கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத குற்றப்புலனாய்வுப்பிரிவு விசேட விசாரணைப்பகுதி பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.ரி. ரட்னாயக்க முன்னிலையில் நடைபெற்ற போது இந்த அழைப்பாணையை நீதிபதி பிறப்பித்தார்.
முக்கியமான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதியின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொறுப்பதிகாரியை மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்தார்.
2001 ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். இரத்தின சிங்கம் புஷ்பகுமரன், விக்டர் அல்பிறட் டொமினி, சுப்பிரமணியம் தவராஜசிங்கம், நாகேந்திரம் நாகலஷ்மன் மற்றும் தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிரிகளில் சுப்பிரமணியம் தவராஜசிங்கம் என்பவர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிரிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் 422 சாட்சிகள் உள்ளன. அவர்களில் அதிகமானோர்கள் பொலிஸார். கட்டு நாயக்க விமான நிலையத்தாக்குதலில் பதினொரு விமானங்கள் அழிக்கப்பட்டன. இருபத்தைந்து விமானங்கள் சேதமடைந்தன.
அத்துடன் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.