இலங்கையில் நடைபெற்று வரும் “இனமோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன, என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 2006 காலப்பகுதியில் நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் வெளியிடப்படவுள்ளன. இலங்கை இன மோதுகையானது தமிழ் சிங்கள தேசங்களுக்கு இடையேயான போர் மட்டுமல்ல, அனைத்துலக ஈடுபாடும், நோக்கங்களும் கொண்டதொரு அனைத்துலக விவகாரம் என கற்கையாளர்களும் சிந்தனையாளர்களும் விபரித்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்த மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமான “இலங்கை இனமோதுகையின் சர்வதேச பரிமாணம்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது.
“குல்ரங்’ மூத்த பேராசிரியர் சத்தியேந்திரா, கலாநிதி சதானந்தன் உட்பட பல அனைத்துலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பாக இது வெளியாகின்றது. இதேவேளை, 2002 2006 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலாக “”மாற்றுநிலைப்படுத்தலின் அரசியல்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது. சுதாகரன் நடராஜா, லக்சி விமலராஜா ஆகியோரின் ஆய்வுகளின் தமிழ் தொகுப்பாக இது வெளியாகின்றது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் சனிக்கிழமை 31.01.09.மாலை 4 மணிக்கு இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. பிரித்தானியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.02.2009) மாலை 5.30 மணிக்கு லண்டனில் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. இரு நிகழ்வுகளிலும் நடேசன் சத்தியேந்திரா (தமிழ் புத்திஜீவி, தமிழ்நேசன் இணையத்தள முதன்மை ஆசிரியர்), அ.இ.தாசீசியஸ் (மூத்த புலத்தமிழ் ஊடகவியாளர் லண்டன்), ம.தனபாலசிங்கம் (தமிழ் சிந்தனையாளர், ஆய்வாளர் அவுஸ்திரேலியா,சிட்னி), கி.பி.அரவிந்தன் (பல்துறை செயற்பாட்டாளர், எழுத்தாளர் பாரிஸ்) ந.ஓ.பற்றிமாகரன் (ஆசிரியர், பத்திரிகையாளர், ஆய்வாளர் லண்டன்) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர