தர்மபுரத்தில் நிலத்தின் கீழ் புலிகளின் டீசல் களஞ்சியத் தொகுதி

_army.jpg முல்லைத்தீவு தர்மபுரம் பிரதேசத்தில் நிலக்கீழ் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய டீசல் களஞ்சிய தொகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் 225 லீற்றர்களைக் கொண்ட 300 பிளாஸ்டிக் பீப்பாக்களுக்குள் இந்த டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், அவை சுமார் இரண்டு வருடங்களுக்கு போதுமானவையெனவும் குறிப்பிட்டார். கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை தர்மபுரம் நகருக்குள் பிரவேசித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் கடந்த நான்கு நாட்களாக இந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இங்கிருந்து தொடர்ந்தும் முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினரே டீசல் களஞ்சியசாலைத் தொகுதியையும் கண்டு பிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட இந்த தர்மபுரம் பிரதேசத்திலிருந்தே புலிகளின் குண்டு தயாரிக்கும் பிரதேசம் ஒன்றையும், மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய டீசல் களஞ்சியசாலைத் தொகுதி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சுமார் ஒரு ஏக்கர் பரப்புள்ள பாரிய தென்னந் தோப்பின் கீழ் நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை அடிக்கு கீழாகவே இந்த களஞ்சியத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இலை, குலைகளால் மிகவும் தந்திரமான முறையில் இந்த டீசல் பீப்பாக்கள் நிலக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த டீசல் களஞ்சியத்திற்கு அடையாளமாக அந்த தென்னந் தோப்பிலுள்ள மரங்களில் சில குறியீடுகளும், அது களஞ்சியப்படுத்தப்பட்ட திகதி மற்றும் அதன் தொகை என்பன எழுதப்பட்டிருந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவும், படையினரின் கடுமையான தாக்குதல்களை தவிர்க்கும் வகையில் புலிகளால் அமைக்கப்படும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், மண் அரண்கள் அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை பாவிப்பதற்கும் இங்கிருந்தே டீசல் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஷெல் குண்டுகள் விழுந்து எரி பொருட்கள் தீப்பற்றிக் கொள்ளாத வகையில் நிலத்தின் கீழ் வெட்டப்பட்ட நீரோடையொன்றிலேயே டீசல் பீப்பாக்கள் வைக்கப்பட்டு மேலே மணல் மற்றும் காய்ந்த தென்னம் ஓலைகளால் அவை மூடப்பட்டிருந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

துரித கதியில் முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இவற்றை மீட்கக்கூட நேரமில்லாது அவற்றை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் படையினர் சுட்டிக்காட்டினர். வன்னியிலுள்ள மக்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக பல தரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து டீசலும் அரசாங்கத்தினால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டதெனவும் படையினர் கூறினர்.

கிளிநொச்சியை இழந்த புலிகள் கிளிநொச்சியில் முன்னெடுத்த சகல நிர்வாக நடவடிக்கைகளையும் ஏனைய செயற்பாடுகளையும் தர்மபுரம் பிரதேசத்திலேயே முன்னெடுத்துள்ளமை இங்குள்ள தடயங்கள் மூலம் தெரிய வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *