தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தை வைத்திருந்த நபர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின் இன்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை வரும் ஏப்ரல் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இளைஞனின் அலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படம் உள்ளமை தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *