“தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்” – கோவிந்தன் கருணாகரம்

ஜே.வி.பி அமைப்பின் தலைவர்கள், போராளிகள் இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொலிஸாரினால் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவேந்தலை  தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,

“இங்கு அப்பாவி பொதுமக்கள் கொத்தணியாக கொல்லப்பட்ட வரலாறு இருக்கின்றது. உலகத்தின் பல நாடுகளில் தங்களது உரிமைகளைப்பெறுவதற்காக பல விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்.

அந்தப் போராட்டத்தில் இறந்த எமது உறவுகளை நினைவு கூருவதற்குக்கூட இந்த அரசாங்கம் தடை விதிக்கின்றதென்றால் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலுமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை. இலங்கையில்கூட 1771, 1989ஆம் ஆண்டு காலகட்டங்களில் ஜே.வி.பி எனும் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.

இன்றும் அவர்களது தலைவர்கள், போராளிகள்கூட இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலகட்டத்திலே எந்தவித தடையுமில்லாமல் இந்த நாட்டிலே அனைத்து நினைவுகூரல்களும் நடத்தப்பட்டன.

2020ஆம் ஆண்டிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் நினைவிடங்களை அழிப்பதும் நினைவுகூரல்களை தடுப்பதும் அவமானமான செயலாக இருக்கின்றது. இலங்கையில் வடக்கு கிழக்கில் அழிந்த எமது உறவுகளுக்கு ஒரு நீதி வேண்டி தற்போது நாங்கள் இராஜதந்திர ரீதியாக போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எதிர் வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையகத்தில் இந்த படுகொலைகளுக்கு எதிரான ஒரு பிரேரணை வரவிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அந்த வகையில் இலங்கையிலே நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு நிலையானதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். பாதிப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று வேண்டி இன்று மிகவும் அமைதியாக இந்த நினைவுகூரலை மேற்கொண்டிருக்கின்றோம். இப்பகுதி மக்கள் தங்களது மக்களை நினைவுகூருவதைக்கூட தடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *