வடக்கு அரசியல் சூழலை பொருத்தவரையில் எந்தக்கட்சியும் யாருடனும் இணைந்து பயணிக்க முயற்சி செய்தது கிடையாது. அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்னுமு் சற்று வித்தியாசமாக கட்சிக்குள்ளேயே இணைந்து செயற்பட முடியாதவர்களாக கடிபட்டுக்கொண்டிருக்கின்றனர். கஜேந்திரர்களை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு உடனடியாக ஒரு துரோகி பட்டத்தை கொடுத்து விடுகின்ற முனைப்பிலேயே அக்கட்சி தலைவர் உட்பட பலருடைய நகர்வுகள் அமைந்திருக்கும்.
அவர்களுடைய கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. புகைந்து கொண்டிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தொடர்பான பிரச்சினைகளே இதற்கு தெளிவான எடுத்துக்காட்டு. இது தவிர கஜேந்திரர்களுடைய தேர்தல் மாவட்டமான யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் அரசியல் தலைமைகளுடன் கூட இணைந்து செல்பவர்களாக அவர்கள் இல்லை. இந்த நிலையில் மலையகத்துக்கு திடீர் விஜயம் செய்திருந்த கஜேந்திரர்கள் மலையக கட்சிகளுக்கும் – முஸ்லீம் கட்சிகளுக்கும் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ள வேடிக்கை நிகழ்ந்துள்ளது.
சரி செய்திக்கு வருவோம்..,
நுவரெலியா – மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு இன்று நிவாரண உதவிகளை வழங்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது,
“தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும், ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். கடந்த 73 ஆண்டுகளாக வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அத்தகைய அடக்குமுறைகள் தற்போது மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே மலையக தலைமைகள் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், இத்தகைய நிலைமைகளை உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இணைந்து செயற்படுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அரசுக்கு ஆதரவாக தயைசைத்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி.ஜி.பொன்னம்பலமாவார் என்பது கூடுதல் தகவல்..!