தொலைபேசி இறக்குமதியை தடைசெய்யத் தீர்மானம் இல்லை – அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன

தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையும் இடம் பெறவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி இடை நிறுத்தப்படவேண்டும் என இலங்கை மத்திய வங்கி தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு வேறு மூலோபாயங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்பார்த்துள்ளது. பரஸ்பர பறிமாற்ற வசதிகள் ஊடாக சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடமிருந்து 8 ஆயிரம் மில்லியன் நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். தொலைக்காட்சி, தொலைப்பேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறான தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அர்ஜுன அலோசியஸிற்கு சொந்தமான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகளை மீள ஆரம்பிக்க வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் சந்தேக நபராக உள்ள காரணத்தினால் அந்நிறுவனத்திற்கு விற்பனை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பொறுத்தமற்றது என அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *