யாழ். மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இதற்கு உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக மக்களின் சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கழிவுப்பொருட்களை வீசுதல், வடிகால்களை மூடுதல், அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளும் காரணத்தினாலும் வடிகால்களை சட்டவிரோதமாக தடுப்பதும் வெள்ள நீர் தேங்கும் அவல நிலை ஏற்பட காரணமாகிறது.
இந்த விடயத்தில் யாழ். மாநகர சபை மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் இடர் ஏற்பட்ட பகுதிகளில் அதனை செயற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும் ஏனையவற்றை அதனை உரியவாறு செயற்படுத்துவதற்கு உரிய தகவலைப் பெற்று அதனை செயற்படுத்துவதற்கு உள்ளோம்” எனவும் தெரிவித்தார்.