 கிலோ மீட்டர் கீழே புதைந்துபோன 3 ஏரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆய்வின்போது கண்டறியப்பட்ட 4-வது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

திரவ நிலையில் நீர் இருப்பது என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாது. எனவே இந்த கண்டுபிடிப்பு சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா? என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் உப்புதன்மை வாய்ந்தவையே என்று கருதப்படுவதால் அதில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *