களனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 14 பேரையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரட்ண அனுமதி வழங்கியுள்ளார்.
இவர்களுக்கு எதிராக, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை, பல்கலைக்கழக உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த மோதல் இடம் பெற்றதாகவும் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கைதானவர்களில் 9 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதுடன், எந்தவொரு நிபந்தனையின் பேரிலேயாவது, அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்