“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.!
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்த வெளியிட்ட கட்சியின் தலைவர் முத்துசாமி,
இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்தக் கட்சி அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.
தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன. எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளி விட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகாடியதாக உள்ளது.
எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.
எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும்.
எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க அண்மையில் இந்தியாவின் அமைச்சர் அமித்ஷா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தங்களுடைய பா.ஜ.க கட்சியை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக கூறியிருந்தமை நோக்கத்ததது.