“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை (22) வந்தது அதில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்பிரவரி நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது.

நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல. எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பொறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்ச்சியாக அதிலே உள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம்.

அதேவேளையிலே சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடயமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம்.

ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடயம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு

ஐ.நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையிலே பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலே மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையிலே. ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே. சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்கதக்க விடயம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *