மியன்மாரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியன்மார் அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூகி, மியன்மாரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. ஆங் சான் சூகி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகின் பல நாடுகளும் இது தொடர்பாக தங்களுடைய கண்டனத்தை வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறும்போது,
“மியன்மார் இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீதான நடவடிக்கைகளை இன்று அறிவிக்கிறேன். மியன்மார் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியை ராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறேன். இது அவர்களது குடும்பத்தினர் மீதும் அடங்கும்” என்று தெரிவித்தார்.
இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை நைப்பியாவில் இராணுவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தத் தாக்குதலில் இருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மியான்மர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.