அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள பஃபலோ நகரில் வீடுகள் மீது பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 3 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
விபத்தில் சிக்கிய அந்த காண்டினன்டல் ஏர்லைன்ஸ் (Continental Airlines Flight 3407) விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சி அருகே உள்ள பஃபலோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் க்ளியரன்ஸ் சென்டர் என்ற புறநகரில் வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.
விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேருமே பலியாயிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வீடுகளில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. விபத்துக்குள்ளான அந்த விமானம் 74 இருக்கைகள் கொண்ட பம்பார்டியர் (Bombardier Dash 8 Q400) வகையைச் சேர்ந்தது