“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(28.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அமெரிக்கா தனது இராணுவ பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையை இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
இலங்கை கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது. அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவுடனான எக்ஸா உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். எனினும் இலங்கை இதுவரை சர்வதேச போர் அமைப்புக்களுடன் எந்தவொரு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் இராணுவ அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதில்லை.
இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. எனவே சதித்திட்டங்களுடான இராணுவ ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.